search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெருமாள் பூஜை
    X
    பெருமாள் பூஜை

    குலதெய்வத்தின் அருள் கிடைக்க உதவும் புரட்டாசி மாத விரத வழிபாடு

    இந்த புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்தால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். செல்வம் செழிக்கும். துன்பங்கள் விலகும்.
    தமிழ் மாதங்களில் 6–வது மாதமாக புரட்டாசி வருகிறது. இது கன்னி ராசிக்குரிய மாதமாகும். புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்தது. அன்று நோன்பு நோற்று உபவாசம் இருப்பது வழக்கம். ‘உப’ என்றால் ‘சமீபம்’ என்று பொருள். ‘வாசம்’ என்றால் ‘வசிப்பது’ என்று பொருள். இறைவனுக்கு சமீபமாக செல்ல, நாம் நோன்பு நோற்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    புரட்டாசி மாதம் மகாளய பட்சம் வருகிறது. மகாளய பட்சத்தில் மூதாதையர்களுக்கு திதி கொடுக்கிறோம். புரட்டாசி சனிக்கிழமைகளில் காக்கும் கடவுளாகிய திருமாலை வேண்டி விரதம் இருப்பதால் சனி பகவானால் ஏற்படும் தொல்லைகளில் இருந்தும், மூதாதையர்கள் சாபங்களில் இருந்தும் விடுபட பெருமாள் அனுக்கிரகம் செய்கிறார்.

    புரட்டாசி சனிக்கிழமை விரதம் திருப்பதி ஏழுமலையானுக்கு மிகவும் உகந்தது. தசாவதாரத்தில் எந்த அவதாரத்திலும் சேராதது ஸ்ரீ வேங்கடேசன் அவதாரம். பக்தர்களின் நலனுக்காக அவர் திருமலையில் எழுந்தருளி இருக்கிறார். ஏழுமலையான் சீனிவாசன் என்ற பெயரில் பூமிக்கு வந்த கதை தெய்வாம்சம் மிக்கது.

    சனிக்கிழமை விரதம்

    புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் முதலில் வீட்டில் பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட வேண்டும். பின்னர் அலமேலுமங்கையுடன் கூடிய வேங்கடேசப் பெருமாள் படத்தை அலங்கரிக்க வேண்டும். இரு பக்கங்களிலும் ஐந்து முக குத்து விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். பூஜைக்குரியனவற்றை சேகரித்து வைத்து, ராகு காலம், எமகண்டம் நேரம் இல்லாமல் நல்ல நேரத்தில் மாவிளக்கேற்றி பூஜிக்க வேண்டும். சர்க்கரைப்பொங்கல், வடை, எள் சாதத்தை நிவேதனமாக படைக்கலாம்.

    ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் சனிக்கிழமையன்று மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்ய வேண்டும். அரிசிமாவு, வெல்லம் ஆகியவற்றை கலந்து மாவில் ஒரு பகுதியை இளநீர் விட்டு பிசைந்து தீபம் போல் செய்து, மீதி மாவை குவித்து அதன்மேல் பஞ்சினால் பூவத்திபோல் செய்து அதை தீபத்தில் வைத்து சுத்தமான நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும்.

    அதன் பிறகு பூஜைகள் செய்து ஆரத்தி காட்ட வேண்டும். பூஜை முடிந்ததும் தேங்காயை துருவி, மாவுடன் அதனை கலந்து அனை வருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம். துளசி தண்ணீர், புளி சாதம் மற்றும் எலுமிச்சை சாதம் வைத்து வேங்கடவனை வழிபடுவதும், துளசி, தாமரை மற்றும் குங்குமத்தால் அர்ச்சிப்பதும் விசேஷம்.

    இந்த புரட்டாசி சனிக்கிழமை விரதத்தை மேற்கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். செல்வம் செழிக்கும். துன்பங்கள் விலகும். எந்த விரதமானாலும் பகலில் தூங்கக் கூடாது. வெற்றிலை, பாக்கு போடக்கூடாது. மது, மாமிசத்தை விலக்கி பாவம் செய்வதை தவிர்க்க வேண்டும். அனைத்து உயிர்களிடத்தும் கருணை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
    Next Story
    ×