search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பழனி கோவில் கந்தசஷ்டி: பக்தர்கள் விரதத்தை நிறைவு செய்து வழிபாடு
    X

    பழனி கோவில் கந்தசஷ்டி: பக்தர்கள் விரதத்தை நிறைவு செய்து வழிபாடு

    பழனி முருகன் கோவில் கந்தசஷ்டி விழாவையொட்டி சஷ்டி விரதமிருந்த பக்தர்கள் தண்டு விரதத்தை நிறைவு செய்து வழிபாடு நடத்தினர்.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் கடந்த 8-ந்தேதி கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அன்றைய தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் காப்பு கட்டி சஷ்டி விரதம் தொடங்கினர். சஷ்டி விரதம் என்பது திதி விரதம் ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி வரும் அமாவாசை தினத்துக்கு அடுத்த நாள் பிரதமை அன்று தொடங்குகிறது. சஷ்டி விரதம் இருந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். ‘சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’ என்று பழமொழி இருக் கிறது.

    சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் கரு உருவாகும் என்பதே இதன் பொருளாகும். சஷ்டி விரதத்தின் போது தினமும் கந்தசஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கந்தபுராணம் ஆகியவற்றை பாராயணம் செய்ய வேண்டும். கந்த சஷ்டி விரத நாட்களான 6 நாட்களும் முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பாகும். கந்தசஷ்டியையொட்டி முருகன் எழுந்தருளியுள்ள அனைத்து கோவில்களிலும் பூர்ண கும்பம் வைத்து விசேஷ அபிஷேகம், அர்ச்சனை போன்றவை நடைபெறும்.

    6 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் 6-ம் நாளில் வாழைத்தண்டு, உளுந்தம்பருப்பு, கொய்யா, மாதுளை, திராட்சை, ஆப்பிள் உள்ளிட்ட பழங்கள், மாங்காய், தயிர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து தண்டு கூட்டு தயாரிப்பார்கள். பின்னர் அதனை முருகனுக்கு படைத்து வழிபாடு நடத்துவார்கள். இந்த வழிபாடு தண்டுவிரதம் நிறைவு செய்யும் வழிபாடு என அழைக்கப்படுகிறது. பின்னர் பக்தர்கள் அதை சாப்பிட்டு தண்டு விரதத்தை நிறைவு செய்வார்கள்.

    இதன் மூலம் 6 நாட்களாக கடும் விரதம் இருந்த பக்தர்களின் உடல்நலம் இயல்பு நிலைக்கு திரும்பும். 7-ம் நாளான இன்று (புதன்கிழமை) திருக்கல்யாண வைபவத்தை விரதம் இருக்கும் பக்தர்கள் பார்த்து முருகப்பெருமானை வணங்கிவிட்டு, பின்னர் நடக்கும் திருமண விருந்தில் கலந்துகொண்டு சஷ்டி விரதத்தை நிறைவு செய்வார்கள். 
    Next Story
    ×