search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தீபாவளி பண்டிகையையொட்டி ஹாசனாம்பா கோவில் நடை இன்று திறப்பு
    X

    தீபாவளி பண்டிகையையொட்டி ஹாசனாம்பா கோவில் நடை இன்று திறப்பு

    தீபாவளி பண்டிகையையொட்டி ஹாசனாம்பா கோவில் நடை இன்று (வியாழக்கிழமை) திறக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நேற்று கலெக்டர் ரோகிணி சிந்தூரி நேரில் ஆய்வு செய்தார்.
    ஹாசன் டவுனில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையையொட்டி மட்டும் திறக்கப்படுவது இந்த கோவிலின் சிறப்பம்சமாகும். கோவில் நடை அடைக்கும்போது, அம்மன் கருவறையில் விளக்கு ஏற்றி வைக்கப்படும். மேலும் பூவும் வைக்கப்படும். அந்த பூ அடுத்த ஆண்டு கோவில் நடை திறக்கும் வரை வாடாமல் இருக்கும். மேலும், கோவிலில் ஏற்றப்படும் விளக்கும் அடுத்த ஆண்டு நடை திறக்கும்வரை தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும். நடை திறக்கும்போது தான் அந்த விளக்கும் அணையும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும் இந்த கோவிலுக்கு கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். அரசியல்வாதிகளும், முக்கிய பிரமுகர்களும் இங்கு வந்து ஹாசனாம்பாவை தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள்.

    அத்தகைய சிறப்புமிக்க ஹாசனாம்பா கோவில் இன்று (வியாழக்கிழமை) திறக்கப்படுகிறது. இன்று முதல் 9-ந்தேதி மதியம் 2 மணி வரை 9 நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும். தீபாவளி பண்டிகையையொட்டி இன்று மதியம் 12 மணி அளவில் மன்னர் குடும்பத்தை சேர்ந்த நஞ்சராஜ அர்ஸ் வாழை மரத்தை வெட்டி, பாரம்பரிய முறைப்படி கோவில் நடையை திறப்பார். பின்னர் மன்னர் குடும்பத்தினர் சார்பில், ஹாசனாம்பா கோவிலுக்கு முதலில் சிறப்பு பூஜை செய்யப்படும். அதன்பின்னர், அரசு கருவூலத்தில் உள்ள நகைகள் பாதுகாப்பாக எடுத்து வரப்பட்டு, ஹாசனாம்பா சிலைக்கு அணிவிக்கப்படும்.

    இன்று கோவில் நடை திறந்ததும், கருவறை உள்பட கோவில் முழுவதும் சுத்தப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. இதனால் முதல் நாளான இன்று, பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது. நாளை (வெள்ளிக் கிழமை) முதல் பக்தர்கள் ஹாசனாம்பாவை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    நாளை முதல் 9-ந்தேதி வரை 24 மணி நேரமும் ஹாசனாம்பாவை பொதுமக்கள் தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஹாசனாம்பா கோவிலில் பொது தரிசனம், கட்டண தரிசனம் என தனித்தனியாக வழிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஹாசனாம்பா கோவில் மற்றும் ஹாசன் டவுன் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஹாசன் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    இந்த நிலையில் நேற்று மாலை ஹாசனாம்பா கோவிலுக்கு மாவட்ட கலெக்டர் ரோகிணி சிந்தூரி நேரில் சென்று பார்வையிட்டு விழாவுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அப்போது அவர், விழா ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார். இதையடுத்து கலெக்டர் ரோகிணி சிந்தூரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஹாசனாம்பா கோவில் நடை நாளை (அதாவது, இன்று) திறக்கப்பட உள்ளது. இதனால் பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அந்த ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தேன். கோவில் நடை திறக்கும்போது, ஹெலிகாப்டர் மூலம் மலர்களை தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்படுவதால், பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால். ஹாசனாம்பா கோவிலில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஹாசனாம்பா கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    ஹானாம்பா கோவில் நடை திறக்கப்படுவதையொட்டி, ஹாசனில் ஹெலிரைடு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக கூடுதலாக சுற்றுலா பயணிகள் ஹாசனாம்பா கோவிலுக்கு வருவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×