தென்பாண்டி நாட்டில் ராமானுஜர்

ஆழ்வார் திருநகரியைத் திருக்குருகூர் என்றும் குருகை என்றும் அழைப்பதுண்டு. இந்த ஊரிலுள்ள புளிய மரத்தையும் ராமானுஜர் தரிசித்தார்.
தென்பாண்டி நாட்டில் ராமானுஜர்
Published on

ராமானுஜர் சோழ நாட்டிலிருந்த திருப்பதிகளைத் தரிசித்து விட்டுப் பாண்டிய நாடு சேர்ந்தார்.

இங்கே பாடல்பெற்ற ஸ்தங்கள் பதினெட்டு உள்ளன.

திருமாலிருஞ்சோலை, திருப்புல்லணி, ஸ்ரீ வில்லிப்புத்தூர் போன்ற திவ்விய தேசங்களைத் தரிசித்துவிட்டு, தென்பாண்டி நாட்டிலுள்ள நவ திருப்பதிகளில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானைச் சேவிக்கச் சென்றார்.

'பொருநல்' என்று சொல்லப்படும் தாம்பிரபருணி ஆற்றங்கரையை நோக்கி ராமானுஜர் கோஷ்டி புறப்பட்டுப்போயிற்று.

இவர்கள் சென்ற இடமெல்லாம் வைணவப்பிரசாரம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

எளிய மக்கள், குறிப்பாகக் கீழ்த்தட்ட மக்கள் ஆயிரக்கணக்கில் வைணவத்தைத் தழுவினார்கள்.

இவர்கள் நடந்த இடமெல்லாம் நாரணன் புகழ் படர்ந்த இடமாக மாறியது.

நிலவளமும் நீர் வளமும் செழித்திருந்த நவதிருப்பதிப் பிரதேசத்தை யாத்திரை கோஷ்டி அடைந்தது.

பக்தி மணம் கமழும் ஆழ்வார் திருநகரி கண்களுக்குத் தெரிந்தது. அதை பார்த்துப் பார்த்துப் பரவசமானார் ராமானுஜர்.

அவருடைய உணர்ச்சிப்பெருக்கு ஒரு பாட்டாகப் பரிணமித்தது.

இதுவோ திருநகரி, ஈதோ பொருநல், இதுவோ பரமபதத்து எல்லை! இதுவோதான்

வேதம் தமிழ் செய்து மெய்ப்பொருட்கு முப்பொருளால் ஓதும் சடகோபன் ஊர்?

ஆழ்வார் திருநகரியைத் திருக்குருகூர் என்றும் குருகை என்றும் அழைப்பதுண்டு.

இந்த ஊரிலுள்ள புளிய மரத்தையும் ராமானுஜர் தரிசித்தார்.

இந்தப்புளிய மரத்தின் அடியில் தான் நம்மாழ்வார் பதினாறு ஆண்டுகள் யோகத்தில் மூழ்கியிருந்ததாகவும், திருவாய் மொழி அரும்பியது இங்குதானென்றும் நம்பப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com