search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலய திருவிழா கொடியேற்றம்
    X
    வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலய திருவிழா கொடியேற்றம்

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலய திருவிழா கொடியேற்றம் பக்தர்கள் இன்றி நடந்தது

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலய திருவிழா கொடியேற்றம் பக்தர்கள் இன்றி நடந்தது. கொடியேற்றம் நிகழ்ச்சி பேராலய இணையதளம் மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கியமாதா பேராலயம், இந்தியாவில் உள்ள கத்தோலிக்க பேராலயங்களில் பிரசித்தி பெற்றதாகும். வங்க கடலோரம் பிரமாண்ட கட்டிட கலை அம்சத்துடன் காட்சி அளிக்கும் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் வருவார்கள்.

    இங்கு ஆண்டுதோறும் ஆரோக்கியமாதாவின் பிறந்த நாளையொட்டி 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மாதா உருவம் பொறிக்கப்பட்ட கொடி 4.30 மணியளவில் பேராலயத்தை சுற்றி எடுத்து வரப்பட்டது.

    அதைத்தொடர்ந்து பேராலயத்தின் வடக்கு புறத்தில் உள்ள கொடிக்கம்பம் முன்பு தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் கொடியை புனிதம் செய்தார். இதையடுத்து 5 மணி அளவில் கொடியேற்றப்பட்டது. அப்போது பேராலய அலங்கார மின் விளக்குகள் ஒளிர விடப்பட்டன. இதையடுத்து ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் தமிழில் திருப்பலி நடந்தது.

    கொரோனா காரணமாக வேளாங்கண்ணி பேராலய திருவிழாவுக்கு பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று திருவிழா கொடியேற்றம் பக்தர்கள் இன்றியே நடந்தது. வழக்கமாக கொடியேற்றம் என்றாலே வேளாங்கண்ணி நகரம் பக்தர்கள் நடமாட்டத்துடன் உற்சாகமாக காட்சி அளிக்கும். ஆனால் நேற்று வேளாங்கண்ணி கடைத்தெரு, கடற்கரை உள்ளிட்ட பகுதிகள் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    வேளாங்கண்ணி பகுதிக்குள் போலீசார் வெளியூர் நபர்களை அனுமதிக்கவில்லை. கொடியேற்றம் நிகழ்ச்சி பேராலய இணையதளம் மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. கொடியேற்று நிகழ்ச்சியில் பேராலய அதிபர் பிரபாகர், பங்குத்தந்தை சூசைமாணிக்கம், பொருளாளர் யாகப்பா ராஜரத்தினம், உதவி பங்குத்தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆன்டோ ஜேசுராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம், தாசில்தார் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து நடைபெறும் விழாவில் மராத்தி, கொங்கணி, மலையாளம், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    அடுத்த மாதம்(செப்டம்பர்) 7-ந் தேதி(திங்கட்கிழமை) ஆரோக்கியமாதா பெரிய தேர்பவனி நடக்கிறது. மறுநாள் 8-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) ஆரோக்கிய அன்னை பிறந்த நாளை முன்னிட்டு காலை 6 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் ஆண்டு திருவிழா சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படும்.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு கொடி இறக்க நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் பேராலயத்தில் மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசீர், நன்றி அறிவிப்பு நடத்தப்பட்டு, தமிழில் திருப்பலி நிறைவேற்றப்பட உள்ளது.
    Next Story
    ×