search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருக்குர்ஆன்
    X
    திருக்குர்ஆன்

    மக்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன்

    திருக்குர்ஆனில் புவியியல், கணக்கியல் வானவியல், கருவியல் விஞ்ஞானவியல், மெஞ்ஞானவியல் போன்ற அனைத்து இயல்களும் நிறைந்து காணப்படுகிறது.
    நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்னர், எல்லாம் வல்ல அல்லாஹ்வால் அருளப்பட்டது தான் சத்திய வேதமான திருக்குர்ஆன். புனிதம் நிறைந்த திருக்குர்ஆனை அருளியது குறித்து அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:

    “இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்”. (திருக்குர்ஆன் 2:2)

    “(நபியே!) நீங்கள் கூறுங்கள்: என் இறைவனால் எனக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டவைகளையே நான் பின்பற்றுகிறேன். இதுவோ உங்கள் இறைவனால் (உங்களுக்கு) அளிக்கப்பட்ட நல்லறிவாகவும், நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நேர்வழியாகவும், (இறைவனின்) அருளாகவும் இருக்கின்றது”. (திருக்குர்ஆன் 7:203)

    இம்மையிலும், மறுமையிலும் மனிதனுக்கு நேர்வழிகாட்டும் இறுதி வேதமான இதில் உள்ள அறிவியல் உண்மைகளைக்கண்டு 20-ம் நூற்றாண்டில் வாழுகின்ற அறிவியல் ஆய்வாளர்களும், விஞ்ஞானிகளும் ஆச்சரியம் அடைந்துள்ளார்கள்.

    ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த நபிகளார் எழுதப்படிக்க பழகாதவர்களாய் இருந்தார்கள். அவர்களால் வியக்கதக்க விஞ்ஞான பேருண்மைகளை தனிப்பட்ட முறையில் கூறியிருக்க வாய்பில்லை.

    இந்த பிரபஞ்சத்தில் பேராற்றல் மிக்க இறைவனின் திருத்தூதராக நபிகளார் திகழ்ந்தார்கள். இறைவனும், நபிகளார் மூலம் திருக்குர்ஆனை உலக மக்களுக்கு அருளினான்.

    இறையருளால், இதய வெளிச்சம் பெற்ற, ஆன்மிக ஆற்றல் மிக்கவராக நபிகளார் திகழ்ந்தார்கள். அவர்கள் மூலம் அருளப்பட்ட திருக்குர்ஆன் எக்கால மக்களும் பின்பற்றி நேர்வழியடைய தகுதி மிக்க ஒன்றாகவே இருக்கின்றது.

    அன்றும் இன்றும் இனி என்றும் திருக்குர்ஆன் கூறும் அறிவியல் உண்மைகள் அனைத்தும் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து நிற்கும் தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. இதுகுறித்த சில வசனங்களை பார்ப்போம்.

    திருக்குர்ஆனின் ஆரம்பமாக உள்ள வார்த்தை- ‘அல்ஹம்ந்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்’ என்பதாகும். ‘எல்லாப்புகழும் அகில உலகங்களின் ரட்சகனான அல்லாஹ்விற்கே உரியது’ என்பது இதன் பொருளாகும்.

    இதில், ‘அகில உலகங்கள்’ என்ற வார்த்தையைக் கண்டு விஞ்ஞானிகள் ஆச்சரியப்படுகிறார்கள். ஏனென்றால், நாம் வாழுகின்ற இந்த சூரிய குடும்பத்தை போன்று பல சூரிய குடும்பங்கள் இருப்பதாக சிலபல ஆண்டுகளுக்கு முன்பு தான் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த ஆய்வுகள் தற்போது நடந்துவரும் நிலையில் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இதுகுறித்து திருக்குர்ஆன் கூறியிருப்பது விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

    உன் இறைவன் என் இறைவன் என இறைவனை பாகுபடுத்தி பிரிக்காமல் திருக்குர்ஆன், “நம் எல்லோருக்கும் இறைவன் ஒருவன் தான், அந்த இறைவன் தான் நாம் காணும் உலகத்தையும் நாம் காணாத பல உலகங்களையும் படைத்தவனாவான் என்றும் அத்தகைய இறைவனுக்கே எல்லாப் புகழும்” என்றும் பறைசாற்றுகின்றது.

    திருக்குர்ஆனின் மற்றொரு வசனம் (55:33) இவ்வாறு பேசுகின்றது:

    “ஜின், மனித கூட்டத்தார்களே! வானங்கள் பூமி ஆகியவற்றின் எல்லைகளை நீங்கள் கடந்து செல்ல ஆற்றல் பெறுவீர்களாயின் (நீங்கள்) கடந்து செல்லுங்கள். ஆனால் (வல்லமை மிக்க) இறைவனின் அருள் கொண்டே தவிர நீங்கள் கடந்து செல்ல முடியாது”.

    கோவேறிக் கழுதையிலும் ஒட்டகத்திலும் குதிரையிலும் பயணித்துக் கொண்டிருந்த அன்றைய உலக மக்களிடத்திலே விண்வெளி பயணம் குறித்து திருகுர்ஆன் பேசியது.

    ‘மனிதர்களாகிய நீங்கள் விண் பயணம் செய்யும் ஆற்றல் வரும் காலத்தில் விண்ணை கடந்து செல்லுங்கள். அதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆனால் அது மற்ற பயணங்களை போல அவ்வளவு எளிதான ஒன்றல்ல. அந்த வல்லமையை இறைவன் தந்தால் தவிர உங்களால் விண் பயணம் செய்ய முடியாது’ என்று இந்த வசனத்தின் மூலம் குறிப்பிடுகிறது.

    பூமியில் இருப்பதுபோல விண்வெளியில் வாழ முடியாது. ஏனென்றால் பூமியுடைய தன்மை வேறு விண்ணுலகின் தன்மை வேறு. இறைவன் தந்த அறிவை (வல்லமையை) கொண்டு பிரத்யோகமான ஆடைகளுக்குள் வாழும் சூழ்நிலைகளை ஏற்படுத்தினால் மட்டுமே விண்ணுலக பயணம் செய்ய முடியும்.

    மனிதனை பூமியில் படைத்தது மட்டுமின்றி அவனுக்கும் பிற உயிரினங்களுக்கும் வாழும் வசதியை இந்த பூமியில் ஏற்படுத்தியவனும் ஏக இறைவன் தான். இதுகுறித்து திருக்குர்ஆன் வசனங்கள் 79:27-33 இவ்வாறு குறிப்பிடுகிறது:

    ‘உங்களைப் படைத்தல் கடினமா? அல்லது வானத்தை (படைத்தல் கடினமா?) அதை அவனே படைத்தான். அதன் முகட்டை அவன் உயர்த்தி அதை ஒழுங்கு படுத்தினான். அவன்தான் இரவை இருளுடையதாக்கிப் பகலின் ஒளியை வெளியாக்கினான். இதன் பின்னர், அவனே பூமியை பிரித்தான். அதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான். அதில், மலைகளையும் அவனே நிலை நாட்டினான். உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக (இவ்வாறு செய்துள்ளான்)’.

    உலகின் தோற்றம் எவ்வாறு ஏற்பட்டது என்பதையும் அதன் அடுக்கடுக்கான முன்னேற்றத்தையும் இந்த திருக்குர்ஆன் வசனங்கள் தெளிவாக எடுத்துரைத்துவிட்டது.

    இவ்வாறே திருக்குர்ஆனில் புவியியல், கணக்கியல் வானவியல், கருவியல் விஞ்ஞானவியல், மெஞ்ஞானவியல் போன்ற அனைத்து இயல்களும் நிறைந்து காணப்படுகிறது.

    விஞ்ஞான உலகம் கண்டறிந்த வெளியிட்டுள்ள அதிசயங்கள் அனைத்தையும் திருக்குர்ஆன் மெய்பிப்பதாகவே இருக்கின்றது. இவ்வளவு நிறைவான மகிமையுடைய திருக்குர்ஆன் தன்னை படித்து பயன்பெற மனித குலத்தை என்றும் அழைத்துக் கொண்டே இருக்கின்றது.

    மு.முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, நெல்லை மாவட்டம்.
    Next Story
    ×