search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அதிசய பனிமாதா
    X
    அதிசய பனிமாதா

    தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலய திருவிழா 27-ந்தேதி தொடங்குகிறது

    நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்திருவிழா வருகிற 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
    நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்திருவிழா வருகிற 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி திருவிழா கொண்டாடப்படும் என கோவில் தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

    கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புண்ணிய ஸ்தலங்களில் சிறப்பு பெற்ற திருத்தலம் தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலயமாகும். இந்த ஆலயத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்ட் 4-ந்தேதி நிறைவு பெறுவது வழக்கம்.

    கொரோனாநோய் தொற்றை அடுத்து அரசு பொது முடக்கம் அறிவித்திருப்பதை அடுத்து திருவிழா கொண்டாட்டங்கள் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்படுகிறது.

    இதனைத்தொடர்ந்து வருகிற 27-ந்தேதி காலை 5.15 மணிக்கு அருட்தந்தை ஒய்.தேவராஜன் அடிகளார் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு புனித கொடியேற்றம் நடைபெறுகிறது.

    மாதா சொரூபம் பொறிக்கப்பட்ட புனித கொடியை அருட் தந்தையர்கள் ஜெபம் செய்து அர்ச்சித்த பின்னர் தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் கொடியேற்றுகிறார்.

    அதனைத் தொடர்ந்து நற்கருணை ஆசீர்வாதம் நடைபெறுகிறது. தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை திரியாத்திரை திருப்பலியும், மாலை மறையுரையும் நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறுகிறது.

    ஆகஸ்டு 2-ந்தேதி 7-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை பரிசுத்த அதிசய பனிமாதா காட்சி கொடுத்த மலையில் அருட் தந்தை விஜயன் தலைமையில் திரியாத்திரை திருப்பலி நடைபெறுகிறது.

    மாலை 6.30 மணிக்கு பாளை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடைபெறுகிறது. 3-ந்தேதி 8-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை 7.30 மணிக்கு வடக்கன்குளம் மறைவட்ட முதன்மை குருவானவர் பிரிட்டோ அடிகளார் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது.

    இத்திருப்பலியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புது நன்மை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நற்கருணைப் பவனியும் அதனைத் தொடர்ந்து நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது.

    ஆகஸ்டு 4-ந்தேதி 9-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை 5.15 மணிக்கு அருட்தந்தை ஜார்ஜ் அந்தோணி தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு சாத்தான்குளம் மறைவட்ட முதன்மை குருவானவர் ரவிபாலன் தலைமையில் மாலை ஆராதனை நடைபெறுகிறது.

    இரவு 10.30 மணிக்கு மலையாளத்திருப்பலியும் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு அதிசய பனிமாதா அன்னையின் அலங்காரத் தேர்ப்பவனியும் நடைபெறுகிறது.

    ஆகஸ்டு 5-ந்தேதி 10-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை 5.15 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குருவானவர் பன்னீர் செல்வம் தலைமையில் கூட்டுத்திருப்பலியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    7-ந்தேதி முதல் சனி சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் தலைமையில் பங்கு தந்தை ஜெரால்டு ரவி, உதவி பங்கு தந்தை ஜார்ஜ் அந்தோணி மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×