search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மாற்றத்தின் நேரம் அதிகாலை
    X
    மாற்றத்தின் நேரம் அதிகாலை

    மாற்றத்தின் நேரம் அதிகாலை

    உலகில் பல மாற்றங்களை இறைவன் அதிகாலை நேரத்திலேயே நிகழ்த்துகின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது.
    அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில் பல மாற்றங்களை இறைவன் அதிகாலை நேரத்திலேயே நிகழ்த்துகின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது.

    நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் இவ்வாறு துஆ கேட்டார்கள்: “யா அல்லாஹ்! எனது சமூகத்திற்கு அதிகாலை நேரத்தில் அருள்வளத்தை நல்குவாயாக” (நூல்: அபூதாவூத்).

    “பாத்திமா (ரலி) அறிவிக்கின்றார்: அதிகாலை நேரத்தில் நான் படுக்கையில் புரண்டு படுத்துக்கொண்டிருந்தேன். அந்நேரம் அண்ணலார் (ஸல்) என்னருகே வந்து இவ்வாறு கூறினார்கள்: ‘அருமை மகளே! எழு! அல்லாஹ்வின் வாழ்வாதாரங்கள் வழங்கப்படும் நேரத்திற்கு சாட்சியாளராக இரு. அலட்சியப்படுத்துபவராக மாறிவிடாதே. அதிகாலை நேரத்திற்கும் சூரிய உதயத்திற்கும் இடையே இறைவன் (ரிஸ்க் எனும்) வாழ்வாதாரத்தை வழங்குகிறான்”. (நூல்: பைஹகீ)

    ஏனெனில், உழைப்பாளர்களும் சோம்பேறிகளும் இந்த நேரத்தில்தான் பிரித்து அறியப்படுகின்றார்கள்.

    அதிகாலைத் தொழுகைக்குச் செல்லும் ஒருவரைப் பார்த்து இறைவன் வியக்கும் காட்சியை நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு விவரிக்கின்றார்கள்: “படுக்கை, போர்வை, மனைவி, மக்களின் அரவணைப்பு அத்தனையையும் உதறிவிட்டு அதிகாலையில் எழும் மனிதனைப் பார்த்து இறைவன் வியப்படைகின்றான். வானவர்களிடம் கேட்கின்றான்: “வானவர்களே! எனது இந்த அடியானைப் பாருங்கள். படுக்கை, போர்வை, மனைவி, மக்கள் அத்தனையையும் உதறிவிட்டு அதிகாலையில் எழுந்துவிட்டான். எதற்காக..? என்ன வேண்டும் இந்த அடியானுக்கு..? எனது அருள்மீது ஆசை வைத்தா...? எனது தண்டனையைப் பயந்தா...?”.

    பின்னர் வானவர்களிடம் அல்லாஹ்வே கூறுகின்றான்: “உங்களை சாட்சி வைத்துக் கூறுகின்றேன்: அவன் ஆசைப்பட்டதை நான் அவனுக்கு நிச்சயம் கொடுப்பேன். அவன் எதைப் பயப்படுகின்றானோ அதிலிருந்து நிச்சயம் அவனுக்கு நான் பாதுகாப்புக் கொடுப்பேன்.” (நூல்: அஹ்மத்)

    அதிகாலைத் தொழுகையை விட்டதால் நாம் கண்ட நன்மை என்ன? இத்தொழுகையை விட்டதால் வங்கியில் நாம் சேமித்த பணம் எவ்வளவு..? இத்தொழுகையை விட்டதால் நாம் அடைந்த பதவி உயர்வுகள் எத்தனை? இதனை அலட்சியம் செய்ததால் வியாபாரத்தில் நாம் கண்ட லாபம் என்ன? மனதில் நாம் அடைந்த நிம்மதி எவ்வளவு? எண்ணிப்பார்த்தால் எதுவும் இல்லை.

    நபிகளாரின் வேதனை

    உபை இப்னு கஅப் (ரலி)அறிவிக்கின்றார்: ஒரு நாள் அண்ணலார் (ஸல்) அவர்கள் அதிகாலைத் தொழுகை முடித்த பின் எங்களை நோக்கித் திரும்பியவாறு கேட்டார்கள்: “இன்ன மனிதர் தொழுகைக்கு வந்தாரா?” மக்கள், “இல்லை” என்று கூறினர். மீண்டும், “இன்னவர் வந்தாரா?” என்று கேட்க, மக்களும் “இல்லை” என்று கூற, நபி (ஸல்) அவர்கள் வேதனையுடன் கூறினார்கள்: “நயவஞ்சகர்களுக்கு இந்த இரு தொழுகைகளும் (ஸுபுஹ், இஷா) கடினமானவையாக இருக்கும். இவ்விரு தொழுகைகளில் கிடைக்கும் நன்மைகளை இவர்கள் அறிந்து கொண்டால் ஊர்ந்தேனும் இதற்காக வருவார்கள்”. (நூல்: புகாரி, முஸ்லிம்)

    இப்னு உமர் (ரலி) கூறுகின்றார்: “அதிகாலைத் தொழுகைக்கும் இஷா தொழுகைக்கும் யார் வழக்கமாக வருவதில்லையோ அவர்களைக் குறித்து நாங்கள் மோசமாகவே எண்ணியிருந்தோம்” (அதாவது நயவஞ்சகர்கள் என்று).

    அண்ணலாரின் அமுத மொழிகள்

    நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: “(பள்ளிவாசலை நோக்கி அதிகாலை) இருளில் நடந்து செல்பவர்களுக்கு மறுமையில் முழுமையான ஒளி கிடைக்கும் எனும் நற்செய்தியைக் கூறுங்கள்”. (நூல்: பைஹகீ)

    “சூரிய உதயத்திற்கு முன்புள்ள தொழுகையையும் சூரியன் மறைந்ததற்குப்பின் உள்ள தொழுகையையும் (ஸுபுஹ், இஷா) யார் தொழுகின்றாரோ அவர் நரகில் ஒருநாளும் நுழைய மாட்டார்”. (நூல்: முஸ்லிம்)

    “யார் ஸுபுஹ் தொழுகையைத் தொழுகின்றாரோ அவர் இறைவனின் பாதுகாப்பில் இருக்கின்றார்”. (நூல்: தபரானி)

    ஒவ்வொரு நாளும் வானவர்கள் இரு தடவை இந்தப் பூமிக்கு வருகை தருகின்றார்கள். அவர்கள் அனைவரும் அஸர் தொழுகையிலும், ஸுபுஹ் தொழுகையிலும் சந்தித்துக் கொள்கின்றார்கள். பணி முடித்துத் திரும்பும் வானவர்களிடம் அனைத்தையும் அறிந்து வைத்திருக்கும் அல்லாஹ் கேட்கின்றான்: “எனது அடியார்களை எந்நிலையில் சந்தித்தீர்கள்? எந்நிலையில் விட்டு வந்தீர்கள்?” அதற்கு வானவர்கள் கூறுவார்கள்: “அவர்கள் தொழுகையில் இருக்கும் நிலையில் சந்தித்தோம். தொழுகையில் இருக்கும் நிலையிலேயே விட்டு வந்தோம்.” (நூல்: திர்மிதி)

    இந்த நபிமொழிகளைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். பல ஆண்டுகளாக ஸுபுஹ் தொழுகை என்றால் என்ன என்றே தெரியாமல் தூங்கிக்கொண்டிருக்கும் ஒருவரைக் குறித்து வானவர்கள், ‘இறைவா! அவர் தூங்கிக் கொண்டிருந்தார்’ என்றோ, ‘தொழாமல் வெளியே கிளம்பிக்கொண்டிருந்தார்’ என்றோ கூறுவதாக இருந்தால் எப்படி இருக்கும்? அதிலும் 5 அல்லது 10 ஆண்டுகளாக இதே பதிலை வானவர்கள் இறைவனிடம் கூறினால் நம்மைக் குறித்து இறைவன் என்ன நினைப்பான்?

    அதிகாலை சூரியன் உதயமாகும் வரை தூங்குபவர்களைக் குறித்து அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபிகளார், “அந்த மனிதரின் காதுகளில் சைத்தான் சிறுநீர்க் கழித்து விட்டான்” என்று கூறினார்கள்.

    கற்பனை செய்து பாருங்கள். இருபது முப்பது ஆண்டுகளாக ஒருவரின் காதுகளில் தொடர்ந்து சைத்தான் சிறுநீர்க் கழிக்கின்றான் என்றால் அவன் எப்படிப்பட்ட துர்பாக்கியவானாக இருக்க வேண்டும்.

    மாற்றத்தின் நேரம் அதிகாலை

    உலகில் பெரும் பெரும் மாற்றங்கள் எல்லாம் அதிகாலை நேரத்தில்தான் நடைபெறுகின்றன. உலகில் அழித்து நாசமாக்கப்பட்ட சமூகங்கள் எல்லாம் அதிகாலை நேரத்தில்தான் அழித்து ஒழிக்கப்பட்டிருக்கின்றன.

    ஆத் கூட்டத்தைக் குறித்து அல்லாஹ் கூறுகின்றான்: “இறுதியில் அவர்களின் நிலைமை என்னவாயிற்று எனில், அவர்கள் வசித்த இல்லங்களைத் தவிர வேறு எதுவும் அதிகாலையில் அங்கு தென்படவில்லை.” (திருக்குர்ஆன் 46:25)

    சமூத் கூட்டத்தைக் குறித்து இறைவன் குறிப்பிடுகின்றான்: “திடுக்குறச் செய்கின்ற ஒரு நிலநடுக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. அதிகாலையில் அவர்கள் தம் இல்லங்களில் முகங்குப்புற (உயிரற்றவர்களாக) வீழ்ந்து கிடந்தார்கள்” (திருக்குர்ஆன் 7:91)

    லூத் (அலை) அவர்களின் சமூகத்தைக் குறித்து இறைவன் கூறுகின்றான்: “இவர்களை அழிப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரம் அதிகாலையாகும். அதிகாலை வருவதற்கு வெகு நேரமா இருக்கிறது?” (திருக்குர்ஆன் 11: 81)

    ஷுஐப் (அலை) அவர்களின் கூட்டத்தைக் குறித்துக் கூறுகின்றான்: “இறுதியில், ஒரு கடும் நிலநடுக்கம் அவர்களைப் பீடித்தது. அவர்கள் தம் வீடுகளிலேயே அதிகாலையில் குப்புற வீழ்ந்து மடிந்தார்கள்”. (திருக்குர்ஆன் 29:37)

    மண்ணோடு மண்ணாக்கப்பட்ட அத்தனை சமூகங்களும் அநேகமாக அதிகாலை நேரத்திலேயே அழிக்கப்பட்டுள்ளனர்.

    பண்டைய காலத்தில்தான் அதிகாலை என்பது அழிவிற்கான நேரமாக இருந்தது என்று நிம்மதி அடைய வேண்டாம். இன்றும் அவ்வப்போது இறைவனின் எச்சரிக்கைகள் அதிகாலை நேரத்திலேயேதான் வருகின்றன.

    2004-ல் ஏற்பட்ட சுனாமி, துருக்கி பூகம்பம், ஈரானின் நிலநடுக்கம், 2009- ல் ஆப்பிரிக்கா ஹெய்தியில் 3 லட்சம் பேர் பலியான பூகம்பம் அனைத்தும் அதிகாலை நேரத்திலேயே நடைபெற்றன. ஒவ்வொரு தனிமனிதருக்கு வரும் மாரடைப்பு எனும் திடீர் மரணமும் அநேகமாக அதிகாலை 3 மணி முதல் 6 மணிக்குத்தான் வருகின்றது என்று மருத்துவக் குறிப்புகள் கூறுகின்றன.

    மரணம் என்பது இறைவனின் விதி. அது வந்தே தீரும். அதில் எந்த ஐயமும் இருக்க முடியாதுதான். ஆனால், துர்மரணம் என்பது? இறைவனின் தூதரே பாதுகாப்பு கேட்ட விஷயம் அல்லவா? மேலே கூறிய அனைத்தும் துர்மரணம் அல்லவா?

    “யார் ஸுபுஹ் தொழுகையைத் தொழுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருக்கின்றார்” என்று மேலே கூறிய ஹதீஸின் முழுமையான பொருள் இப்போதாவது புரிகின்றதா..?

    செய்ய வேண்டியது என்ன?

    1) தூங்கு முன் நாளை கண்டிப்பாக ஸுபுஹ் தொழுவேன் என்ற உறுதியுடன் படுக்கைக்குச் செல்லுங்கள் (எழுந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்றல்ல!)

    2) படுக்கும் முன் இறைவனிடம் துஆ கேளுங்கள்.

    3) தவறிய தொழுகைகளுக்காக பாவமன்னிப்புக்கேளுங்கள்.

    4) நாம் தொழுதால்தான் நமது பிள்ளைகள் தொழுவார்கள் என்பதை நினைவில் வையுங்கள்.

    5) அலாரம் வைத்துக் கொண்டு தூங்குங்கள்.

    6) சீக்கிரம் தூங்கி அதிகாலையில் எழுவதே நபிவழி என்பதை நினைவில் வையுங்கள்.

    7) கெட்ட முஸ்லிம்களுக்கு நாமே முன்னுதாரணமாக அமைந்து விடக்கூடாது என்பதாக உறுதி எடுங்கள்.

    8) வழக்கமாக ஸுபுஹ் தொழும் நல்லவர்களுடன் தொடர்பை ஏற்படுத்துங்கள்.

    9) ஒளுவுடன் தூங்குவதற்கு முயலுங்கள்.

    10) தம்பதிகளாக இருந்தால் முதலில் எழும் ஒருவர் மற்றவரைத் தண்ணீர் தெளித்தாவது எழுப்ப முயலுங்கள். அல்லாஹ்வின் அருள் அதில்தான் அடங்கியுள்ளது.

    மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.

    Next Story
    ×