search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    பழம்பெருமை வாய்ந்த புனித ஆரோபண அன்னை ஆலயம்- மாத்திரவிளை
    X

    பழம்பெருமை வாய்ந்த புனித ஆரோபண அன்னை ஆலயம்- மாத்திரவிளை

    • கி.பி.1485-ல் பனை ஓலை வேய்ந்த சிறு ஆலயத்தை உருவாக்கி வழிபாடு நடத்தினர்.
    • இன்றுள்ள ஆலயம் 1972-ம் ஆண்டு அருட்பணியாளர் ஜோசப்ராஜ் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது.

    குமரி மாவட்டத்தில் பழம்பெருமை வாய்ந்த புனித ஆரோபண அன்னை ஆலயம் அமைந்துள்ள இடம் தான் மாத்திரவிளை என்று அழைக்கப்படும் அன்றைய பட்டங்காடு. மாதாவின் அன்பையும், அரவணைப்பையும் உணர்ந்த மக்கள் இவ்விடத்தை மாதா யாத்திரை செய்யும் விளை என்று அழைப்பார்கள். அது மருவியே நாளடைவில் மாத்திரவிளை என பெயர் பெற்றது.

    புனித தோமாவின் வருகை

    புனித தோமா இயேசுவின் சீடர்களில் ஒருவர். இவர் இயேசுவின் உயிர்ப்புக்கு பின் இந்தியாவுக்கு வந்து இறை போதனைகளிலும், சிற்பக்கலைகளிலும் ஈடுபட்டு வந்தார்.

    இவரது வருகைக்கு பிறகு தான், இவரது போதனையால் நம்பிக்கை பெற்ற மக்கள் சிலர் சிலுவையை மையமாக வைத்து வழிபட தொடங்கினார்கள். கி.பி.1435-க்கு முன் இந்த தோமையார் வழி கிறிஸ்தவர்கள் திறந்த வெளி ஜெபக்கூடம் அமைத்து சுற்றிலும் தீப்பந்தங்கள், விளக்கு தூண்கள் அமைத்து வழி பட்டனர்.

    ஆலயம்

    கி.பி.1485-ல் பனை ஓலை வேய்ந்த சிறு ஆலயத்தை உருவாக்கி வழிபாடு நடத்தினர். கி.பி.16-ம் நூற்றாண்டில் புனித பிரான்சிஸ் சவேரியார் குமரிக்கு வந்தார். சவேரியார் ஊர்-ஊராக சென்று கிறிஸ்தவத்தை போதித்தார். இதனால் உற்சாகமடைந்த மாத்திரவிளை வட்டாரப்பகுதி மக்களும் வழிபாட்டில் முன்னேற்றம் அடைகின்றனர். கி.பி.1555-ல் தென்னை ஓலையால் கூரை வேயப்பட்ட கற்சுவர் ஆலயமாக உருவாக்கி வழிபாடு நடத்தினார்கள்.

    16-ம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் அரசு சேரநாட்டில் தங்களது அரசை நிலைநாட்டுகிறது. இந்த கால கட்டத்தில் தான் தென்னை ஓலையால் வேயப்பட்ட ஆலயம் தீக்கிரையாக்கப்படுகிறது. இந்த தீ விபத்தில் உள் பீடத்தில் வைக்கப்பட்டு இருந்த மாதா சொரூபம் எங்கும் காணப்படவில்லை. அந்த சமயம் எங்கும் கொள்ளை நோய் பரவியது. ஒரு நாள் காலை வேளையில் காணாமல் போன மாதா சொரூபம் ஆலய சுவர்களின் உள்ளே நடுப்பகுதியில் வைக்கப்பட்டு இருந்ததை கண்டு மக்கள் திகைப்புற்றனர். அன்றைய நாளில் இருந்து கொள்ளை நோயின் வேகம் குறைய தொடங்கியது. எனவே மீண்டும் ஆலயப்பணி தொடங்கப்பட்டு கி.பி. 1615-ல் ஓட்டுக்கூரையிலான சுண்ணாம்பு சாந்து பூசப்பட்ட கற்சுவர் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது.

    வேத சாட்சி

    திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா காலத்தில் சிறை அதிகாரியாக இருந்த நட்டாலம் நீலகண்டர், டச்சுப்படை தளபதி டிலனாயின் அறிவுரையால் தேவசகாயம் என்று பெயரில் கிறிஸ்தவரானார். அவர் மதம் மாற காரணமாக இருந்ததாக மாத்திரவிளை,மாங்கோடு பகுதியை சேர்ந்த மரிய அருளப்பன், முத்தப்பன், ஞானப்பிரகாசம், மரிய செபஸ்தியான், சாமியப்பன், ராயன் என்பவர்கள் மரத்தில் தூக்கிலிடப்பட்டனர். இந்த மண்ணின் மைந்தர்கள் அன்றே வேத சாட்சியாக உயிர் தியாகம் செய்து மாத்திரவிளை மண்ணுக்கு புகழ் சேர்த்திருக்கிறார்கள்.

    அவர்களின் நினைவாக டிலனாய் தான் வழிபட்டு கொண்டிருந்த மாதா சொரூபத்தை மக்களிடம் வழங்கினார். அந்த சொரூபத்தை தேரில் வைத்து மக்கள் வழிபட்டனர். 1752-ல் சிறிய கோபுரத்துடன் ஆலயத்தை மக்கள் உருவாக்கினார்கள். 1780-ம் ஆண்டிற்கு பின் இவ்வாலயம் ஒரு பணித்தளமாக உயர்ந்து காரங்காடு பங்கின்கீழ் செயல்பட தொடங்கியது. 1825-ம் ஆண்டு அழகிய கோபுரத்துடன் இணைந்த பெரிய ஆலயமானது.

    தனி பங்கு

    1886-ல் ஒரு பங்கு தளமாக உயர்ந்து, முளகுமூட்டின் கிளை பங்காக செயல்பட தொடங்கியது. பரலோக அன்னை என்ற பெயருடன் விளங்கிய இவ்வாலயத்தை 1906-ல் கொல்லம் மறை மாவட்ட ஆயர் பென்சிகர் தனி பங்காக உயர்த்தினார். முதல் பங்குத்தந்தை வின்சென்ட் பெர்னாண்டஸ். ஆலயத்தில் உள்ள புனித ஆரோபண அன்னை சொரூபம் பன்னிரு விண்மீன் முடிசூட ரோமிலிருந்து கொண்டு வரப்பட்டது. இன்றுள்ள ஆலயம் 1972-ம் ஆண்டு அருட்பணியாளர் பெனடிக்ட் அலெக்சாண்டர் காலத்தில் ஆயர் ஆரோக்கியசாமியால் அடிக்கல் நாட்டப்பட்டு, அருட்பணியாளர் ஜோசப்ராஜ் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது. 1984 டிசம்பர் 30-ந்தேதி ஆயர் ஆரோக்கியசாமி அர்ச்சித்தார்.

    புனித ஆரோபண அன்னையின் விழா திருக்கொடியேற்ற நிகழ்ச்சியானது ஆண்டு தோறும் ஆகஸ்டு மாதம் 6-ந்தேதி நடைபெறும். 15-ந்தேதி வரை 10 நாட்கள் விழா நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டும் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு தேர்பவனி நடைபெறுகிறது. அதன் இறுதியில் நற்கருணை ஆராதனையும் நடக்கிறது. இந்த விழாவில் குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் பிற மாவட்ட மக்களும் பங்கேற்பார்கள். இந்த பங்கின் கீழ் 37 அன்பியங்கள், 1,500 குடும்பங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×