என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா தொடங்கியது
    X

    சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா தொடங்கியது

    சிதம்பரத்தில் பிரசித்திபெற்ற தில்லை காளியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    சிதம்பரத்தில் பிரசித்திபெற்ற தில்லை காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா 13 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா நேற்று முன்தினம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் விநாயகர், தில்லைகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நேற்று சூரிய பிரபை வாகனத்தில் அம்மன் வீதிஉலா நடந்தது. இன்று (புதன்கிழமை) சந்திரபிரபை வாகனத்திலும், நாளை (வியாழக்கிழமை) பூதகி வாகனத்திலும், 8-ந்தேதி அன்ன வாகனம், தெருவடைச்சான் நிகழ்ச்சியும், 9-ந்தேதி காமதேனு வாகனத்திலும், 10-ந்தேதி கைலாய வாகனத்திலும், 11-ந்தேதி ரிஷப வாகனத்திலும் அம்மன் வீதிஉலா நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 12-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) காலை 6 மணிக்கு நடக்கிறது. 13-ந்தேதி தீர்த்தவாரியும், 14-ந்தேதி மஞ்சள் நீராட்டு விழா மற்றும் முத்துப்பல்லக்கில் அம்மன் வீதிஉலாவும், 15-ந்தேதி தெப்ப உற்சவமும், 16-ந்தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் வைகாசி திருவிழா முடிவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி, செயல் அலுவலர் முருகன் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். 
    Next Story
    ×