search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தை அமாவாசை - சிறப்பு தகவல்கள்
    X

    தை அமாவாசை - சிறப்பு தகவல்கள்

    ஆண்டின் பிற அமாவாசை நாட்களில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் தர இயலாதவர்கள், தை அமாவாசை அன்று ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள்.
    மக்கள் கூடும் தலங்கள்

    ஆண்டின் பிற அமாவாசை நாட்களில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் தர இயலாதவர்கள், தை அமாவாசை அன்று ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். ராமேஸ்வரம், திருச்செந்தூர், முக்கடல் கூடும் கன்னியாகுமரி மற்றும் காவிரியின் முக்கூடல் தலமான பவானி இங்கெல்லாம் இத்தர்ப்பணத்தை அளிக்க மக்கள் கூடுவார்கள்.

    புனித நீராடல்

    ராமேஸ்வரத்தில் அருள்பாலிக்கும் ராமநாத சுவாமி மற்றும் அம்பாள் ஆகியோரின் திருவுருவச்சிலைகள், தை அமாவாசையன்று அக்னி தீர்த்தத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு புனித நீராடல் நடைபெறும். இதே நாளில் தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடுவர். அப்போது ராமேஸ்வரம் கடற்கரையில் தங்களின் மூதாதையருக்கு தர்ப்பணம் செய்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    பிடித்த உணவு படையல்

    திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் மாதம் தோறும் அமாவாசை தினத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுக்க பக்தர்கள் வருவார்கள். மகாளய, தை அமாவாசையில் பக்தர்கள் கூட்டமாக திதி பூஜைகளை மேற்கொள்வார்கள். தை அமாவாசை தினத்தில் வீரராகவப் பெருமாள் கோவிலுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து, இரவு கோவிலில் தங்கி அடுத்த நாள் அதிகாலை கோவில் குளத்தின் கரையில் வாழை இலை போட்டு முன்னோர்களுக்கு பிடித்தமான உணவுகளை படைத்து வழிபட்டு, பிண்டங்களை குளத்தில் கரைத்து வழிபாடுகளை பூர்த்தி செய்வார்கள்.

    சூரியனின் கல்யாண விழா

    இந்தியாவில் இரண்டே இரண்டு இடங்களில்தான் சூரியனுக்கு கோவில் உள்ளது. ஒன்று வடக்கே ஒடிசாவிலும் மற்றொன்று தெற்கே கும்பகோணம் மயிலாடுதுறை சாலையில் ஆடுதுறைக்கு அருகே அமைந்துள்ளது. அங்கே சூரியபகவான் சாயா மற்றும் உஷா தேவியருடன் சிவசூரியன் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். சூரியனைச் சுற்றி மற்ற கிரகங்கள் அமைந்துள்ளன. சூரியனார் கோவில் எனும் இத்தலம் நவகிரகங்களுக்கென தனிப்பட்ட முறையில் அமைந்து இருப்பதால் தோஷ நிவர்த்திக்காக ஏராளமான மக்கள் வந்து வழிபட்டு வருகிறார்கள். தை அமாவாசை தொடங்கி பத்து நாட்கள் சூரிய பகவானின் திருக்கல்யாண விழா இங்கு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

    லட்ச தீபம்

    திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் தை அமாவாசை தினத்தன்று லட்சதீபம் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதியம்மன் கோவில் முழுவதும் ஒளிச்சுடர்களாக இருக்கும். பல்லாயிரக்கணக்கானோர் சுற்று வட்டாரங்களில் இருந்து வந்து மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கோவிலின் பிரகாரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தீபங்களை ஏற்றிவைத்து வழிபடுவார்கள்.

    சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் தை அமாவாசை தினத்தன்று சுந்தர மகாலிங்கம் சுவாமியை தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர்.

    மோட்ச தீபம்

    பித்ருக்களுக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள் தை அமாவாசையன்று, திருவாரூர் கமலாலய தீர்த்தத்திலுள்ள பிதுர் கட்டத்திலும், அங்குள்ள அக்னி தீர்த்தத்திலும் நீராடி விட்டு, சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து, மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். அதனால் முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து, தலைமுறை சிறக்க ஆசீர்வதிப்பதாக ஐதீகம். விபத்துகளில் மரணம் அடைந்தவர்களுக்காகவும், இறக்கும் தருவாயில் துன்புறுவோருக்காகவும் அங்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகிறது.

    தர்ப்பணத்திற்கு ஏற்ற தலங்கள்

    அக்னி தீர்த்த கடற்கரையான ராமேஸ்வரம், திருப்புல்லாணி, வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திலதர்ப்பணபுரி, திருவெண்காடு, மகாமக தீர்த்தக்குளம், காவேரி சங்கமம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், முக்கொம்பு, திருவையாறு தலத்தில் ஓடும் பஞ்ச நதிக்கரை ஆகியவை பித்ரு பூஜைகளுக்குரிய தலங்கள் என்று போற்றப்படுகின்றன. இவை தவிரவும் நமது பகுதிகளில் உள்ள பல்வேறு தலங்களிலும் பித்ரு கர்மாக்கள் நிறைவேற்றப்படுகின்றன.

    Next Story
    ×