search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    தமிழகத்தில் உள்ள முக்கியமான குரு பரிகார தலங்கள்
    X

    தமிழகத்தில் உள்ள முக்கியமான குரு பரிகார தலங்கள்

    • குரு பரிகார தலங்கள் தமிழகமெங்கும் உள்ளன.
    • குரு பகவானை வழிபட்டால் கோடி நன்மை உண்டாகும்.

    ஆன்மிக பூமியான தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஆலயங்கள் நிறைந்துள்ளன. நவக்கிரக கோவில்களும் நட்சத்திர கோவில்களும் இங்குதான் உள்ளன. குரு பரிகார தலங்கள் தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் உள்ளன. அவற்றில் முக்கியமான ஆலயங்கள் பற்றி பார்ப்போம்.

    தென்குடி திட்டை

    திட்டை திருத்தலம், தஞ்சாவூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் வசிஷ்டேஸ்வரர் என்ற பெயருடன் இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இறைவியின் நாமம் மங்களாம்பிகை என்பதாகும். இறைவனுக்கும், இறைவிக்கும் நடுவில் நின்ற நிலையில் குரு பகவான் ராஜ குருவாக வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இது வேறு எந்த தலத்திலும் காண முடியாத தனிச் சிறப்பாகும்.

    பாடி திருவலிதாயம்

    சென்னைக்கு அருகில் உள்ள பாடி திருவலிதாயத்தில் அமைந்துள்ள வலிதாய நாதர் கோவில், குரு பகவான் வழிபட்ட தலமாகும். வியாழ பகவான், தான் செய்த ஒரு தவறால், தனது தமையனின் மனைவி மேனகையிடம் சாபம் பெற்றார். இதற்கு விமோசனம் கிடைக்க மார்க்கண்டேய மகரிஷியின் உதவியை நாடினார். அவரது ஆலோசனை படி, இத்தலத்து சிவனை வணங்கினார். அவருக்கு காட்சி தந்த சிவன், விமோசனம் கொடுத்தருளினார். குருவுக்கு இங்கு சன்னிதி உள்ளது. இவர் சிவனை வணங்கும் வகையில் மேற்கு நோக்கி இருப்பது சிறப்பான அமைப்பு.

    திருச்செந்தூர்

    குரு பகவானுக் குரிய தலங்களில் பிரதான இடம் பெறுவது, முருகனுக் குரிய ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் ஆகும். தேவர்களைக் காக்க முருகப்பெருமான் அசுரர்களை அழிக்க இங்கு வந்தார். அப்போது, தேவர்களின் குருவான பிரகஸ்பதி அசுரர்களைப் பற்றியும், அவர்களது குணம் பற்றியும் முருகனுக்கு எடுத்துச் சொன்னார். இதனால், இத்தலம் குரு தலமாகக் கருதப்படுகிறது.

    இங்குள்ள மேதா தட்சிணா மூர்த்தியும் விசேஷமானவர். இவர், கூர்மம் (ஆமை), அஷ்ட நாகம், அஷ்ட யானைகளுடன் கூடிய பீடத்தின் மீது காட்சி தருகிறார். வலதுகையில் சிவபெருமானுக் குரிய ஆயுதமான மழுவும், இடக்கையில் மானும் உள்ளது. இவருக்குப் பின்புறமுள்ள கல்லால மரத்தில் நான்கு வேதங்களும், கிளி வடிவில் உள்ளது. தட்சிணாமூர்த்தியின் இத்தகைய அமைப்பை வேறெங்கும் காண முடியாது. குரு தோஷம் உள்ளவர்கள், குரு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் அவசியம் ஒரு முறையாவது சென்று வரவேண்டிய தலம் இது.

    குருவித்துறை

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள குருவித்துறை சித்திரரதவல்லப பெருமாள் கோவிலில், ஒரே சன்னிதியில் குரு பகவானும், சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்திகளாகக் காட்சி தருகின்றனர். அசுர குருவான சுக்ராச்சாரியார், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் 'மிருத சஞ்சீவினி' மந்திரம் கற்றிருந்தார். இதனால், தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் யுத்தம் நடக்கும்போது, அவர் எளிதாக அசுரர்களை உயிர்ப்பித்தார். அந்த மந்திரத்தை கற்க விரும்பிய தேவர்கள், தங்கள் படையிலிருந்து ஒருவரை சுக்ராச்சாரியாரிடம் அனுப்ப முடிவு செய்தனர்.

    தேவகுரு பிரகஸ்பதியின் (வியாழன்) மகன் கசன், அந்த மந்திரத்தை கற்று வருவதாகச் சொன்னான். அதன்படி சுக்ராச்சாரியாரிடம் சென்றவன், அவரது மகள் தேவயானியிடம் அன்பு செலுத்துவது போல நடித்தான். அவரிடம் மந்திரத்தைக் கற்று வந்தான். கசன், தேவகுலத்தைச் சேர்ந்தவன் என்பதை அறிந்த அசுரர்கள், அவனை எரித்து சாம்பலாக்கி, சுக்ராச்சாரியார் பருகிய பானத்தில் கலந்து கொடுத்துவிட்டனர்.

    கசனைக் காணாத தேவயானி, தந்தையிடம் அவனைக் கண்டுபிடித்துத் தரும்படி வேண்டினாள். சுக்ராச்சாரியார் அவனை உயிர்ப்பித்தார். மகனைக் காணாத குரு பகவான், அவனை அசுரலோகத்தில் இருந் து மீட்டு வர அருளும்படி, இங்கு பெருமாளை வேண்டி தவமிருந்தார். சுவாமி, சக்கரத்தாழ்வாரை அனுப்பி கசனை மீட்டு வந்தார். குரு பகவானுக்கு அருளிய பெருமாள், இங்கே எழுந்தருளியுள்ளார்.

    பட்டமங்கலம்

    கிழக்கு நோக்கிய அனுக்கிரக தட்சிணாமூர்த்தி, சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில் அருளுகிறார். இவரது சன்னிதிக்குப் பின்புறம் படர்ந்து விரிந்த பெரிய ஆல மரம் உள்ளது. பக்தர்கள் இம்மரத்தையும் சேர்த்து வலம் வரும் வகையில் சன்னிதி அமைந்துள்ளது. சன்னிதி முன் மண்டபத்தில் ராசிக்கட்டம் உள்ளது. இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி பிரதானம் என்பதால், பக்தர்கள் முதலில் இவரையே தரிசிக்கிறார்கள். வியாழக்கிழமை குரு ஓரை நேரத்தில் (மதியம் 1 - 2 மணி) இவருக்கு விசேஷ அபிஷேகத்துடன் பூஜை நடக்கும். மதுரையில் இருந்து 65 கி.மீ., திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வழியாக 90 கி.மீ., தூரத்தில் திருப்புத்தூர் இருக்கிறது. இங்கிருந்து 8 கி.மீ., தூரத்தில் பட்டமங்கலம் அமைந்துள்ளது.

    அகரம் கோவிந்தவாடி

    காஞ்சீபுரம் - அரக்கோணம் பேருந்து வழியில், கம்மவார்பாளையம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி அகரம் கோவிந்தவாடி கோவிலுக்குச் செல்லலாம். இத்தலத்திலும் தட்சிணாமூர்த்தியே குருவாக அருளாட்சி புரிகிறார். இது சிறந்த குரு பரிகாரத் தலம். இவர், வியாக்யான தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.

    தக்கோலம்

    வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் - பேரம்பாக்கம் வழியில் தக்கோலம் உள்ளது. இத்தலத்து இறைவன் வலது காலைத் தரையில் ஊன்றி, இடது காலை மடித்து அமர்ந்திருக்கிறார். தலையைச் சற்றே வலதுபுறம் சாய்த்த நிலையில் உத்கடி ஆசனத்தில் அமர்ந்த திருவுருவை இங்கு தரிசிக்கலாம்..

    குருபகவான் தட்சிணாமூர்த்தி

    திருவடிகள் போற்றி போற்றி போற்றி

    Next Story
    ×