search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நினைத்தபடி மாறும் அங்காளம்மன் முகம்
    X

    நினைத்தபடி மாறும் அங்காளம்மன் முகம்

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அம்மனின் முகம், யார் என்ன நினைத்துக் கொண்டு அம்மனை பார்க்கிறார்களோ அந்த வடிவத்தில் காட்சி தருவது போன்று அமைக்கப்பட்டுள்ளது.
    ஒரு சமயம் சிவபெருமான் தனது சக்தியைப் பயன்படுத்தி பிரம்மாவின் தலைகளில் ஒன்றைக் கிள்ளி எறிந்தார். இதன் காரணமாக, ஐந்து தலைகள் கொண்ட பிரம்மா நான்கு தலைகள் உடையவராக ஆனார்.

    பிரம்மாவின் தலையைக் கொய்த காரணத்தால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டாயிற்று. தோஷத்தை நீக்க என்ன செய்வது, பராசக்தியின் உள்ளத்தில் வேதனை ரேகைகள் ஓடி, ஒரு முடிவு கிடைத்தது. அதற்கு ஒரேவழி, தான் மற்றொரு அவதாரம் எடுப்பது என்று தீர்மானித்தாள் பார்வதி தேவி.

    சிவசுயம்பு வடிவில் அங்காள பரமேஸ்வரியாக மாறினாள். வடக்கு நோக்கி தியானத்தில் அமர்ந்தாள். அவள் அப்படி அமர்ந்த அற்புத இடம் தான் மேல்மலையனூர். இன்றும் மேல்மலையனூரில் வடக்கு நோக்கி இருந்து அங்காள பரமேஸ்வரி பக்தர்களை காத்தருள்கிறாள்.

    தன் கணவனைத் தேடி மலையனூர் வந்து அங்குள்ள மலர்வனத்தில் பரமேஸ்வரி புற்றாக அமர்ந்தாள். மேல்மலையனூர் அங்காளம்மன் சிம்ம வாகனத்தில் உட்கார்ந்திருக்கும் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. அம்மனின் முகம், யார் என்ன நினைத்துக் கொண்டு அம்மனை பார்க்கிறார்களோ அந்த வடிவத்தில் காட்சி தருவது போன்று (சாந்தம், கோபம், அபயம் அளிப்பது) அமைக்கப்பட்டுள்ளது.

    அம்மனுக்கு 4 திருக்கரங்கள் இருக்கின்றன. வலக்கரங்களில் உடுக்கை, கத்தி, இடக்கையில் கபாலம், திரிசூலம் ஏந்தி இடக்காலை மடித்து, வலக்காலால் பிரம்மனின் தலையை மிதித்த வாறு காட்சி தருகிறார். பீடத்தின் கீழே பிரம்மனின் 4 முகங்களும் உள்ளன. அருகில் சிவபெருமான் சிறிய உருவத்தில் ரிஷப வாகனத்தில் காட்சி தருகிறார். அம்மனுக்கு முன்பாக புற்று உள்ளது. (அம்மன் முதலில் புற்றுருவாக இருந்தார் என்பதற்கு சாட்சியாக இன்றும் உள்ளது) அம்மன் நாக வடிவில் உள்ளார் என்று இன்றளவும் பக்தர்களாலும், பூசாரிகளாலும் நம்பப்பட்டு வருகிறது. நம்பியவர்களுக்கு மட்டுமே அம்மன் பாம்பு உருவில் காட்சி தருகிறார் என்று கூறப்படுகிறது.

    இந்த புற்றின் வடிவம் அம்மன் காலை நீட்டி உட்கார்ந்திருப்பது போல் உள்ளது. இந்த இடத்தில் இருந்து எடுக்கும் மண் பக்தர்களுக்கு பிரசாதமாகவும், அத்துடன் மஞ்சள், குங்குமம் வைத்து வழங்கப்படுகின்றன.

    இக்கோவிலின் தல விருட்சமாக மயில் கொன்றை என்று அழைக்கப்படும் வாகை மரம் உள்ளது. இந்த மரத்தில் குழந்தை இல்லாதவர்கள் தொட்டில் காட்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது என்றும், திருமணமாகாத ஆண்கள், பெண்கள் தாலிக்கயிறை இந்த மரத்தில் கட்டினால் உடனடியாக அந்த பாக்கியம் கிடைக்கும் என்பது இன்றளவும் ஐதீகமாக உள்ளது.

    இக்கோவிலில் ஆண்டு தோறும் வரும் அமாவாசைகளில் சித்திரை, மாசி மாதங்களைத் தவிர மற்ற மாதங்களில் இரவு 11.30 மணியிலிருந்து 1 மணி வரை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஆண்டுதோறும் மாசிமாதம் வரும் மகாசிவராத்திரியிலிருந்து 13 நாட்கள் மாசிப்பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    ஆடி அமாவாசை நாள் மறைந்த முன்னோர்களான பித்ருகளை நினைத்து வழிபாடு செய்வதற்கு மிகவும் உகந்த நாள். அன்று காலை புண்ணிய தீர்த்தங்கள், நதிகள், கடலோர பகுதிகளில் பித்ரு களுக்கு தர்ப் பணம் செய்யும் நிகழ்வு நடைபெறும். அதன் பிறகு வீடுகளிலும் முன்னோர்களுக்கு சிலர் படையல் செய்து வழிபடுவது உண்டு.

    ஆனால் பித்ரு தர்ப்பணம் செய்த பிறகு வீட்டிற்கு வராமல் நேரடியாக மேல்மலையனூர் அங்காளம்மன் தலத்துக்கு சென்று அம்மனை வழிபட்டால் பித்ரு தர்ப்பணத்தை மேம்படுத்தும் பலன் கிடைக்கும். அதாவது நாம் பித்ருக்களுக்கு செய்த தர்ப்பணங்கள் முழுமையாக அவர்களை சென்று சேர அங்காளம்மன் உதவுவாள் என்பது ஐதீகம். ஆதிகாலத்தில் அங்காளம்மன் இத்தலத்தில் அவதாரம் எடுத்தபோது பல்வேறு ஆத்மாக்களுக்கு ஞானம் வழங்கி உயர்வு கொடுத்தாள்.

    எனவேதான் பித்ரு தர்ப்பணத்திற்கு பிறகு அங்காளம்மனை வழிபடுவது நல்லது என்று சொல்கிறார்கள். இத்தலத்தில் அங்காள பரமேஸ்வரியின் சிறப்பு என்னவென்றால் கணவனை பிரிந்து வாழும் பெண்களுக்கு அருள் வழங்குவது ஆகும். அப்படிப்பட்ட பெண்கள் அன்னையை மனமுருகி வழிபட்டால் மீண்டும் சந்தோஷமாக கூடி வாழும் பாக்கியம் அவர்களுக்கு கிடைக்கப்பெறும் என்பது நம்பிக்கை.

    மேலும் கணவனின் தொந்தரவுகளுக்கு ஆளான பெண்களுக்கு அதிலிருந்து விடுதலை கிடைத்து நல்வாழ்வு அமையும். இதுபோன்ற காரணங்களால் மேல்மலையனூர் தலத்தில் பெண்கள் கூட்டம் எப்போதும் நிரம்பி வழிகிறது.

    மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், உடல் கோளாறுகள் ஏற்பட்டவர்கள், பயஉணர்ச்சி உடையவர்கள், இதுபோன்று பல்வேறு வகைப்பட்ட தெரியாத பிரச்சினைகளை கொண்டவர்கள் பலரும் இந்த வகை பூஜைகளைச் செய்து நலமடைவதாக நம்பப்படுகிறது.

    இதுபோலவே திருஷ்டிக் கழிப்பு, அலகு குத்தல் ஆட்டம், சாமியாட்டம் போன்றவைகளும் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் வெகு பிரசித்தம்.
    Next Story
    ×