search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கல் உப்பு
    X
    கல் உப்பு

    திருஷ்டி போக்கும் கல் உப்பு அறிவியல் உண்மைகள்

    கண் திருஷ்டி எனப்படும் தீயபார்வை மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். குடும்பத்தில் ஏற்படும் காரணம் புரியாத இன்னல்கள் மூலம் இதனை நாம் உணரலாம்.
    உலகில் கண் திருஷ்டிக்குப் பயப்படாதவர்களே இல்லை. கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள்.

    பிரபல தத்துவ ஞானி பிரான்ஸிஸ் பேகன், ஒருவருக்கு பொறாமை மேலிடும் போது முதலில் அது அவரது கண்களில்தான் வெளிப்படுகிறது என்கிறார்.
    மனிதனின் கண்களிலிருந்து வெளிவரும் ஆற்றல் சில சமயங்களில் மிருகங்களை அல்லது குழந்தைகளைக் கூடக் கொல்லும் ஆற்றல் படைத்தது. சிலருக்கு இன்னும் அதீதமான ஆற்றல் கண் பார்வையில் இருக்கிறது. அவர்கள் பார்வையினாலேயே சாபம் இட வல்லவர்கள்’ என்கிறார் திருஷ்டியை அறிவியல் ரீதியில் விளக்கம் அளித்த அறிஞர் ப்ளூடார்க்!

    இதே போல கி.பி.மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹெலியோடோரஸ், “ அருமையான ஒன்றை பொறாமை கொண்ட கண்ணுடன் ஒருவன் பார்த்தானானால் சுற்றி இருக்கும் சூழ்நிலையையே அவன் மாற்றுகிறான். உயிரைப் போக்கும் அளவு மோசமான சூழ்நிலையை உருவாக்குகிறான், அத்துடன் தனது விஷத்தைக் கண்கள் மூலம் தனக்கு அருகில் இருக்கும் அனைத்தின் மீதும் பாய்ச்சுகிறான்” என்கிறார்.

    கண் திருஷ்டி எனப்படும் தீயபார்வை மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். குடும்பத்தில் ஏற்படும் காரணம் புரியாத இன்னல்கள் மூலம் இதனை நாம் உணரலாம்.

    சில பேருடைய பார்வை பட்டாலேயே போதும் திருஷ்டிக்கு உள்ளானவர் பல விதத்திலும் பாதிக்கப்படுவர். ஏன், சில சமயம் உயிருக்கே ஆபத்து ஏற்படுவதுண்டு!
    பார்த்த பார்வையில் புதுச்சட்டை கிழியும்,பால் புளித்துப் போகும், பார்த்த பார்வையில் பல நாட்களுக்குச் சாப்பிடவே பிடிக்காது. வாந்தி எடுக்கும். இப்படி கெட்ட திருஷ்டியின் “மகிமையை”ச் சொல்லிக் கொண்டே போகலாம்.

    இதனால்தான் எந்தவொரு நல்ல காரியம் நடந்து முடிந்தாலும் அதன் பின்னர் திருஷ்டி கழிக்கிறார்கள். திருஷ்டியிலிருந்து எப்படித் தப்புவது? முதல் வழி அப்படிப்பட்ட ஆட்களைப் பார்க்கவே பார்க்காதே என்பது தான். அடுத்த வழி சில தாயத்துகளை அணிவது தான். அரைஞாண் கயிற்றில் ஆரம்பித்து மணிக் கட்டு, புஜத்தின் மேல் பகுதியில் கயிறு கட்டுதல், கழுத்தில் தாயத்தை அணிவது என்று பல ரகங்களில் திருஷ்டியிலிருந்து தன்னைப் பாதுகாக்க ஒவ்வொருவரும் முயல்கின்றனர்.

    நமது ஊரில் மிளகாயைப் மரக்கால் படியில் வைத்து திருஷ்டி சுற்றிப் போடுவர். கடல் உப்பை (கல் உப்பு ) வைத்து திருஷ்டி கழிப்பது அன்றாடப் பழக்கம். பூசணிக்காய் பற்றிச் சொல்லவே வேண்டாம். தமிழர் தம் பழக்க வழக்கங்களில் திருஷ்டியிலிருந்து பாதுகாக்க பல வழிகள் உண்டு.

    கண்ணுக்கு அழகூட்டுவதற்காக மட்டும் தமிழ் மங்கையர் மையைத் தீட்டிக் கொள்ளவில்லை. தன்னைத் தீயபார்வையிலிருந்து காத்துக் கொள்வதற்காகவும்மையைத் தீட்டிக்கொள்கின்றனர். குழந்தைகளுக்கு மை தீட்டும் தாய்மார் மறந்து விடாமல் அதே மையினாலேயே குழந்தையின் கன்னத்தில் ஒரு திருஷ்டிப் பொட்டை வைக்க மறக்கமாட்டார்கள். சில பொல்லாத கண்களிலிருந்து பாது காப்பதற்காகத் தான் இந்த திருஷ்டிப் பொட்டு.

    மணமக்கள் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்னர் அவர்களை வாசலிலேயே நிறுத்தி வைத்து வீட்டில் அவர்களுக்கு மிகவும் வேண்டியவர்கள், வயதானவர்கள் கற்பூரத்தை ஏற்றி அவர்களைச் சுற்றி திருஷ்டி கழிப்பது பழக்கம். இந்தியாவில் அனைத்து மாநில மக்களும் கண் திருஷ்டியைக் கழிக்க நவரத்தினங்களை அணி வதைப் பழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    பல வித மணிகளினால் ஆன மாலை, ருத்ராட்ச மாலை போன்றவையும் தீய திருஷ்டிகளை விலக்கும் ஆற்றல் படைத்தவை என நம்பப் படுகின்றன! இப்படி தமிழகத்தில் மட்டுமல்ல, உலகின் எல்லா நாடுகளிலும் உள்ள மக்கள் திருஷ்டி கழிக்கப் பல்வேறு வழிமுறைகள், தாயத்துக்கள், மணிகள் அணிவது ஆகிய வற்றைக் கடைப்பிடித்து வந்திருக்கின்றனர். வருகின்றனர்.

    இவற்றுக்கெல்லாம் மேலாக கண் திருஷ்டி கழிப்பதற்கு அனைத்து தேசத்தினரும் பயன்படுத்தியது, பயன்படுத்தி வருவது ஒரு எளிய சாதனம் தான். கல் உப்பு அல்லது கடல் உப்பு என்று சொல்கிறோமே அது தான்! (உப்புப் பொடி அல்ல; அதைப் பயன்படுத்தல் கூடாது) பிசாசு, பேய் உள்ளிட்ட தீய சக்திகள் அதைக் கண்டால் பயப்படுகின்றன என்று மக்கள் நம்புகின்றனர்.

    உப்பு மனிதர்களை தீய திருஷ்டியிலிருந்து காக்கிறது என்பதையும் அது சற்று வெப்பப்படுத்தப்பட்டாலோ அல்லது மேலே தெளிக்கப்பட்டாலோ அதன் சக்தி இன்னும் மிக அதிகமாகிறது என்பதும் மக்களின் நம்பிக்கை. உப்பை எடுத்து ஆழாக்கில் அல்லது கையில் வைத்து திருஷ்டி கழிக்கப்பட வேண்டியவர்களை எதிரில் நிறுத்தி இட மாகவும் வலமாகவும் மூன்று முறை சுற்றி அந்த உப்பை நீரில் போட்டுக் கரைய விட வேண்டியது தான்! சிலர் சுற்றிய பின் னர் அதில் எதிரிலிருப்பவரை எச்சிலைத் துப்பச் சொல்வது உண்டு. அத்தோடு சரி, அவர் களைப் பிடித்த திருஷ்டி தோஷம் நீங்குகிறது.

    வீட்டில் நச்சுக் கிருமிகளைக் கொண்ட கழிவறை, குளியலறை தீய சக்திகளின் இருப்பிடமாகக் கருதப்படுகிறது. இந்தக் கழிவறையின் கதவுகளை ஒரு போதும் திறந்து வைத்திருக்கக் கூடாது. மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டிய ஒரு அறை இது. ஆனால் பெரும்பாலானோரின் வீடுகளில் இதைக் கவனிப்பதே இல்லை. அவர்கள் அடையும் துன்பங்களுக்கெல்லாம் காரணம் இந்தக் கழிவறையிலிருந்து எழும் நெகடிவ் அல்லது தீய சக்தியே என்பதை அவர்கள் உணர்வதில்லை.

    இந்த நெகடிவ் எனர்ஜியை அல்லது தீய விளைவை நீக்க ஒவ்வொரு கழிவறையிலும் கல் உப்பை ஒரு கிண்ணம் நிறைய நிரப்பி அங்குள்ள ஜன்னல் விளிம்பில் அல்லது சவுகரியமான ஒரு இடத்தில் வைக்க வேண்டும். இந்த கல் உப்பு உடனடியாக நெகடிவ் எனர்ஜியை உறிஞ்ச ஆரம்பிக்கும். இதனால் வீட்டில் ஏற்படும் பலன்கள் அற்புதமாக இருக்கும். அது உடனே தெரியவும் ஆரம்பிக்கும்.

    உப்பு சொதசொதப்பாக ஆனாலோ அல்லது ஈரப்பதம் அதிகமாகி விட்டாலோ அதை அப்புறப்படுத்தி விட்டு புதியதாக கல் உப்பை நிரப்ப வேண்டும். சில வீடுகளில் கழிப்பறை வட கிழக்கு திசையில் அமைந்திருக்கக் கூடும்! வீட்டை இடிக்க முடியாது. இந்த அமைப்பு ஏற்படுத்தும் நெகடிவ் எனர்ஜியைப் போக்க ஒரு சிறிய பாத்திரத்தில் கல் உப்பைப் போட்டு அதை ஓரிடத்தில் அப்படியே வைக்க வேண்டியது தான். அதை அவ்வப்பொழுது மாற்றிக் கொண்டே இருந்தால் வீட்டின் பொருளாதார நிலை உள்ளிட்டவை அற்புதமாக மாறி உயர் நிலையை அடையமுடியும்.

    உலகம் கண்ட மிகப்பெரும் விஞ்ஞானிகளுள் ஒருவரான ராபர்ட் ஓப்பன்ஹீமரின் வாழ்க்கை வரலாற்றில் வரும் ஒரு செய்தி கண் திருஷ்டியைப் பற்றியது.
    “இந்துக்கள் உப்பை ஒரு சிறு பாத்திரத்தில் போட்டு இடது புறமும் வலது புறமும் தலையைச் சுற்றி திருஷ்டியைக் கழிக்கின்றனர். அப்போது லட்சக்கணக்கான நெகடிவ் ஐயான்கள் அவர்கள் உடம்பை விட்டு வெளியேற்றப்படுகின்றன.”

    எப்படி இப்படி திருஷ்டியைக் கழிக்கும் ஒரு அரிய பழக்கத்தை இந்துக்கள் கண்டு பிடித்தனர்? இது வியப்புக்குரிய ஒரு விஷயம்!

    வீட்டில் உள்ள நெகடிவ் எனர்ஜியை எப்படிப் போக்குவது? இதுவும் சுலபம் தான்!

    வீட்டைப் பெருக்கிய பின்னர் மெழுகும் போது அல்லது நீரால் துடைக்கும் போது பக்கெட்டில் உள்ள நீரில் சிறிது (சுத்தி கரிக்கப்படாத, அசல்) கல் உப்பைச் சேர்க்க வேண்டியது தான்! கல் உப்பைப் போட்டுக் கரைத்து வீட்டைத் துடைக்கும் போது தீய சக்திகள் எல்லாம் அகன்று ஓடி விடும். கிருமிகள், ஈக்கள் உள்ளிட்டவை வராது என்பது ஒரு புறம் இருக்க தீமைகள் விலகி நன்மைகள் பெருகும்.

    சுவர்க்க அதிர்ஷ்டம் என்று கூறப்படும் எர்த் (நிலம்) சக்தி வலிமையானதாக ஒரு வீட்டில் ஆக்கப்பட்டால் எல்லா நலங்களும் தானே வந்து சேரும். உறவுகள் மேம்படும். வீட்டில் அமைதி நிலவும். எல்லா குடும்ப உறுப்பினர்களும் அன்யோன்யமாக அன்புடன் பழகுவர்.

    இதற்கு நேச்சுரல் குவார்ட்ஸ் கிறிஸ்டலை ஹாலில் வைக்க வேண்டும். மங்கலாக அழுக்குடன் இருக்கும் கிறிஸ்டலைப் பயன்படுத்தவே கூடாது. பிரகாசமாக பளிச்சென்று இருக்கும் கிறிஸ் டல்கள் மட்டுமே பயன் தரும். சூரிய ஒளி இவற்றின் மீது பட்டவுடன் அற்புதமான ஆற்றல் பேரலையாக உருவாகி வீடு முழு வதும் பரவி ஒரு புத்துணர்ச்சியையும் எல்லையற்ற சாந்தியையும் தரும்.

    இன்னும் அதிக ஆற்றலைப் பெற விரும்புபவர்கள் ஏழு விதமான கிறிஸ்டல்களை தென் மேற்கு திசையில் வைக்க வேண்டும். சித்திர வேலைப்பாடுகளுடனான அழகிய அமைப்புகள் கொண்ட போர்செலெய்ன் அல்லது களிமண்ணால் ஆன பொருட்கள் கூட நெகடிவ் எனர்ஜியை எடுத்து எர்த் எனர்ஜி எனப்படும் நில ஆற்றலை மேம்படுத்தும். இவற்றினால் ஆன ஜாடிகளை அலங்காரமாக வரவேற்பறையில் வைக்கலாம்.

    திருஷ்டியைப் பற்றி இவ்வளவு விவரங்களை அறிந்த நீங்கள் எல்லோரிடமும் இதைப் பற்றி அறிவியல் ரீதியாக விளக்கினால், உங்கள் வீட்டார் உங்களுக்குத் திருஷ்டி சுற்றிப் போட வேண்டி வரும். திருஷ்டி பற்றிய உங்கள் அறிவைக் கண்டு உங்கள் மீது திருஷ்டி பட்டு விட்டால்?!

    என்ன இருந்தாலும் கண் திருஷ்டி பொல்லாதது தானே!
    Next Story
    ×