search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    சென்னையில் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம்: இந்திய அணியின் வெற்றியை கொண்டாட தயாராகிறார்கள்

    • மெரினா, பெசன்ட் நகரில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
    • இந்திய அணியின் வெற்றிக்காக ரசிகர்கள் சிறப்பு பூஜைகளையும் செய்து வருகிறார்கள்.

    சென்னை:

    உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி கோப்பையை வெல்லுமா? என்று ஒட்டுமொத்த இந்திய மக்களின் இதய துடிப்பும் எகிறிக்கொண்டே இருக்கிறது. அனைத்து ஆட்டங்களிலும் அபார வெற்றியை பெற்று இந்த உலக கோப்பை போட்டியில் அசைக்க முடியாத அணியாக திகழும் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டியில் கோப்பையை வென்றே தீர வேண்டும் என்கிற வைராக்கியத்தோடு களம் இறங்குகிறது.

    இந்திய அணியின் வெற்றியை கொண்டாட நாடு முழுவதும் மக்கள் தயாராகி வருகிறார்கள். சென்னையிலும் கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் கண்டுகளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் பெரிய திரை அமைக்கப்பட்டு ரசிகர்கள் போட்டியை காண்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மெரினாவில் விவேகானந்தர் இல்லம் அருகே 38 அடி அகலம், 18 அடி உயரம் கொண்ட பெரிய திரை அமைக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு முன்பாக நடைபெறும் லேசர் ஷோ, விமான சாகசம் நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்புவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்திய அணியின் ஆட்டத்தை காண்பதற்கும், வெற்றியை கொண்டாடுவதற்கும் பட்டாசு மற்றும் இனிப்புகளுடன் மெரினாவில் ரசிகர்கள் திரள்கின்றனர். பெண் ரசிகர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. நடமாடும் கழிவறை வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. குடிநீர் வசதியும் செய்யப்பட்டிருந்தது.

    இதேபோன்று பெசன்ட் நகர் கடற்கரையிலும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்கும் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தோடு திரண்டிருந்தனர். இதுதவிர சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பண்ணை வீடுகளிலும் கிரிக்கெட் போட்டியை காண ரசிகர்கள் திரண்டிருந்தனர். போட்டி முடிந்த பின்னர் ரசிகர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதை மனதில் வைத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    மெரினா, பெசன்ட் நகரில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்திய அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றிவிட்டால் அந்த வெற்றியை இன்னொரு தீபாவளியாகவே விடிய விடிய பட்டாசு வெடித்து கொண்டாட திட்டமிட்டிருப்பதாக வெறித்தனமாக ரசிகர் ஒருவர் தெரிவித்தார்.

    இப்படி நாடு முழுவதும் அதிகரித்துள்ள கிரிக்கெட் ஜூரம் சென்னை போன்ற பெருநகரங்களில் அதிகமாகவே காணப்பட்டது. இந்திய அணியின் வெற்றிக்காக ரசிகர்கள் சிறப்பு பூஜைகளையும் செய்து வருகிறார்கள். இந்திய அணி கோப்பையை வென்று இந்திய மக்களின் மனதையும் வெல்ல வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுதலாக உள்ளது.

    Next Story
    ×