search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்துக்கு பாதயாத்திரையாக வந்த வெளியூர் பக்தர்களை படத்தில் காணலாம்.
    X
    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்துக்கு பாதயாத்திரையாக வந்த வெளியூர் பக்தர்களை படத்தில் காணலாம்.

    வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வெளியூர் பக்தர்கள் வருகை அதிகரிப்பு

    வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வெளியூர் பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது. பேராலயத்தில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் மாதாவை தரிசனம் செய்தனர்.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தளமாகவும் இந்த பேராலயம் திகழ்கிறது. பல்வேறு சிறப்புகளை பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள்ஆண்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 29 -ந் தேதி தொடங்கி இந்த மாதம் 8-ந் தேதி வரை நடந்தது.

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு விழாவில் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. வேளாங்கண்ணிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பக்தர்கள் மட்டும் காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இதனால் வேளாங்கண்ணி பகுதியில் உள்ள பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பேராலய விழாவில் கலந்து கொண்டனர். கடந்த 8-ந் தேதி கொடி இறக்கத்துடன் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய விழா நிறைவடைந்தது.

    இதைத்தொடர்ந்து வேளாங்கண்ணிக்கு வெளியூர், வெளிமாநில பக்தர்கள் வந்து வழிபட பேராலய நிர்வாகம் அனுமதி அளித்தது. இதனால் வெளிமாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக வர தொடங்கி உள்ளனர். இதனால் வேளாங்கண்ணி பகுதியில் வெளியூர் பக்தர்களின் எண்ணிக்கை உயர தொடங்கி உள்ளது.

    கைகளை கிருமி நாசினியால் சுத்தம் செய்த பிறகே வெளியூர் பக்தர்கள் பேராலயத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். பேராலயத்தில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து தரிசனம் செய்தனர். வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் பேராலய நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.
    Next Story
    ×