search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    சனி தாக்கத்தை விரட்டும் கருப்பு நிற உடை
    X
    சனி தாக்கத்தை விரட்டும் கருப்பு நிற உடை

    சனி தாக்கத்தை விரட்டும் கருப்பு நிற உடை

    யார் ஒருவர் சபரிமலைக்கு கருப்பு நிற உடை உடுத்தி சென்று ஸ்ரீ தர்ம சாஸ்தாவினைக் காண்கிறார்களோ அவர்களுக்கு சனியின் பாதிப்பு ஏதும் அறவே இருக்காது.
    கருப்பும் உடுத்து பம்பையில் முங்கி சபரிக்கு போம் ஐயப்பன்மார் என்கிற பாடலின் வாயிலாக ஐயன் ஐயப்பனுக்கு ஏற்ற, பிடித்தமான உடை கருப்பு என்பதை அறியலாம். பல்லாயிரக்கணக்கான அன்பர்கள் கருப்பு வேஷ்டி துண்டு அணிந்து தான் மலைக்கு வருகின்றனர்.

    அதிலும் குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து வருவோர் கருப்பு நிற ஆடை மட்டும் அணிகின்றனர். இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஐயப்ப ஸ்வாமியின் பரிவார தேவதையான ஸ்ரீ கருப்பஸ்வாமி ஸ்ரீ கருப்பாயி தேவி கருமை நிற ஆடை அணிபவர்கள். அவர்களின் வழி பின்பற்றி ஐயப்ப சாமிகளிடம் கருநிற ஆடை அணிகின்றனர்.

    அடுத்து சபரிமலையில் யானைகள் அதிகம் உள்ளன. காட்டு யானைகள் பெருவழியில் அதிகம் நடமாடும். அவை வெள்ளை நிறம் கண்டால் சினம் கொண்டு பிளிரும். கருப்பு நிறம் கண்டால் வெகுண்டு எழாது. மற்றும் வன தேவதைகளை சாந்தி செய்யவும் கருப்பு உடுத்துவது வழக்கமாக உள்ளது.

    மேலும் கருப்பு நிறம் சனீஸ்வர பகவானுக்கு ஏற்றது. யார் ஒருவர் சபரிமலைக்கு கருப்பு நிற உடை உடுத்தி சென்று ஸ்ரீ தர்ம சாஸ்தாவினைக் காண்கிறார்களோ அவர்களுக்கு சனியின் பாதிப்பு ஏதும் அறவே இருக்காது. ஏன் என்றால் சனீஸ்வரன் ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் பரம அனுக்கிரகம் பெற்றவன்.

    இது தொடர்பாக கூறப்படும் கதை வருமாறு:

    இந்த உலகையும் மற்ற எல்லா கிரகங்களையும் தன் கிரணங்களால் அனுகுகின்றவன் சூரிய பகவான். அவருக்கு உஷா என்ற மனைவி உண்டு. இந்த உஷா விஸ்வகர்மாவின் மகள் ஆவாள். இந்த விஸ்வகர்மா தான் தேவலோகத்து தேவர்களின் ஆணைப்படி பல கட்டிடங்களையும், சிற்ப வேலைப்பாடுகளையும் செய்பவர். தேவலோக சிற்பி ஆவார். இன்றும் விஸ்வகர்மா வகுப்பினர் தங்கம், வெள்ளி ஆபரணங்கள் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருவதை காணலாம்.
    சூரியன் - உஷா தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள். 2 பேர் ஆண்கள். ஒரு மகள்.

    1. வைவஸ்வத மனு - மகன், 2. யமதர்ம ராஜன் - மகன், 3. யமுனா தேவி என்ற மகள். எனவே தான் யமுனா நதி கருப்பாக உள்ளது. (யமதர்ம ராஜனின் சகோதரி என்பதால்). சூரியனின் வெப்பத்தை அவரது மனைவியான உஷா தேவியால் கூட தாங்க இயலவில்லை. இங்கு உஷா தேவியினை மக்களாகவும் கருதி சிந்திக்க வேண்டும். வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள் எனவே உஷா தேவி தன் நிழலை உருவாக்கி சாயா தேவி என்று மாறினாள். சாயா என்றால் நிழல் என்றும் பொருள் வரும். சூரியனை விட்டுவிட்டு விஸ்வகர்மாவாகிய தன் தந்தையிடம் உஷா சென்றுவிட்டாள். இந்த சூரியன் மனைவியாகிய சாயாதேவி தன் கணவரிடமும், உஷா தேவியின் குழந்தைகளிடமும் பிரியமாக நடந்து கொண்டாள். நாளடைவில் இந்த சாயா தேவிக்கும் மூன்று குழந்தைகள் பிறந்தன.

    1. சாவர்ணி மனு - மகன், 2. ச்ருத கர்மா - மகன் மற்றுத் பத்ரை என்ற மகளும் பிறந்தனர்.

    தனக்கு குழந்தைகள் பிறந்ததும் சாயாதேவி உஷா தேவியின் குழந்தைகளை வெறுக்க தொடங்கினாள். குழந்தைகளிடம் கடுமையாகவும் நடந்து கொண்டாள். இதனால் எமதர்மன் மிகவும் துன்பத்திற்கு ஆளானான். ஒரு சமயம் எமதர்மன் காலை தூக்குவதை கண்ட சாயா தேவி தன்னைத்தான் உதைக்க வருவதாக எண்ணி அவன் கால் எழுகக்கடவது என சாபமிட்டாள்.

    தாய் சாபமிடுவதை கண்ட எமன் சந்தேகமுற்றான். நல்ல தாய் தன் மகனை ஒருக்காலும் சபிக்கமாட்டாள். தன் சந்தேகத்தினை சூரிய பகவானான தந்தையிடம் கூறினான். சினம் கொண்ட சூரியன் உண்மையினை கூறும்படி கட்டளையிட்டார். சாயா தேவியும் தான் உஷா தேவி அல்ல என்ற உண்மையினை ஒத்துக்கொண்டாள்.

    சூரிய பகவானும் எமதர்ம ராஜனை பூலோகம் சென்று தாயின் நோய் தீர்க்கும் தயாவான தத்துவனாகிய ஸ்ரீ தர்ம சாஸ்தாவினை நோக்கி தவம் செய்து சாப விமோசனம் பெற வழிகாட்டினார். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதனை உணர்ந்த எமன் பூலோகம் வந்து தவம் இருந்து வேண்டினார். அவனது தவ வலிமையினைக் கண்டு உள்ளம் மகிழ்ந்து ஸ்ரீ தர்ம சாஸ்தா அவன் முன் தோன்றினார். சாப விமோசனம் தந்து எமலோகத்திற்கு அதிபதியாக்கினார்.

    இப்படிப்பட்ட உயர்ந்த நிலையினை ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் அனுகிரகத்தினால் எமன் கிடைக்கப்பெற்றதனை அறிந்த ஸ்ரீ சாயா தேவியின் இளைய மகனாகிய ச்ருத கர்மா தானும் பூலோகம் வந்து ஸ்ரீ தர்ம சாஸ்தாவை காலையும் மாலையும் பூஜை செய்து வழிபட்டான். பின்னர் கடும் தவம் மேற்கொண்டு சகல வரங்ளையும் அருளும் ஸ்ரீ தர்ம சாஸ்தாவினையே தியானம் செய்து வந்தான்.

    அவனது அன்பு கலந்த பக்தியினால் மகிழ்ந்த ஸ்ரீ தர்ம சாஸ்தா அவன் முன் தோன்றி அவனுக்கு சூரிய மண்டலத்தில் கிரக நிலையினை அருளினார். அவன் மெதுவாக நகர்வதால் (அவன் சூரியனைச் சுற்றிவர 30 ஆண்டுகள் ஆகும்) சனீஸ்வரன் என்ற பெயரும் சூட்டினார். வாரத்தின் கடைசி நாளையும் அவன் பெயரில் அழைக்க அருள்பாலித்தருளினார்.

    மேலும் அந்த சனிக்கிழமையினையே தனக்கு உகந்த நாளாக ஏற்று ஐயப்பன் அருள் செய்தார். இதற்கு பிரிதி உபகாரமாக சனிபகவானும் யார் ஒருவர் கருப்பு நிற உடை உடுத்தி சனிக்கிழமை தோரும் விரதம் இருந்து சபரிமலை வந்து ஸ்ரீ தர்ம சாஸ்தா சொரூபமாகிய ஐயப்பனை அன்புடன் வேண்டுகிறார்களோ அவர்களை கஷ்டங்களுக்கு உள்ளாக்க மாட்டேன் என கூறினார்.

    எனவே தான் சபரிமலைக்கு கருப்பு நிற உடை அணிந்து வரும் பக்தர்களுக்கு 7 1/2 சனியின் தாக்கம் கடுமையாக இருப்பதில்லை.

    Next Story
    ×