search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டிஎன்பிஎல் கிரிக்கெட்:  7 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அபார வெற்றி
    X

    சேப்பாக் அணி வீரர்கள் 

    டிஎன்பிஎல் கிரிக்கெட்: 7 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அபார வெற்றி

    • முதலில் விளையாடிய சேலம் அணி 113 ரன்கள் எடுத்தது.
    • சேப்பாக் வீரர் சித்தார்த் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

    6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நெல்லையில் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. நெல்லை, திண்டுக்கல், கோவை ஆகிய இடங்களில் மொத்தம் 21 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் இன்று தொடங்கின.

    சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடைபெற்ற 22-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சேப்பாக் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய சேலம் அணியின் தொடக்க வீரர் கோபிநாத் அதிகபட்சமாக 42 ரன்கள் குவித்தார்.

    அபிஷேக் 23 ரன்களும், முருகன் அஸ்வின் 14 ரன்களும் அடித்து களத்தில் இருந்தனர். சேலம் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்தது. சேப்பாக் வீரர் சித்தார்த் அதிகபட்சமாக 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

    இதையடுத்து 114 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சேப்பாக் அணி களம் இறங்கியது. அந்த அணி கேப்டன் கவுசிக் காந்தி, ஜெகதீசன் ஜோடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜெகதீசன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து விளையாடிய காந்தி 46 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

    சசிதேவ் ஒரு ரன்னுடன் வெளியேற, அதிரடியாக விளையாடிய சோனு யாதவ் 7 பந்துகளில் 26 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். சேப்பாக் அணி 14.5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் அடித்தது. இதையடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணி அபார வெற்றி பெற்றது.

    Next Story
    ×