search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குரங்கணி முத்துமாலையம்மன் திருக்கோவில் - தூத்துக்குடி
    X

    குரங்கணி முத்துமாலையம்மன் திருக்கோவில் - தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டத்தில் எத்தனை அம்மன் கோவில்கள் இருந்தாலும், அவற்றுள் பழமையானதாகவும், ராமாயண காலத்தோடு தொடர்புடையதாகவும் விளங்குகிறது குரங்கணி முத்துமாலையம்மன் திருக்கோவில்.
    10-7-2018 ஆலயத் திருவிழா

    தூத்துக்குடி மாவட்டத்தில் எத்தனை அம்மன் கோவில்கள் இருந்தாலும், அவற்றுள் பழமையானதாகவும், ராமாயண காலத்தோடு தொடர்புடையதாகவும் விளங்குகிறது குரங்கணி முத்துமாலையம்மன் திருக்கோவில்.

    ராமாயண காலத்தில் சீதாதேவியை, ராவணன் சிறைபிடித்துச் சென்றான். சீதாதேவியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட ராமனுக்கு வானரங்கள் உதவின. இலங்கைக்குச் செல்ல ராமபிரான் தன் வானரச் சேனையை அணிவகுத்து நிற்கச் செய்த இடம் இது என்று கூறப்படுகிறது. குரங்குகள் அணிவகுத்து நின்றதால் இவ்வூர் ‘குரங்கணி’ என பெயர் பெற்றதாக புராண வரலாறு கூறுகிறது.

    ராவணன், சீதாதேவியை கடத்திச் சென்றபோது, ராமனுக்கு அடையாளம் காட்ட தன் கழுத்தில் கிடந்த முத்து மாலையை கழற்றி வீசினாள், சீதாதேவி. புஷ்பக விமானத்தில் இருந்து வீசப்பட்ட முத்து மாலை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள குரங்கணியில் விழுந்தது. தரையில் விழுந்த முத்துமாலை ஜோதியாக ஒளி வீசியது. அப்போது அந்த வழியாக வந்த பனையடியான் என்பவர், முத்து மாலையின் ஒளி வீச்சை காண முடியாமல் கண்கள் கூச, அருகில் கிடந்த மண் சட்டியை எடுத்து அந்த முத்துமாலையை மூடினார். பின்பு ஊர் மக்கள் கூடி முத்து மாலை கிடந்த இடத்தில் சீதாதேவியின் பெயரால் வழிபாடு நடத்தினர். முத்து மாலை கிடந்த இடமானதால் இங்கு அமைக்கப்பட்ட அம்மனுக்கு ‘முத்துமாலையம்மன்’ என்றே பெயரிட்டனர் என்கிறது தல வரலாறு.

    பழங்காலத்தில் இத்திருக்கோவிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடை திறக்கப்பட்டு மதியம் மற்றும் இரவு பூஜை மட்டும் நடந்து வந்தது. அப்போது அம்மனுடைய மண் திருமேனிக்கு அபிஷேகம் மற்றும் நைவேத்தியங்கள் இல்லாமல் இருந்தது. இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதாதேவி உண்ணாமல் தவம் இருந்ததை நினைவு கூரும் விதமாக, இவ்வாறு தீப, தூபம் மட்டும் காட்டி வழிபட்டு வந்தனர்.

    கோவிலில் 1957-ம் ஆண்டு கோவில் கும்பாபிஷேகம் நடந்த போது, அம்மனின் முத்துமாலையை மூடி இருந்த ஒட்டு சீலை விலக்கப்பட்டு, கல்லினால் ஆன திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டது. அன்று முதல் தினமும் கோவில் நடை திறக்கப்பட்டு, அபிஷேகம் மற்றும் நைவேத்தியங்கள் படைக்கப்பட்டு பகல், இரவு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

    முத்துமாலையம்மன் சன்னிதியின் இடப்புறமும், வலப்புறமும் பரிவார மூர்த்திகளின் சன்னிதிகள் அமைந்திருக்கின்றன. இதில் அம்மனுக்கு இடப்புறம் நாராயணர், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களின் கோபுரத்துடன் கூடிய சன்னிதி உள்ளது.

    சீதாதேவியை காணாமல் ராமரும், லட்சுமணனும் காட்டில் தேடி அலைந்தார்கள். அப்போது வெட்டுப்பட்டு கிடந்த ஜடாயு பறவை ராவணன் தான் சீதாதேவியை கடத்தி சென்றான் என கூறியது. அனுமனுடன் வானரப்படைகள் சீதாதேவியை தேடிச் சென்றபோது, ஒரு இடத்தில் ஏதோ மினுமினுப்பாக மிளிர்ந்தது. அனுமன் அதன் அருகே சென்று பார்த்தபோது ‘அது சீதையின் முத்து மாலை’ என ராமர் கூறினார். அந்த முத்துமாலையை ராமன் கிழக்கே நின்று மேற்கு முகமாக பார்த்ததால் இங்கு நாராயணர் கோவில் மேற்கு முகமாக இருக்கிறது.

    முப்பிடாதி அம்மன், சப்த கன்னிகைகள், பார்வதி அம்மன், பிரம்ம சக்தி, மாரியம்மன், சந்தன மாரியம்மன், பைரவர், வீரபத்திரர் முதலியோருக்கு இங்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன. மேலும் விநாயகர், காசிநாதர், விசாலாட்சி, நவக்கிரகங்கள் ஆகியோர் இங்கு அருள்பாலிக்க, மூலவராக முத்துமாலை அம்மன் கிழக்கு முகமாக அமர்ந்தபடி அருளாட்சி புரிந்து வருகிறாள்.

    குரல் கொடுத்த அம்மன்


    நவாப் ஆட்சி செய்த காலத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையை நேராக அமைக்க எண்ணினார். அதற்கு கோவிலின் சுற்றுச்சுவர் இடையூறாக இருப்பதாக நினைத்த அவர், அதிகாரி ஒருவரை அனுப்பி கோவில் சுற்றுச்சுவரை அகற்ற உத்தரவிட்டார். அதன்படி ஒரு அதிகாரி குதிரையில் வந்தார். அவருடைய செயலை அவ்வூரைச் சேர்ந்த நான்கு சகோதரர்கள் வம்சா வழியினர் தடுத்தனர். அப்போது அந்த அதிகாரி ‘இந்த அம்மனுக்கு சக்தி இருக்குமானால், நான் கூப்பிடுகிறேன், அது பதில் சப்தம் தருமா?’ என கேட்க, அதற்கு அவர்கள் ‘நிச்சயம் தரும்’ என்றனர்.

    ‘முத்துமாலை அம்மன், முத்துமாலை அம்மன்’ என 3 முறை கூப்பிட்டார் அந்த ஆங்கிலேய அதிகாரி.

    ‘என்ன?’ என்ற சப்தம் இடி போன்று கோவில் கருவறைக்குள் இருந்து கேட்டது. சப்தத்தை கேட்ட அதிர்ச்சியில் அந்த அதிகாரி மயங்கி கீழே விழுந்தார். உடன் குதிரையும் மயங்கி விழுந்தது. கூடி இருந்தவர்கள் பயபக்தியுடன் நின்றார்கள். அம்மன் தீர்த்தம் தெளித்து எழுப்பியதும் அதிகாரிக்கும், குதிரைக்கும் சுய உணர்வு வந்தது. கோவிலை இடிக்காமல் விட்ட அதிகாரி, 2 மண் குதிரைகள் செய்து கோவிலில் வைக்க உத்தரவிட்டார். அந்த குதிரைகளை இன்றும் கோவிலில் பெரிய சுவாமி சன்னிதியில் காணலாம்.

    ஆற்றில் மிதந்து வந்த பெரியசாமி

    குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில், அம்மனுக்கு தென்புறம் வடக்கு நோக்கி பெரியசாமி சன்னிதி உள்ளது. இந்த சன்னிதி அமைய தனிக்காரணம் உண்டு. கோவில் பூசாரி மற்றும் இவ்வூர் நான்கு சகோதரர்கள் கனவில் முத்துமாலை அம்மன் தோன்றினாள். ‘கேரளாவில் இருந்து எனது காவல் வீரன் பெரியசாமி, நாளை தாமிரபரணி வெள்ளப் பெருக்கில் சிலை வடிவில் மிதந்து வருகிறான். அவனை நல்ல முறையில் வரவேற்று எனது கோட்டைக்குள் எனக்கு வலது புறம் வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் அவனது திரு உருவை அமைத்து விடுங்கள்’ என அருளினாள். அம்மன் அருளாணையின்படி தாமிரபரணி வெள்ளத்தில் வந்த பெரியசாமியை வரவேற்று கோவில் அமைத்து வழிபட்டு வந்தனர். பெரியசாமி காவல் தெய்வமாக விளங்கி வருகிறார்.

    விழாக்கள்

    குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆனி பெருந்திருவிழா, தைத் திருமாலை பூஜை விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். கோவிலின் முக்கியமான விழா ஆனி மாதம் கடைசி செவ்வாய்க் கிழமை நடைபெறும். அப்போது முத்துமாலை அம்மனுக்கு சொக்கத் தங்கத்தால் திருமேனி அலங்காரம் செய்யப்படும்.

    ஆனி திருவிழாவிற்கு 15 நாட்களுக்கு முன்னால் திருக்கால் நாட்டு வைபவம் நடைபெறும். முத்துமாலையம்மன் சன்னிதியின் தென்புறம் முப்பிடாதி அம்மன் முன்னிலையில் அன்று மதியம் அம்மன் மற்றும் பரிவார மூர்த்தங்களுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடத்தி கால் நடப்படும். அப்போது வானில் கருடன் வட்டமிடும் இந்த அதிசய காட்சி இன்றும் நடைபெற்று வருகிறது.

    இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 1.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்து உள்ளது குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில். திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் அமைந்து உள்ள தென்திருப்பேரை என்ற ஊரில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சென்றதும் இக்கோவிலை அடையலாம். 
    Next Story
    ×