என் மலர்tooltip icon

    தரவரிசை

    பார்னே படங்களின் வரிசையில் ஐந்தாவதாக வெளிவந்திருக்கும் படம் ‘ஜேசன் பார்னே’. இப்படம் எப்படியிருக்கிறது என்பதை பார்ப்போம்...
    அம்னீசியாவால் பாதிக்கப்பட்ட பார்னே, தான் யாரொன்றே தெரியாமல் வாழ்ந்து வருகிறார். சட்டத்திற்கு புறம்பாக சண்டை போட்டு, அதன்மூலம் வரும் வருமானத்தில் வாழ்ந்து வருகிறார் பார்னே. இந்நிலையில், நிக்கி பார்சன் என்பவள் சிஐஏ-வின் மெயின் சர்வரை ஹேக் செய்துவிடுகிறாள். அப்போது, சிஐஏ-வில் பணிபுரிந்த பார்னேயின் அப்பாவின் இறப்பு பற்றிய ரகசிய தகவல்கள் அவளுக்கு கிடைக்கிறது.

    அதை ஒப்படைப்பதற்காக பார்னேவை சந்திக்க செல்கிறாள். அப்போது அவளை பின்தொடரும் எதிரிக்கூட்டம் அவளை சுட்டு வீழ்த்துகிறது. அவள் இறப்பதற்கு முன்பாக பார்னேவிடம், ஒரு ரகசிய சாவி ஒன்றை கொடுத்துவிட்டு இறக்கிறாள். அதன்மூலம், பார்னே தனது அப்பாவின் சாவுக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து பழி வாங்கினாரா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.

    ஜேசன் பார்னே படங்களின் பிரதானமே வேகமாக நகரும் திரைக்கதையும், திரில்லரும்தான். ஆனால், இந்த படத்தில் அதெல்லாம் இல்லாதது ரசிகர்களுக்கு ஏமோற்றமே. பார்னேவாக நடித்திருக்கும் மேட் டேம்னுக்கு வசனங்கள் குறைவுதான். ஆனால், அதற்கு மாறாக அலிசியா விக்கேண்டர் படம் முழுக்க பேசிக்கொண்டே வருகிறார்.

    சிஐஏ தலைமை அதிகாரியாக வரும் டாமி லீயு, கொலைகாரனாக வரும் வின்சென்ட்டும் ஜேசன் பார்னேவை கொல்வதற்காக முயற்சிக்கிறார்கள். ஆனால், பார்னேவை யாராலும் அழிக்கமுடியாது என்பதை முந்தைய பாகங்கள் கொடுத்துவிட்டதால், அடுத்தடுத்து எதிர்பார்க்கும்படியான காட்சிகளே வருவதால் ரசிக்க முடியவில்லை.

    படத்திற்கு மிகப்பெரிய பலம் சண்டைக்காட்சிகள்தான். கிரீஸில் நடக்கும் கலவரத்தின் நடுவில் பார்னேவை தேடும் வில்லன்களின் 20 நிமிட சேசிங் காட்சிகள் அதிரடியாக இருக்கிறது. தொடர்ந்து படமாக்கும் கேமராவும், கச்சிதமான எடிட்டிங்கும் அந்த காட்சிக்கு வலு சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘ஜேசன் பார்னே’ அதிரடி குறைவு.
    மோகன்லால்-கௌதமி நடிப்பில் வெளிவந்துள்ள ‘நமது’ படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்...
    சூப்பர் மார்க்கெட்டில் சூப்பர்வைசராக வேலை செய்கிறார் மோகன்லால். இவரது மனைவி கௌதமி, இல்லத்தரசி. இவர்களது மகன் விஷ்வாந்த் கல்லூரியிலும், மகள் ரைனா ராவ் பள்ளியிலும் படிக்கிறார்கள். இந்த நான்கு கதாபாத்திரங்களுக்கும் தனித்தனியாக ஒவ்வொரு கதைகள் இருக்கின்றன. தனித்தனியாக பயணிக்கும் இந்த 4 கதைகளும் ஒரு நேர்க்கோட்டில் முடிவதுதான் ‘நமது’ படம்.

    சூப்பர் மார்க்கெட்டில் சூப்பர்வைசராக இருந்துகொண்டு, புரோமோஷன் கிடைப்பதற்காக படும்பாட்டை மோகன்லால் இந்த படத்தில் தத்ரூபமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக அவர் பொருந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால், டப்பிங்கில் மோகன்லாலின் முந்தைய படங்களைவிட இந்த படத்தில் நிறைய மலையாள சாயல் இருக்கிறது.

    மளிகை சாமான் வாங்குவதில் 100 ரூபாய் மிச்சம் பிடிக்க ரூ.500 செலவழிக்கும் அளவுக்கு ரொம்பவும் அப்பாவித்தனமான குடும்ப பெண்ணாக நடித்திருக்கும் கௌதமி, இப்படத்தில் தனக்கு கிடைத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். நடுத்தர வர்க்கத்து பெண்ணாக நடித்திருந்தாலும், இவரது உடையில் மேல் வர்க்கத்து சாயல் இருப்பது நெருடலாக இருக்கிறது.

    கௌதமியின் தோழியாக வரும் ஊர்வசியின் குழந்தைத்தனமான நடிப்பு ரசிக்க வைக்கிறது. மோகன்லால்-கௌதமி ஆகியோரின் குழந்தைகளாக வரும் விஷ்வாந்த், ரைனா ராவின் நடிப்பும் ரசிக்கும்படியாக இருக்கிறது.

    இயக்குனர் சந்திரசேகர் ஏலட்டி நான்கு விதமான கதைகளை இப்படத்தில் சொல்லியிருக்கிறார். இதில் மோகன்லால் சம்பந்தப்பட்ட கதையை மட்டும் விறுவிறுப்பாக கூறியவர், மற்ற மூன்று பேரின் கதையையும் அந்த அளவிற்கு சொல்ல தவறிவிட்டார். மிகவும் மெதுவாக நகரும் திரைக்கதை படத்திற்கு பெரிய பலவீனமாக இருக்கிறது. ஆனால், நான்கு கதைகளும் ஒரே புள்ளியில் சந்திக்கும் கிளைமாக்ஸ் சூப்பர். அதேபோல், பொழுதுபோக்குக்கான எந்த அம்சமும் இந்த படத்தில் இல்லை. விறுவிறுப்புடன் கூடிய காட்சிப்படுத்துதல் இல்லாதது படத்தை ரசிக்க முடியாமல் சோர்வடைய வைக்கிறது. வசனங்கள் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.

    மகேஷ் சங்கரின் இசை படத்தில் பெரிதாக எடுபடவில்லை. பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி கதையின் ஓட்டத்திற்கு தடை போடும் விதமாகவே இருக்கிறது. ராகுல் ஸ்ரீவத்சவ்வின் ஒளிப்பதிவு காட்சிகளை கலர்புல்லாக காட்டியிருக்கிறது.

    மொத்தத்தில் ‘நமது’ நாட்டம் குறைவே.
    ஜீவா-நயன்தாரா நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘திருநாள்’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்...
    தஞ்சாவூர், கும்பகோணத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரவுடி சரத் லோகித்சவாவிடம் அடியாளாக வேலை பார்த்து வருகிறார் ஜீவா. சரத் லோகித்சவாவும், நயன்தாராவின் அப்பா ஜோ மல்லூரியும் சேர்ந்து சாக்கு விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நயன்தாராவின் கனவில் ஜீவா வந்து தாலி கட்டுவது போன்று அடிக்கடி கனவு வருகிறது. அதனால், ஜீவா பார்த்தாலே கொஞ்சம் பயத்துடனே இருக்கிறார் நயன்தாரா.

    இந்நிலையில், நயன்தாராவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் யோகி தேவராஜ் வாங்கிய கடனை திருப்பி கொடுக்காததால் அந்த வீட்டுக்கு செல்லும் நயன்தாராவை ரவுடி கும்பல் ஒன்று கடத்தி சென்றுவிடுகிறது. அப்போது, ஜீவா தனியொரு ஆளாக சென்று அந்த ரவுடி கும்பலை அடித்து துவம்சம் செய்துவிட்டு நயன்தாரா காப்பாற்றுகிறார்.

    அப்போது, நயன்தாராவிடம் தான் அவளை நீண்ட நாட்களாக காதலிப்பதாக கூறுகிறார். நயன்தாராவும் ஜீவா மீதுள்ள பயத்தை நீக்கிவிட்டு அவரை காதலிக்க தொடங்குகிறார். இதெல்லாம் தெரியாத ஜோ மல்லூரி தனது மகளான நயன்தாராவுக்கு திருமணம் செய்துவைக்க மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்துக்கு ஏற்பாடு செய்கிறார். அப்போது, ஜீவா-நயன்தாரா காதல் விவகாரம் வெளிய தெரியவரவே, நயன்தாராவின் நிச்சயதார்த்தம் நின்றுபோகிறது.

    இதனால், மனமுடைந்த ஜோ மல்லூரி, சரத் லோகித்சாவாவுடன் சேர்ந்து செய்யும் தொழிலை விட்டுவிட்டு சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுக்கிறார். சரத் லோகித்சவாவிடம் சென்று தனக்கு வேண்டிய பணத்தை திருப்பித்தர கேட்கிறார் ஜோ மல்லூரீ. ஆனால், சரத்தோ, ஜோ மல்லூரிக்கு பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாது என்று திருப்பி அனுப்புகிறார். ஜோ மல்லூரியை ஏமாற்றியது ஜீவாவுக்கும் பிடிக்கவில்லை.

    இதனால், போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று சரத்துக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்து ஜோ மல்லூரிக்கு சேரவேண்டிய பணத்தை பெற்றுக் கொடுக்கிறார் ஜீவா. மறுமுனையில் சரத் லோகித்சாவாவை என்கவுண்டரில் சுட்டுத்தள்ள போலீஸ் அதிகாரியான கோபிநாத் சாட்சிகளை தேடி அலைகிறார்.

    இந்நிலையில், தனக்கு எதிராக போலீசில் வாக்குமூலம் கொடுத்ததாலும், தன்னை காட்டிக்கொடுக்க போலீசில் சாட்சியாக மாறிவிடுவான் என்ற பயத்தினாலும், ஜீவாவை கொலை செய்ய சரத் முடிவு செய்கிறார்.

    இதிலிருந்து ஜீவா எப்படி தப்பித்தார்? ஜீவா-நயன்தாரா காதல் என்னவாயிற்று என்பதே மீதிக்கதை.

    பிளேடு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜீவா, பிளேடை தனது வாயில் போட்டுக் கொண்டு ரவுடிகளை பந்தாடும் காட்சிகளில் எல்லாம் அழகாக நடித்திருக்கிறார். பிளேடை லாவமாக தனது வாயில் போட்டு எடுக்கும் காட்சிகள் எல்லாம் சூப்பர். ஆக்ஷன் மட்டுமில்லாமல் ரொமான்ஸ், சென்டிமெண்ட் காட்சிகளிலும் அழகான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். மற்ற படங்களைவிட இந்த படத்தில் கொஞ்சம் கூடுதல் அழகாகவும் இருக்கிறார்.

    நயன்தாரா நீண்ட இடைவெளிக்கு பிறகு கிராமத்து பெண்ணாக பார்த்ததில் அனைவருக்கும் சந்தோஷம். படம் முழுக்க பாவாடை, தாவணியில் பார்க்கும்போது ரொம்பவும் அழகாக இருக்கிறது. அதேபோல் துறுதுறு நடிப்பிலும் கவர்கிறார். சாதாரண கிராமத்தில் வாழும் பெண்ணாக கதாபாத்திரத்தை சித்தரித்துவிட்டு, அவருடைய முதுகில் டாட்டூஸ் குத்தியதை எல்லாம் காட்டியிருப்பது சினிமாத்தனத்தை காட்டுகிறது. அதை கொஞ்சம் மறைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    ரவுடியாக வரும் சரத் லோகித்சவா வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். ஜோ மல்லூரி பொறுப்பான தந்தையாக மனதில் பதிகிறார். கோபிநாத் ஒரு சில காட்சிகளே வந்து மறைந்து போகிறார். அவரை போலீஸ் அதிகாரியாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தாய்மாமாவாக வரும் முனீஸ்காந்த், கருணாஸ் செய்யும் காமெடிகள் எல்லாம் ரசிக்க வைக்கிறது.

    ஆக்ஷன், ரொமாண்டிக் கலந்த ஒரு கிராமத்து கதையாக படத்தை உருவாக்கியிருக்கிறார் பி.எஸ்.ராம்நாத். தனது முந்தைய படமான ‘அம்பா சமுத்திரத்தில் அம்பானி’ படத்திற்கு நேர் எதிராக இப்படத்தை கொடுத்திருக்கிறார். காதலுக்காக ரவுடி திருந்துவது என அதரபழசான கதையை தேர்ந்தெடுத்தாலும், ஜீவா-நயன்தாராவை இப்படத்திற்காக சரியாக தேர்ந்தெடுத்து படத்தை ஓரளவுக்கு சரிக்கட்டிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்கு இணையாக செண்டிமென்ட் காட்சிகளும் நிரம்பியிருக்கிறது.

    ஸ்ரீ இசையில் ஒருசில பாடல்கள் குத்தாட்டம் போட வைக்கிறது. மெலோடியிலும் கவனத்தை ஈர்த்திருக்கிறார். பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஸ்ரீக்கு இப்படம் பெரிய அளவில் கைகொடுக்கும் என நம்பலாம். மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.

    மொத்தத்தில் ‘திருநாள்’  கொண்டாட்டம்.
    புதுமுக நடிகர் அர்வி நடிப்பு மற்றும் இயக்கத்தில் பேய் படமாக வெளிவந்திருக்கும் ‘என்னமா கதவுடுறானுங்க’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்...
    நாயகன் அர்வி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் பேய்களுடன் நேரடியாக பேசுவதற்காக ஒரு மெஷின் ஒன்றை தயாரித்து, அதன்மூலம் பேய்களிடம் பேசி வருகிறார். அதே தொலைக்காட்சியில் நாயகி அலிஷாவும் தொகுப்பாளியான பணியாற்றி வருகிறார். அர்வி தயார் செய்யும் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் அவர்தான் தொகுப்பாளினியாக பணியாற்றுகிறார்.

    இந்நிலையில், ரவிமரியா மிகப்பெரிய பொருட்செலவில் கட்டிவரும் ஒரு கட்டிடத்தில் ஆவி இருப்பதாக அறியும் அர்வி, அங்கு சென்று தான் கண்டுபிடித்த மெஷினை வைத்து ஆவியிடம் பேசுகிறார். அப்போது, அவருடன் பேசும் ஆவி, அந்த கட்டிடம் எழுப்பப்பட்டிருக்கும் இடம் சுடுகாடு என்பதால், தங்கள் இடத்தை ஆக்கிரமித்துவிட்டதாக புகார் சொல்கிறது.

    இதை அப்படியே அர்வி தனது தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்ய, ரவிமரியாவுக்கு பிரச்சினை வருகிறது. இதனால், ரவிமரியாவின் பகைக்கு ஆளாகிறார் அர்வி. இதன்பிறகு, மதுரைக்கு அருகில் கோட்டைமேடு என்ற கிராமத்தில் நடக்கும் கொலைகளுக்கு ஒரு பேய்தான் காரணம் என்றும், அதை கண்டுபிடிக்க அர்விக்கு அழைப்பு வருகிறது.

    அதன்படி, தனது குழுவுடன் சென்று அங்கு அவர்கள் சொன்னபடி பேய் இருக்கிறதா? என்று ஆராய்கிறார். அப்போது, மற்றொரு நாயகியான சௌம்யாவை பார்க்கும் அர்வி அவள் மீது காதல்வயப்படுகிறார். சௌம்யாவும் அர்வியை காதலிக்கிறாள். இந்நிலையில், அர்வியின் ஆராய்ச்சியில் அந்த ஊரில் ஆவி இல்லை என்று தெரிகிறது. ஆனால், அந்த ஊரில் உள்ள அனைவரும் ஆவிதான் இந்த கொலைகளையெல்லாம் செய்கிறது. அதை நீரூபித்துவிட்டுத்தான் அந்த ஊரை விட்டு செல்லவேண்டும் என்று அர்விக்கு கட்டளையிடுகின்றனர்.

    அதன்பிறகு நாயகன் அந்த ஆவியை கண்டுபிடித்தாரா? ஆவிதான் அந்த ஊரில் நடக்கும் கொலைகளையெல்லாம் செய்ததா? எதற்காக அந்த கொலைகளை அந்த ஆவி செய்கிறது? என்பதே மீதிக்கதை.

    ஹீரோயிசம் இல்லாத ஒரு கதையில் ஹீரோயிசம் காட்டி நடித்திருக்கிறார் நடிகர் அர்வி. மேலும், இவர் பேசும் வசனங்கள் அழகாக இருந்தாலும், அதை இவர் பேசும் விதங்கள் சரியாக இல்லை.

    படத்தில் இரண்டு கதாநாயகிகள் இருந்தாலும், யாருக்கும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அர்வி தயாரிப்பாளர் என்பதால் தன்னைத்தானே முன்னிலைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காக மற்ற கதாபாத்திரங்களுக்கு எதுவும் முக்கியத்துவம் கொடுக்காதது போல் தெரிகிறது. சாம்ஸின் காமெடி ரசிக்க வைத்தாலும், அவர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பது சலிப்பைத்தான் ஏற்படுத்துகிறது. ரவிமரியா வழக்கம்போல் காமெடி வில்லனாக ரசிக்க வைத்திருக்கிறார்.

    தமிழ் சினிமாவில் எத்தனையோ பேய் படங்கள் வெளிவந்திருக்கிறது. எல்லா படங்களிலும் பேய் என்பது கொடூரமானது என்பதை காட்டியிருப்பார்கள். ஆனால், இந்த படத்தில் பேயிடம் நான் அன்போடு பழகினால், அதுவும் நம்மிடம் அன்பாக நடந்துகொள்ளும் என்று வித்தியாசமான கதையாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் பிரான்சிஸ் ராஜ். ஆனால், சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்யாமல் கோட்டை விட்டுவிட்டார்.

    சிவபாஸ்கரின் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம்தான். ரவி விஜயானந்தின் இசை படத்திற்கு கொஞ்சம் கைகொடுத்திருக்கிறது. பேய் படத்திற்குண்டான வழக்கமான பயமுறுத்தும் காட்சிகள் இல்லாததால் கதைக்கு ஏற்றவாறு இசையமைத்திருக்கிறார். பாடல்களிலும் ஓரளவுக்கு தனது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்.

    மொத்தத்தில் ‘என்னமா கதவுடுறானுங்க’ கதவுடுறானுங்க....
    ஹாலிவுட் படமான ‘லைட்ஸ் அவுட்’ தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது. இந்த படம் எப்படி இருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்...
    மனநிலை பாதிக்கப்பட்ட ஷோபிக்கு சிறு வயதில் டயானா என்ற தோழி இருக்கிறாள். தோல் வியாதியால் அவதிப்படும் டயனாவுக்கு வெளிச்சத்தில் இருப்பதற்கு பிடிக்காது. இதனால், எப்போதும் இருட்டிலேயே வாழ்கிறாள். இந்நிலையில், ஒருநாள் டயனா இறந்துபோகிறாள். இருப்பினும், மனநிலை பாதிக்கப்பட்ட ஷோபி அடிக்கடி தனிமையில் அமர்ந்து டயனாவுடன் பேசிக் கொண்டிருப்பதுபோலவே அவளது செயல்பாடுகள் இருக்கின்றன.

    இந்நிலையில், ஷோபிக்கு ஒருவருடன் திருமணம் ஆகிறது. அவன் மூலமாக ஒரு பெண் குழந்தையை பெற்றெடுக்கிறாள். பின்னர் ஷோபியின் கணவன் அவரை விட்டுவிட்டு வேறொருத்தியுடன் சென்றுவிடுகிறான். அதன்பிறகு, ஷோபி இரண்டாவது ஒருவனை திருமணம் செய்துகொண்டு, அவன் மூலமாக ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுக்கிறாள். இந்த இரண்டு குழந்தைகளும் ஒரே வீட்டில் வளர்ந்து பெரியவர்களாகிறார்கள்.

    இந்நிலையில், அந்த வீட்டில் ஒரு அமானுஷ்ய சக்தி நடமாடுவது ஷோபியின் மகளுக்கு தெரிய வருகிறது. வெளிச்சத்தில் தெரியாத அந்த உருவம், இருட்டில் மட்டுமே தெரிகிறது. இதனால் அங்கு நிறைய பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

    இதற்கு பயந்துபோன ஷோபியின் மகள் அந்த வீட்டை காலி செய்துவிட்டு தனது ஆண் நண்பருடன் சேர்ந்து தங்கிக் கொள்கிறாள். இருப்பினும், தனது தம்பியையும், அம்மாவையும் அந்த பேயிடம் இருந்து காப்பாற்றுவதற்காக மறுபடியும் வீட்டிற்குள் வருகிறாள். இறுதியில், அந்த பேய் யார்? அவர்களை ஏன் அது பயமுறுத்துகிறது? அந்த பேயிடம் இருந்து இவர்கள் தப்பித்தார்களா? என்பதே மீதிக்கதை.

    படத்தின் ஆரம்பத்திலேயே கதைக்குள் கொண்டுபோய் விட்டார் இயக்குனர் டேவிட் சான்ட்பெர்க். அதன்பிறகு ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களுக்கு திகில் ஏற்படுத்திக் கொண்டேதான் நகர்கிறது. நிறைய காட்சிகள் இருட்டிலேயே படமாக்கியிருந்தாலும், அந்த திகில் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது.

    படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரங்கள் அனைவரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஒரு திகில் படம் பார்க்க வேண்டும் என்று நினைத்துச் செல்பவர்களுக்கு இந்த படம் கண்டிப்பாக ஒரு திகில் அனுபவத்தை கொடுக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

    குறிப்பாக, லைட்டை ஆப் செய்துவிட்ட பிறகு ஒரு உருவம் தெரிவது போலவும், ஆன் செய்தபிறகு அந்த உருவம் மறைந்துபோவது போலவும், கடைசியில் அந்த உருவம் அருகில் வந்து நிற்கும் காட்சிகள் எல்லாம் திகிலின் உச்சக்கட்டம்.

    மொத்தத்தில் ‘லைட்ஸ் அவுட்’ திகில் அனுபவம்.
    ஜெய்-விடிவி கணேஷ்-சந்தானம் கூட்டணியில் வெளிவந்திருக்கும் படம் ‘தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்’. இப்படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்...
    ஜெய் கல்லூரி படிப்பை பாதியிலே முடித்துவிட்டு ஊரிலிருந்து வேலை தேடி சென்னைக்கு வருகிறார். சென்னை வரும் ஜெய் தனது மாமா விடிவி கணேஷுடன் தங்கிக் கொண்டு, அவர் சொல்லும் ஒவ்வொரு வேலைக்கும் சென்றுவிட்டு, பாதியிலேயே அந்த வேலை பிடிக்கவில்லை என்று சொல்லி திரும்பி வருகிறார்.

    இந்நிலையில், ஜெய் கொரியர் கம்பெனியில் வேலை பார்க்கும் நண்பன் சந்தானத்துடன் சேர்ந்துகொண்டு அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் இவரும் கூடவே சென்று வருகிறார். அப்போது, ஒருநாள் நாயகி யாமி கௌதமை பார்க்கும் ஜெய் அவள்மீது காதல் வயப்படுகிறார். அவளை தினமும் சந்திப்பதற்காக அவள் இருக்கும் ஏரியாவில் கொரியர் சப்ளை செய்யும் பணிக்கு சேர்கிறார். கொரியர் சப்ளை செய்வதுபோல் அவளை தினமும் சந்தித்து தனது காதலை வளர்க்கிறார்.

    ஒருகட்டத்தில் யாமி கௌதமும் ஜெய் மீது காதல்வயப்படுகிறார். இதற்கிடையில், சென்னையில் மிகப்பெரிய டாக்டரான அஸ்டோஸ் ரானா, சட்டத்திற்கு புறம்பாக கருக்கலைப்பு வேலைகளை செய்து, அந்த கருமுட்டைகளை வெளிநாட்டுக்கு விற்பனை செய்து அதன்மூலம் பல கோடிகள் சம்பாதித்து வருகிறார்.

    இதை அறியும் தம்பி ராமையா, ராணாவை நேரடியாக எதிர்க்கமுடியாது என்பதற்காக சமூக ஆர்வலான நாசரின் உதவியை நாடுகிறார். ராணா செய்துவரும் தில்லுமுல்லுகள் பற்றிய விவரங்களை சேகரித்து அதை நாசருக்கு கொரியர் மூலம் அனுப்பி வைக்கிறார்.

    அந்த விவரங்கள் அடங்கிய பார்சலை சப்ளை செய்யும் பொறுப்பு ஜெய்க்கு வருகிறது. மறுபுறம் தம்பி ராமையா தன்னைப் பற்றிய விவரங்களை பார்சலாக அனுப்பிய விஷயம் ராணாவுக்கு தெரிய வருகிறது. அது நாசரிடம் சென்றடையாமல் எப்படி தடுப்பது என்ற முயற்சியில் இறங்குகிறார்.

    இறுதியில், நாசரின் கைக்கு அந்த பார்சல் கிடைத்ததா? அல்லது, அந்த பார்சலை அடைவதற்கு ராணா எந்தமாதிரியான முயற்சிகளை எடுத்தார்? என்பதே மீதிக்கதை.

    ஜெய் ஹீரோயிசம் இல்லாத ஹீரோவாக மிகவும் எதார்த்தமாக நடித்திருக்கிறார். இந்த படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்தாலும் ஜெய்யின் நடிப்பு ரசிக்கும்படியாகவே இருக்கிறது. நாயகியை பார்ப்பதற்காக இவர் செய்யும் வேலைகள் எல்லாம் ரசிக்கும்படி இருக்கிறது.

    பாலிவுட் வரவான நடிகை யாமி கௌதமுக்கு இப்படத்தில் பெரியதாக வேலை இல்லாவிட்டாலும் தனக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்திருக்கிறார். விடிவி கணேஷ், சந்தானம் ரெண்டு பேரும் படத்தை கலகலப்பாக கொண்டு செல்ல உதவியிருக்கிறார்கள். சந்தானம் அடிக்கும் கவுண்டர் வசனங்கள் அனைத்தும் புதிதாக கேட்பதுபோலவே இருப்பது சிறப்பு.

    டாக்டராக அஸ்டோஸ் ராணாவின் நடிப்பு மிரட்டும்படியாக இல்லை. அவருடைய கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்திருக்கலாம். நாசர், சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா ஆகியோரின் அனுபவ நடிப்பு படத்திற்கு கொஞ்சம் பலம் சேர்த்திருக்கிறது.

    சட்டத்திற்கு புறம்பாக செய்யப்படும் கருக்கலைப்புக்கு பின்னணியில் மிகப்பெரிய வியாபாரம் இருப்பதாக இப்படத்தில் இயக்குனர் பிரேம் சாய் சொல்ல வந்திருக்கிறார். சொல்ல வந்த கதையை தெளிவாகவும் எடுத்துச் சொல்லியிருக்கிறார். குழப்பும்படியான காட்சிகளை அமைக்கமால், ரசிகர்களை எளிதாக சென்றடைய என்னென்ன செய்யமுடியுமோ அதையெல்லாம் செய்திருக்கிறார். படத்தின் திரைக்கதையை இன்னும் கொஞ்சம் சிறப்பாக அமைத்திருக்கலாம்.

    கார்த்திக் இசையில் பாடல்கள் அழகாக இருக்கிறது. சந்தீப் கௌடாவின் பின்னணி இசையும் சூப்பர். சத்யா பொன்மாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் எல்லாம் கலர்புல்லாக இருக்கிறது.

    மொத்தத்தில் ‘தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்’ மனதில் இடம்பெறும்.
    ராஜ்குமார்-மானசா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சண்டிக்குதிரை’ படம் இன்று வெளிவந்துள்ளது. படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்..
    கிராமத்தில் ராஜ்கமல் பொம்மைகள் செய்யும் தொழில் செய்து வருகிறார். இதுமட்டுமில்லாமல், அவ்வப்போது ஊர் தலைவர் சொல்லும் சில எடுபிடி வேலைகளையும் செய்து வருகிறார். அந்த ஊர் தலைவருக்கு காதல் என்றால் சுத்தமாக பிடிக்காது. இருப்பினும், ராஜ்கமலும், அவரது வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் நாயகி மானசாவும் ஒருவருக்கொருவர் காதலித்து வருகிறார்கள்.

    ராஜ்கமலின் பக்கத்து வீட்டிலேயே வசிக்கும் டெல்லி கணேஷின் மகளான திவ்யா, ராஜ்கமலிடம் சிறுவயதிலிருந்து அண்ணன் என்ற உரிமையில் பழகி வருகிறாள். பிளஸ் 2 படிக்கும் திவ்யாவும், காலேஜ் படிக்கும் ஹரியும் மறுமுனையில் காதலித்து வருகிறார்கள். இவர்கள் ஒருநாள் தனிமையில் அமர்ந்து பேசிக் கொண்டிப்பதை பார்க்கும் ராஜ்கமலின் நண்பன், அவளை திட்டி தீர்க்கிறார். இதனால் கோபமடைந்த திவ்யா பதிலுக்கு அவனை திட்டி அவமானப்படுத்துகிறாள்.

    இதனால் ராஜ்கமல் நண்பர் திவ்யா மீது கோபத்துடன் அங்கிருந்து கிளம்பி செல்கிறார். இது ராஜ்கமலுக்கு தெரிய வரவே, தனது நண்பனை அழைத்து சமதானப்படுத்துகிறார். இப்படியாக சென்று கொண்டிருக்கும்போது, ஒருநாள் ஹரியும்-திவ்யாவும் தனிமையில் சில்மிஷம் செய்துகொள்வதை ஹரி தனது செல்போனில் படம்பிடிக்கிறான். இதுபிடிக்காத திவ்யா, ஹரியின் செல்போனை புடுங்கி அந்த வீடியோவை அழித்துவிடுகிறாள்.

    பின்னர் ஒருநாள் திவ்யாவின் செல்போனுக்கு அவர்கள் சில்மிஷம் செய்த வீடியோ தெரியாத ஒரு நம்பரிலிருந்து வருகிறது. இது ஹரியின் வேலையாகத்தான் இருக்கும் என்று நினைத்து, அவனிடம் சென்று பயங்கரமாக சண்டை போட்டு விட்டு வீடு திரும்புகிறாள். பின்னர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொள்கிறாள்.

    ஆனால், உண்மையில் அவள் தற்கொலை செய்துகொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கிறாள் என்பது ராஜ்கமலுக்கு தெரிய வருகிறது. இதற்கிடையில் ராஜ்கமலின் காதலியான மானசாவின் தம்பி மலைப்பகுதியில் கொலை செய்யப்பட்டும், மானசா பயங்கரமாக தாக்கப்பட்டும் கிடக்கிறார்கள்.

    இந்த கொலைகளை செய்வதற்கு யார் காரணம்? எதற்காக செய்கிறார்கள்? என்பதை ராஜ்கமல் எப்படி கண்டறிந்தார்? என்பதே மீதிக்கதை.

    சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்திருக்கும் ராஜ்கமல், சின்னத்திரையில் நடித்ததுபோன்றே பெரிய திரையிலும் நடித்திருக்கிறார். சின்னத்திரையில் கொடுத்த ஓவர் ஆக்டிங் பெரிய திரைக்கும் கொடுத்திருப்பதால், இவரது நடிப்பு எடுபடவில்லை. செண்டிமென்ட், எமோஷன் காட்சிகளில் எல்லாம் இவரது நடிப்பு ரொம்பவும் அதிகமாக இருப்பதால் ரசிக்க முடியவில்லை. இவரை இயக்குனர் சரியாக வேலை வாங்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. சரியான இயக்குனர்களின் படங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் ராஜ்கமலுக்கு நல்லது நடக்க வாய்ப்பிருக்கிறது.

    கதாநாயகியாக வரும் மானசாவின் கதாபாத்திரத்திற்கு சரியாக வலு இல்லாவிட்டாலும், கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். மற்றொரு காதலர்களாக வரும் ஹரி-திவ்யாவின் காதல் காட்சிகள் எல்லாம் ரசிக்க வைக்கிறது. திவ்யாவை சுற்றித்தான் கதையே நகர்ந்து செல்கிறது. அதனால், தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார் திவ்யா.

    டெல்லிகணேஷின் அனுபவ நடிப்புக்கு இந்த படம் தீனி போடவில்லை. மற்றபடி, படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரங்கள் யாரும் பெரிதாக மனதில் பதியவில்லை.

    இயக்குனர் அன்புமதி, இந்த படத்தின் கதையை வித்தியாசமாக எழுதியிருந்தாலும் காட்சியப்படுத்திய விதத்தில் கோட்டை விட்டுவிட்டார். படத்தை ரசிக்க முடியாத அளவுக்கு காட்சிப்படுத்தியது ரசிகர்களை சோர்வடைய வைத்திருக்கிறது. திரைக்கதையை இன்னும் கொஞ்சம் சிறப்பாக அமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதேபோல், ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் இன்னும் கொஞ்சம் சிறப்பாக வேலை வாங்கியிருக்கலாம்.

    வீராவின் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம்தான். வரஸ்ரீயின் இசையில் பாடல்கள் சுமார்தான் என்றாலும், பின்னணி இசை கதையின் ஓட்டத்தை ஓரளவுக்கு தூக்கி நிறுத்தியிருக்கிறது.

    மொத்தத்தில் ‘சண்டிக்குதிரை’ நொண்டியடிக்கிறது.

    ஹாலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குனரான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளிவந்துள்ள படம்தான் இது. படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்...
    மனிதர்களுக்காக கனவுகளை சேகரித்து, அவர்களுக்கு அளித்துவரும் கனவுகளின் பூதத்தை ஒருமுறை ஷோபியா என்ற சிறுமி பார்த்துவிடுகிறாள். அவள் தன்னை பார்த்துவிட்டதால், அவள் மூலமாக தனக்கு பிரச்சினை ஏற்படும் என்று பயந்து அவளை தன்னுடைய இடத்துக்கு அழைத்துச் செல்கிறது பூதம். அதன்பின்னர், இருவரும் ஒருவருக்கொருவர் பேசி நெருங்கிய நண்பர்களாகிறார்கள்.

    பூதங்கள் வசிக்கும் இடத்தில் இந்த கனவு பூதம் மட்டும்தான் மாமிசங்களை உண்ணாது. மற்ற பூதங்கள் அனைத்தும் மனிதர்களை கொன்று தின்னக்கூடியது. இந்நிலையில், பூதங்களின் இடத்தில் வசிக்கும் ஷோபியாவை மோப்பம் பிடிக்கும் மாமிசம் தின்னும் பூதங்கள், அவளை எப்படியாவது கண்டுபிடித்து தின்றுவிட முயற்சி செய்கின்றன.

    அவர்களிடமிருந்து ஷோபியாவை ஒவ்வொரு முறையும் கனவுகளின் பூதம் காப்பாற்றி வருகிறது. இந்நிலையில், மாமிசம் தின்னும் பூதங்களின் அட்டகாசம் அதிகரிக்கவே, அவற்றையெல்லாம் கொல்ல கனவுகளின் பூதம் ஒரு திட்டம் தீட்டுகிறது. அது என்ன திட்டம் என்பதை மீதிப்படம் சொல்கிறது.

    கனவு பூதமாக நடித்திருப்பவருக்கு பின்னணி குரல் கொடுத்திருப்பவர் பிரபல தமிழ் நடிகர் நாசர். அவருடைய குரலில் வெளிவந்த இப்படத்தின் டீசரில் பார்க்கும்போது, இவ்வளவு பெரிய உருவத்துக்கு அவருடைய குரல் பொருந்தவில்லையோ என்று தோன்றியது. ஆனால், படத்தில் கதையோடு ஒன்றி பார்க்கும்போது அவரது குரல் மிகவும் பொருத்தமாகவே உள்ளது.

    ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் படங்களில் உள்ள பிரம்மாண்டத்துடனே இந்த படமும் வெளிவந்திருக்கிறது. படத்தின் கதை பெரிதாக இல்லாவிட்டாலும், கிராபிக்ஸ் காட்சிகள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன. ஷோபியாவாக வரும் சிறுமியின் துறுதுறு நடிப்பு நம்மை கவர்கிறது. மிகப்பெரிய பூதங்களை திரையில் பார்க்கும் நம்மை பிரமிக்க வைக்கிறார் இயக்குனர். படத்தில் பெரிதாக கதாபாத்திரங்கள் இல்லாவிட்டாலும், குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களை மட்டும் ரசிக்க வைத்திருக்கிறார்.

    ஜான் வில்லியம்ஸின் பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது. கதையோட்டத்திற்கு தகுந்தவாறு இவரது பின்னணி இசை அமைந்திருப்பது சிறப்பு.

    மொத்தத்தில் ‘தி பிஎஃப்ஜி’ நல்ல நண்பன். 
    ரவிதேஜா-நயன்தாரா நடிப்பில் தெலுங்கில் ‘ஆஞ்சநேயலு’ பெயரில் வெளிவந்த படம் தமிழில் ‘அதிரடி அர்ஜுன்’ என்ற பெயரில் வெளிவந்துள்ளது. இப்படம் எப்படி உள்ளது என்பதை கீழே பார்ப்போம்..
    கிராமத்தில் பள்ளி தலைமையாசிரியராக இருக்கும் நாசரின் மகன் ரவிதேஜா. படித்து முடித்துவிட்டு எந்த வேலைக்கும் போகாமல் கிராமத்தில் நண்பர்களுடன் சேர்ந்து வம்பிழுத்து வருகிறார் ரவி தேஜா. இதனால் அவரை சென்னைக்கு அனுப்பி வைக்கிறார் அவரது அம்மா. சென்னையில் வேலை தேடி அலையும் ரவிதேஜாவுக்கு சிறிய டிவி கம்பெனியில் வேலை கிடைக்கிறது.

    சென்னையில் ஒருநாள் நயன்தாராவை ஆபத்தில் இருந்து காப்பாற்றும் ரவிதேஜா, அன்றுமுதல் நயன்தாராவை காதலிக்க தொடங்குகிறார். பல்வேறு சந்திப்புகளுக்கு பிறகு ரவிதேஜாவின் நடவடிக்கைகள் பிடித்துப்போகவே நயன்தாராவும் அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார்.

    இந்நிலையில், உள்துறை மந்திரியான காதல் தண்டபாணியின் ஊழல்களை ஒருவர் பட்டியலிட்டு போலீசில் ஒப்படைக்க பார்க்கிறார். இதை அறியும் தண்டபாணி, எம்.எல்.ஏ. மூலமாக அவனை தீர்த்துக்கட்ட லோக்கல் ரவுடியான சோனு சூத்தை நியமிக்கிறார். சோனு சூத், அவனை கொலை செய்ய முயற்சி செய்யும்போது, மற்றொரு லோக்கல் ரவுடியான கோட்டா சீனிவாசராவ் உள்ளே புகுந்து கலைத்துவிடுகிறார். இதனால், இரண்டு பேர் கூட்டத்துக்கும் பிரச்சினை ஏற்படுகிறது.

    மறுமுனையில், ரவிதேஜா பணிபுரிந்துவரும் டிவி கம்பெனி ஒன்றுக்கும் உதவாத நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. அதே கம்பெனியில் வேலை செய்துவரும் ஒருவர் மக்களுக்கு பயன்தரும்படியான ஏதாவது ஒரு செய்தியை ஒளிபரப்ப வேண்டும் என்ற எண்ணத்தில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான பிரகாஷ் ராஜுடன் நேரடி பேட்டி ஒன்றை எடுக்கின்றனர். ரவிதேஜாவின் முன்னிலையில் இது நடக்கிறது.

    அந்த பேட்டியில் தான் ஓய்வு பெறுவதற்கு காரணம் சோனு சூத்தின் ஆட்களின் அட்டகாசம்தான் என்பதை போட்டு உடைக்கிறார் பிரகாஷ்ராஜ். இதை பார்த்துக்கொண்டிருக்கும் சோனு சூத், பிரகாஷ் ராஜை அடித்து உதைக்க ஆட்கள் அனுப்புகிறார். அவர்களிடமிருந்து பிரகாஷ்ராஜை காப்பாற்றுகிறார் ரவிதேஜா.

    இதனால், சோனுசூத்தின் ஆட்கள் ரவிதேஜாவை தீர்த்துக்கட்ட முடிவெடுக்கிறார்கள். இதிலிருந்து ரவிதேஜா தப்பித்தாரா? சோனுசூத் மற்றும் உள்துறை மந்திரியின் தில்லுமுல்லு வேலைகளுக்கு சரியான தண்டனை கிடைத்ததா? என்பதுதான் மீதிக்கதை.

    ரவிதேஜா வழக்கம்போல் இந்த படத்திலும் குழந்தைத்தனமான நடிப்பு, ஆக்ஷன், என அனைத்திலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். நயன்தாராவுடனான காதல் காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கிறது. அதேபோல், ஆக்ஷன் காட்சிகளில் அனல் பறக்கிறது.

    நயன்தாரா இப்படத்தில் நாயகனை காதலிக்க மட்டுமே பயன்பட்டிருக்கிறார். நேர்மையான அதிகாரியாக வரும் பிரகாஷ் ராஜ் தனது அனுபவ நடிப்பால் கவர்கிறார். பேட்டியளிக்கும் காட்சிகளில் எல்லாம் எதார்த்தத்துடன் நடித்திருக்கிறார். சோனு சூத் வில்லனாக மிரட்டுகிறார். நாசர் பொறுப்பான அப்பாவாக மனதில் பதிகிறார். மற்றொரு தாதாவாக வரும் கோட்டா சீனிவாசராவும் தனக்கே உரித்தான ஸ்டைலில் நடித்து அசத்தியிருக்கிறார்.

    தெலுங்கில் பல்வேறு ஹிட் படங்களை இயக்கிய பரசுராம் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம்தான் இது. தெலுங்கில் ஆஞ்சநேயலு என்ற பெயரில் வெளிவந்த இப்படம் தமிழில் அதிரடி அர்ஜுன் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வந்துள்ளது. தெலுங்கு ரசிகர்களை இப்படம் பெரிதளவில் கவர்ந்தாலும், சில இடங்களில் தமிழ் ரசிகர்களை கவரும் வகையில் காட்சிகள் இல்லாதது படத்திற்கு குறைவே.

    தமனின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது. ரவீந்திரபாபுவின் ஒளிப்பதிவு கதைக்கேற்றவாறு சிறப்பாக அமைந்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘அதிரடி அர்ஜுன்’ ஆட்டம் காட்டவில்லை.
    ரத்தன் மௌலி, ஸ்ரவியா, சுஜாகுமார் ஆகியோர் நடிப்பில் திகில் படமாக உருவாகியுள்ள ‘வெள்ளிக்கிழமை 13ஆம் தேதி’ படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்...
    தன்னுடைய பொருளை யாரும் தொடக்கூடாது என்ற பிடிவாத குணம், மற்றும் தைரியம், பாசத்துடன் வளர்ந்து வருகிறார் நாயகி ஸ்ரவியா. இவளது அப்பா சித்ரா லட்சுமணன் மகள் எது கேட்டாலும் அது செய்து கொடுக்க தயாராக இருக்கிறார். இந்நிலையில், ஸ்ரவியா பெயரில் ஒரு நிலத்தை வாங்கி, அதில் திருமண மண்டபம் கட்ட சித்ரா லட்சுமணன் முடிவு செய்கிறார்.

    இதற்கிடையில், ஸ்ரவியா, ஒருவனை காதலிப்பதாகவும் அவனையே திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தனது பெற்றோரிடம் தெரிவிக்கிறாள். அவர்களும் மகளின் விருப்பத்திற்கேற்ப அவள் காதலித்தவனையே திருமணம் செய்துவைக்க முடிவு செய்கிறார்கள். திருமணம் மண்டபம் கட்டும் பணி நடந்துகொண்டிருப்பதால், மண்டபம் கட்டி முடிந்ததும், தனது மகள் திருமணத்தை முதன்முதலாக அந்த மண்டபத்தில் நடத்த சித்ரா லட்சுமணன் முடிவு செய்கிறார்.

    மண்டபமும் கட்டி முடிக்கப்பட்டு, திருமண ஏற்பாடுகளும் நடக்கிறது. இந்நிலையில், ஸ்ரவியாவின் தாய்மாமனுக்கு அவளை எப்படியாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசை. ஆனால், வேறொருவனுடன் அவளுக்கு திருமணம் நடப்பதை பொறுத்துக் கொள்ள முடியாதவன், திருமணத்துக்கு முந்தைய நாள் மண்டபத்திற்கு தீவைத்து கொளுத்தி விடுகிறான்.

    இந்த சம்பவத்தில் ஸ்ரவியா உள்ளிட்ட 13 பேர் அந்த மண்டபத்திலேயே இறந்துபோகிறார்கள். மண்டபமும் எரிந்து நாசமாகிறது. இதன்பின்னர் இறந்துபோன 13 பேரும் அந்த மண்படத்திற்குள்ளேயே ஆவியாக சுற்றுகிறார்கள். அங்கிருந்து அந்த ஆவிகளை விரட்டி, மண்டபத்தை புதுப்பிக்க பல்வேறு முயற்சிகள் செய்கிறார்கள் எதுவும் நடந்தபாடில்லை.

    கடைசியாக மந்திரவாதி ஒருவர்  ஒரு இளம் தம்பதிகளுக்கு அந்த மண்டபத்தில் திருமணம் செய்துவைத்தால் அந்த ஆவிகள் அனைத்தும் அங்கிருந்து ஓடிவிடும் என்று ஆலோசனை கூறுகிறார். அதன்படி, ஸ்ரவியாவின் அண்ணனான ராம்ஜி, நாயகன் ரத்தன் மௌலி, எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ் உள்ளிட்டவர்களை மண்டபத்தை புதுப்பிக்கும் பணிக்கு நியமிக்கிறார்.

    அங்கு சென்று அவர்கள் மண்டபத்தை புதுப்பித்து, திருமணத்தை நடத்தி ஆவிகளை விரட்டினார்களா? அல்லது அந்த ஆவிகள் இவர்களுக்கு எந்தமாதிரியான பிரச்சினையை கொடுத்தது? என்பதே மீதிக்கதை.

    இயக்குனர் புகழ்மணியின் இயக்கத்தில் ஏற்கெனவே வெளிவந்த ‘13ம் பக்கம் பார்க்க’ படத்தின் ஹீரோ ரத்தன் மௌலிதான் இந்த படத்திற்கும் ஹீரோ. ஹீரோயிசம் இல்லாத ஒரு ஹீரோவாக இப்படத்தில் பளிச்சிடுகிறார். காதல் காட்சிகளிலும், ஆவிகளுக்கும் பயந்து நடுங்கும் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    கதாநாயகி ஸ்ரவியாவுக்கு படத்தில் சிறப்பான கதாபாத்திரம். பிடிவாத குணம், துணிச்சலான பெண் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ஆவியாக வரும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். இன்னொரு கதாநாயகியாக வரும் சுஜாகுமார் இடைவேளைக்கு பிறகுதான் கதைக்குள் வருகிறார். கடைசி கட்டத்தில் இவருடைய நடிப்பும் மெச்சும்படியாக உள்ளது.

    சிவாஜி ரசிகராக வரும் லிவிங்ஸ்டன், அவர் ஸ்டைலில் பேசி நடிக்கும் காட்சிகள் எல்லாம் கலகலப்பாக இருக்கிறது. மற்றபடி, எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ், வையாபுரி, மனோபாலா என காமெடிக்கு நிறைய பேர் இருந்தாலும் பெரியதாக காமெடி ஒன்றும் இல்லை.

    ஏற்கெனவே ஒரு பேய் படத்தை இயக்கி அனுபவமடைந்துள்ள இயக்குனர் புகழ்மணி மீண்டும் ஒரு பேய் படத்தை கொடுத்திருக்கிறார். தனது முந்தைய படத்திற்கும் இதற்கும் பெரிய மாற்றத்தை கொடுத்திருக்கிறார். நிறைய பேய் படங்களை பார்த்து அனுபவப்பட்டுவிட்ட நமக்கு, இந்த படத்தில் வரும் பேய்கள் பெரிதாக அச்சுறுத்தவில்லை. அதேபோல், காமெடியும் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.

    தாஜ்நூரின் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக பொருந்தியிருக்கிறது. பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். கே.எஸ்.செல்வராஜின் ஒளிப்பதிவில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

    மொத்தத்தில் ‘வெள்ளிக்கிழமை 13ஆம் தேதி’ திகில் குறைவு.
    ரவிதேஜா-நயன்தாரா நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த ’துபாய் சீனு’ படம் தமிழில் ‘துபாய் ராணி’ என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்...
    துபாய் செல்வதற்காக மும்பை வரை சென்று ஏமாற்றப்பட்ட நிலையில், மும்பையில் சிலகாலம் வாழ்ந்துவிட்டு தனது சொந்த ஊரான ஐதராபாத்துக்கே திரும்பி வருகிறார் நாயகன் ரவிதேஜா. மும்பையில் தான் காதலித்த நயன்தாரா ஐதராபாத்தில் இருப்பதை அறிந்து, அவளை தேடி அலைகிறார். ஒருகட்டத்தில் ரேடியோ ஜாக்கியாக இருக்கும் நயன்தாராவை கண்டுபிடித்து, தனது காதலை உறுதிபடுத்துகிறார் ரவிதேஜா.

    இதற்கிடையில், ஐதராபாத்தின் மிகப்பெரிய தாதாவான ஜின்னா பாய், போலீசுக்கு பயந்து மும்பையில் தலைமறைவாக இருக்கிறார். இதை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட அவரிடம் வேலைபார்த்த மக்கா நாயக், தனக்கென்று ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு ஐதராபாத்தையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைக்கிறார். இது ஜின்னா பாயின் ஆட்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. இதனால், இரண்டு கோஷ்டிக்குமிடையே அடிக்கடி சண்டை ஏற்படுகிறது.

    இந்நிலையில், தனக்கு எதிராக செயல்பட்டு வரும் மக்கா நாயக்கை தீர்த்துக்கட்ட ஜின்னா பாய் முடிவெடுக்கிறார். இதற்காக மும்பையிலிருந்து ஐதராபாத் திரும்புகிறார். ஜின்னா பாய் ஐதராபாத் திரும்புவதை பற்றி அறியும் போலீசார் அவரை எப்படியாவது கைது செய்யவேண்டும் என தீவிரமாக இருக்கின்றனர்.

    அவர்களையும் மீறி ஐதராபாத்திற்குள் நுழையும் ஜின்னா பாய், மக்கா நாயக்கின் தம்பியை கடத்தி வைத்துக் கொண்டு தன் பெயரை சொல்லி சம்பாதித்த பணத்தை தன்னிடம் ஒப்படைக்கும்படி எச்சரிக்கிறார். மக்கா நாயக்கும் தனது தம்பியை மீட்பதற்காக அந்த பணத்தை ஒருவனிடம் கொடுத்து அனுப்புகிறார். ஆனால், அவன் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு இடத்தில் வைத்துவிட்டு, ஜின்னா பாயின் அழைப்புக்காக காத்திருக்கிறான். இதற்குள், ஜின்னா பாய், மக்கா நாயக்கையும், அவனது தம்பியையும் கொன்றுவிடுகிறார். இதையெல்லாம் போலீஸ் கண்காணித்துக் கொண்டே இருக்கிறது.

    இதனால், பணம் எடுத்துச் சென்றவனுக்கு ஜின்னா பாய் போன் செய்து, போலீசுக்கு சந்தேகம் வராத ஆள் மூலமாக அந்த பணத்தை கொடுத்துவிடுமாறு கூறுகிறார். அதன்படி, நாயகன் ரவிதேஜா அந்த பணத்தை ஜின்னா பாயிடம் ஒப்படைக்க புறப்பட்டு செல்கிறார். ஜின்னா பாயிடம் சென்று பணத்தை ஒப்படைக்கும் ரவிதேஜா, திடீரென்று மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, அங்குள்ள அனைவரையும் சுட்டுத் தள்ளுகிறார். இதில் அனைவரும் இறந்துபோக ஜின்னா பாய் மட்டும் கையில் குண்டு காயத்துடன் தப்பிக்கிறார்.

    ரவிதேஜா, ஜின்னா பாயின் ஆட்களை சுட்டுக் கொல்ல காரணம் என்ன? ஜின்னா பாயுக்கும், ரவிதேஜாவுக்கும் அப்படி என்ன பகை இருந்தது? என்பதை விளக்கிச் சொல்கிறது பின்பாதி.

    தெலுங்கில், துபாய் சீனு என்ற பெயரில் வெளிவந்த படமே ‘துபாய் ராணி’ என்ற பெயரில் தமிழில் வெளிவந்திருக்கிறது. நாயகன், ரவிதேஜா இப்படத்தில் காதல், காமெடி, செண்டிமெண்ட், ஆக்ஷன் என எல்லாவற்றிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். படத்தில் இவருக்கென்று நிறைய மாஸ் காட்சிகளும் இருக்கின்றன. வசனங்களும் ரசிகர்களை கவர்ந்திழுக்கும்படி வைத்திருப்பது சிறப்பு.

    நயன்தாராவும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். குறிப்பாக காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். பிரம்மானந்தம் வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பாக இருக்கிறது. போலீஸ் அதிகாரியாக வரும் சாயாஜி ஷிண்டே தனக்கே உரித்த ஸ்டைலில் கலக்குகிறார்.

    காதல், செண்டிமெண்ட், ஆக்ஷனுடன் தெலுங்கு ரசிகர்களுக்கு பிடித்தமாதிரி காரசாரமான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார்
    இயக்குனர் ஸ்ரீனு வைத்லா. ஆனால், தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த அளவுக்கு இது தமிழ் ரசிகர்களை கவருமா? என்பதுதான் கேள்வி.

    மணிசர்மாவின் இசையில் பாடல்கள் ஆட்டம் போடவைக்கின்றன. பின்னணி இசையும் கதையின் ஓட்டத்துக்கு உதவியிருக்கிறது. பரணி கே.தரணின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது.

    மொத்தத்தில் ‘துபாய் ராணி’ சபாஷ் ராணி
    ரஜினி நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள ‘கபாலி’ படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகியிருக்கிறது. படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்.
    25 வருட சிறை வாழ்க்கையை முடித்துவிட்டு சிறையிலிருந்து வெளியே வருகிறார் ரஜினி. வெளியில் வரும்போதே அவர் மலேசியாவில் வாழும் தமிழர்களுக்காக போராடிதான் சிறை சென்றார் என்பது தெரிய வருகிறது. சிறையில் இருந்து வெளியே வரும் அவரிடம் ஜான் விஜய், 25 வருடத்தில் மலேசியாவில் நடந்த மாற்றங்களை அவரிடம் விளக்கிக் கொண்டு வருகிறார்.

    அப்போது, 43  கேங்க் என்ற கேங்ஸ்டர் கும்பல் மாணவர்களை போதை மருந்துக்கு அடிமையாக்கி இருப்பதையும், அதுமட்டுமில்லாமல், கொலை, கடத்தல் வேலைகளை செய்துவருவதாகவும் ரஜினியிடம் கூறுகிறார். முதலாவதாக 43-வது கேங்கை சேர்ந்த லிங்கேஷை சந்திக்கிறார்கள். அவனது கும்பலை அடித்து துவம்சம்செய்துவிட்டு, தான் வெளியில் வந்துவிட்டதாக அவனின் பாஸிடம் தெரியப்படுத்துமாறு சொல்லிவிட்டு, தமிழர்கள் வாழும் பகுதிக்கு செல்கிறார்.

    அங்கு ‘கபாலி’ பெயரில் போதை மருந்துக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு கூடம் நடத்தப்பட்டு வருகிறது. அதில் போதைக்கு அடிமையான ரித்விகாவும் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த கூடத்துக்கு ஆசிரியராக கலையரசன் இருக்கிறார். இதையெல்லாம் பார்த்து ரஜினி, தனது பெயரில் நல்லது நடப்பது நினைத்து பூரித்து போகிறார். அப்போது மாணவர்களிடையே நடக்கும் உரையாடும் நிகழ்ச்சியில் தான் கேங்ஸ்டராக எப்படி மாறினேன் என்பதை எடுத்துக் கூறுகிறார். இதன்பிறகு பிளாஸ்பேக் விரிகிறது.

    பிளாஸ்பேக் காட்சியில், ரஜினி ஜெயிலுக்கு போகும்போது, நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவி ராதிகா ஆப்தே, குண்டு காயத்துடன் கிடப்பதை பார்த்துவிட்டுத்தான் செல்கிறார். இதனால், தற்போது ஜெயிலில் இருந்து வெளியே வந்தவுடன் தனது மனைவி உயிருடன் இருக்கிறாளா? தனது குழந்தை என்னவாயிற்று? என்ற குழப்பத்திலேயே இருக்கிறார். இந்நிலையில், கிஷோரின் கும்பலில் போதை மருந்து சப்ளை செய்துவரும் மைம் கோபியை ரஜினி கொன்றுவிடுகிறார். இதையடுத்து, கிஷோர், இனி ரஜினியால் தனது தொழிலுக்கு இடைஞ்சல் இருக்கும் என்றுகூறி அவரை தீர்த்துக்கட்ட பார்க்கிறார்.

    இதன்பின்னர், ரஜினி தனது மனைவியையும் குழந்தையையும் கண்டுபிடித்தாரா? கிஷோரின் அராஜகத்தை அடித்து ஒடுக்கினாரா? என்பதுதான் மீதிக்கதை.

    படத்தின் மிகப்பெரிய பலமே சூப்பர் ஸ்டார் ரஜினிதான். வழக்கமான மாஸ் காட்சிகள் மட்டுமில்லாது சென்டிமெண்ட் காட்சிகளிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். ஆரம்பத்தில் சிறைச்சாலையில் வெளிவரும்போதே மாஸ் காட்டியிருக்கிறார். இவர் படத்தில் பேசும் முதல் வசனமே ‘மகிழ்ச்சி’ என்று சொல்லும்போது நமக்கே மகிழ்ச்சி வருகிறது.

    அந்த மாஸ் காட்சியை தொடர்ந்து, லிங்கேஷை அடித்து துவம்சம் செய்து, டீசரில் வரும் டயலாக்கை பேசிவிட்டு, கடைசியில் நக்கலாக ‘கோழிக்கறி’ என்று சொல்லிவிட்டு செல்லும் காட்சிகளில் எல்லாம் மாஸ் காட்டுகிறார். ஆக்ஷன் காட்சிகளில் இன்னமும் தன்னுடைய அதே ஸ்டைலில் நடித்து கலக்கியிருக்கிறார். வயதானாலும் உங்க அழகும், ஸ்டைலும் குறையல என்ற படையப்பா வசனம்தான் நமக்கு ஞாபகம் வருகிறது. அதேபோல், பள்ளி மாணவர்களிடம் தான் எப்படி கேங்ஸ்டராக மாறினேன் என்பதை விளக்கும் காட்சியிலும் அசத்தியிருக்கிறார்.

    ரஜினியின் நண்பராக கூடவே வரும் ஜான் விஜய் நடிப்பில் அசத்தியிருக்கிறார். இவருக்கான வசனங்கள் எல்லாம் மிகவும் எதார்த்தமாக இருக்கிறது. அதை எதார்த்தமாக செய்துவிட்டு கைதட்டல் பெறுகிறார். தன்ஷிகாவுக்கு இப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரம். ஸ்டைலான பெண்ணாகவும் அழகாக இருக்கிறார். இடைவேளைக்கு பிறகு இவரது கதாபாத்திரம் அப்படியே மாறுவது அனைவருக்கும் ஆச்சர்யத்தை கொடுக்கும். பிளாஸ் பேக் காட்சியில் வரும் நாசரின் நடிப்பும் அற்புதம்.

    கிஷோர் மிரட்டலான வில்லனாக அசத்துகிறார். கலர் கலரான உடையில் ஹைடெக் வில்லனாக தெரிந்தாலும், லோக்கல் ரவுடிபோல்தான் நமக்கு தெரிகிறார். லிங்கேஷ், ரஜினிக்கு இணையாக அவருக்கு எதிரில் அமர்ந்து பேசும் காட்சிகளில் கெத்து காட்டுகிறார். மெட்ராஸ் படத்தில் பார்த்த கலையரசன், இப்படத்தில் அப்படியே நேர் எதிராக வந்து நிற்கிறார். குழந்தைதனமான முகத்தில் எதார்த்தம் கலந்து நடித்திருக்கிறார். தினேஷ், ரஜினிக்கு பாடிகார்டாக வந்திருக்கிறார். படம் முழுக்க ‘ரோபோ’ படத்தில் வரும் சிட்டி போல் படத்தில் ரஜினி செய்யும் கட்டளைகளை செய்துவருகிறார். இருந்தாலும், இறுதிக்காட்சிகளில் தனது நடிப்பால் ரசிகர்களை செண்டிமென்டால் கவர்கிறார்.

    சூப்பர் ஸ்டாரின் மனைவியாக வரும் ராதிகா ஆப்தே, தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். வயதான கெட்டப்பிலும், ரஜினியுடன் இவர் செய்யும் காதல் காட்சிகள் எல்லாம் ரசிக்கும்படியாக இருக்கிறது. 25 வருடத்திற்கு பிறகு தனது கணவனை பார்த்து கண்கலங்கி நிற்கும் காட்சிகளில் எல்லாம் நம்மையும் கலங்க வைத்துவிடுகிறார்.

    படத்தில் 43 கேங்கின் தலைவராக வரும் மலேசியா நடிகர் வின்ஸ்டன் சா, தோற்றத்திலேயே மிரட்டுகிறார். இவருக்கும் ரஜினிக்கு இணையான மாஸ் காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர். போதைக்கு அடிமையான பெண்ணாக வரும் ரித்விகாவின் கதாபாத்திரத்தை அழகாக உருவாக்கியிருக்கிறார்கள். இவர் ரஜினியை எதிர்த்து பேசும் காட்சிகளில் கைதட்டல் பெறுகிறார்.

    இயக்குனர் பா.ரஞ்சித், ரஜினிக்கு ஏற்ற கதையை உருவாக்கி, அதை தனது பாணியில் உருவாக்கியிருக்கிறார். படத்திற்கு மிகப்பெரிய பலமே எதார்த்தமான வசனங்கள்தான். ஆங்காங்கே, ரஜினி பேசும் வசனங்கள், பஞ்ச் டயலாக்காக இல்லாவிட்டாலும், ரசிகர்களை விசிலடிக்க வைத்துள்ளது. ஆனால், ஒருசில காட்சிகளால் படத்திற்கு தொய்வு இருக்கிறது. ரஞ்சித் இயக்கியிருந்த இரண்டு படங்களும் ரஞ்சித் பெயரைச் சொல்லும்படமாக இருந்தது. ஆனால், ‘கபாலி’ முழுக்க முழுக்க சூப்பர் ஸ்டார் ரஜினியை மட்டுமே குறிப்பிடும். அந்தளவுக்கு ரஞ்சித்தின் பங்கு இதில் குறைவுதான் என்று சொல்லவேண்டும்.

    சந்தோஷ் நாராயணன் இசையில் ஏற்கெனவே பாடல்கள் ஹிட்டாயிருந்தாலும், திரையில் பார்க்கும்போது அந்த பாடல்களுக்கு ஜீவன் பிறந்திருக்கிறது. பின்னணி இசையும் மிரட்டலாக இருக்கிறது. முரளியின் ஒளிப்பதிவு மலேசியாவை அழகாக படம்பிடித்திருக்கிறது. செட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளும் மிகவும் தத்ரூபமாக தெரிகிறது. ரஜினிக்கு அமைத்த மாஸ் காட்சிகளில் எல்லாம் இவரது கேமரா அழகாக வேலை செய்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘கபாலி’ ரசிகர்களுக்கு மகிழ்ச்சி
    ×