search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆண்டாள்
    X
    ஆண்டாள்

    திருமண யோகம் தரும் ஆடிப்பூர விரதம்

    ஆடிப்பூர தினமான இன்று திருமணமாகாத பெண்கள் இந்நன்னாளில் ஆண்டாளை விரதம் இருந்து வணங்கினால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
    தேவிக்குரிய திருநாள்களில் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் “ஆடிப் பூரம் திருநாள்’ மிகவும் சிறப்பானது. இன்று (சனிக்கிழமை) ஆடிப்பூரம் தினமாகும். இன்று வைணவத் திருக்கோயில்களில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். திருமணமாகாத பெண்கள் இந்நன்னாளில் ஆண்டாளை விரதம் இருந்து வணங்கினால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

    பெண்களுக்கு வளையல் காப்பு நடத்துவதுபோல, நம்மைப் படைத்த அன்னைக்கு வளைகாப்பு நடத்தி மகிழ்ந்திடும் நாளே ஆடிப்பூரம். அம்பிகைக்கு வளையல்களால் அலங்காரம் செய்து வழிபட்டு அந்த வளையல்கள் பெண் களுக்குப் பிரசாதமாக அளிக்கப்படுகிறது.

    ஆடிப்பூரத்தையட்டி அம்மன் ஆலயங்கள் அனைத்திலுமே வளையல் காப்பு அணிவிக்கும் உற்சவம் நடத்தப்படும். அன்றைய தினம் அம்மனுக்கு வளையல்களை வாங்கித் தந்து வழிபட்டு அவளது பிரசாதமாக சில வளையல்களைப் பெற்று அணிந்து கொண்டால், மனம்போல மாங்கல்யம் அமையவும், மங்களங்கள் நிலைக்கவும் செய்யும். அதோடு, அம்பிகை தாய்மைக்கோலம் கொண்ட நாள் என்பதால் குழந்தை பாக்கியமும் நிச்சயம் கிட்டும்.

    ஒவ்வொரு பெண்ணின் வடிவிலும் அம்பிகையின் அம்சம் நிறைந்துள்ளது. எனவே ஆடிப்பூரம் தினத்தன்று அம்பிகையின் அருள் முழுமையாக நிறைந்திருக்கும் என்பதால் எந்த பேதமும் இன்றி இயன்ற அளவு மற்ற பெண்களுக்கு வளையல்கள், குங்குமம், மஞ்சள், ரவிக்கைத் துணி, புடவை என்று அவரவரால் இயன்ற மங்களப் பொருட்களை வாங்கித் தர வேண்டும். அப்படி செய்தால் இல்லறம் சிறக்கச் செய்யும். இன்பங்கள் நிறையச் செய்யும் என்பது ஐதீகம்.

    தாலிபாக்கியம் சிறக்க, தாயாகும் பேறுபெற, வளமும் நலமும் பெருக நீங்கள் வேறு எதுவும், செய்ய வேண்டாம். ஆடிப்பூர நாளில் அம்மனுக்குக் கொஞ்சம் வளையல் வாங்கிக் கொடுங்கள். பதிலுக்கு உங்கள் வாழ்க்கை வளமையாகும் வரத்தை நிச்சயம் தருவாள் அம்பிகை.

    திருநெல்வேலி காந்திமதி அம்மனுக்கு ஆடிப்பூர விழாவின் 4 ஆம் நாளன்று ஊஞ்சல் மண்டபத்தில் வளைகாப்பு விழா நடைபெறுகிறது. இந்த அம்பிகையை வழிபடுவோர் திருமணம், பிள்ளைப்பேறு பெறுகின்றனர். சிலர் வீட்டில் முளைப்பாலிகை வைத்து அதை கோயிலில் சேர்க்கின்றனர். ஆடிப்பூர விழா, பல்வேறு ஆலயங்களில் வாகன சேவையுடன் 10 நாள் திருவிழாவாகவும் நடைபெறும்.

    திருவாரூர் கமலாம்பாள், நாகை நீலாயதாட்சி, திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை போன்ற பல திருத்தலங்களில் 10 நாள் பிரம்மோற்சவமும் திருமயிலைக் கற்பகவல்லிக்கு ஆடிப் பூரத்தன்று மதியம் சந்தன காப்பு அலங்காரமும், இரவு வளையல் அலங்காரமும் நடைபெறுகிறது. மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி அம்மனுக்கு கூழ்வார்க்கும் பண்டிகைச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    திருக்கழுக்குன்றம், அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில், அன்னை திரிபுரசுந்தரி சுயம்பு வடிவானவள். அம்பாள் மூர்த்தம் அஷ்ட கந்தகம் உட்பட எட்டு விதமான வாசனை பொருள்களால் ஆக்கபட்டது. அம்பாளுக்கு (திரிபுரசுந்தரி) மார்பில் ஸ்ரீ சக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டுள்ளது.

    ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், நவராத்தியில் வரும் நவமி ஆகிய மூன்று நாட்களில் மட்டுமே அம்பாளுக்கு முழு அபிஷேகம் செய்யப்படுகின்றது. மற்ற நாள்களில் அம்மனுக்கு திருபாதத்தில் மட்டுமே பூஜை நடக்கின்றது. அகில உலகத்தை காக்கும் நாயகியாம் திரிபுரசுந்தரியை வருடத்தில் 3 முறை நடைபெறும் மகாஅபிஷேக விழாவில் கண்டு வணங்கினால் பாவம் விலகி நல்லவை நடக்கும்.

    ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திரம் உச்சமாக இருக்கும். இந்நாளில் ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு புடவை, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, பணம் வைத்து கொடுப்பது நல்லது. இன்று (சனிக்கிழமை) மஞ்சள் தாலி கட்டிக்கொள்ள தீர்க்க சுமங்கலியாய் இருப்பர். ஆடிப்பூரம் அன்று சக்தி தலங்களில் அம்மன் ஆலயங்களில் வழிபட கேட்கும் வரம் கிடைக்கும். ஆரோக்கியமும், செல்வ செழிப்பும் உண்டாகும். 
    Next Story
    ×