search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இஸ்லாம்
    X
    இஸ்லாம்

    நோயாளியிடம் இறைவன் காட்டும் கருணை

    நோய் வந்துவிட்டால் மருத்துவம் பார்க்கச் சொல்லும் இஸ்லாம், அதே நேரம் பொறுமையைக் கடைப்பிடிக்கச் சொல்கிறது. நோய் என்பது சாபத்திற்குரிய துர்குறி அல்ல என்பதை நினைவில் நிறுத்துவோம்.
    நோய் என்பது இறைவனின் அருளாகும். ஒரு முஸ்லிம் நோயாளியானால் எப்படி இருக்க வேண்டும் என இஸ்லாம் தெளிவுபடுத்தியுள்ளது.

    நோய்வாய்ப்பட்டு மரணத் தருவாயில் கிடந்த ஒரு வாலிபனிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். “எப்படி இருக்கிறீர்கள்?”.

    “இறைத்தூதர் அவர்களே, அல்லாஹ்வின் அருள் மீது நம்பிக்கை வைத்தவனாகவும், என் பாவங்களை நினைத்து பயந்தவனாகவும் இருக்கிறேன்”.

    “இந்த இரண்டு சிந்தனையும் எந்த மனிதனின் உள்ளத்தில் இருந்தாலும் சரியே, அல்லாஹ் அவனுடைய நம்பிக்கைக்கு மோசம் செய்யமாட்டான். அவன் பயப்படுவதிலிருந்து பாதுகாப்பும் கொடுப்பான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    நோய் மூலம் உடலாலும் உள்ளத்தாலும் மனிதன் அடைகின்ற பலா பலன்கள் ஏராளம். அவை:

    1) தீமைகள் மன்னிக்கப்படுகின்றன

    ‘நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். ஓர் இறைநம்பிக்கையாளனுக்கு சிறிய சோதனையோ, கவலையோ, துக்கமோ, ஒரு முள் குத்துவதால் வரும் சிறிய வேதனையோ, எது வந்தாலும் சரி அதன் மூலம் அல்லாஹ் அவனின் பாவங்களை மன்னிக்காமல் விடுவதில்லை’.

    ஒரு முஸ்லிம் பாவங்கள் செய்து அவை மன்னிக்கப்பட அவன் வேறு முயற்சிகள் செய்யாதபோது கவலை, நோய் போன்றவற்றால் அல்லாஹ் அவற்றை மன்னிக்கின்றான்.

    எனவேதான் அரபியில் ஒரு பழமொழி கூறப்படுகிறது. ‘சோதனைகள் மட்டும் இல்லாவிட்டால் மறுமையில் நாம் நன்மைகள் இல்லாதவர்களாக அல்லாஹ்வின் முன் நிற்போம்’.

    2) மறுமையில் பன்மடங்கு நன்மைகள்

    ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸ் திர்மிதியில் இவ்வாறு இடம் பெற்றுள்ளது. “மறுமையில் ஒரு கூட்டத்தினர் இப்படி நினைப்பார்கள். உலகில் வாழ்ந்தபோது தங்களின் உடல்கள் வெந்நீரில் கொதிக்க வைக்கப்பட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?. காரணம் உலகில் சோதிக்கப்பட்டவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் நன்மைகளை கண்ணால் காணுகின்ற போது இப்படி நினைப்பார்கள்.

    3) நோயாளியுடன் அல்லாஹ்வின் நெருக்கம்

    சாதாரண நெருக்கமல்ல மிக அதிக நெருக்கம். மறுமையில் அல்லாஹ் கேட்பான், “ஆதத்தின் மகனே, உலகில் நான் பசித்திருந்தேன், தாகித்திருந்தேன், நீ ஏன் உணவளிக்கவில்லை; நீர் புகட்டவில்லை என்று தொடங்கும் ஹதீஸின் தொடரில் ‘நான் நோய் வாய்ப்பட்டிருந்தேன். என்னை நீ நலம் விசாரிக்கவில்லையே’ என்று கேட்டு “இன்ன அடியான் நோயாளியாக இருந்தான், அவனை நோய் விசாரித்திருந்தால் என்னை அங்கு நீ கண்டிருப்பாய்” என்று அல்லாஹ் கூறுகிறான்.

    இந்த ஹதீஸில், நோய் நலம் விசாரிப்பதைப் பற்றிக் கூறும்போது ‘என்னையே அங்கு கண்டிருப்பாய்’ என்கிறான். அந்த அளவுக்கு நோயாளியுடன் அல்லாஹ்வின் நெருக்கம் இருக்கிறது.

    ‘உள்ளங்கள் உடைந்து போன மனிதர் களுக்கருகில் நான் இருக்கிறேன்’ என்ற ஹதீஸ் குத்ஸியும் இதையே வலியுறுத்துகிறது.

    4) பொறுமையின் அளவைத் தெரிந்துகொள்ள

    சோதனைகள் இல்லையெனில் பொறுமையின் சிறப்பு வெளியே தெரியாது. பொறுமை எல்லா நன்மையையும் கொண்டு வரும்.

    ‘அதிக நற்கூலி அதிக சோதனைகளில் உள்ளது. யாரை அல்லாஹ் சோதிக்கின்றானோ அவரை அல்லாஹ் அதிகம் நேசிக்கின்றான். யார் சோதனைகளைப் பொருந்திக் கொள்கிறாரோ அவரை அல்லாஹ்வும் பொருந்திக்கொள்கிறான். அவற்றைக் கண்டு கோபப்படுகின்றவர் மீது அல்லாஹ்வும் கோபப்படுகிறான்’ என்று நபி (ஸல்) கூறுகிறார்கள்.

    5) உள்ளத்தால் இறைவனைத் தேடுதல்

    அல்லாஹ்வை மறந்து அவனிடம் பிரார்த்திக்காமல் ஓர் அடியான் இருந்தால் அவனை சோதிக்க அல்லாஹ் நோயை கொடுக்கின்றான். நோய்வாய்ப்பட்டவன் இறைவனை அதிகமாக நினைப்பதை நாம் கண்கூடாகக் காண்பதுண்டு.

    “அவனை ஏதாவது ஒரு தீங்கு தொட்டாலோ நீண்ட நெடிய இறைஞ்சுதல்களைப் புரியத் தொடங்குகிறான்”. (திருக்குர்ஆன் 41:51)

    ‘நீண்ட நெடிய இறைஞ்சுதல்கள்’ என்று இறைவனே கூறுவதைக் கவனியுங்கள். ஏதோ படைத்தவன் ஒருவன் இருக்கிறான் என்பதை அப்போதுதான் உணர்ந்தவன் போல் ஆகிவிடுகின்றான். சோதனைகளின் போதுதான் ‘தான் இறைவனின் அடிமை’ என்ற உணர்வு ஏற்படுகிறது.

    6) பெருமை, கர்வம், தலைக்கனம் தகர்க்கப்படுகின்றன

    இவை ஒருவனிடம் குடிகொள்ளும்போதுதானே தலைகால் தெரியாமல் ஆடுகிறான். நோயை அவனுக்குக் கொடுக்கும் போது பசித்திருக்கின்றான். வேதனையை அனுபவிக்கின்றான். அதற்காக யாரிடமும் கோபப்பட முடிவதில்லை. உள்ளம் உடைந்துபோய், பெருமை, கர்வம் பறந்து போய் விடுகிறது.

    ‘உள்ளங்கள் உடைந்து போனவர்களுடன் நான் இருக்கிறேன்’ எனும் அல்லாஹ்வின் வாக்கும் ‘அநீதி இழைக்கப்பட்டவன், பயணி, நோயாளி ஆகியோரின் பிரார்த்தனைகள் உடனே ஏற்றுக்கொள்ளப்படும்’ எனும் நபிமொழியும் ஒரே கருத்தையே வலியுறுத்துகிறது.

    7) நோயாளிக்கு அல்லாஹ் நன்மையை நாடுதல்

    நபி (ஸல்) கூறினார்கள்: ‘எவருக்கு இறைவன் நன்மை செய்யவேண்டும் என்று விரும்புகின்றானோ அவரை சோதிப்பான்’ (நூல்: புகாரி). எனவே எவருக்கு நன்மை செய்ய இறைவன் நாடவில்லையோ அவருக்கு எந்தச் சோதனையும் இல்லை. நோயும் ஒரு சோதனைதானே.

    நபி (ஸல்) அவர்கள் ஒருநாள் உடல் ஆரோக்கியமுள்ள திடகாத்திரமான ஒரு கிராமவாசியை சந்திக்கிறார்கள். அவருடைய உடல் வலிமையை ஆச்சரியத்துடன் நோக்கியவர்களாய் அவரிடம் கேட்டார்கள்.

    “எப்போதாவது கடும் வேதனையுடன் கூடிய உடல் சூட்டை அடைந்திருக்கின்றாயா?”

    “அப்படி என்றால் என்ன?”

    “காய்ச்சல்”

    “காய்ச்சல் என்றால் என்ன?”

    “தோலுக்கும் எலும்புக்கும் இடையே ஏற்படும் கடும் சூடு”.

    “என் வாழ்நாளில் அப்படி எதையும் நான் அனுபவிக்கவில்லை”

    “எப்போதாவது தலைவலி வந்ததுண்டா?”

    “தலைவலி என்றால் என்ன?”

    “நெற்றியின் இரண்டு கீழ்பகுதிக்கும் தலைக்குமிடையே ஏற்படும் கடும் வலி”

    “என் வாழ்நாளில் அப்படி எதையும் நான் அனுபவித்தது இல்லை”.

    அந்த மனிதர் சென்ற பின் நபி (ஸல்) தம் தோழர்களிடம் கூறினார்கள், “நரகவாசியைக் காண வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் இவரைக் கண்டு கொள்ளட்டும்”.

    எனவே காய்ச்சலும் தலைவலியும் இறைவனின் கருணையே. ஓர் அடியான் நோயாளியாகிறபோது, சாதாரண வேளையில் எவ்வளவு நற்செயல்கள் செய்தானோ அதே கூலி இப்போதும் கிடைக்கும்.

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒருவர் நோயாளியானதால் நற்செயல்கள் எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டால் வானவர்களிடம் அல்லாஹ், ‘எனது அடியான் ஆரோக்கியமாக இருந்தபோது இரவும் பகலும் என்னென்ன நற்செயல்கள் செய்தானோ அதையே இப்போதும் எழுதுங்கள்’ என்று கூறுவான்”.

    ஆக, நோய் என்றாலே நன்மைதானா? உலகில் மனிதர்களுக்கு இறைவன் அருளும் எல்லா அருட்கொடைகளையும் விட நோய்தான் சிறந்ததா? அப்படியானால் “இறைவா, எனக்கு என்றென்றும் நோயைத் தா” என்று பிரார்த்திக்கலாமா?

    இல்லை; ஒருபோதும் அவ்வாறு பிரார்த்திக்கக் கூடாது. மாறாக நபியவர்கள் நமக்குக் கற்றுத்தந்த மிகச்சிறந்த பிரார்த்தனையே “மன்னிப்பையும் உடல் நலத்தையும் அல்லாஹ்விடம் கேளுங்கள். இறைநம்பிக்கைக்குப் பின் ஆரோக்கியத்தைத் தவிர சிறந்த அருள் எதுவும் இல்லை” என்பதுதான்.

    எனவே நோய் வந்துவிட்டால் மருத்துவம் பார்க்கச் சொல்லும் இஸ்லாம், அதே நேரம் பொறுமையைக் கடைப்பிடிக்கச் சொல்கிறது. நோய் என்பது சாபத்திற்குரிய துர்குறி அல்ல என்பதை நினைவில் நிறுத்துவோம்.

    மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.
    Next Story
    ×