search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கர்மவினை போக்கும் மாசி மகம் விரதம்
    X

    கர்மவினை போக்கும் மாசி மகம் விரதம்

    நாளை மாசிமக நாளில் வரும் பவுர்ணமி விரதத்தை கடைப்பிடித்து, அம்மையப்பனை வழிபட்டு வளம் பல பெறுங்கள். அந்த நாளில் குளத்தில் நீராடுவதால் கர்ம வினைகள் நீங்கி பிறவிப்பயன் கிடைக்கப்பெறலாம்.
    19.2.2019 அன்று மாசி மகம்

    பிரபஞ்ச சக்தி உண்மை என்பதை உணர்த்துவது சூரியனும், சந்திரனும். உலக இயக்கம் சூரியன், சந்திரனை கொண்டே இருக்கிறது. சூரியனும் சந்திரனும் ஒன்று சேரும் நாள் அமாவாசை. சூரியனுக்கு நேரே 180 டிகிரியில் சந்திரன் சஞ்சரிக்கும் நாள் பவுர்ணமி. இந்த இரு நாட்களும் பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் நாட்கள் என்பதால், நம் முன்னோர்கள் சுபகாரியங்களை தவிர்த்து வழிபாட்டிற்கு முக்கியத்துவம் தந்தனர்.

    இந்த உலகத்தில் மனிதர்கள் உள்பட அனைத்து ஜீவராசிகளும், கர்ம வினைகளை தீர்க்கவே ஜனனம் செய்கிறது. கர்ம வினையைக் குறைப்பதற்கு மூன்று விதமான வழிகளை நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அவை ‘மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலம்’ ஆகும். புராண இதிகாசங்களுடன் தொடர்பு பெற்ற ஸ்தலங்களும் அங்கு வீற்றிருக்கும் மூர்த்தியும், தீர்த்தங்களும் கர்ம வினைப் பலனை மாற்றும் சக்தி படைத்தவை. வருடத்தின் சில குறிப்பிட்ட மாதம் மற்றும் நாளில் சில தீர்த்தங்களுக்கு தனிச் சிறப்பு ஏற்படுகிறது.

    ஒவ்வொரு தமிழ் மாதமும் சில குறிப்பிட்ட நட்சத்திரத்தில் தான் பவுர்ணமி வரும். ஒவ்வொரு மாதம் பவுர்ணமி வந்தாலும் மகம் நட்சத்திரமும் மாசி மாதமும் இணையும் பவுர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்தது. மாதம் தோறும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாத மகம் நட்சத்திரத்திற்கு வலிமை அதிகம்.

    சிம்ம ராசியைச் சேர்ந்த மகம் நட்சத்திரத்தின் ராசி அதிபதி சூரியன். எனவே இந்த நட்சத்திரத்திற்கும் ஆளுமை தன்மை அதிகம். மகம் என்பது கேதுவின் நட்சத்திரம். ஒரு ஆன்மாவை உலக இன்பங்களுக்கு அழைப்பது ராகு என்றாலும், மோட்சம் அளிப்பது கேது தான். மோட்சக்காரகன் எனப்படும் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார்.

    மாசி மகம் அன்று, கால புருஷ 5-ம் இடத்தின் அதிபதி சூரியன் வீட்டில் சந்திரன் இருக்கிறார். 5-ம் இடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம். சூரியன் ஆன்மா, சந்திரன் உடல். சந்திரன் புனித நீருக்கு அதிபதி. ராஜ கிரகமான சூரியன் தன் வீட்டை தானே பார்ப்பதால் மகம் நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் போது சூரியன், சந்திரன், கேதுவின் தொடர்பு ஏற்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஜீவாத்மாவின் கர்ம வினையை போக்குவதில் நிகரற்ற சக்தி படைத்த நாளாக மாசி மகம் திகழ்கிறது. அதாவது சந்திரன், ஆன்மா என்ற சூரியனின் பார்வை பெறும் நாள் மகம் நட்சத்திரம் என்பதால் அன்றைய தினம் ஆன்மாவையும், உடலையும் பரிசுத்தம் அடையச்செய்வார்கள். ஆன்மாவும் உடலும் பரிசுத்தம் அடையும் போது, கர்ம வினைப் பதிவு குறையும்.

    இந்த ஆத்ம சுத்தி சூரியன், சந்திரனின் தொடர்பு எப்பொழுது சிம்மத்திற்கு கிடைக்கிறதோ, அப்பொழுது மட்டுமே சாத்தியம். அத்துடன் குரு சிம்மத்திற்கு வரும் போது ‘மகாமகம்’ என்ற அதி புனித நாள் 12 ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வருகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் மாசி மகம், கும்பகோணம் கும்பேஸ்வரர் திருக்கோவிலின் மகாமகத் திருக்குளத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. அன்று அனைத்து புண்ணிய நதிகளும் தங்கள் பாவ சுமையை நீக்க மகாமகக் குளத்திற்கு வருவதாக ஐதீகம். அந்த நாளில் குளத்தில் நீராடுவதால் கர்ம வினைகள் நீங்கி பிறவிப்பயன் கிடைக்கப்பெறலாம்.

    மகாமக குளத்திற்கு சென்று நீராட முடியாதவர்கள், உங்களது ஊரிலோ, அதற்கு அருகாமையிலோ உள்ள பழமையான ஆலயங்களிலும் நடைபெறும் அபிஷேக ஆராதனை, தீர்த்தவாரியில் கலந்து கொள்ளலாம்.

    மாசிமக நாளில் வரும் பவுர்ணமி விரதத்தை கடைப் பிடித்து, அம்மையப்பனை வழிபட்டு வளம் பல பெறுங்கள்.
    Next Story
    ×