search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கலியுகத்தை கணித்துச் சொன்ன பாகவத புராணம்
    X

    கலியுகத்தை கணித்துச் சொன்ன பாகவத புராணம்

    கலியுகத்தின் தாக்கத்தால் அறநெறி, உண்மை, தூய்மை, பொறுமை, கருணை, ஆயுட் காலம், உடல் வலிமை, ஞாபகசக்தி ஆகிய அனைத்தும் மனிதர்களிடையே நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும். (பாகவத புராணம் 12.2.1)
    ரிஷிகளும், முனிவர்களும் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே அறியும் சக்தியைப் பெற்றிருந்தனர். அவர்களின் அதீத அறிவாற்றலினால் கண்டறியப்பட்ட பல உண்மைகள், இன்று அறிவியல் பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கின்றன. வேதங்களை நான்காக பகுத்தவர் வியாசர். இதனால் அவரை ‘வேதவியாசர்’ என்று அழைத்தனர். அவர் எழுதிய நூல்களில் சிறப்பு மிகுந்த நூல் பாகவத புராணம். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர் இயற்றிய இந்த நூலில் கலியுகம் பற்றிய சில குறிப்புகள் காணப்படுகின்றன. அவை இப்போது நடை முறையில் இருக்கும் சில விஷயங்கள் பொருந்திப் போகின்றன என்பதுதான் ஆச்சரியப்பட தக்க விஷயம். அவற்றை கொஞ்சம் பார்க்கலாம்.

    கலியுகத்தின் தாக்கத்தால் அறநெறி, உண்மை, தூய்மை, பொறுமை, கருணை, ஆயுட் காலம், உடல் வலிமை, ஞாபகசக்தி ஆகிய அனைத்தும் மனிதர்களிடையே நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும். (பாகவத புராணம் 12.2.1)

    கலியுகத்தில், பொருட் செல்வம் மட்டுமே ஒரு மனிதனின் மதிப்பை அளவிடும். ஒருவனின் முறையான பழக்க வழக்கங்கள் மற்றும் நல்ல பண்புகள் அடிப்படையில் அவன் மதிப்பிடப்படமாட்டான். மேலும், சட்டமும் நீதியும் ஒருவனின் அதிகாரத்தின் அடிப்படையிலே செயல்படும். (பாகவத புராணம் 12.2.2)

    வெற்றி என்பது வஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்திருக்கும். (பாகவத புராணம் 12.2.3)

    ஒருவரின் புறத்தோற்றத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு, அவரை பண்டிதர் என்று மக்கள் நம்புவார்கள். கண்களால் காணும் வித்தைகளுக்கு மயங்கி, தவறான போலி குருக்களை நம்பி வழிதவறி செல்வார்கள். வெறும் வாய் வார்த்தைகளில் ஜாலங்கள் செய்பவர், கற்றுணர்ந்த பண்டிதராக போற்றப்படுவார். (பாகவத புராணம் 12.2.4)

    கலியுகத்தின் பிடியில் சிக்கியிருக்கும் சிலர் பொருட்செல்வம் (பணம்) இல்லாதவனைத் தீண்டத்தகாதவன் என்று வெறுத்து ஒதுக்குவர். குளிப்பதாலும், அலங்காரம் செய்து கொள்வதாலும் மட்டுமே ஒருவன் சுத்தமடைந்து விட்டான் என எண்ணிக் கொள்வார்கள். (பாகவத புராணம் 12.2.5)

    அலங்காரம் செய்தவர்கள் எல்லாம், அழகானவர்களாக அறியப்படுவார்கள். முரட்டுத்தனமான பேச்சு, உண்மை என்று எளிதில் நம்பப்படும். வயிற்றை நிரப்புவது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக அமையும். பல மதங்கள், ஆட்களை சேர்த்துக் கொள்வதையும், பெருக்கிக் கொள்வதையும் மட்டுமே லட்சியமாக கொண்டிருக்கும். (பாகவத புராணம் 12.2.6)

    உலகத்தில் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் நிறைந்துவிடுவர். தன் சமூகத்தினிடையே தன்னை பலமானவன் என்று காட்டிக்கொள்பவன், அரசாளும் அதி காரத்தைப் பெற்றிடுவான். (பாகவத புராணம் 12.2.7)

    ஊழல் நிறைந்த அரசாங்கத்தால், நியாயமற்ற கொடுமையான வரிகள் மக்கள் மீது திணிக்கப்படும். இதனால் மக்கள் உண்ண உணவின்றி இலை, வேர், விதை போன்றவற்றை உண்ணத் தொடங்குவார்கள். அரசின் அலட்சியப் போக்கினால், கடுமையான பருவநிலை மாற்றத்திற்கு ஆளாகி, துன்பமிகு வாழ்க்கையில் சிக்கிக் கொள்வார்கள். (பாகவத புராணம் 12.2.9)

    கடுங்குளிர், புயல், கடும் வெப்பம், கனமழை, உறைபனி, வெள்ளம் போன்ற பல இயற்கை பேரிடர்களில் சிக்கி மக்கள் தவிப்பார்கள். இதனால் பசி, தாகம், நோய், பயம், சச்சரவு போன்ற கடுந்துன்பங் களிலும் சிக்கிக் கொள்வார்கள். (பாகவத புராணம் 12.2.10)

    கலியுகத்தின் கொடுமை அதிகரிக்கையில், மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 50 ஆண்டு களாக குறையும். (பாகவத புராணம் 12.2.11)

    தன்னை ஊட்டி வளர்த்த பெற்றோர்களை இறுதி காலத்தில் கவனித்துக் கொள்ளும் தர்மத்தை மகன் மறப்பான். (பாகவத புராணம் 12.3.42)

    பொருளுக்காக மனிதன் இன்னொரு மனிதனிடம் வெறுப்பு, பொறாமை போன்ற உணர்ச்சிகளை வளர்த்துக் கொள்வான். நட்பு என்ற உயரிய பண்பை போற்றாமல், தன் சுற்றத்தாரையும் உறவினரையும் கூட கொல்லத் துணிவான். (பாகவத புராணம் 12.3.41)

    வெறும் பகட்டுக்காகவும் புகழுக்காகவும் மட்டுமே பலரும் தானம் அளிப்பார்கள். தற்பெருமைக்காக மட்டுமே நோன்பு இருப்பார்கள். தர்மத்தைப் பற்றிய அறிவாற்றல் இல்லாதவர்கள் மதங்களை உருவாக்கி மக்களைக் கவர்ந்து தவறான அதர்ம பாதைக்கு இழுத்துச் செல்வார்கள். (பாகவத புராணம் 12.3.38)

    தனக்கு இனி பயன்பட மாட்டான் என்ற பட்சத்தில், தனக்கு இத்தனை காலமாக உழைத்து தந்த தொழிலாளிகளை முதலாளி கைவிடுவான். இத்தனை காலம் பால் கொடுத்த பசுவிடம் பால் குறைந்துவிட்டால், அந்தப் பசுக்களும் கொல்லப்படும். நன்றிக்கடன் மறக்கப்படும். (பாகவத புராணம் 12.3.36)

    நகரங்களில் கொள்ளையர்கள் அதிகரிப்பர்; வேதங்கள் கயவர்களால் தங்கள் சுயநல கோட்பாடு களைப் பரப்ப, பொய்யான முறையில் மொழிப் பெயர்க்கப்படும். அரசியல்வாதிகள் மக்களை மெல்லமெல்ல பலவிதமாக கொடுமை செய்வார்கள். போலி ஆச்சாரியர்கள் தோன்றி பக்தர்களை உபயோகப்படுத்தி, தங்கள் வயிறுகளையும் காமத்தையும் பூர்த்தி செய்து கொள்வார்கள். (பாகவத புராணம் 12.3.32)

    சரி.. இவற்றில் இருந்து எப்படி தப்பிப்பது என் கிறீர்களா? அதற்கு இறைவனை சரணடைவதைத் தவிர வேறு உபாயம் இல்லை.

    கலியுகம் துன்பங்கள் நிறைந்தது. ஆனாலும் நான்கில் ஒரு பங்கு தர்மம் இருக்கும். கலியுக துன்பங்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள கண்டிப்பாக, நமக்கு ஈஸ்வரனின் துணை தேவை. மழைத் துளி படாமல் இருக்க குடை உதவுவது போல, இறைவனிடம் காட்டும் பக்தி துன்பங்கள் நம்மீது படாமல் பாதுகாக்கும்.

    கடகம் ராமசாமி
    Next Story
    ×