search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் இன்று நடக்கிறது
    X

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் இன்று நடக்கிறது

    ஸ்ரீரங்கம் கோவிலில் ஆண்டுதோறும் ஆனிமாதம் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் 2 நாட்கள் நடப்பது வழக்கம். இதனை தொடர்ந்து இன்று தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் இன்று நடைபெறுகிறது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனிமாதம் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் 2 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஜேஷ்டாபிஷேகம் கடந்த 27-ந் தேதி தொடங்கி 2 நாட்கள் ரெங்கநாதருக்கு நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று(வெள்ளிக்கிழமை) காலை ரெங்கநாச்சியாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெறுகிறது.

    இதையொட்டி காலை 6 மணிக்கு கருட மண்டபத்தில் இருந்து திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் புறப்பட்டு காவிரி ஆற்றுக்கு செல்வர். அங்கு கோவில் வழக்கப்படி கோவில் அதிகாரிகள், பணியாளர்கள், மிராசுதாரர்களுக்கு மரியாதை வழங்கப்படும்.

    பின்னர் காவிரி ஆற்றில் தங்கக்குடம் மற்றும் வெள்ளிக்குடங்களில் புனித நீர் சேகரிக்கப்படும். அங்கிருந்து 7.30 மணிக்கு தங்கக்குடத்தில் உள்ள புனிதநீர் யானை மீது வைத்து ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்படும். பின்னர் தாயார் சன்னதியில் உற்சவர் ரெங்கநாச்சியாருக்கு திருமஞ்சனம் நடைபெறும். தொடர்ந்து தாயார் சன்னதியில் ஸ்ரீதேவிக்கும், பூதேவிக்கும் அரிய வகை மூலிகைகளால் தைலகாப்பு பூசப்படும். அதன் பின் தாயார் சன்னதியில் நகைகள் பழுது பார்க்கும் பணியும், எடை சரிபார்க்கப்படும் பணியும் நடைபெறும். இரவு 8.30 மணிக்கு தாயாருக்கு மங்களஆரத்தி நடைபெறும்.

    ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி தாயார் சன்னதியில் இன்று முழுவதும் மூலவர் சேவை கிடையாது. நாளை (சனிக்கிழமை) தாயார் சன்னதியில் திருப்பாவாடை எனப்படும் பெரியதளிகை நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன்படி நாளை காலை 7 மணிக்கு தாயார் சன்னதியில் மூலஸ்தானத்திற்கு எதிரே தரையில் விரிக்கப்பட்ட துணியில் அதிக அளவில் சாதம் குவிக்கப்பட்டு அதில் நெய், பலாச்சுளை, மாம்பழம், வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்ட பல்வேறு பழ வகைகள் கலந்து தாயாருக்கு நைவேத்தியம் செய்யப்படும். பின்னர் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்படும். மதியம் 1 மணியளவில் தாயாருக்கு மங்கள ஆரத்தி நடைபெறும். மாலை 3.30 மணிக்கு மேல் மூலவர் சேவை உண்டு.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 
    Next Story
    ×