search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    தென்ஆப்பிரிக்க பந்து வீச்சை வீழ்த்தும் திட்டம் பலித்தது- வெற்றி குறித்து தவான் கருத்து
    X

    தென்ஆப்பிரிக்க பந்து வீச்சை வீழ்த்தும் திட்டம் பலித்தது- வெற்றி குறித்து தவான் கருத்து

    • டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த தென் ஆப்பிரிக்க கேப்டன் கேசவ் மகராஜூக்கு நன்றியை தெரிவிக்கிறேன்.
    • பனிபொழிவு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கவில்லை என கேசவ் மகராஜூ கூறினார்.

    ராஞ்சி:

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.

    ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 278 ரன் எடுத்தது. இதனால் இந்தியாவுக்கு 279 ரன் இலக்காக இருந்தது.

    மார்க்ராம் 79 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்), ஹென்ட்ரிக்ஸ் 74 ரன்னும் (9 பவுண்டரி, 1 சிக்சர்), டேவிட் மில்லர் 35 ரன்னும் (4 பவுண்டரி) எடுத்தனர். முகமது சிராஜ் 3 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, குல்தீப் யாதவ், ஷர்துல் தாகூர் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் விளையாடிய இந்திய அணி 279 ரன் இலக்கை 25 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் எளிதில் எடுத்தது. இந்தியா 45.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 282 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ஸ்ரேயாஸ் அய்யர் சதம் அடித்தார். அவர் 111 பந்துகளில் 15 பவுண்டரியுடன் 113 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இஷான் கிஷன் 84 பந்துகளில் 4 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 93 ரன் எடுத்தார்.

    இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 161 ரன் எடுத்தது ஆட்டத்தின் முக்கிய அம்சமாகும். சஞ்சு சாம்சன் 1 பவுண்டரி, 1 சிக்சருடன் 30 ரன் (அவுட் இல்லை) எடுத்தார்.

    வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் கூறியதாவது:-

    பந்து ஆடுவதற்கு ஏற்ற வகையில் நன்றாக வந்தது. ஆனால் அதே நேரத்தில் அது அளவை விட மிக குறைவாகவே இருந்தது. இதனால் முதல் 10 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர்களை வீழ்த்துவதே எங்கள் திட்டமாக இருந்தது. இந்த திட்டம் பலித்தது.

    சரியான நேரத்தில் பனிபொழிவு ஏற்பட்டது. இது பேட்டிங்குக்கு ஏற்றதாக இருந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த தென் ஆப்பிரிக்க கேப்டன் கேசவ் மகராஜூக்கு நன்றியை தெரிவிக்கிறேன். இதனால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.

    இஷான் கிஷனும், ஸ்ரேயாஸ் அய்யரும் அபாரமாக பேட்டிங் செய்தனர். இருவரும் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கியவிதம் பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர்.அறிமுக வீரர் ஷபாஸ் முதல் 10 ஓவர்களில் நேர்த்தியாக வீசி திருப்பு முனையை ஏற்படுத்தியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    தோல்வி குறித்து தென் ஆப்பிரிக்க தற்காலிக கேப்டன் கேசவ் மகராஜ் கூறும் போது, பனிபொழிவு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை.அதனால் 'டாஸ்' வென்ற பிறகு பேட்டிங்கை தேர்வு செய்தோம். ஆனால் ஸ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பனியின் தாக்கத்தால் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக மாறி விட்டது என்றார்.

    இந்த வெற்றி மூலம் முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இந்திய அணி பழி தீர்த்துக் கொண்டது. லக்னோவில் நடந்த முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 9 ரன்னில் வெற்றி பெற்று இருந்தது.

    3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி டெல்லியில் நாளை நடக்கிறது.

    Next Story
    ×