search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பேராலயத்தின் முன்பு உள்ள கொடி மர உச்சியில் கொடி பறப்பதை படத்தில் காணலாம்.
    X
    விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பேராலயத்தின் முன்பு உள்ள கொடி மர உச்சியில் கொடி பறப்பதை படத்தில் காணலாம்.

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா தொடங்கியது

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின்முக்கிய நிகழ்வான பெரிய தேர் பவனி வருகிற 7-ந் தேதி(சனிக்கிழமை) நடக்கிறது.
    நாகை மாவட்டத்தில் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் வேளாங்கண்ணி திகழ்கிறது. கீழை நாடுகளில் “லூர்து நகர்“ என்ற பெருமையுடன் அன்னை மரியாவின் புகழ் பரப்பும் புண்ணிய தலமாகவும் வேளாங்கண்ணி விளங்குகிறது. கிறிஸ்தவ ஆலயத்துக்கு மிக அரிதாக கிடைக்ககூடிய பசிலிக்கா என்ற பெருமை மிகு பிரம்மாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள 5 கிறிஸ்தவ பேராலயங்களில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயமும் ஒன்றாகும்.

    புயலில் சிக்கிய போர்த்துக்கீசியர்களை வேளாங்கண்ணியில் பத்திரமாக கரைசேர்த்த அன்னை மரியாவிற்கு நன்றிக்கடனாக கட்டப்பட்ட ஆலயமாக இந்த ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் எதிர்புறத்தில் வங்க கடல் அமைந்திருப்பது ஆலயத்துக்கு மேலும் அழகூட்டும் காட்சி ஆகும்.

    வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாள் செப்டம்பர் 8-ந் தேதி ஆகும். இதையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் மாதாவின் பிறந்தநாள் 10 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக அன்னை ஆரோக்கிய மாதாவின் தேர் பவனி நடந்தது. அப்போது பெண்கள் தேரை தூக்கி ஊர்வலமாக எடுத்து சென்றனர். அதைத்தொடர்ந்து மாதா உருவம் பொறித்த வண்ண கொடி பேராலய முகப்பில் இருந்து மாலை 6 மணிக்கு ஊர்வலமாக பேராலயம் அருகில் உள்ள கொடி கம்பத்துக்கு கொண்டு வரப்பட்டது.

    திருவிழாவையொட்டி மாதா சொரூபம் வைக்கப்பட்ட தேரை பக்தர்கள் சுமந்து சென்ற காட்சி.

    பின்னர் பேராலயத்தின் வடக்கு புறத்தில் அமைக்கப்பட்டிருந்த 90 அடி உயர கொடி கம்பத்தில் 6.30 மணிக்கு கொடியேற்றப்பட்டது. அப்போது பேராலயத்தில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார மின் விளக்குகள் அனைத்தும் எரிய விடப்பட்டன.

    அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து “மரியே வாழ்க“ என கோஷங்கள் எழுப்பினர். வண்ண பலூன்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை நடந்தது. விழாவில் தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி வருகிற 7-ந் தேதி(சனிக்கிழமை) இரவு 7.30 மணியளவில் நடக்கிறது. மறுநாள் 8-ந் தேதி அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காலை 6 மணிக்கு சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.

    மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து பேராலய கீழ்க்கோவிலில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீரும், தமிழில் திருப்பலியும் நிறைவேற்றப்படுகிறது.
    Next Story
    ×