
இந்த காலத்தில் அனைவரும் நற்சிந்தனை, நல் ஒழுக்கம், நற்பண்பு, அடுத்தவர்களுக்கு உதவும் நோக்கத்தோடும் பகைமையை போக்கி நல் உறவு வைத்துக்கொள்ளுதல் மற்றும் புலால் உண்ணாமலும் இருந்து 40 நாட்கள் உபவாசம் இருந்து தவக்காலம் கடைபிடிக்கப்படும். இதனால் அவர்கள் வாழ்க்கையில் நல்ல நிகழ்வு தொடர்ந்து நடைபெறும். உடல் ஆரோக்கியம் பெறும் என கருதப்படுகிறது. இந்த தவக்காலம் நேற்று தொடங்கியது. இந்த புனித நாள் சாம்பல் புதன் என்று அழைக்கப்படுகிறது.
சாம்பல் புதனையொட்டி நேற்று நாகை பகுதியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலிகள் நடந்தன. இதன் ஒரு பகுதியாக வேளாங்கண்ணி பேராலயத்தில் காலை 6 மணிக்கு உதவி பங்குத்தந்தை டேவிட் தன்ராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.
திருப்பலியின் போது கடந்த ஆண்டு குருத்தோலை பவனியின்போது பயன்படுத்தப்பட்ட குருத்தோலைகளை எரித்து உருவாக்கப்பட்ட சாம்பலை கிறிஸ்தவர்களின் நெற்றியில் சிலுவைபோல் பூசி ஆசீர்வாதம் செய்வது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா தொற்று பரவுவதால் சாம்பலை தலையில் தெளித்தும், கையில் வழங்கியும் ஆசிர்வாதம் செய்தனர். அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் திருப்பலி நடந்தது.
இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு நற்கருணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கிறிஸ்தவர்களுக்கு நற்கருணையை நாக்கில் வழங்குவது வழக்கம். ஆனால் கொரோனா தொற்று காரணமாக கையில் வழங்கப்பட்டது.