search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சூரக்குடிப்பட்டியில் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய தேர்பவனி
    X

    சூரக்குடிப்பட்டியில் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய தேர்பவனி

    மணிகண்டம் அருகே சூரக்குடிப்பட்டியில் உள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நடைபெற்றது.
    மணிகண்டம் அருகே சூரக்குடிப்பட்டியில் உள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கடந்த மாதம் 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஆலயத்தின் முன்புள்ள கொடிமரத்தில் நாகமங்கலம் பங்குத்தந்தை அல்போன்ஸ்ராஜ் பிரபு கொடியேற்றி வைத்து திருப்பலி நடத்தினார்.

    இதைத்தொடர்ந்து ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் மாலை அருட்தந்தையர்கள் மறையுரை மற்றும் திருப்பலியாற்றினார்கள். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதை முன்னிட்டு இரவில் ஆலயத்தில் பங்குத்தந்தை அல்போன்ஸ்ராஜ் பிரபு தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டுத்திருப்பலி நடந்தது. நள்ளிரவில் வண்ண மின் விளக்குகள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களின் பவனி நடந்தது.

    முதல் தேரில் உயிர்த்த ஏசு ஆண்டவரும், 2-வது தேரில் அந்தோணியாரும், 3-வது தேரில் மிக்கேல் அதிதூதரும் எழுந்தருளினர். பின்னர் வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க தேர்கள் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து, மீண்டும் நிலையை அடைந்தன.

    இதில் நாகமங்கலம், மணிகண்டம், பாத்திமா நகர், யாகப்புடையான்பட்டி, ஆவூர், குன்னத்தூர் உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சூரக்குடிப்பட்டி, கிறிஸ்தவர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் மணிகண்டம் போலீசார் ஈடுபட்டனர்.
    Next Story
    ×