search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    4வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி - நியூசிலாந்துக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து
    X

    4வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி - நியூசிலாந்துக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

    • 4வது ஒருநாள் போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது.
    • நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியது.

    லண்டன்:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்று விளையாடியது. முதல் 3 ஆட்டங்களில் இங்கிலாந்து அணி 2 வெற்றிகளும் நியூசிலாந்து 1 வெற்றியும் பெற்றிருந்தன.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 311 ரன்கள் சேர்த்தது. டேவிட் மலான் சிறப்பாக ஆடி சதம் விளாசினார். அவர் 127 ரன்களில் அவுட்டானார். ஜோஸ் பட்லர் 36 ரன்னும், ஜோ ரூட் 29 ரன்னும், ஜோ ரூட் 29 ரன்னும், லிவிங்ஸ்டோன் 28 ரன்னும் எடுத்தனர்.

    நியூசிலாந்து சார்பில் ரச்சின் ரவிச்சந்திரா 4 விக்கெட்டும், டேரில் மிட்செல், மேட் ஹென்றி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதையடுத்து, 312 என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் ரச்சின் ரவிச்சந்திரா சற்று நிலைத்து நின்று ஆடி அரைசதம் கடந்தார். அவர் 61 ரன்னிலும், ஹென்றி நிக்கோல்ஸ் 41 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், நியூசிலாந்து அணி 38.2 ஓவரில் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

    ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது டேவிட் மலானுக்கு வழங்கப்பட்டது. ஏற்கனவே நடந்து முடிந்த டி20 தொடர் 2-2 என சமனில் முடிந்தது நினைவிருக்கலாம்.

    Next Story
    ×