search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இறைவனை என்றும் நினைவுகூர்வோம்
    X
    இறைவனை என்றும் நினைவுகூர்வோம்

    இறைவனை என்றும் நினைவுகூர்வோம்

    மன்னிப்பாளனாகிய இறைவனை நமது நினைவில் நாம் என்றும் வைத்து போற்றுவோம். அதன்மூலம் அவனது பேரருளை பெற நம்மை தகுதியுடையோராக ஆக்கி மகிழ்வோம், ஆமின்.
    பூமியை மனிதன் வாழ்வதற்கு தகுதியானதாக்கி, அதில் மனிதனின் தேவைக்காகவும், நல்வாழ்விற்காகவும் எண்ணிலடங்காத படைப்புகளையும் படைத்து தந்தவன் இறைவனாகும்.

    உலகில் உள்ள மற்ற எல்லா உயிரினங்களை விடவும், பல்வேறு வகையில் மனிதனை இறைவன் மேன்மையாக்கியே வைத்துள்ளான். மற்ற மிருகங்களும், பறவைகளும் தலை குனிந்து தான் நீர் அருந்தியாக வேண்டும். ஆனால், தனது இரு கைகளால் நீரை அள்ளி, தலை நிமிர்ந்து அதனை குடிக்கும் ஆற்றலை மனிதனுக்கு இறைவன் கொடுத்துள்ளான்.

    ஏன் என்றால், இந்த உலகில் தனது பிரதிநிதியாகத்தான் மனிதனை இறைவன் படைத்துள்ளான். அதனால் தான் மனிதனை, மிருங்கங்களை போல தலை குனிந்து நீர் அருந்தாமல், தலை நிமிர்ந்து நீர் அருந்த வைத்து கண்ணியப்படுத்தியுள்ளான்.

    இதற்கு முக்கிய காரணம், ‘மனிதன், தன்னை (இறைவனை) வணங்க மட்டுமே தலைகுனிய வேண்டும்’ என்பது தான். ஆனால் மனிதனோ இன்று தன் சுயநலத் தேவைகளை பூர்த்தி செய்திட எதற்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் யாரிடமும் தலைகுனிய தயங்குவதில்லை.

    இறைவன் மீது நம்பிக்கை வைத்து அவனை நினைவுகூராமல், நிலையற்ற இந்த உலக வாழ்விற்காகவும், அற்ப சுய லாபத்திற்காகவும் மனிதன் செயல்படுகிறான். அதற்காக, அன்பை முறிப்பதையும், நீதியை கெடுப்பதையும், இரக்கத்தை கைவிட்டு அதனை தூக்கி எறிவதையும் சர்வ சாதாரணமாகச் செய்கின்றான். அது, ‘இறைவனுக்கு (இறைவன் மனிதனுக்கு செய்த உபகாரத்திற்கு) மாறு செய்வதாகவே ஆகிவிடுகிறது’.

    இறைவனை நினைவுகூர்வது என்பது, அன்பு, நேர்மை, நீதி, பாசம், இரக்கம் ஆகியவற்றை ஒரு மனிதன் தன் மனதில் விதைப்பதாகவே அமையும். அவ்வாறு விதைப்பதே அந்த மனதை நமக்கு தந்த இறைவனுக்கு செய்யும் நன்றிக்கடனாக அமையும்.

    அத்தகைய மனிதர்கள், தான் தவறு செய்யும் பட்சத்தில், தன் தவறை உடனே உணர்ந்து இறைவனிடம் பாவ மன்னிப்பு கோரினால் அதனை அவன் ஏற்று மன்னிக்க தயாராக இருக்கின்றான். இதையே நபிகளார் இவ்வாறு கூறுகிறார்கள்:

    ‘உங்களில், வனாந்தரத்தில் (காட்டில்) காணாமல் போன தம் ஒட்டகம் (அது திரும்ப) கிடைக்கும் பொழுது (ஒருவன்) அடைகின்ற மகிழ்ச்சியை விட மிகஅதிகமான மகிழ்ச்சி (தவறை எண்ணி மனிதன்) மன்னிப்பு கோரும் போது இறைவனுக்கு ஏற்படுகிறது’.

    இறைவனை நாம் நினைவு கூர்ந்தால், அந்த இறைவன் நம்மை எவ்வாறு நினைவு கூருகிறான் என்பதை அண்ணலார் இவ்வாறு இயம்புகிறார்கள்:

    “என் அடியான் என்னைப்பற்றி என்ன நினைகின்றானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்து கொள்வேன். அவன் என்னை நினைவுகூரும் போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னை தன் உள்ளத்தில் நினைவுகூர்ந்தால், நானும் அவனை என் உள்ளத்தில் நினைவு கூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் (என்னை) நினைவு கூர்ந்தால், அந்த அவையை விட சிறந்ததோர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன். அவன் ஒரு சாண் அளவு என்னை நெருங்கினால், நான் ஒரு முழம் அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் இரு கைகளின் நீள அளவிற்கு நான் (அதிகமாக) அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால், நான் அவனை நோக்கி ஓடிச்செல்வேன்”, (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

    இஸ்ஸாம் வலியுறுத்தும் ஐந்து கடமை களான, கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத் மற்றும் ஹஜ் அனைத்தும் இறைவனை நினைவுகூர்வதை கொண்டும், அவனிடம் முழு ஆதரவு வைத்து பாவ மன்னிப்புகோருவதை கொண்டுமே கட்டமைக்கப்பட்டுள்ளது. அக்கடமைகளின் நோக்கத்தை ஆழ்ந்து சிந்தித்தால் இதை புரிந்து கொள்ளமுடியும்.

    இறைவனை நினைவுகூருவது குறித்து திருக்குர்ஆனும் இவ்வாறு கூறுகின்றது:

    “(மனிதர்களே), என்னை நீங்கள் நினைவுகூருங்கள், நான் உங்களை நினைவுகூருகிறேன். இன்னும் எனக்கு நன்றி செலுத்துங்கள், எனக்கு மாறு செய்யாதீர்கள்” (திருக்குர்ஆன் 2:152).

    இறை வணக்கமும் இறைவன் மீது வைக்கின்ற நம்பிக்கையும் எப்படி இருக்க வேண்டும் என்பதை நபிகளார் இவ்வாறு கூறுகிறார்கள்:

    ‘நீ இறைவனை பார்ப்பதை போன்று வணங்க வேண்டும், அல்லது அவன் உன்னை பார்கின்றான் என்ற உளப்பூர்வமான உணர்வின் நம்பிக்கையோடு அவனை நீ வணங்க வேண்டும்’.

    இதை நபிகளார் ‘இஹ்ஸான்’ என்று கூறினார்கள்.

    எனவே மன்னிப்பாளனாகிய இறைவனை நமது நினைவில் நாம் என்றும் வைத்து போற்றுவோம். அதன்மூலம் அவனது பேரருளை பெற நம்மை தகுதியுடையோராக ஆக்கி மகிழ்வோம், ஆமின்.

    மு.முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, நெல்லை மாவட்டம்.
    Next Story
    ×