search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிந்தனையை தூண்டும் திருக்குர்ஆன்
    X
    சிந்தனையை தூண்டும் திருக்குர்ஆன்

    சிந்தனையை தூண்டும் திருக்குர்ஆன்

    “நாம் மனிதனைப் படைத்தோம். அவனது உள்ளத்தில் எழுகின்ற ஊசலாட்டங்களைக்கூட நாம் அறிகின்றோம். அவனது பிடரி நரம்பைவிடவும் அதிகமாக நாம் அவனிடம் நெருக்கமாயிருக்கின்றோம்”. (திருக்குர்ஆன் 50:16)
    இறைவன் அளித்த அறிவைக் கொண்டே, மனிதன் தனது மனதை ஆளுமை செய்கின்றான். உலக விஷயங்களை மனிதன் விளங்கிக்கொள்ள சில உதாரணங்கள் அவசியமாகிறது.

    சிக்கலான கருத்துகளை கூட, உதாரணங்கள் மூலம் எளிதில் விளங்க வைக்க முடியும். எனவே உதாரணத்தின் வாயிலாக கூறப்படும் உண்மைகளை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என்பதை சத்திய வேதமான திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:

    “நிச்சயமாக, அல்லாஹ் கொசுவையோ அதைவிட அற்பமானதையோ உவமானமாகக் காட்டுவதற்கு வெட்கப்படுவதில்லை. நம்பிக்கை கொண்டவர்களோ, நிச்சயமாகத் தம் இறைவனிடமிருந்து வந்த சத்தியமே இது என்று புரிந்து கொள்வார்கள். ஆனால், நிராகரிப்போரோ “இத்தகைய (அற்ப) உதாரணங்களைக் கொண்டு அல்லாஹ் எதை நாடுகின்றான்?” எனக்கூறுவார்கள். (இவ்வாறாக) ஒரே விஷயத்தைக் கொண்டு அல்லாஹ் பலரை வழிகேட்டில் ஆழ்த்துகின்றான்; மேலும் அதனைக்கொண்டு பலருக்கு நேர்வழியும் காட்டுகின்றான். ஆனால் கீழ்ப்படியாதவர் களைத் தவிர வேறு எவரையும் இதனைக்கொண்டு அவன் வழிகேட்டில் ஆழ்த்துவதில்லை. (திருக்குர்ஆன் 2:26).

    ஞானத்தின் அடிப்படை என்பது, இறைவனை பற்றிய உண்மைகளை; சிந்தித்து உணர்வதே ஆகும். இந்த பிரபஞ்சம் எங்கும் காணப்படுகின்ற தோற்றங்கள் அனைத்தும், ஒரே பேராற்றலை கொண்டு தோன்றியது என்பதை உணர்வதும்; அந்த ஒரு பேராற்றலே, ஒவ்வொரு படைப்பிற்கும் அடிப்படையாக இருப்பதையும் அறிவதும் “இறைஞானம்” ஆகும்.

    இதனைஆய்வு செய்கின்ற மனிதர்கள், இறைவனின் தனித்துவத்தை நிச்சயமாக அறிந்து கொள்வார்கள். இந்த உலகில் கண்ணுக்குத் தெரியாத, எண்ணில் அடங்காத, நுண்ணுயிர்கள் நெருக்கமாக பரவி நின்று, இறைவனின் அருளால், தொடர்ந்து செயலாற்றிக் கொண்டிருக்கின்றன. அந்த நுண்ணுயிர்கள் நல்ல பொருட்களை, கெட்டுப் போகச் செய்கின்றன. கெட்டுபோனப் பொருட்களை சாதாரண நிலைக்கு மாற்றுவதற்கான செயலையும் அவைகள் செய்து கொண்டே இருக்கின்றன.

    உதாரணமாக, நன்றாக கொதிக்க வைத்த பாலானது விரைவில் கெட்டுப்போவதற்கும், துர்நாற்றம் வீசும் கழிவுகள் அனைத்தும், சில நாட்களுக்கு பின் தனது துர் நாற்றத்தை இழந்து மண்ணோடு மண்ணாக மக்கிப்போகவும் நுண்ணுயிர்களின் செயல்பாடுகளே காரணமாக இருக்கின்றது என விஞ்ஞான உலகம் கூறுகின்றது.

    இத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் இந்த நுண்ணுயிர்களை இறைவன் படைக்கவில்லை என்றால், இந்த, உலகம் எப்போதோ, துர்நாற்றத்தால் நிரப்பப்பட்டு, மனிதர்கள் வாழத்தகுதியில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கும்.

    இதை மனிதர்கள் சிந்தித்துப்பார்த்தால் இறைவனை பற்றிய அறிவை அவர்கள் விரைவில் பெற்றுக்கொள்வார்கள் என்பதை திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:

    “இறைவன் உயிருள்ளவற்றை, உயிரில்லாதவற்றிலிருந்து வெளிப்படுத்துகின்றான். உயிரில்லாதவற்றை உயிருள்ளவற்றில் இருந்து வெளிப்படுத்துகின்றான். மேலும், பூமி இறந்து போனதன் பின்னர் அதற்கு உயிரூட்டுகின்றான். இதைப்போன்றுதான் நீங்களும் (மரணமான நிலையிலிருந்து) வெளிக்கொணரப்படுவீர்கள்”. (திருக்குர்ஆன் 30:19)

    இறைவன் கூறும் இத்தகைய சுழற்சிமுறை உலகில் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது என்பதை இந்த இறைவசனம் நமக்கு சுட்டிக் காட்டுவதாக உள்ளது.

    இறந்துபோன ஓர் உடம்பில் இருந்து பல ஆயிரக்கணக்கான உயிர்கள் தோன்றி வெளிப்படுவதும், உயிரோடு திரிந்த உடலானது திடீரென உயிறற்று வீழ்ந்து மரணித்து செயலற்று விடுவதையும் நாம் கண்டுவரும் காட்சியாகும்.

    வறண்டு போய் இறந்து கிடக்கின்ற பூமியானது மழை பொழிந்த பின்பு பச்சை பசேல் என மீண்டும் உயிர் பெற்று எழுவதை போன்று மனிதர்களே, இறந்த பின்பு நீங்களும், உயிருடன் மீண்டும் எழுப்பப்படுவீர்கள் என்பதை இந்த உதாரணத்தின் மூலமாக இறைவன் விளக்குகின்றான்.

    மற்றொரு வசனத்தில் இது குறித்து இறைவன் இவ்வாறு கூறுகிறான்:

    “வானங்கள் மற்றும் பூமியைப் படைத் திருப்பதும், உங்கள் மொழிகளும், உங்கள் நிறங்களும் மாறுபட்டிருப்பதும் அவனுடைய சான்றுகளில் உள்ளவையே. திண்ணமாக, இவற்றிலெல்லாம் அறிவுடையோருக்கு நிறையச் சான்றுகள் உள்ளன”. (திருக்குர்ஆன் 30:22)

    பிரமாண்டமான வானத்தை பற்றியும்; எண்ணற்ற படைப்புகளை தன்னகத்தே கொண்ட பூமியை பற்றியும்; அவைகள் அனைத்தும் எந்த விதமான முன் உதாரணங்களும் இன்றி இறைவனால் படைக்கப்பட்டிருப்பதை யார் சிந்தனை செய்வார்களோ அவர்கள், இறைவனை பற்றிய உண்மைகளை அறிந்து கொள்வார்கள்.

    இன்னும் மனிதர்கள் பேசும் பல மொழிகளும் அவர்களது பல நிறங்களும் அவர்களை மற்ற மனிதர்கள், ஒருவருக்கொருவர் அடையாளம் கண்டு கொள்வதற்காகவே தவிர அது மனிதர்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வுகளை (பாகுபாடுகளை) கற்பிப்பதற்காக அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    இறைவனுக்கும் மனிதர்களுக்கும் உள்ள தொடர்பு குறித்தும், அவனது நெருக்கம் குறித்தும்,திருக்குர்ஆன் இவ்வாறு பேசுகிறது:

    “நாம் மனிதனைப் படைத்தோம். அவனது உள்ளத்தில் எழுகின்ற ஊசலாட்டங்களைக்கூட நாம் அறிகின்றோம். அவனது பிடரி நரம்பைவிடவும் அதிகமாக நாம் அவனிடம் நெருக்கமாயிருக்கின்றோம்”. (திருக்குர்ஆன் 50:16)

    மனித மனங்களோடு இறைவனுக்கு உள்ள தொடர்பையும், பிடரியின் நரம்பை விடவும் இறைவன் மனிதர்களோடு மிக நெருக்கமாக இருப்பதையும், மனிதர்களில் எவர்கள் சிந்தித்து தெரிந்து கொள்வார்களோ அவர்களால், குர்ஆன் கூறும் உதாரணங்களையும், சத்திய செய்திகளையும் அதன் நேரிய வழிகாட்டுதல்களையும் புரிந்து கொண்டு இறை வனுக்கு நன்றி செலுத்தி அவனை வணங்கியே வாழ்வார்கள் என்பதே உண்மையாகும். அத்தகைய நற்பாக்கியத்தை நம்மனைவருக்கும் இறைவன் வழங்கி பேர் அருள் புரிவானாக, ஆமின்.

    மு. முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, நெல்லை மாவட்டம்.
    Next Story
    ×