search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாகர்கோவில் கார்மல்நகர் திருக்குடும்ப ஆலய திருவிழா கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.
    X
    நாகர்கோவில் கார்மல்நகர் திருக்குடும்ப ஆலய திருவிழா கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

    நாகர்கோவில் பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    நாகர்கோவில கார்மல்நகர் பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர்.
    நாகர்கோவில் ராமன்புதூர் கார்மல்நகரில் அமைந்துள்ளது பரிசுத்த திருக்குடும்ப ஆலயம். இந்த ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி ேநற்று காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை நடந்தது. இரவு 7.45 மணிக்கு ஆலய வளாகத்தில் நடந்த கொடியேற்றம் நிகழ்ச்சிக்கு கோட்டார் வட்டார முதன்மை அருட்பணியாளர் மைக்கேல் ஏஞ்சலூஸ் தலைமை தாங்கினார்.

    ஊர்தலைவர் ஆல்பர் மதியரசு கொடியை ஏற்றி வைத்தார். அப்போது செயலாளர் ஜூலியன், பொருளாளர் ஜோசப் ஆன்றனி, நண்பர்கள் நல சங்க தலைவர் ஜெரோம் ஜெயகுமார் உள்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். தொடர்ந்து திருப்பலி நடந்தது. கன்னியாகுமரி கிளாரட் சபை அருட்பணியாளர் தனிஸ்லாஸ் மறையரையாற்றினார். விழாவை முன்னிட்டு ஆலயம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. கொடியேற்ற நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர்.

    விழா வருகிற 27-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இன்று (சனிக்கிழமை) காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை நடக்கிறது. தொடர்ந்து பி‌‌ஷப் பீட்டர் ரெமிஜியூஸ், சி.பி.எஸ்.இ. பள்ளி தாளாளர் அருட்பணியாளர் கிரேஸ் குணபால் தலைமையில் திருப்பலி நடக்கிறது. தேவசகாயம் மவுண்ட் பங்குத்தந்தை பிரைட் மறையுரையாற்றுகிறார்.

    விழா நாட்களில் காலை, மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி நடக்கிறது. 26-ந் தேதியன்று இரவு 9 மணிக்கு தேர்பவனி நடக்கிறது.

    விழாவின் கடைசி நாளான 27-ந் தேதியன்று காலை 6.30 மணிக்கு திருக்குடும்ப திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார்.

    மதியம் 2 மணி, மாலை 6 மணிக்கு தேர்பவனி நடக்கிறது. தொடர்ந்து பணவிளை இணைபங்குத்தந்தை ராபின் தலைமையில் கொடியிறக்கம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை சகாய பிரபு வழிகாட்டுதலின்பேரில் ஊர்நிர்வாகிகள், பங்கு இறைமக்கள் உள்பட பலரும் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×