என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    இஸ்லாம் என்றாலே நிம்மதி என்று பொருள். அதாவது இம்மார்க்கத்தில் சந்தேகம் என்று எதுவுமே இல்லை என பொருள்.
    இன்றைக்கு நம்மிடையே பரவியுள்ள நோய்களில் மிக மோசமான, சீக்கிரம் அழியாத, அழிக்கவும் முடியாத நோய்- சந்தேகம். இன்று இது பாரெங்கும் பரந்து விரிந்து எல்லாத்தடங்களிலும் பெரும் தடைக்கல்லாய் இருந்து வருகிறது. இந்நோய் குடிகொண்டிருக்கும் வரை தேகமும், தேசமும் ஆரோக்கியம் பெறுவது கடினமே!

    ‘இதனை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்து( சொல்லி)க் கொண்டு, உங்களுக்குத் (திட்டமாக) அறிவில்லாத ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் கூறித்திரிகின்றீர்கள்; இன்னும் இதை நீங்கள் லேசானதாகவும் எண்ணி விட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய(பாவமான)தாக இருக்கும்’ (24:15) என்கிறது திருக்குர்ஆன்.

    பேச்சு என்பது இறைவன் நமக்கு மட்டுமே கொடுத்த மாபெரும் அருட்கொடை. அதை நாம் வீணாகப் பயன்படுத்தக்கூடாது. குறிப்பாக வீண் சந்தேகம், வதந்தி, பொய் போன்றவற்றை பேசி நமது பொன்னான மூச்சையும், பேச்சையும், காலத்தையும் பாழ்படுத்தி விடக்கூடாது என்பதையே மேற்கண்ட வசனம் மெய்ப்பிக்கிறது.

    அத்துடன், ‘அவ்வாறு செய்தால் அது ஒரு பெரும்பாவச் செயல்’ என்றும் திருக்குர்ஆன் எச்சரிக்கிறது.

    இதற்கும் மேலாக நமக்கு வரும் செய்திகளிலும் நாம் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று பின்வரும் வசனம் வாசித்துக்காட்டுகிறது இப்படி:

    ‘ஒவ்வொரு தகவலுக்கும் ஒரு குறிப்பிட்ட காலமுண்டு; (அதனை) நீங்கள் சீக்கிரமே அறிந்து கொள்வீர்கள்’ (6:67).

    ‘இறைவிசுவாசிகளே! தீயவன் எவனும் உங்களிடம் ஒரு செய்தியை கொண்டு வந்தால், அதைத் தீர்க்கமாக விசாரித்துக்கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப்படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்’. (49:6)

    வீசிய கற்களை அள்ளி விடலாம், ஆனால் பேசிய சொற்களை அள்ளமுடியுமா? எனவே நாம் நமது பேச்சுகளில் மிகமிக கவனமாக இருக்க வேண்டும்.

    குறிப்பாக நமது எண்ணங்களில் ஏற்படும் சந்தேகங்களை உடனடியாக பேச்சாக மாற்றிவிடக்கூடாது. அவ்வாறு செய்தால் அது நட்பு, உறவு, குடும்பம் மற்றும் சமூகங்களுக்கு இடையே அணைக்கவே முடியாத அளவுக்கு பெரும் தீப்பிழம்பை ஏற்படுத்தி விடுகிறது.

    சந்தேகம் என்பது ஏதோ ஒரு சூழலில் எல்லோருக்கும் ஏற்படலாம். அதை நாம் உடனுக்குடன் நீக்க முன்வரவேண்டும். இதையே திருக்குர்ஆன் இவ்வாறு வலியுறுத்துகிறது:

    ‘முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக்கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக்கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்’. (49:12)

    தீய சூழல்கள் தான் தீய எண்ணங்களை உருவாக்குகின்றன. அதில் சந்தேகமும் ஒன்று என்பதை இந்த திருக்குர்ஆன் வசனம் விளக்குகிறது.

    மேலும், நமது உணவுக்கும், உடலுக்கும் தொடர்பு இருப்பது போல் நமது உணவுக்கும், எண்ணங்களுக்கும் தொடர்பு இருக்கிறது. இதை பின்வரும் நிகழ்வு மூலம் அறியலாம்.

    ஒரு முறை நபித்தோழர் மஆத் பின் ஜபல் என்பவர் நபிகளாரிடம், ‘நாயகமே! எப்போதுமே என் பிரார்த்தனைகள் இறைவனால் உடனே ஏற்கப்பட நான் என்ன செய்ய வேண்டும்’ என்று கேட்டார். அப்போது, ‘உன் உணவை அனுமதிக்கப்பட்ட (ஹலால்) உணவாக ஆக்கிக்கொள்’ என்று நபிகளார் பதில் அளித்தார்கள்.

    இந்நிகழ்வு நம் உணவுக்கும், நமது மனதுக்கும் அதிக தொடர்பு இருக்கிறது என்பதையே நமக்கு நன்கு உணர்த்துகிறது. எனவே நமது உணவு, உடை, உறைவிடம் என நம்மைச்சுற்றியுள்ள அனைத்திலும் நமது எண்ண ஓட்டங்களுக்கும் இடையே நிறையத் தொடர்புகள் இருக்கின்றன. அதில் சந்தேகப்புத்தியும் சற்று மறைந்தே இருக்கின்றன. எனவே எப்போதும் நாம் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இல்லையேல் சந்தேகத்தின் வலையிலிருந்து தப்பிப்பது சிரமமாக அமையும்.

    என்றும், எதையும், எப்போதும் நாம் நேர்மறைச் சிந்தனையுடன், நல்ல எண்ணத்துடன் அணுகத் தொடங்கினால் அவை அனைத்தும் நல்ல செயல்பாடுகளாக வெளிப்படும்.

    இன்றைக்கு சந்தேகப்படும் நபர்களை விட, சந்தேகப்படும்படியாக நடந்து கொள்ளும் நபர்கள் தான் மிகஅதிகம். காரணம், அவர்களது தினசரி வெளிப்பாடுகள் அப்படித்தான் இருக்கின்றன. அவர்களது சொல்லில், செயலில், கொடுக்கல் வாங்கலில், நடைமுறையில் என அனைத்திலும் ‘சந்தேக ரேகை’ இழையோடு வதைக் காணலாம். இது நிச்சயம் மாற்றப்பட வேண்டும்.

    நமது உள்ளத்தில் உண்மை குடியிருக்கும் போது நமது வெளிப்பாடுகள் அனைத்தும் சந்தேகமற்றதாகவே இருக்கும். இதனால் தான் உண்மையின் உரைக்கல்லான திருக்குர்ஆன் ‘இது இறைவேதம் இதில் சந்தேகம் ஏதும் இல்லை’ (2:2) என்று அழுத்தமாக பதிவு செய்கிறது.

    நமது உள்ளத்திற்குள் அந்த சந்தேகப்பேர்வழியை என்றும் அனுமதிக்கக் கூடாது. ஒருமுறை அவன் வந்துபோய் பழகிவிட்டால் பிறகு அவனை விரட்டியடிப்பது கடினமாகிவிடும். இன்னும் சொல்லப்போனால் அந்தச் சந்தேகம் நமக்கே ஒரு சாபக்கேடு தான். தேகம் முழுவதும் சந்தேகத்தை வைத்துக் கொண்டு எப்படி நிம்மதிப் பெருமூச்சு விட முடியும்?

    இஸ்லாம் என்றாலே நிம்மதி என்று பொருள். அதாவது இம்மார்க்கத்தில் சந்தேகம் என்று எதுவுமே இல்லை என பொருள். உண்மையிலேயே இஸ்லாம் அப்படித்தான் இருக்கிறது. ஒவ்வொரு முஸ்லிமும் அப்படித்தான் இருக்கவும் வேண்டும்.

    வாருங்கள், தூய எண்ணங்களை விதைப்போம், தீய சந்தேகங்களை புதைப்போம்.

    மவுலவி எஸ். என். ஆர். ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு.
    நபி முஹம்மது (ஸல்) அவர்கள் அடிபட்டும், காயப்பட்டும், குத்தலான பேச்சுக்கு ஆளாகியும் நபித்துவத்தின் ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்றன.
    “உமக்குக் கட்டளையிடப்பட்டிருப்பதை வெளிப்படையாக அவர்களுக்கு அறிவிப்பீராக; இணைவைத்து வணங்குபவர்களைப் புறக்கணித்துவிடுவீராக!” என்ற திருக்குர்ஆனின் வசனத்திற்கேற்ப நபி முஹம்மது (ஸல்) வெளிப்படையாக அக்கிரமக்காரர்களின் கண்களுக்கு முன்பாகவே தொழுது வந்தார்கள். வெளிப்படையாகவும் இரகசியமாகவும் மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்து வந்தார்கள். இதனால் நபிகளாரை சமயம் பார்த்து ஒழித்துக் கட்டவேண்டுமென்று சில குறைஷிகள் முடிவு செய்தனர்.

    குறைஷிகள் 'ஹஜருல் அஸ்வத்'திற்கு (அதாவது கஅபத்துல்லாவில் இருக்கும் சொர்க்கத்து கருங்கல்) அருகில் குழுமியிருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் அங்கு வந்து அவர்கள் எப்போதும் செய்வதுபோல் 'ஹஜருல் அஸ்வத்'தைத் தொட்டுவிட்டு, தவாஃபை தொடங்கினார்கள். தவாஃப் என்றால் இறையில்லமான கஅபாவைச் சுற்றி வருதல்.

    அப்படிச் செய்யும்போது குழுமியிருந்தவர்கள் ஒரே பாய்ச்சலாக நபி (ஸல்) அவர்கள் மீது பாய்ந்து, நபிகளாரின் போர்வையையே அவர்களின் கழுத்தில் போட்டு அவர்களின் மூச்சு திணறும்படி கடுமையாக நெறித்தனர். அப்போது அபூபக்கர் (ரலி) வந்து குறைஷிகளைத் தடுத்து விலக்கிவிட்டு “தனது இறைவன் அல்லாஹ் ஒருவன்தான் என்று கூறியதற்காகவா ஒருவரைக் கொலை செய்கிறீர்கள்?” என்று கண்ணீர் மல்கக் கேட்டார்கள். குறைஷிகள் அபூபக்கரையும் விடவில்லை, அவரையும் தாக்கிய பிறகே அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இப்படியே நபி முஹம்மது (ஸல்) அவர்கள் அடிபட்டும், காயப்பட்டும், குத்தலான பேச்சுக்கு ஆளாகியும் நபித்துவத்தின் ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்றன. ஆறாவது ஆண்டில் ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் ஸஃபா மலைக்கருகில் அமர்ந்திருந்தபோது  நபி (ஸல்) அவர்களை அபூ ஜஹ்ல் கடும் வார்த்தைகளால் காரணமில்லாமல் தூற்றினான். ஆனால், நபி (ஸல்) அவர்கள் அவனுக்கு எவ்வித பதிலும் கூறாமல் வாய்மூடி மௌனமாகவே இருந்தார்கள்.

    வம்பிழுத்தும் பதில் பேசாத நபிகளாரை, அபூஜஹ்ல் ஒரு கல்லால் நபிகளாரின் மண்டையில் அடித்துக் காயப்படுத்திவிட்டு ஒன்றுமே தெரியாததுபோல் கஅபாவிற்கு அருகில் மற்ற குறைஷிகளோடு போய் அமர்ந்து கொண்டான். நபி (ஸல்) அவர்களின் தலையிலிருந்து இரத்தம் கசிந்தது. இக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பணிப் பெண், வேட்டையிலிருந்து வில்லுடன் வந்து கொண்டிருந்த ஹம்ஜாவிடம் இச்சம்பவத்தைக் கூறினார். ஹம்ஜா (ரலி) குறைஷிகளில் மிகவும் வலிமைமிக்க வாலிபராக இருந்தார். தனது குடும்பத்தைச் சேர்ந்த பாசத்திற்குரிய ஒருவர் இழிவாக்கப்படுவதைப் பொறுக்கமுடியால் சினம்கொண்டு எழுந்தார்.

    கஅபாவிற்கு அருகில் அபூஜஹ்லைக் கண்டு “ஏ! கோழையே! எனது சகோதரனின் மகனையா திட்டிக் காயப்படுத்தினாய்! நானும் அவரது மார்க்கத்தில்தான் இருக்கிறேன்” என்று கூறி தனது வில்லால் அவனது தலையில் அடித்துப் பெரும் காயத்தை ஏற்படுத்தினார். அதுவரை இஸ்லாமை ஏற்காத ஹம்ஜா (ரலி) தமது நேசத்திற்குரிய நபி முஹம்மது (ஸல்) காயப்பட்டதைப் பொறுக்கமுடியாமல் இஸ்லாமை ஏற்றதாகச் சொன்னவர் அதன் பிறகு அல்லாஹ்வின் அருளால் இஸ்லாமைப் புரிந்து கொண்டு, வலிமை வாய்ந்த மார்க்கத்தை அவர் உறுதியாக பற்றிக் கொண்டார்.

    (திருக்குர்ஆன் 15:94, ஸஹீஹ் புகாரி 4:62:3678, சீறா இப்னு ஹிஷாம், அர்ரஹீக் அல்மக்தூம்)

    - ஜெஸிலா பானு.

    தலாக் எனும் சொல்லுக்கு, திருமண ஒப்பந்தத்தை முறித்தல், இல்லற வாழ்வை முடிவுக்குக் கொண்டு வருதல் ஆகியவற்றைக் குறிக்கும்.
    மணவிலக்கு என்பதைக் குறிக்க ‘தலாக்’ என்னும் அரபுச்சொல் பயன்படுத்தப்படுகிறது. ‘தலாக்’ எனும் சொல்லுக்கு, விடுவித்தல், அவிழ்த்தல், கைவிடுதல் என்பது பொருளாகும். இதை ‘விவாகரத்து’ என்ற வடமொழி சொல்லாலும் சுட்டுகிறோம். இச்சொல், திருமண ஒப்பந்தத்தை முறித்தல், இல்லற வாழ்வை முடிவுக்குக் கொண்டு வருதல் ஆகியவற்றைக் குறிக்கும்.

    இஸ்லாத்தின் பார்வையில் இல்லறம் ஒரு நல்லறமாகவும், ஓர் ஒப்பந்தமாகவும் உள்ளது. இல்லற வாழ்வு நீடித்து நிலை பெற வேண்டும் என்பதால்தான் திருமணம் செய்வதை இஸ்லாம் ஊக்குவிக்கிறது. ஆயுள் காலம் வரை நீடித்து நிற்பதற்காகவே திருமண ஒப்பந்தம் பலர் முன்னிலையில் நிறைவேற்றப்படுகிறது. எனவேதான் தம்பதியினருக்கு இடையே இருக்கும் உறவு, புனிதமாகப் போற்றப்படுகிறது.

    இப்படிப்பட்ட நிலையில் கணவன்-மனைவி இடையே கசப்பு ஏற்பட்டு உறவில் விரிசல் உண்டாகி, இருவரும் இனிமேல் இணைந்து வாழவே முடியாது என்ற நெருக்கடி தோன்றுகிற நெருப்பு வேளைகளில் பிரிவதைத் தவிர வேறு வழி இல்லை. அவர்கள் இருவரும் பெயரளவில் கணவன்-மனைவியாக வாழ்வதை விட பிரிந்து தமக்கு ஏற்ற துணையைத் தேடிக்கொள்வதே இருவருக்கும் நல்லது. இதன் அடிப்படையிலேயே ‘தலாக்’ என்னும் மணவிலக்கிற்கு இஸ்லாம் அனுமதி அளித்துள்ளது.

    மணமுறிவைத் தடுக்க இஸ்லாம் பல வழிமுறைகளைக் கையாளுகிறது. இன்னும் சொல்லப்போனால், மணமுறிவை இஸ்லாம் கடுமையாக வெறுக்கிறது.

    “அனுமதிக்கப்பட்ட விவகாரங்களில் அல்லாஹ் அதிகம் வெறுக்கும் செயல் மணவிலக்கு (தலாக்) ஆகும்”. “இறைவன் மிகவும் விரும்புவது ஓர் அடிமையை விடுதலை செய்வது; மிகவும் வெறுப்பது விவாகரத்து”. “ஒரு பெண்ணுக்கும் அவள் கணவனுக்கும் இடையே உறவை நாசம் செய்பவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்”. “சுகம் அனுபவிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு திருமணம் செய்பவர்களையும், மண விலக்குக் கோருபவர்களையும் அல்லாஹ் சபிக்கிறான்” என்பன போன்ற நபிமொழிகள் இதை உறுதிப்படுத்துகின்றன.

    பிற மதங்களில் இருப்பதைப்போல, மணமுறிவுச் சட்டங்களைக் கடுமையாக ஆக்கினால் இனிதான இல்லறமும் இல்லாமல், பிரியவும் முடியாமல் மன உளைச்சலுக்கும், வேதனைக்கும் இருவரும் ஆளாக நேரிடும். அதே வேளையில் மண முறிவுச் சட்டங்களை எளிதாக ஆக்கினால் இல்லற வாழ்வு, விளையாட்டுக் களமாகி விடும். எனவே இஸ்லாம் இதில் ஒரு நடுநிலையான போக்கைப் பின்பற்றுகிறது.

    மேலும் மணமுறிவைத் தடுக்க இஸ்லாம் பல வழிமுறைகளைக் கையாளுகிறது. கணவன்-மனைவிக்கு இடையே பிணக்குகள், சண்டை சச்சரவுகள் உருவாகும்போது தமது உரிமைகள் சிலவற்றை விட்டுக் கொடுத்து திருமண உறவை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் வேண்டுகிறது.

    “ஒரு பெண் தன் கணவனிடம் இருந்து வெறுப்பையோ அல்லது புறக்கணிப்பையோ பயந்தால் அவர்கள் இருவரும் தங்களுக்குள் ஏதேனும் ஒரு சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்வது அவ்விருவர் மீதும் குற்றமில்லை. (அத்தகைய) சமாதானமே மேலானது” (திருக்குர்ஆன் 4:128) என்று இறைவன் கட்டளையிடுகிறான்.

    சமாதானம் ஏற்படாதபோது ஒரு சமரசக் குழுவை நியமித்து அவர்கள் மூலம் இணக்கத்தை ஏற்படுத்துமாறு இறைக் கட்டளை வருகிறது.

    “(கணவன்-மனைவி ஆகிய) அவ்விருவர் இடையே (பிணக்குண்டாகி) பிரிவினை ஏற்பட்டு விடும் என்று அஞ்சினால், அவனது குடும்பத்தாரில் இருந்து ஒரு நடுவரையும், அவளது குடும்பத்தாரில் இருந்து ஒரு நடுவரையும் நீங்கள் அனுப்புங்கள். அவ்விருவரும் சமாதானத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவரிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி விடுவான்” (திருக்குர்ஆன் 4:35).

    சமரச முயற்சி தோல்வி அடைந்து விட்டால், மணவிலக்கு செய்ய விரும்பும் ஆண், மனைவி மாதவிலக்கில் இருந்து தூய்மை அடைந்த பிறகு, ‘உன்னை நான் விவாகரத்து செய்கிறேன்’ என்று ஒருமுறை கூற வேண்டும். இது முதலாவது ‘தலாக்’ ஆகும். இவ்வாறு கூறிய பிறகு குறைந்தது ஒரு மாதம் இடைவெளி விட வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் அவர்கள் ஒரே வீட்டில் இருக்க வேண்டும். இந்த இடைவெளியில் இருவரும் சமாதானமாகி சேர்ந்து வாழ விரும்பினால் திருமண வாழ்க்கைக்குத் திரும்பலாம்.

    ஒருவேளை சமாதானம் ஏற்படவில்லை என்றால், இரண்டாவது முறையாக விவாகரத்து செய்வதாக கணவன், மனைவியிடம் சொல்ல வேண்டும். அதில் இருந்து குறைந்தது மேலும் ஒரு மாதம் இந்த இடைவெளியில் இருவரும் விரும்பினால் இணைந்து வாழலாம். ஒருவேளை இப்போதும் இணக்கம் ஏற்படவில்லை என்றால் கணவன் மூன்றாவது முறையாக விவாகரத்து செய்வதாக மனைவியிடம் தெரிவிக்க வேண்டும். மூன்றாவது முறையாக விவாகரத்து செய்வதாக அறிவித்து விட்டால் மணமுறிவு நிரந்தரமாகி விடும்.

    விவாகரத்து என்பது இத்தனைக் கட்டங்களையும் கடந்து வர வேண்டும். முதலில் சமரச முயற்சி மேற்கொள்ள வேண்டும். அதைத் தொடர்ந்து இடைவெளி விட்டு விவாகரத்து செய்ய வேண்டும். இதன் மூலம் அவசரப்பட்டு விவாகரத்து செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

    மேலும் விவாகரத்து செய்யும் வேளையில் சாட்சிகளையும் ஏற் படுத்திக் கொள்ள வேண்டும். “(தலாக்கின்போது) உங்களில் நியாயமுடைய இருவரைச் சாட்சியாக வைத்துக் கொள்ளுங்கள். மேலும் சாட்சியத்தை அல்லாஹ்வுக்காக (நேர்மையாக) நிலைப்படுத்துங்கள்” (65: 2) என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

    அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன்
    நபி முஹம்மது (ஸல்) தைரியமாகக் குறைஷியர்கள் முன்னிலையிலேயே அவர்களது வணக்க வழிபாடுகளையும், இஸ்லாமிய அழைப்புப் பணியையும் தொடர்ந்தார்கள்.
    நபி முஹம்மது (ஸல்) தைரியமாகக் குறைஷியர்கள் முன்னிலையிலேயே அவர்களது வணக்க வழிபாடுகளையும், இஸ்லாமிய அழைப்புப் பணியையும் தொடர்ந்தார்கள். ஆனால் இஸ்லாமை ஏற்றவர்கள் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இரகசியமாகவே வழிபாடுகளைச் செய்து வந்தனர். வெளிப்படையாகச் செய்தால் அவர்களுக்கு ஆபத்து நேரும் என்றும் அஞ்சினர். அதனால் இஸ்லாமை ஏற்றவர்களுக்கு அர்கம் இப்னு அபுல் வஅர்கம் மக்ஜூமி என்பவரின் வீட்டில் நபி (ஸல்) குர்ஆனை ஓதிக் காட்டுவதோடு, நற்பண்புகளையும் சட்டத்திட்டங்களையும் போதித்தார்கள்.

    நபிகள் நாயகம் (ஸல்) முஸ்லிம்களைத் தமது ஊரைவிட்டு ஹபஷாவிற்கு - அதாவது தற்போதுள்ள எத்தியோபியாவிற்கு - குடிபெயரச் சொன்னார்கள். அப்படியே பல முஸ்லிம்கள் அங்கு சென்று விட்டனர்.

    குர்ஆன் வசனத்தைச் செவிமடுக்கக் கூடாது என்று இருந்த குறைஷிகள் மத்தியில் திடீரென்று நபி முஹம்மது (ஸல்) குர்ஆன் வசனத்தை ஓதிக்காட்டும்போது அதன் இனிமையாலும், அது தந்த இன்பத்தாலும் மெய்மறந்து ‘அல்லாஹ்வுக்குத் தலைசாயுங்கள் அவனையே வணங்குங்கள்’ என்ற வசனத்தைக் கேட்கும்போது அவர்கள் தங்களையறியாமல் நபிகளாருடன் சேர்ந்து சிரம் பணிந்தார்கள்.

    இணைவைப்பவர்கள் ஸுஜூது அதாவது சிரம்தாழ்த்தி வணங்கிவிட்டதை ‘குறைஷிகள் முஸ்லிமாகிவிட்டனர்’ என்று நம்பி ஹபஷாவிற்குச் சென்ற முஸ்லிம்கள் சிலர் மக்காவிற்குத் திரும்பினர். ஆனால் அவர்களோ முஸ்லிமாகவில்லை அந்த நொடிக்கு மட்டுமே மனம் மாறியிருந்தார்கள், அதனால் திரும்பி வந்த முஸ்லிம்கள் கடுமையாக வேதனைக்குள்ளாக்கப்பட்டார்கள். முஸ்லிம்களை மீண்டும் ஹபஷாவிற்குச் சென்றுவிடும்படி நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

    முஸ்லிம்கள் நிம்மதியாக இருந்த ஹபஷாவிற்கு, குறைஷிகள் இருவரை அனுப்பி அந்த நாட்டின் மன்னரான நஜ்ஜாஷியையும் அவர்களது மத குருக்களையும் சந்தித்துப் பேசி முஸ்லிம்களைத் திரும்ப அனுப்பி வைக்கும்படி கேட்டனர். அன்பளிப்பாகக் கொடுப்பதற்கு வெகுமதிகளையும் எடுத்துச் சென்றனர்.

    கிருஸ்தவ மதத்தைப் பின்பற்றிய நஜ்ஜாஷியிடம் குறைஷிகள் “உங்களது மார்க்கத்தையும் ஏற்றுக் கொள்ளாமல் உங்களுக்கும் எங்களுக்கும் தெரியாத ஒரு புதிய மார்க்கத்தைப் பின்பற்றுகின்றனர். இவர்களை எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள்” என்று கேட்டனர்.

    மறுதரப்பை விசாரித்தார் நஜ்ஜாஷி, பதில் தந்தார் ஜாஃபர் “அரசே, வழி தவறி மானக்கேடான காரியங்களில் ஈடுபட்ட எங்களை நேர்வழிப்படுத்த அல்லாஹ் எங்களுக்கு இறைத்தூதரை அனுப்பினான். அவர் மூலம் உண்மையைத் தெரிந்து கொண்டோம். இப்போது நாங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குகிறோம், எங்களது மூதாதையர்கள் வணங்கி வந்த கற்சிலைகளை நாங்கள் விலக்கிவிட்டோம்.

    மானக்கேடானவைகள், பொய் பேசுதல், அனாதையின் சொத்தை அபகரித்தல், பத்தினியான பெண்கள்மீது அவதூறு சுமத்துதல் போன்றவற்றிலிருந்து எங்களைத் தடுத்தார் அத்தூதர். மேலும் உறவினர்களோடு சேர்ந்து வாழவேண்டும்; அண்டை வீட்டாருடன் அழகிய முறையில் நடந்து கொள்ள வேண்டும்; அல்லாஹ் தடைசெய்தவற்றையும் கொலைக் குற்றங்களையும் விட்டு விலகிவிடவேண்டும் என்றும் கட்டளையிட்டார்” என்று சொன்னபோது அதற்கு நஜ்ஜாஷி அல்லாஹ்விடமிருந்து அத்தாட்சியாக உங்களிடம் என்ன இருக்கிறது என்று கேட்டார்.

    ஜாஃபர் (ரலி) திருக்குர்ஆனின் ‘மர்யம்’ அத்தியாயத்தின் முற்பகுதியின் வசனங்களை ஓதிக் காண்பித்தார். அதைக் கேட்டு நஜ்ஜாஷி அவரது தாடி நனையும் அளவு அழுதார். அவையில் உள்ளவர்களும் அழுதனர். “இதுவும் நபி ஈஸா (அலை) கொண்டு வந்த மார்க்கமும் ஒரே இடத்திலிருந்து வெளியானதுதான்” என்று சொல்லிவிட்டு, முஸ்லிம்களை நாடுகடத்த வந்த அந்த இரு குறைஷிகளையும்  நோக்கி “நீங்கள் செல்லலாம்! நான் இவர்களை ஒப்படைக்கமாட்டேன்” என்று கூறிவிட்டு, முஸ்லிம்களை நோக்கி “எனது பூமியில் நீங்கள் முழுப் பாதுகாப்புடன் இருக்கலாம். மலையளவு தங்கத்தைத் தந்தாலும் உங்களைத் துன்புறுத்த நான் அனுமதிக்கமாட்டேன்” என்று கூறினார். தனது அவையில் உள்ளவர்களிடம் “அவ்விருவர்கள் கொண்டு வந்த அன்பளிப்புகளை அவர்களிடமே திரும்பக் கொடுத்து விடுங்கள். எனக்கு அதில் எவ்வித தேவையும் இல்லை” என்று கூறி அந்த இருவரையும் வெளியேற்றினார்.

    (ஆதாரம்: திருக்குர்ஆன் 41:26, சீறா இப்னு ஹிஷாம், அர்ரஹீக் அல்மக்தூம்)

    - ஜெஸிலா பானு.
    இஸ்லாம் என்ற அழகிய மாளிகை இறைநம்பிக்கை, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் என்ற ஐம்பெரும் தூண்களின் ஆதிக்கத்தில் நிலை பெற்றுள்ளது.
    இஸ்லாம் என்ற அழகிய மாளிகை இறைநம்பிக்கை, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் என்ற ஐம்பெரும் தூண்களின் ஆதிக்கத்தில் நிலை பெற்றுள்ளது. இருந்தாலும் அவை எல்லாம் அடிப்படை கடமைகளே தவிர, அவை மட்டுமே அந்த அழகிய மாளிகையின் அத்தனை அழகு அம்சங்களுக்கும் பொறுப்பாகிவிட முடியாது.

    அல்லாஹ் இட்ட கட்டளைகளின்படியும் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய வழிமுறைப்படியும் அந்த கட்டளைகளை சிறப்பாக செய்ய வேண்டும். அப்போது தான் அதற்கான சன்மானத்தை இறைவனிடம் நாம் பெறமுடியும். ஆனால் ஏதோ கடமைக்காக அவற்றை செய்தால் அதனால் எந்தப்பயனும் கிடைக்காது.

    இறைநம்பிக்கை

    இறையச்சத்தில் அடிப்படையில் தான் அல்லாஹ் இந்த ஐந்து கடமைகளை நிர்ணயித்து இருக்கின்றான். முதன் முறையாக ஈமானைப்பற்றிச் சொல்லும் போது ‘ஈமான் கொண்டோர்களே, உங்கள் இறைவனை நீங்கள் அஞ்சிக்கொள்ளுங்கள்’ (திருக்குர்ஆன் 9:119) என்று கூறினான்.

    அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்டால் மட்டும் போதாது, வாழ்க்கையின் ஒவ்வொரு நிலைபாட்டிலும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ள வேண்டும்.

    நீங்கள் எதைச்செய்தாலும், நன்மையை நாடி அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். இறையச்சம் மேலோங்கும் போது எண்ணங்களும் தூய்மை பெற்றுவிடும். பாவத்தை தவிர்த்து வாழ்வதற்கு எளிய வழி பிறக்கும்.

    இந்த ஐந்து கடமைகளையும் தவிர வாழ்வியல் வழியில் இறைவன் வகுத்துத் தந்த வழி முறையையும் இறையச்சத்தோடு தான் நிறைவேற்ற வேண்டும்.

    தொழுகை

    இரண்டாம் கடமையான தொழுகையைப்பற்றிச் சொல்லும் போது, ‘நீங்கள் தொழுகையை செவ்வனே செய்து வாருங்கள். தவறாது அதற்குரிய நேரங்களில் அதனை நிறைவேற்றுங்கள்’ என்று திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

    ‘நாளெல்லாம் தொழுகையை கடைப்பிடிக்கும்படியும், அவனுக்கே பயப்படும்படியும் ஏவப்பட்டுள்ளோம். அவனிடம் தான் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்றும் கூறுவீராக!’. (திருக்குர்ஆன் 6:72)

    ‘நாம் நம்மை படைத்து பரிபாலனம் செய்யக்கூடிய அல்லாஹ்வின் முன் நிற்கிறோம், அவன் சொன்ன கடமையை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம், அவனோடு பேசிக்கொண்டிருக்கிறோம், அவனிடம் நம் கவலையை, தேவையைச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்’ என்ற இறையச்ச உணர்வோடு தொழுகையை நிறைவேற்ற வேண்டும். அப்போது அல்லாஹ்வால் அது ஏற்றுக் கொள்ளப்பட்டதன் அடையாளமாக நம் உள்ளங்கள் லேசாவதை நாம் உணர முடியும்.

    ஆனால் அது எல்லோருக்கும் சாத்தியமாகிவிட முடியாது. ‘இறையச்சமுடையவர்களுக்கே தவிர மற்றவர்களுக்கு அது பெரும் சுமையாகவே தெரியும்’ என்று அல்லாஹ்வே சொல் கிறான்.

    இறைவனை வணங்கும் தொழுகையிலும் கூட இறையச்சம் இன்றியமையாதது என்பது இங்கு பட்டவர்த்தமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நோன்பு

    அடுத்து உண்ணா நோன்பைப் பற்றிச் சொல்லும்போது திருமறை இவ்வாறு கூறுகிறது:

    ‘நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர் மீது கடமை யாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமை யாக்கப்பட்டுள்ளது. அதனால் நீங்கள் இறையச்சமுடையவர்களாக ஆகலாம்’ (2:183).

    ‘நோன்பை இறையச்சம் கொண்டு நோற்காமல் வெறுமனே பசித்திருந்தும், தாகித்திருந்தும் அவன் எந்த பயனையும் அடைந்து கொள்வதில்லை. அல்லாஹ்விற்கு அது தேவையும் இல்லை’ என்று விளம்புகிறான்.

    தன் தேவைகளைத் தவிர்த்து உடலை வருத்தி செய்யப்படும் நல்ல செயலும் கூட இறையச்சம் என்ற உணர்வு இல்லாததால், அது வீண் செயலாய் போய்விடும் என்ற எச்சரிக்கையும் இங்கே சொல்லப்படுகிறது.

    ஜகாத்


    நோன்பைத் தொடர்ந்து ஜகாத்தை வலியுறுத்தும் இஸ்லாம் அதற்கான வழிகாட்டுதலையும் சொல்லித்தருகிறது. யாரெல்லாம் ஜகாத் கொடுக்க வேண்டும்? எவ்வளவு கொடுக்க வேண்டும்? எப்படி கொடுக்க வேண்டும்? என்றெல்லாம் வரையறுத்துச் சொல்லுகிறது. மேலும், இறையச்சம் இல்லாமல் வீண் ஆடம்பரத்திற்காகவும், பெருமைக்காகவும், உலகம் புகழ வேண்டும் என்பதற்காகவும் செய்யப்படும் தான, தர்மங்களால் எந்தவித நன்மையும் ஏற்பட வழியே கிடையாது என்றும் அழுத்தமாக தெரிவிக்கிறது.

    ‘எவர் தொழுதும், ஜகாத் கொடுத்தும் வருகிறாரோ, இவர்கள்தான் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதில் உண்மையானவர்கள், இவர்கள் தாம் இறையச்சம் உடையவர்கள்’. (திருக்குர்ஆன் 2:177)

    வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாமல் செய்யப்படும் தர்மம் தான் தலை சிறந்தது. இதனை அல்லாஹ்விற்காகத் தான் செய்கிறேன் என்று இறையச்சத்தோடு நிறைவேற்றும் போது வாங்கியவரின் கண்ணியமும், கவுரவமும் காப்பாற்றப்படுகிறது. இதனால் மனங்கள் ஒன்றுபடுகின்றது.

    ஹஜ்

    ஐந்தாம் கடமை ஹஜ்ஜும் கூட உடல், பொருளால் தன்னிறைவு பெற்றவர் களுக்கு மட்டுமே கடமையாக்கப்பட்டுள்ளது. ஹஜ் கடமைகளில் குர்பானி கொடுப்பது மிக முக்கியமான செயல்பாடு.

    ‘இவ்வாறு குர்பானி செய்த போதிலும் அதன் மாமிசமோ அல்லது அதன் ரத்தமோ அல்லாஹ்வை அடைந்து விடுவது இல்லை. உங்கள் இறையச்சம் தான் அவனை அடையும்’ (22:37) என்று திருக்குர்ஆன் எடுத்தியம்புகிறது.

    ‘அல்லாஹ் சொன்னான், நான் அடி பணிந்தேன்’ என்று இறையச்சத்தை முன்னிறுத்தி இப்ராஹீம் நபி செயல்பட்டார். அதனால் தான் அல்லாஹ் அவரது செயலை சிறப்பாக்கினான்.

    ஈமான், தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் என்ற ஐம்பெரும் கடமைகளை நிறைவேற்றச் சொன்ன அல்லாஹ், அதனை வெறுமனே கடமைக்காக நிறைவேற்றுவதை விரும்புவதில்லை. ‘தக்வா’ என்ற இறையச்சத்தின் அடிப்படையில் அவை நிறைவேற்றப்படும் போது தான் அது முழுமையடைந்து பூரணத்துவம் பெறுகிறது.

    இறையச்சத்தோடு வாழ்வோம்; இம்மை, மறுமையின் நன்மை களைப் பெற்றுக்கொள்வோம்.

    - எம். முஹம்மது யூசுப், உடன்குடி.
    மக்காவில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் நிறைவேற்றப்படும் என்று நம்பியிருந்தவர்களுக்கு நபிகளாரின் பிரார்த்தனை அச்சத்தையும் கவலையையும் தந்ததே தவிர அவர்கள் நபிகளாருக்குத் தந்து கொண்டிருந்த இன்னல்கள் தீரவில்லை.
    மக்காவில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் நிறைவேற்றப்படும் என்று நம்பியிருந்தவர்களுக்கு நபிகளாரின் பிரார்த்தனை அச்சத்தையும் கவலையையும் தந்ததே தவிர அவர்கள் நபிகளாருக்குத் தந்து கொண்டிருந்த இன்னல்கள் தீரவில்லை.

    இஸ்லாமிய அழைப்புப் பணியைத் தொடர்ந்து கொண்டிருந்த நபி முஹம்மது (ஸல்) அவர்களை, பலவகையில் குறைஷியினர் எதிர்த்தும், நபிகளாரின் அழைப்புப் பணியை நிறுத்த முடியவில்லை. நண்பரானாலும் எதிரியானாலும் நபிகளாரின் மீது அவர்கள் நன்மதிப்பே வைத்திருந்ததனர்.

    அபூதாலிபும் குறைஷியர்கள் பின்பற்றும் மார்க்கத்தில் இருந்ததால், அவரது சகோதரரின் மகனான நபி முஹம்மத்தை, அபூதாலிபின் பாதுகாப்பிலிருந்து விடுவிக்கும்படி குறைஷிகள் அபூதாலிபுக்கு நெருக்கடி தந்தும் பயமுறுத்தியும் அபூதாலிப் பணியவில்லை. நபிகளாரின் தந்தையின் சகோதரரும் குறைஷிகளின் தலைவர்களில் ஒருவனுமான அபூ லஹப் மற்றும் அவனது மனைவி உம்மு ஜமீல், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நபி முஹம்மது (ஸல்) அவர்களைச் சொல்லாலும் செயலாலும் காயப்படுத்தினர்.

    நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் கதீஜா (ரலி) அவர்களுக்கும் நான்கு மகள்களும் இரு மகன்களும் இருந்தனர். மகள்கள் ருகையா, உம்மு குல்ஸும், ஸைனப் மற்றும் ஃபாத்திமா. மகன்கள் அப்துல்லாஹ் மற்றும் காசிம். இதில் மகள்களான ருகையா மற்றும் உம்மு குல்ஸும் அவர்களை அபூ லஹபின் மகன்களான உத்பா மற்றும் உதைபாவுக்கு மணமுடித்துத் தந்திருந்தார்கள். நபிகளார் அழைப்பு பணியை நிறுத்தவில்லையென்றால் மகள்களை விவாகரத்துச் செய்து வீட்டுக்கு அனுப்பிவிடுவதாக அச்சுறுத்தினான் அபூ லஹப். நபிகளார் அடிபணியாததால் அபூ லஹப் தனது மகன்களை நிர்ப்பந்தித்து விவாகரத்துச் செய்ய வைத்துவிட்டான்.

    நபி (ஸல்) அவர்களின் மகன்கள் இருவரும் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர். நபிகளாரின் மகன் அப்துல்லாஹ் மரணமடைந்த போது “முஹம்மது சந்ததியற்றவராகி விட்டார்” என்று அபூலஹப் தனது மகிழ்ச்சியைக் கொண்டாடினான். அந்த அளவுக்குக் கொடூரமானவன் அபூ லஹப். அபூ லஹப்பின் மனைவியும் நபிகளாரைக் கண்டாலே தூற்றுவாள், நபிகளார் செல்லும் வழியில் முட்களைப் பரப்புவாள், புகைந்து கொண்டிருக்கும் அவள் மனம் நபிகளாரைப் பற்றிப் பொய்யுரைத்துக் கொண்டிருக்கும். திருக்குர்ஆனில் இவளை ‘விறகைச் சுமப்பவள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அபூ லஹப் மற்றும் அவரது மனைவி கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் புகுவார்கள் என்றும் திருக்குர்ஆனில் வந்துள்ளது.

    அபூ லஹப்பை போல் அபூ ஜஹ்லும் மிகக் கொடூரமானவன். நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருந்தபோது அபூ ஜஹ்லும் அவனுடைய தோழர்களும் அறுக்கப்பட்ட ஒட்டகத்தின் கர்ப்பப்பையை வரவழைத்து அதனை முஹம்மத் (ஸல்) 'ஸஜ்தா' செய்யும்போது அதாவது மண்டியிட்டுச் சிரம் தாழ்த்தி இறைவனை வழி்படும்போது நபிகளாரின் முதுகின் மீது போட்டுவிட்டு இறைமறுப்பாளர்கள் ஒருவரின் மீது ஒருவர் விழுந்து சிரித்தனர்.

    நபி (ஸல்) அவர்களோ தலையை உயர்த்த முடியாதவர்களாக ஸஜ்தாவிலேயே இருந்தார்கள். அப்போது நபிகளாரின் மகள் ஃபாத்திமா (ரலி) அங்கு சென்று, நபி(ஸல்) அவர்களின் முதுகின் மீது போடப்பட்டிருந்ததை எடுத்து அப்புறப்படுத்தினார்கள்.

    நபிகளார் தலையை உயர்த்தி 'இறைவா! குறைஷிகளை நீ கவனித்துக் கொள்வாயாக' என்று மூன்று முறை கூறினார்கள். மக்காவில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் நிறைவேற்றப்படும் என்று நம்பியிருந்தவர்களுக்கு நபிகளாரின் பிரார்த்தனை அச்சத்தையும் கவலையையும் தந்ததே தவிர அவர்கள் நபிகளாருக்குத் தந்து கொண்டிருந்த இன்னல்கள் தீரவில்லை. இருப்பினும் நபிகளாரின் இஸ்லாமிய அழைப்பு பணியும் ஓயவில்லை.

    தஃப்ஸீர் இப்னு கஸீர், திருக்குர்ஆன் 111:1-5, ஸஹீஹ் புகாரி 1:4:240

    - ஜெஸிலா பானு.
    உறவுடன் ஒட்டிவாழ்பவன் சுவனவாசி என்பதை எந்தநாளும் நாம் யோசித்து செயல்பட்டால் நன்மைகள் பெறலாம்.
    உறவுகள் என்பவர்கள் உடன்பிறப்புகள் ஆவர். அந்த உறவுகள் நெருங்கிய உறவுகளானாலும் சரி, தூரத்து உறவுகளானாலும் சரி, உறவுகளை ஆராதனை செய்யவேண்டியதில்லை. ஆதரித்தாலே போதும்.

    ஆதரவுகளையும், ஆறுதல்களையும் இழந்த உறவுகள் தான் முதியோர் இல்லங்களிலும், அனாதை ஆசிரமங்களிலும், குழந்தைகள் காப்பகங்களிலும், சாலைகளிலும், சத்திரங்களிலும் சித்ரவதையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    சாலையில் அலைந்து திரியும் யாசகர்களும், வீதியில் உலாவரும் மனநிலை பாதிப்படைந்தவர்களும், குழந்தை தொழிலாளர்களும், விலைமாதர்களும் மலிவாக உருவாகுவதற்கு யார் காரணம்?

    உறவுகள் என்பது பிரிந்து வாழ்வது அல்ல. அது மரணத்தை தவிர மற்றவைகளால் பிரிக்கமுடியாதவை. உறவுகள் என்பது வெட்டி வாழ்வது அல்ல. அது ஒட்டி வாழ்வதற்கு உருவாக்கப்பட்டது.

    இதுதொடர்பான நபிமொழிகளை காண்போம்:

    “இறைவன் அன்பை நூறாகப்பங்கிட்டான். அதில் 99 பங்கைத் தன்னிடம் வைத்துக்கொண்டான். (மீதமிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான் படைப்பினங்கள் பரஸ்பரம் பாசம் காட்டுகின்றன. அது எந்த அளவிற்கு என்றால், மிதித்துவிடுமோ என்ற அச்சத்தினால் குதிரை தனது குட்டியை விட்டு கால் குளம்பைத் தூக்கிக்கொள்கிறது” என்று நபி (ஸல்) கூறிய தாக அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்.

    ‘உறவு (இறையருளின்) ஒரு கிளையாகும். எனவே அதனுடன் ஒட்டி வாழ்வோருடன் நானும் உறவு பாராட்டுவேன். அதை முறித்துக் கொள்வோரை நானும் முறித்துக் கொள்வேன்’ என்று உறவு குறித்து இறைவன் கூறியதாக நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), புகாரி)

    “தம் வாழ்வாதரம் விசாலமாக்கப்படுவதையும், வாழ்நாள் நீட்டிக்கப்படுவதையும் விரும்புகிறவர் தம் உறவை பேணி வாழட்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), புகாரி)

    உறவுகள் என்பது இறையருளின் ஒரு அங்கம். அந்த உறவுகளை வீட்டிலிருந்து விரட்டியடிப்பது நற்குணத்தையும், இறையருளையும் வீட்டை விட்டு விரட்டியடிப்பதற்கு சமமாகும். இவ்வாறு உறவுகளை கொடுமைப்படுத்தியவர்கள் உலகில் நலமாக, வளமாக வாழ்ந்ததாக சரித்திரம் கிடையாது.

    உறவுகளிடமிருந்து நமக்கு சில இடையூறுகள் ஏற்படலாம். ஆனால் அவற்றை எல்லாம் பொறுத்துக் கொண்டு உறவுகளை அரவணைத்துச் செல்ல வேண்டும்.

    இவ்வாறு செய்தால் உறவுகள் மேம்பாடு அடையும்.

    உறவுகள் மேம்பட சில தியாகங்கள் செய்து தான் ஆகவேண்டும். அவை:

    1. விட்டுக் கொடுக்க வேண்டும்.

    2. இனம் புரியாத அன்பை பொழிய வேண்டும்.

    3. தியாக மனப்பான்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

    4. உறவுகளால் ஏற்படும் சிரமத்தை சகித்துக் கொள்ள வேண்டும்.

    5. உறவுகளுக்கு நம்மால் முடிந்த அளவு உதவிகள் புரியவேண்டும்.

    6. அன்பளிப்புகளை தாராளமாக வழங்கிட வேண்டும்.

    7. வாழ்த்துக்களை பரிவுடன் பரிமாற வேண்டும்.

    8. மலர்ந்த முகத்துடன் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

    9. மதிப்புடனும், மரியாதையுடனும் நடந்துகொள்ள வேண்டும்.

    10. உறவுடன் என்றென்றும் உறவாடி வாழவேண்டும்.

    முத்தான இந்த பத்து அம்சங்களையும் பேணி நடக்கும்போது உறவுகள் பிரிய வாய்ப்பில்லை. பிரிக்கமுடியாத உறவுகளாக அவைகள் மேம்படும். இவ்வாறு உறவுகளுடன் உறவாடி வாழ்ந்தால் கோடி நன்மை கிடைப்பதுடன், உலக வாழ்வும், மறுவுலக வாழ்வும் சுவனமாக அமையும்.

    “உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கம் புகமாட்டான்” என்பது நபி மொழியாகும்.

    உறவுடன் ஒட்டிவாழ்பவன் சுவனவாசி என்பதை எந்தநாளும் நாம் யோசித்து செயல்பட்டால் நன்மைகள் பெறலாம்.

    மவுலவி அ.செய்யது அலி மஸ்லஹி,

    பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
    கண்ணியமிக்க ஹஜ்ஜை நிறைவேற்ற மக்கா செல்ல இருக்கிறேன்’ என்ற நபிகளாரின் அறிவிப்பு அரபுலகம் முழுவதும் பரவி மக்கள் மனதில் பரவசத்தை ஏற்படுத்தியது.
    ஹிஜ்ரி 10-ம் ஆண்டில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்ய முடிவு செய்தார்கள். ‘கண்ணியமிக்க ஹஜ்ஜை நிறைவேற்ற மக்கா செல்ல இருக்கிறேன்’ என்ற நபிகளாரின் அறிவிப்பு அரபுலகம் முழுவதும் பரவி மக்கள் மனதில் பரவசத்தை ஏற்படுத்தியது.

    பல திசைகளில் இருந்தும் மக்கள் மதீனாவை நோக்கி திரண்டனர். துல்கஅதா மாதத்தின் இறுதியில் நபிகளார், அங்கிருந்து மக்கா புறப்பட்டார்கள். துல்ஹஜ் மாதம் 4-ந் தேதி வைகறை வேளையில் மக்காவை அடைந்தார்கள்.

    மக்கா நகருக்கு வந்தவுடன் முதலாவதாக இறை இல்லம் கஅபாவை ‘தவாப்’ செய்தார்கள். (‘தவாப்’ என்பதற்குச் சுற்றி வருதல் என்று அர்த்தம்). இப்போதும் ஹஜ் செல்லும் புனித பயணிகள் நபி வழிப்படி ‘தவாப்’ செய்கிறார்கள்.

    பின்னர் ‘மகாமே இப்ராகீம்’ (நபி இப்ராகீம் நின்ற இடம்) என்னும் இடத்தில் இரண்டு ரக்அத்துகள் தொழுகையை நிறைவேற்றினார்கள். பிறகு ‘ஸபா’ மலைக்குன்றின் மீது ஏறினார்கள். அப்போது இறைவனைப் புகழ்ந்து துதித்துக் கொண்டே இருந்தார்கள்.

    ஸபா, மர்வா குன்றுகளுக்கிடையே தொங்கோட்டத்தை முடித்துக் கொண்டு நபிகளார் துல்ஹஜ் பிறை 8-ம் நாளன்று ‘மினா’வில் தங்கினார்கள்.

    மறுநாள் அதிகாலைத் தொழுகையைத் தொழுது முடித்த பிறகு ‘மினா’வில் இருந்து புறப்பட்டு அரபா வந்து சேர்ந்தார்கள். அங்கு ஒரு லட்சத்து இருபத்து நான்காயிரம் முஸ்லிம்கள் கூடியிருந்தனர். அவர்கள் மத்தியில் நின்று கொண்டு நபிகளார் வரலாற்றுச் சிறப்புமிக்க பேருரையை நிகழ்த்தினார்கள். அதில் இஸ்லாத்தின் அறிவுரைகள் முழுமையாகவும் கம்பீரத்துடனும் எடுத்துரைக்கப்பட்டன.

    அதன் விவரம் வருமாறு:-

    “மக்களே! மிகக் கவனமாகக் கேளுங்கள். ஏனெனில் இந்த ஆண்டுக்குப் பிறகு இந்த இடத்தில் நான் உங்களைச் சந்திப்பேனா என்று எனக்குத் தெரியாது.

    ஏக இறைவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவனுக்கு இணையாக எவருமில்லை. நான் அவனது தூதர் என்றும், அடிமை என்றும் சான்று பகர்கிறேன்.

    மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதத்தையும், இந்த (பிறை 9-ம்) நாளையும், இந்த (மக்கா) நகரையும் புனிதமாகக் கருதுவதுபோல் உங்களில் ஒருவர் மற்றவரின் உயிரையும், பொருளையும், மானத்தையும் புனிதமாகக் கருதுங்கள்.

    மக்களே! அறிந்து கொள்ளுங்கள். அக்கிரமம் செய்யாதீர்கள். எவருடைய செல்வமும் உங்களுக்கு ஆகுமானதன்று. செல்வத்தின் உரிமையாளர் அதனைத் தன் விருப்பத்துடன் உங்களுக்கு கொடுத்தாலே தவிர! உங்களில் எவராவது மற்றவர்களுடைய பொருளின் மீது பொறுப்பேற்று இருந்தால், அதை அவர் உரிய முறையில் உரிமையாளர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும்.

    எச்சரிக்கையாக இருங்கள். ஒருவர் குற்றம் செய்தால் அந்தக் குற்றத்தின் தண்டனை அவருக்கே வழங்கப்படும். தந்தை செய்த குற்றத்திற்கு (பாவத்திற்கு) மகனோ, மகன் செய்த குற்றத்திற்கு தந்தையோ பொறுப்பாக மாட்டார். எந்தப் பிள்ளையும் தன் தந்தைக்கு அநியாயம் செய்ய வேண்டாம். எந்தத் தந்தையும் தன் பிள்ளைக்கு அநியாயம் செய்ய வேண்டாம்.

    அறிந்து கொள்ளுங்கள்! (இஸ்லாத்துக்கு முந்தைய) அறியாமைக் காலத்தின் அனைத்து செயல்களையும் நான் எனது கால்களுக்குக் கீழ் புதைத்து அழித்து விட்டேன். அறியாமைக் கால கொலைகளுக்குப் பழி வாங்குவதை விட்டு விட வேண்டும். முதலாவதாக, எங்கள் குடும்பத்தில் கொலை செய்யப்பட்ட ரபீஆ இப்னு ஹாரிஸின் மகனுக்காகப் பழி வாங்குவதை நான் விட்டு விடுகிறேன்.

    வட்டி இன்றோடு முழுமையாகத் தடை செய்யப்படுகிறது. கடனாக கொடுத்த பணத்தை மட்டும் நீங்கள் வசூலித்துக் கொள்ளலாம். முதலில் என் குடும்பத்தைச் சேர்ந்த அப்பாஸ் இப்னு முத்தலிபுக்கு வர வேண்டிய வட்டி பாக்கியைத் தள்ளுபடி செய்கிறேன்.

    மக்களே! உங்கள் இறைவன் ஒருவனே. உங்கள் ஆதிப்பெற்றோரும் ஒருவரே! அறிந்து கொள்ளுங்கள். எந்த ஓர் அரபிக்கும், ஓர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஓர் அரபி அல்லாதவருக்கும் ஓர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் கருப்பரை விடவோ, எந்த ஒரு கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த உயர்வும், சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே உங்கள் மேன்மையை- சிறப்பை நிர்ணயிக்கும். நிச்சயமாக இறைவனிடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர், உங்களில் அதிக இறையச்சம் உள்ளவர்தான்.

    மக்களே! இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள். தலைமைக்குக் கீழ்ப்படியுங்கள். கருப்பு நிற அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும், அவர் இறைவனின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கு இடையில் நிலை நிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்.

    மக்களே! பணியாளர்கள் விஷயத்தில் பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள். அவர்களை நன்றாகப் பராமரியுங்கள். நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள். நீங்கள் உடுத்துவது போன்ற உடைகளையே அவர்களுக்கும் உடுத்தக் கொடுங்கள். உங்களால் மன்னிக்க முடியாத குற்றத்தை அவர்கள் செய்திருந்தால், அவர்களைப் பணியில் இருந்து நீக்கி விடுங்கள். அவர்களுக்குத் தண்டனை அளிக்காதீர்கள். அவர்கள் இறைவனின் அடியார்களாக இருக்கிறார்கள்”.
    வெவ்வேறு காலகட்டத்தில் அனுப்பப்பட்ட நபிமார்களுக்கு அந்தந்தக் காலத்திற்கேற்ப அதிசயங்களையும் அத்தாட்சிகளையும் இறைவன் தந்தருளினான்.
    வெவ்வேறு காலகட்டத்தில் அனுப்பப்பட்ட நபிமார்களுக்கு அந்தந்தக் காலத்திற்கேற்ப அதிசயங்களையும் அத்தாட்சிகளையும் இறைவன்  தந்தருளினான்.

    கவிதைகள் பிரபலமாக இருந்த அரேபிய மண்ணில் திருக்குர்ஆனின் இறைவசனங்களை அத்தாட்சியாக நபி முஹம்மது (ஸல்) மக்களுக்குக் கொண்டு வந்தார்கள். ஆனால் இறைமறுப்பாளர்களோ, ‘அது கலப்படமான கனவுகள் என்றும், அது அவருடைய சொந்த கற்பனை என்றும், இவர் ஒரு கவிஞர்தாம் என்றும், இதை முஹம்மதுக்கு ஒரு நபர்தான் கற்றுத் தருகிறார்.

    இது இறை வசனங்கள் அல்ல என்றும், இட்டுக்கட்டிய கதையே தவிர வேறில்லை என்றும், இது பொய்யேயன்றி வேறில்லை’ என்றும் அவதூறு கூறினர். அதோடு குர்ஆனை முஹம்மது நபி (ஸல்) மற்றவர்களுக்கு ஓதிக் காண்பிக்கும்போதெல்லாம் நிராகரிப்பவர்கள் கூச்சல் குழப்பம் உண்டு செய்து கேட்கவிடாமல் தடுத்தனர்.

    வெளியூரிலிருந்து மதுவும் மாதுவும் வரவழைத்து மக்களை வழிகெடுத்தனர். பல வகைகளில் முஹம்மது (ஸல்) அவர்களின் முயற்சியை முறியடிக்க நினைத்தும் நிராகரிப்பாளர்களின் சதித் திட்டங்கள் தோற்றன. இஸ்லாமியர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே சென்றது, ஆகையால் நிராகரிப்பாளர்கள் தமது வீட்டில் எவராவது ஒருவர் இஸ்லாமிற்கு மாறினார் என்றால் அவரை வீட்டை விட்டு வெளியேற்றினர். தமக்குக் கீழ் வேலை பார்ப்பவர் இஸ்லாமிற்குத் திரும்பியிருந்தால் அவர்களைச் சித்தரவதை செய்தனர். பண பலமுடையவர் இஸ்லாமிற்கு மாறியிருந்தால் அவர்களை மிரட்டிப் பணிய வைக்கப் பார்த்தனர்.

    இஸ்லாமைத் தழுவிய யாஸிர் குடும்பத்தினரை அபூஜஹ்ல் கொடுமைப்படுத்தி முதலில் யாஸிரையும், அதன்பின் அவர் மனைவி சுமைய்யா பின்த் கய்யாத் (ரலி) அவர்களையும் கொலை செய்தான். சுமைய்யாதான் இஸ்லாத்திற்காக உயிர்த்தியாகம் செய்த முதல் பெண்மணி.

    அதன்பின் யாஸிரின் மகன் அம்மாரை கொடுமைப்படுத்தினான் அபூ ஜஹ்ல். நபி முஹம்மது (ஸல்) அவர்களைத் தூற்றச் சொன்னான், அபூ ஜஹ்ல் வணங்கி வந்த லாத், உஜ்ஜா என்ற சிலைகளைப் புகழச் சொல்லி வற்புறுத்தினான், சொல்லவில்லை என்றால் கொலை செய்துவிடுவதாக அம்மாரை மிரட்டினான் அபூ ஜஹ்ல். தனது பெற்றோர் தன் கண் முன் சாகடிக்கப்பட்டதைப் பார்த்த அம்மார் மிரட்டலுக்குப் பயந்து அடிபணிந்தார்.

    பின்பு நபிகளாரிடம் சென்று மன்னிப்பும் கேட்டார். அதற்கு நபி முஹம்மது (ஸல்) “நம்பிக்கை கொண்ட பின் அல்லாஹ்வை நிராகரித்தால் அல்லாஹ்வின் கோபம் ஏற்படும். ஆனால் உங்களது உள்ளம் நம்பிக்கை கொண்டு, நிர்ப்பந்தத்தினால் வெறும் வார்த்தையில் நிராகரித்தால் குற்றமில்லை” என்ற இறைவசனத்தை ஓதிக் காட்டி விளக்கினார்கள். அதன்பின் அம்மாரின் மனம் சாந்தியடைந்தது.

    இஸ்லாத்தினை ஏற்றதால் கொடுமைக்கு உள்ளான அடிமை வேலைப் பணியாட்களை அபூ பக்ர் (ரலி) விலைக்கு வாங்கி விடுவித்தார்கள்.

    பலதரப்பட்டவர்கள் பலவிதமான வேதனைக்குள்ளாக்கப்பட்டாலும் அவர்களது இறைநம்பிக்கையும், மன உறுதியும் அதிகரிக்கவே செய்தது.

    குர்ஆன் வசனங்கள் 21:5, 16:103, 25:4-5, 41:26, 31:6, 16:106

    - ஜெஸிலா பானு.
    “இறைவனின் படைப்புகள் (யாவும்) இறைவனின் குடும்பத்தை சார்ந்தவையாகும். அவனது (அக்) குடும்பத்திற்கு பயனளிப்போரே, அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு மிக விருப்பத்திற்குரியோர் (ஆவர்)”.
    அகன்று விரிந்த இப்பெருவெளியில், இருப்பவை யாவும் ஒரு நாள் காணாமல் போய்விடும். ஆனால் ஆதி தொட்டே இருக்கின்ற ஏக இறைவன் என்றும் நிலையானவன்’ என்பதை குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:

    ‘இதன் மீது இருக்கின்ற ஒவ்வொன்றும் அழிந்துவிடக் கூடியது தான். (ஆனால்) வல்லமையும், சங்கையும் உடையவனான உம் முடைய ரப்பின் (இறைவனின்) திருமுகம் (மட்டுமே என்றும்) நிலைத்திருக்கும்’. (55:26-27)

    இறைவன் ஈடு இணையற்றவன், ஒப்பிடமுடியாதவன், தனித்து இயங்குபவன். எல்லாமே அவனைச் சார்ந்து தான் இயங்க முடியும். நாமின்றி அவன் உண்டு, ஆனால் அவனின்றி நாமில்லை. அந்த எல்லையில்லாத இறைவனின் தனித்துவம் குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு பிரகடனப்படுத்துகிறது:

    “(நபியே!) நீர் கூறும் ‘அல்லாஹ்’ ஒருவனே, அவன் (எவருடைய) தேவையுமற்றவன். அவன் (எவரையும்) பெறவும் இல்லை, (எவராலும்) பெறப்படவும் இல்லை, அவன் (ஒப்பு நோக்கமுடியாத) தனித்தவன்” (112:1-4).

    எவருடைய தேவையுமற்ற இறைவன், தேவையுடைய படைப்புகள் யாவும் பெற வேண்டும் என்பதற்காகவும், உடலாலும், மனதாலும், பொருளாலும் தியாகம் செய்து உயர்ந்த லட்சியத்தை மனிதகுலம் அடையவேண்டும் என்பதற்காகவும், கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்ற நற்காரியங்களை நபிகளாரைக் கொண்டு கடமையாக்கி, நமக்கு நல்வழி காட்டி உள்ளான்.

    அதேநேரத்தில், ‘இறைவன் கடமையாக்கியதை மறந்து, கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்ற மனோபாவத்தில் ஏக இறைவனை நிராகரித்து, உலக சுகத்தை பெறுவதற்காக பாவங்களை பயமின்றி செய்வோருக்கு இழிவு தரும் வேதனை உண்டு’ என்பதை குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:

    “நிராகரிப்பவர்கள், நரகத்தின்பால் கொண்டு வரப்படும் நாளில், உங்களுடைய இன்பங்களை உங்களது உலக வாழ்க்கையின் போதே நீங்கள் (செலவு செய்து) போக்கி விட்டீர்கள். அவற்றைக் கொண்டு சுகம் அனுபவித்தீர்கள். நீங்கள் நியாயமின்றி பூமியில் பெருமையடித்தீர்கள். அதன் காரணத்தாலும், பாவங்களை (பயமின்றி) செய்த காரணத்தாலும், இழிவடைந்ததையே நீங்கள் கூலியாக வழங்கப்படுவீர்கள் (என்று கூறப்படும்)”. (46-20)

    எல்லா சுகத்தையும் இங்கே அனுபவித்துவிட வேண்டும் என்று மனிதன் துடிக்கின்றான். அதனை அடைவதற்காக பல்வேறு பாவகாரியங்களில் ஈடுபடுகின்றான். என்னைப் போன்று யாரும் உண்டா? என பெருமை பேசுகின்றான். அதன் முடிவு இழிவு தரும் வேதனையை அவன் விலை கொடுத்து வாங்குகின்றான் என்பதையே இந்த வசனம் நமக்கு நினைவூட்டுகிறது.

    இறைவனைப் பற்றி தெரிந்து கொள்ளாமலும், அவனது பேராற்றலின் அத்தாட்சிகளை புரிந்து கொள்ளாமலும், மனிதன் வீணாக தனது வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கின்றான். உண்மையான அவனது இறைவன் யார்? என்பதை எப்படி அறிந்து கொள்வது என்பதற்காக நபிகளாரை இறைவன் இவ்வாறு கேட்கச் சொல்கின்றான்:

    “வானங்களையும், பூமியையும் படைத்தது யார்? என்று (நபியே) நீர் அவர்களிடம் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று அவர்கள் உறுதியாக கூறுவார்கள். (அதற்கு) நீர் ‘அல்ஹம்து லில்லாஹ்’ (புகழ் எல்லாம் இறைவனுக்கே சொந்தம்) என்று கூறுவீராக. எனினும் அதிகமானோர் (இதனை) அறியமாட்டார்கள்”. (31-25)

    வானம், பூமி படைக்கப்பட்டிருப்பதும், பல்வேறு மொழிகள் பேசப் படுவதும், பல்வேறு நிறத்தையுடைய மனிதர்கள் வாழ்வதும் இறைவனின் அத்தாட்சிகள் என்பதை குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:

    “வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும், உங்களுடைய மொழிகளும், உங்களுடைய நிறங்களும் மாறுபட்டு இருப்பதும், இறைவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் அறிவுடையோருக்கு உறுதியான அத்தாட்சிகள் பல உள்ளன” (30:22).

    நிறங்களும் மொழிகளும் வேறுபட்டு இருப்பது என்பது வேற்றுமை பாராட்டுவதற்காக அல்ல. ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொள்வதற்காகவும், நிறத்தாலும், மொழியாலும் வேறுபட்டிருந்தாலும் நாமெல்லாம் ஒரே இறைவனால் படைக்கப்பட்டவர்கள் என்ற ஏகத்துவத்தை உணர்வதற்காகவுமே என்பதை இவ்வசனம் அறிவுறுத்துகின்றது.

    ஒருவரை ஒருவர் அடித்து நாசப்படுத்துவதற்காக உலகில் நாம் மனிதர்களாக பிறக்கவில்லை. ஒருவர் மற்றவரை வாழ வைப்பதற்காகவே இங்கு நாமெல்லாம் பிறந்துள்ளோம் என்பதை புரிந்து கொண்டு வாழும் போது தான் மனிதன் பரிபூரணமான வாழ்வை நோக்கி பயணித்தவனாகிறான்.

    இறைவனின் படைப்புகளுக்கு பயன் அளிக்கும் வண்ணமே நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து இறைதூதர் நபி (ஸல்) அவர்கள் கூறுவதை பார்ப்போம்:

    “இறைவனின் படைப்புகள் (யாவும்) இறைவனின் குடும்பத்தை சார்ந்தவையாகும். அவனது (அக்) குடும்பத்திற்கு பயனளிப்போரே, அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு மிக விருப்பத்திற்குரியோர் (ஆவர்)”.

    பிறப்பும், இறப்பும் மனித வாழ்வின் இருவேறு முனைகளாகும். பிறப்பு என்பது தொடங்கி வைக்கின்றது. இறப்பு என்பது முடித்து வைக்கின்றது. இரண்டுமே இறைவனின் நாட்டப்படி தான் நடக்கின்றது.

    பிறந்ததினால் தானே இறக்கின்றோம். அதனால் இறப்பே நிச்சயமானது; மிக ஆழமான உண்மையாகவும் உள்ளது. இறைவனோடு நம்மை மீட்டி வைக்கின்ற பணியை இந்த இறப்பு தான் செய்கின்றது. எனவே இறப்பு வருவதற்கு முன் ஏக இறைவனை வணங்கியும் அவனது படைப்புகளோடு இணங்கியும் வாழ பழகிக் கொள்ளவேண்டும். அத்தகைய ஏகத்துவ வாழ்க்கையை தான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தங்கள் வாழ்நாள் எல்லாம் கடைப்பிடித்து வாழ்ந்து காட்டினார்கள். நபிகளாரின் வழிநின்று நாம் அனைவரும் ஏகத்துவ வாழ்வு வாழ்ந்து நலம்பெற இறைவன் பேரருள் புரிவானாக, ஆமின்.

    மு. முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, நெல்லை மாவட்டம்.
    அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து முஹம்மது (ஸல்) அவர்களை இறைத்தூதராக ஏற்று மனம்மாறி இஸ்லாமிற்குச் சிலர் திரும்பினாலும் பலர் நிராகரிப்பாளர்களாகவே இருந்தனர்.
    “உமக்குக் கட்டளையிடப்பட்டிருப்பதை வெளிப்படையாக அவர்களுக்கு அறிவிப்பீராக; இணைவைத்து வணங்குபவர்களைப் புறக்கணித்துவிடுவீராக!” என்ற இறை வசனம் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டபோது அவர்கள் மிகத் தைரியமாக நிராகரிப்பவர்களின் முன்பு வந்து நின்று “என் கூட்டத்தாரே! அல்லாஹ்வையே வணங்குங்கள், உங்களுக்கு அவனன்றி வேறு நாயனில்லை; உங்களுக்கு வர இருக்கும் மகத்தான ஒரு நாளின் வேதனையைப்பற்றி நான் அஞ்சுகிறேன்” என்று நூஹ் நபி தம் மக்களுக்குச் சொன்னதை, கஅபாவின் முன் வந்து நின்று நபிகள் நாயகம் (ஸல்) தம் மக்களுக்கு எடுத்துரைத்தோடு, அங்கேயே நின்று அல்லாஹ்வை வழிபடத் தொடங்கினார்கள்.

    அப்போதெல்லாம் கஅபாவினுள் பலதரப்பட்ட சிலைகள் இருக்கும். அதனை வணங்குவதற்காகத் தூர தேசத்திலிருந்தெல்லாம் மக்கள் பயணம் செய்து வருவார்கள். அதன் காரணமாக மக்காவாசிகளுக்கு வியாபாரம் சிறப்பாக இருக்கும். ஹஜ்ஜின் காலம் நெருங்க நெருங்க குறைஷிகளுக்குக் கவலை அதிகரித்தது.

    ஏனெனில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் இறை அழைப்பினால் மற்ற இடத்திலிருந்து கஅபாவிற்கு வரும் அரபிகள் மனம் மாறிவிட்டால் தங்களுக்கான வருமானம் நின்றுவிடுமென்று அஞ்சினார்கள். வலீத் இப்னு முகீரா என்பவரின் தலைமையில் எல்லோரும் கூடி குர்ஆனுக்கு எதிராகச் சிந்திக்கத் தொடங்கினர். குர்ஆன் பற்றிக் குறைகூற இயலாமல் கடுகடுத்தனர். அதன் எதிர்ப்பாளர்கள் ஒருமனதாக நபிகள் நாயகம் (ஸல்) ஒரு சூனியக்காரர் என்று பரப்பத் தொடங்கினர். சிலர் நபிகளாரை பொய்யர் என்றும் தூற்றினர்.

    “நாம் உமக்கு முன்னால் முந்திய பல கூட்டத்தாருக்கும் தூதர்களை அனுப்பிவைத்தோம். எனினும் நம்முடைய எந்தத் தூதர் வந்தாலும் அவரை அந்த மக்கள் ஏளனம் செய்யாமல் இருந்ததில்லை” என்ற அல்லாஹ்விடமிருந்து இறைவசனங்கள் வந்தபோது, முஹம்மது நபி (ஸல்) ஆறுதல் பெற்றார்கள்.

    இறைமறுப்பாளர்கள் தம்மைத் தூற்றுவதையெல்லாம் பொருட்படுத்தாமல் தமது இறை அழைப்பை தீவிரப்படுத்தினார்கள். ஹஜ்வாசிகளிடமும் இஸ்லாம் அழைப்பை முற்படுத்தி நல்லுபதேசங்கள் செய்தபோது, நிராகரிப்பவர்கள் கோபத்துடன் நபிகளாரை முறைத்தார்கள். ஏழை எளியவர்கள் இஸ்லாத்தை ஏற்றபோது “இவர்கள் மீதா அல்லாஹ் அருள் புரிந்துவிட்டான்?” என்று நபிகளாரை கேலி செய்தார்கள்.

    அப்போது “குற்றமிழைத்தவர்கள், இறைநம்பிக்கை கொண்டவர்களைப் பார்த்து சிரிக்கிறார்கள். அவர்கள் அண்மையில் சென்றால், ஏளனமாக ஒருவருக்கொருவர் கண்சாடை செய்துகொண்டு தாங்கள் செய்தது சரியென்பதுபோல் மகிழ்வுடன் செல்கிறார்கள். முஸ்லிம்களைப் பார்த்தால் ‘நிச்சயமாக இவர்களே வழி தவறியவர்கள்’ என்றும் கூறுவார்கள்.

    முஸ்லிம்களின் பாதுகாவலர்களாக அந்த நிராகரிப்பாளர்கள் அனுப்பப்படவில்லையே!” என்ற இறைவசனம் வந்தது. இப்படிச் சூழலுக்கேற்ப இறைவசனங்கள் வரும்போதெல்லாம் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து முஹம்மது (ஸல்) அவர்களை இறைத்தூதராக ஏற்று மனம்மாறி இஸ்லாமிற்குச் சிலர் திரும்பினாலும் பலர் நிராகரிப்பாளர்களாகவே இருந்தனர்.

    திருக்குர்ஆன் 15:94, 7:59, 74:18-25, 15:6, 15:10-11, 6:10, 68:51, 6:53, 83:29-33.

    - ஜெஸிலா பானு.
    முஹரம் 10-ம் நாள் ‘ஆஷுரா தினமாக’ கடைப்பிடிக்கப்படுகிறது. முஹரம் 9, 10 நாட்களிலோ அல்லது 10, 11 நாட்களிலோ நோன்பு நோற்பது விரும்பத்தக்கது (’முஸ்தஹப்) ஆகும்.
    நபிகளார் மதீனா வரும் செய்தியை அறிந்து மகிழ்ந்த மக்கள் வீதிகளையும், தங்கள் வீடுகளையும் அலங்கரித்தனர். நபிகளாரை வரவேற்க மதீனாவில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    அதுபோன்ற ஒரு நாளை வரலாற்றில் மதீனா கண்டதில்லை. நபிகளார் வந்ததும், தங்கள் இல்லத்திலேயே தங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

    நபிகளார் சிந்தித்து ஒரு முடிவு எடுத்தார்கள்.

    அங்கு திரளாக திரண்டிருந்தவர்களை நோக்கி, “யாருடைய வீட்டில் வசிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் முடிவு என் வசத்தில் இல்லை. அது இறைவனின் விருப்பத்தைச் சார்ந்தது. நான் அமர்ந்திருக்கும் ஒட்டகத்தை அதன் போக்கில் விடுகிறேன். அது எங்கு போய் நிற்குமோ, அதையே நான் தங்குவதற்கு இறைவன் நிர்ணயித்துள்ள இடமாகக் கருதி அங்கே தங்குவேன்” என்றார்கள்.

    இதன் பின்னர் ஒட்டகத்தின் மூக்கணாங்கயிற்றைக் கையில் இருந்து லேசாக நழுவ விட்டு அதன் போக்கில் செல்ல விட்டார்கள்.

    ஒட்டகம் நகர்ந்தது; ‘ஒட்டகம் நம் வீட்டின் முன்னே நிற்காதா?’ என்று ஒவ்வொரு வீட்டின் சொந்தக்காரர்களும் ஏங்கினார்கள். அது தங்கள் வீட்டைக் கடந்து செல்வதைக் கண்டதும் ஏமாற்றம் அடைந்தனர். அது யார் வீட்டின் முன்பு நிற்கப் போகிறதோ, அத்தகைய பேறு பெற்றவர் யார் என்பதை அறியும் ஆவலில் ஒட்டகத்தின் பின்னே ஓடினார்கள்.

    இறுதியில் அபூ அய்யூப் (ரலி) அவர்கள் வீட்டு முன்பு ஒட்டகம் நின்றது. நபிகளார் ஒட்டகத்தில் இருந்து இறங்கவில்லை. தான் பற்றி இருந்த கயிற்றை சற்று தரையில் விட்டார்கள். சிறிது தூரம் சென்ற ஒட்டகம் மீண்டும் அதே இடத்திற்கு வந்து படுத்துக் கொண்டது.

    இதைக் கண்டதும் அபூ அய்யூப் அளப்பரிய ஆனந்தம் அடைந்தார். அவர் நபிகளாரின் தாய் வழிப்பாட்டனார் வழியில் உறவினர் ஆவார். இங்கு ஏழு மாதங்கள் வரை நபிகளார் தங்கி இருந்தார்கள்.

    மதீனா நகரில் ‘மஸ்ஜிதுந் நபவி’ என்ற புனிதப் பள்ளி எழுப்பப்பட்டு, நபிகளாரின் குடும்பம் தங்குவதற்கு அதையொட்டி வீடுகள் அமைக்கும் வரை அபூ அய்யூப் இல்லமே நபிகளாரின் தங்கும் இடமாகத் திகழ்ந்தது.

    மதீனா நகரத்தின் முந்தைய பெயர் ‘யத்ரிப்’ என்பதாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கு சென்று குடியேறியதன் நினைவாக மக்கள் தங்கள் ஊரின் பெயரை ‘மதீனத்துந் நபி’ (நபிகளாரின் பட்டணம்) என்று அழைக்கலானார்கள். அதுவே சுருங்கி ‘மதீனா’ ஆனது.

    நபிகளாரின் காலத்தில் ஹிஜ்ரி போன்ற எந்தவிதமான வருடக்கணக்கும் வழக்கத்தில் இல்லை. முஹரம் தொடங்கி துல்ஹஜ் வரையிலான 12 அரபு மாதப் பெயர்கள் மட்டுமே புழக்கத்தில் இருந்தன.

    “(போர் செய்வது விலக்கப்பட்டுள்ள ரஜப், துல்கஅதா, துல்ஹஜ், முஹரம் ஆகிய) புனித மாதத்திற்குப் புனித மாதமே ஈடாகும்” (திருக்குர்ஆன்-2:194) என்றும்,

    “நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் -அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் இருந்தே, மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு மாதங்கள் ஆகும். அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை. இதுதான் நேரான மார்க்கமாகும். ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்ளாதீர்கள்” (திருக்குர்ஆன்-9:36) என்றும் மாதங்கள் பற்றிய குறிப்பு குர்ஆனில் காணப்படுகிறது.

    நபிகளார் மறைந்து ஆறு ஆண்டுகள் கழிந்த நிலையில் உமர் (ரலி) அவர்கள் கலீபாவாக (ஜனாதிபதி) இருந்த நேரம். ஒருநாள் கூபா நகரின் கவர்னர் அபூ மூசா அஷ்ஹரி (ரலி) அவர்களிடம் இருந்து கலீபாவுக்கு ஒரு கடிதம் வந்தது.

    அதில், “ஆண்டுக் கணக்கு என்று எதுவும் நம்மிடம் இல்லை. இதனால் அவ்வப்போது நடைபெறும் நிகழ்ச்சிகள் எந்த ஆண்டு நிகழ்ந்தது என்பதை அறிய முடியவில்லை. எனவே இதற்கு தாங்கள் விரைந்து நல்ல முடிவு எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

    இதன் அடிப்படையில் இஸ்லாமியர்களுக்கான ஆண்டை முடிவு செய்ய கலீபா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    நபிகளாரின் பிறந்த தினம், நபித்துவம் பெற்ற தினம், ‘ஹிஜ்ரத்’ தினம், அவர்கள் மரணித்த தினம் ஆகியவைகளில் ஏதேனும் ஒன்றை ஆண்டுக் கணக்காகக் கொள்ளலாம் என்று கருத்துகள் மொழியப்பட்டன.

    இறுதியில் அலி (ரலி) அவர்களின் யோசனை வழி மொழியப்பட்டு ‘ஹிஜ்ரத்’ தினத்தை ஆண்டுக் கணக்காகக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

    நபிகளாரும், தோழர்களும் தங்களைக் தற்காத்துக் கொள்வதற்காக கி.பி. 622-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி மக்காவில் இருந்து மதீனா நோக்கி பயணம் செய்தார்கள். இதுவே இஸ்லாமிய ஆண்டின் (ஹிஜ்ரி ஆண்டு) தொடக்கமாக முடிவானது. முஹரம் மாதத்தின் முதல் நாளே இஸ்லாமியர்களின் புத்தாண்டானது.

    உலகம் முழுவதும் கிரிகோரியன் காலண்டர் முறை பின்பற்றப்படுகிறது. இது சூரியன் சுழற்சியை மையமாக வைத்து ஆண்டுக்கு 365 நாட்கள் என்று கணக்கிடப்படுகிறது. இதன்படி ஜனவரி முதல் டிசம்பர் வரை 12 மாதங்கள் ஆகும்.

    சந்திரனின் சுழற்சியைக் கொண்டு இஸ்லாமியர்களின் ஆண்டுக் கணக்கு கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டுக்கும் முஹரம், ஸபர், ரபியுல் அவ்வல், ரபியுல் ஆகிர், ஜமாத்துல் அவ்வல், ஜமாத்துல் ஆகிர், ரஜப், ஷஅபான், ரமலான், ஷவ்வால், துல்கஅதா, துல்ஹஜ் என்று 12 மாதங்கள் உண்டு.

    ஒவ்வொரு மாதத்திற்கும் முப்பது நாட்கள் அல்லது இருபத்தொன்பது நாட்கள் இருக்கும். இது சந்திரனின் நிலையைப் பொறுத்து அமையும்.

    முஹரம் 10-ம் நாள் ‘ஆஷுரா தினமாக’ கடைப்பிடிக்கப்படுகிறது. முஹரம் 9, 10 நாட்களிலோ அல்லது 10, 11 நாட்களிலோ நோன்பு நோற்பது விரும்பத்தக்கது (’முஸ்தஹப்) ஆகும்.

    முஹரம் மாதத்தில்தான் உலகம் படைக்கப்பட்டது; ஆதி நபி ஆதம் அவருடைய மனைவி ஹவ்வா படைக்கப்பட்டதும் முஹரம் பத்தாம் நாளில்தான்.

    முஹரம் மாதத்தில் பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. கர்பலா களத்தில் நபிகளார் பேரர் ஹுசைன் (ரலி) உயிரை அர்ப்பணம் செய்ததும் இதே நாளில்தான்.
    ×