search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்ட காட்சி.
    X
    சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்ட காட்சி.

    கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை: திரளானவர்கள் பங்கேற்பு

    அனைத்து நாட்களிலும் வழிபாட்டுத்தலங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் நேற்று கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.
    தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதன் காரணமாக கோவை மாவட்டத்தில் கடந்த 15-ந் தேதி முதல் கோவில்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டன.

    விஜயதசமி தினத்தன்று கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தா்கள் மகிழ்ச்சியுடன் சுவாமி தரிசனம் செய்தனா்.

    இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோவையில் உள்ள டவுன்ஹால் புனித மைக்கேல் ஆலயம், நஞ்சப்பா ரோடு கிறிஸ்து அரசர் ஆலயம், புலியகுளம் புனித அந்தோணியார் ஆலயம், காந்திபுரம் புனித பாத்திமா ஆலயம், திருச்சி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயம், ரேஸ்கோர்ஸ் ஆல்சோல்ஸ் ஆலயம் உள்பட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    இந்த சிறப்பு பிரார்த்தனையில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து அமர்ந்து இருந்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

    முன்னதாக ஆலயங்களுக்கு வந்தவர்களிடம் நுழைவு வாயிலில் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு கிருமிநாசினி வழங்கப்பட்டது. மேலும் முகக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

    நீண்ட நாட்களுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமையில் நடந்த பிரார்த்தனைக்கு சென்றது மன நிம்மதியாக இருப்பதாக கிறிஸ்தவர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×