என் மலர்tooltip icon

    தரவரிசை

    விஷால், தமன்னா, வடிவேலு, சூரி நடிப்பில் வெளியாகியிருக்கும் 'கத்தி சண்டை' திரைப்படம் எப்படியிருக்கிறது? என்பதைக் கீழே பார்ப்போம்...
    படத்தின் ஆரம்பத்தில் கண்டெயினரில் வருகின்ற பணத்தை மடக்கி அதனை கவர்மெண்டிடம் ஒப்படைக்கிறார் போலீஸ் அதிகாரி ஜெகபதி பாபு. அதற்கு அடுத்த காட்சியில் நாயகன் விஷால் என்ட்ரி ஆகிறார். அப்பாவியாக வரும் நாயகன் விஷால், நாயகி தமன்னாவைக் காதலிக்க அவருக்கு பல்வேறு சோதனைகள் நடத்தி தனது தங்கையின் மாப்பிள்ளையாக தேர்வு செய்கிறார் ஜெகபதி பாபு.

    திடீரென ஜெகபதி பாபுவை ஒரு கும்பல் கடத்தி விடுகிறது. அந்த கும்பல் ஜெகபதி பாபுவிடம் 10 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டுகின்றனர். பணம் கொடுக்கவில்லையென்றால் உனது குடும்பத்திற்கு தான் பாதிப்பு என அந்த கும்பல் ஜெகபதி பாபுவை மிரட்ட, அவர் விஷாலுக்கு போன் செய்து வீட்டின் குறிப்பிட்ட பகுதியில் உள்ள டைல்ஸ்க்கு அடியில பணம் இருக்கு எடுத்து வா எனக் கூறுகிறார். ஜெகபதி பாபு கூறியதுபோல பணத்தை எடுத்து செல்லும் விஷால் பணத்தைக் கொடுக்காமல் வில்லன்களிடம் சண்டை போட்டு ஜெகபதி பாபுவைக் காப்பாற்றி விடுகிறார்.

    விஷால் திடீரென ஒருநாள் ஜெகபதி பாபுவிடம் நான் ஒரு சிபிஐ அதிகாரி அன்னைக்கு வந்த கண்டய்னர்ல 300 கோடி பணம் வந்தது. ஆனால் நீ கவர்மெண்டிடம் ஒப்படைத்தது வெறும் 50 கோடிதான் என்று தனது ஐடி கார்டைக் காட்டி மிரட்டுகிறார்.

    இதற்கிடையில் வில்லன் தருண் அரோரா, ஜெகபதி பாபு இருவரும் ஓரிடத்தில் சந்திக்கின்றனர். அப்போது தருண் அரோரா ஜெகபதி பாபுவிடம் நீ நினைக்கிற மாதிரி விஷால் சிபிஐ ஆபிசர் கிடையாது. அவன் என்கூட தான் ஜெயிலில் இருந்தான். கண்டெயினரில் வந்த பணத்தைக் கொள்ளையடிக்க நான் திட்டம் போட்டேன். ஆனால் அவன் என்னோட திட்டத்தை ஒட்டுக்கேட்டு எனக்கு முன்னால வந்து உன்ன மிரட்ட ஆரம்பிச்சிட்டான் என்று கூறுகிறார். இதற்குப்பின் ஜெகபதி பாபு, தருண் அரோரா இருவரும் விஷாலைத் தேடி வருகின்றனர்.

    அதே நேரத்தில் விஷால் யார்? என்னும் விவரம் நாயகி தமன்னாவிற்கு தெரிந்து விடுகிறது. இதனால் விஷாலிடம் தமன்னா சண்டை போட விஷால்-தமன்னா இருவருக்குமான காதலில் விரிசல் விழுகிறது.

    திடீரென நடைபெறும் சிறிய விபத்தில் நாயகன் விஷால் தனது நினைவுகளை இழந்து விடுகிறார்.விஷால் இழந்துவிட்ட பழைய நினைவுகளை மீட்க வரும் டாக்டராக வைகைப்புயல் வடிவேலு இரண்டாம் பாதியில் என்ட்ரி ஆகிறார்.
    இழந்த நினைவுகளை விஷால் மீண்டும் பெற்றாரா? உண்மையில் விஷால் யார்? தமன்னா-விஷால் இருவரும் ஜோடி சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.

    நாயகன் விஷால் நடனம்,காமெடி,சண்டைக்காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். நாயகி தமன்னா கவர்ச்சியான உடைகளில் வந்து ரசிகர்களின் கண்களை குளிர செய்கிறார். காதல் மற்றும் பாடல் காட்சிகளில் வந்து செல்கிறார். எனினும் சைக்கலாஜி மாணவியாக வரும் தமன்னாவின் நடிப்பு மனதில் பதியவில்லை. படத்தின் முதல்பாதி காட்சிகளில் சூரியும், இரண்டாம் பாதி காட்சிகளில் வடிவேலுவும் ரசிகர்களை சிரிக்க வைக்கின்றனர். குறிப்பாக வடிவேலு வரும் காட்சிகளில் ரசிகர்கள் கரகோஷம் எழுப்புகின்றனர்.

    வழக்கமாக தனது படங்களில் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர் சுராஜ் இந்த படத்தையும் காமெடியை மையமாக வைத்தே எடுத்திருக்கிறார். படத்தில் வடிவேலு, சூரி என முன்னணி நகைச்சுவை நடிகர்களை சிறப்பாக கையாண்டிருக்கிறார். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் படம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். திரைக்கதையை சரியாக கையாளாததால் படத்தின் ஒருசில இடங்களில் சற்றே தொய்வு ஏற்படுகின்றது.
     
    ஹிப்ஹாப் ஆதியின் இசையில் 'நான் கொஞ்சம் கருப்பு தான்' பாடல் காட்சி ரசிக்க வைக்கின்றது. மற்ற பாடல்கள் எதுவும் மனதில் ஒட்டவில்லை. பின்னணி இசையில் ஹிப்ஹாப் ஆதி ஸ்கோர் செய்கிறார். பாடல், சண்டைக்காட்சிகளுக்கு ஒளிப்பதிவாளர் ரிச்சர்டு எம்.நாதன் தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.

    மொத்தத்தில் 'கத்தி சண்டை' காமெடி சண்டை.
    அமீர்கான் நடிப்பில் வெளிவந்துள்ள ‘தங்கல்’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    அரியானாவில் உள்ள ஒரு கிராமத்தில் சாதாரண குடும்பத்தை சேர்ந்த அமீர்கானுக்கு மல்யுத்தத்தில் அதிக ஈடுபாடு உண்டு. மல்யுத்தத்தில் சாதித்து நாட்டுக்கு பல பதக்கங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது அவரது ஆசை. தேசிய அளவில் மல்யுத்தத்தில் சாதிக்கும் அமீர்கான் தன்னுடைய குடும்ப சூழ்நிலையால் அடுத்த நிலையை எட்ட முடியாமல் போகிறது.

    எனவே, திருமணத்திற்கு பிறகு தனக்கு பிறக்கப் போகும் மகனையாவது மல்யுத்தத்தில் சாதிக்க வைக்க வேண்டும் என்று எண்ணுகிறார். ஆனால், அவருக்கோ அடுத்தடுத்து பிறக்கும் நான்கு குழந்தைகளும் பெண் குழந்தைகளாகவே பிறக்கின்றன. பெண் குழந்தைகளால் மல்யுத்தத்தில் சாதிக்க முடியாது என்று நினைத்துக் கொண்டு தனது ஆசை நிறைவேறாத வருத்தத்தில் இருக்கிறார் அமீர்கான்.

    இந்நிலையில், ஒருநாள் அவரது குழந்தைகளில் மூத்த பெண்கள் இருவரும் ஒரு சிறிய தகராறில் இரண்டு பசங்களை புரட்டி எடுக்க, அதை பார்க்கும் அமீர்கான், பெண் குழந்தைகளாலும் சாதிக்க முடியும் என்று அந்த குழந்தைகள் இருவரையும் மல்யுத்த பயிற்சியில் களமிறக்குகிறார்.

    சிறு வயது முதலே இருவருக்கும் பயிற்சி கொடுக்கும் அமீர்கான், கடைசியில் தன்னால் சாதிக்க முடியாததை தனது பெண் பிள்ளைகளை வைத்து சாதித்தாரா? என்பதே மீதிக்கதை.

    இப்படம் மல்யுத்த வீரர் மகாவீர் சிங் போகட்டின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. அமீர்கான் அந்த கதாபாத்திரமாக நடித்திருக்கிறார் என்று சொல்வதைவிட, வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். மூன்றும் பெண் குழந்தையாய் பிறந்தும், நான்காவதாக ஆண் குழந்தை பிறக்காதா? என்று ஏங்கும் இடங்களில் நம்மையும் ஏங்க வைத்துவிடுகிறார்.

    அதேபோல், மல்யுத்த பயிற்சிக்காக தன்னுடைய விளைநிலத்தை சீர்படுத்தும் இடங்களில் பரிவு ஏற்பட வைத்திருக்கிறார். அப்பாவாகவும், பயிற்சியாளராகவும் அசத்தியிருக்கிறார். மேலும், இந்த வயதிலும் தன்னை வருத்திக் கொண்டு உடல் எடையை கூட்டி, குறைத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

    அமீரின் மனைவியாக வரும் சாக்க்ஷி தன்வர், நான்கு பெண்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். நடிப்பிலும் ஓகே சொல்ல வைக்கிறார். அமீர்கானின் குழந்தைகளாக வரும் நான்கு பெண்களும் தங்கள் கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

    இப்படத்தில் அமீர்கானுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், அனைத்து கதாபாத்திரங்களும் சம பலம் கொடுத்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் நிதேஷ் திவாரி. ஒரு சாதாரண கதையம்சமுள்ள படத்தில் செண்டிமென்ட், எதார்த்தமான காமெடி மற்றும் தந்தை-மகள் பாசப்பிணைப்பு என அனைத்தையும் சுவாரஸ்யமாகவும், அழகாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

    ப்ரீதம் சக்கரபோர்த்தியின் இசையில் பாடல்கள் சில ஏற்கெனவே ஹிட்டாகியுள்ள நிலையில், காட்சிகளுக்கேற்றவாறு பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். சேது ஸ்ரீராமின் ஒளிப்பதிவு மல்யுத்த காட்சிகளை எல்லாம் சிறப்பாக படமாக்கியிருக்கிறது. அதேநேரத்தில் கிராமத்தின் பசுமையையும், வறுமையையும் தெளிவாக கண்முன்னே கொண்டுவந்துள்ளது.

    மொத்தத்தில் ‘தங்கல்’ பதக்கம் வெல்லும்.
    சசிகுமார், கோவை சரளா, சங்கிலி முருகன், தான்யா ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘பலே வெள்ளையத் தேவா’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    நாயகன் சசிகுமார் படித்து முடித்துவிட்டு அரசாங்க வேலைக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அவருடைய அம்மா ரோகிணி போஸ்ட் மாஸ்டராக பணி செய்து வருகிறார். இந்நிலையில், ரோகிணிக்கு மதுரை பக்கத்தில் உள்ள வயலூர் என்ற கிராமத்திற்கு பணி மாற்றம் வருகிறது.

    அந்த ஊரில் கேபிள் டிவி நடத்தி வரும் வளவன், எந்த வீட்டிலும் டிஷ் ஆன்டெனா மாட்டக்கூடாது என்றும் தனது கேபிள் டி.வி.யையே அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்றும் அராஜகம் செய்து வருகிறார். இதனால், அந்த ஊரில் யாரும் டிஷ் ஆன்டெனா வாங்குவதே கிடையாது.

    அதே ஊரில், கறிக்கடைக் காரர் பாலா சிங்கின் மகளான நாயகி தான்யா, மகளிர் சுயஉதவிக் குழுவில் பணியாற்றுகிறார். இவரை சசிகுமார் ஒருதலையாக காதலிக்கிறார். அதே ஊரில் வசிக்கும் கலகலப்பான தம்பதிகளான கோவை சரளாவையும், சங்கிலி முருகனையும் கைக்குள் போட்டுக் கொண்டு நாயகியை பின் தொடர்கிறார் சசிகுமார்.

    இந்நிலையில், அந்த ஊரில் சசிகுமார் வீட்டில் மட்டும் டிஷ் ஆண்டெனா இருப்பதை பார்க்கும் வளவன், ரோகிணியை அழைத்து மிரட்டுகிறார். இதனால், ரோகிணி தன்னுடைய வீட்டில் உள்ள டிஷ் ஆன்டெனாவை நீக்கி விடுகிறார். தாயை மிரட்டிய வளவனை, அடித்து உதைக்கிறார் சசிகுமார். இதற்கு பழிவாங்க திட்டமிடுகிறார் வளவன்.

    அதன்படி, போலீஸ் நிலையத்தில் சென்று தன்னுடைய ஆட்களில் ஒருவனின் கையை சசிகுமார் உடைத்து விட்டதாக புகார் கொடுக்கிறார் வளவன். அதன்படி, சசிகுமாரும் கைதாகிறார். போலீஸ் நிலையத்தில் சசிகுமார் மீது புகார் இருப்பதால், அவருக்கு அரசாங்க வேலை கிடைக்காத சூழ்நிலை உருவாகிறது.

    பின்னர், ஜெயிலில் இருந்து வெளியே வரும் சசிகுமார், விவசாயம் செய்யப்போவதாக தனது அம்மாவை சமாதானப்படுத்துகிறார். இதற்கிடையில், தன்னை ஜெயிலுக்கு அனுப்பிய வளவனை தனது பாணியில் எப்படி வீழ்த்துவது என்று திட்டம் போடுகிறார். இறுதியில், அவரை எப்படி பழிவாங்கினார்? நாயகனும், நாயகியும் இணைந்தார்களா? என்பதே மீதிக்கதை.

    சசிகுமார் தனக்கேற்ற கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர். அதேபோல், இந்த படத்திலும் தனக்கு ஏற்றமாதிரி கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். முற்பாதியில், கோவை சரளா, சங்கிலி முருகன் தம்பதிகளிடம் சேர்ந்துகொண்டு நாயகியை விரட்டும் காட்சிகளில் அவருக்கே உரித்த ஸ்டைலில் நடித்திருக்கிறார். நடனத்தில் மட்டும் இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் தேவை.

    நாயகி தான்யா, பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் பேத்தி. பார்க்க அழகாக இருக்கிறார். நடிப்பிலும் தனது தாத்தாவின் பெயரை காப்பாற்றியிருக்கிறார். கோவை சரளா - சங்கிலி முருகன் இருவரும் காமெடிக்காக இணைக்கப்பட்டிருந்தாலும், படத்தில் இவர்களுடைய காமெடி பெரிதாக எடுபடவில்லை. செல்பி காத்தாயி என்ற கதாபாத்திரத்தில் வரும் கோவை சரளா படம் முழுக்க செல்பி எடுப்பதுபோல் வரும் இவருடைய நடிப்பு ரொம்பவும் செயற்கையாக இருப்பதுபோல் தெரிகிறது.

    வளவன் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். ரோகிணி ரொம்பவும் தைரியமான பெண்ணாகவும், பொறுப்பான அம்மாவாகவும் வந்து தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். மற்றபடி, படத்தில் எந்த கதாபாத்திரங்களும் மனதில் பதியவில்லை.

    ஒரு கிராமத்து கதையில் காதல், காமெடி, பகை என அனைத்தும் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் சோலை பிரகாஷ். ஆனால், படத்தில் காமெடி என்று எதிர்பார்த்து சென்றவர்களுக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. நிறைய தமிழ் சினிமாக்களில் அரைத்த மாவையே இதிலும் சேர்த்து அரைத்திருக்கிறார். அதனால், படம் பெரிய அளவில் ரசிகர்கள் மனத்தில் ஒட்டவில்லை.

    ரவீந்திரநாத் குரு ஒளிப்பதிவு காட்சிகளை ரொம்பவும் கலர்புல்லாக படமாக்கியிருக்கிறது. இவருடைய ஒளிப்பதிவு படத்திற்கு கொஞ்சம் பக்கபலமாக இருக்கிறது. தர்புகா சிவாவின் இசையில் பாடல்கள் பெரிதளவில் மனதில் பதியாவிட்டாலும், பின்னணி இசையில் தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.

    மொத்தத்தில் ‘பலே வெள்ளையத் தேவா’ பலவீனம்.
    எஸ்.வி.சேகர், விசு நடிப்பில் 34 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ‘மணல் கயிறு’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘மணல் கயிறு -2’ வெளிவந்திருக்கிறது. படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்.
    முதல் பாகத்தில் திருமண புரோக்கராக வரும் விசுவிடம் எட்டு கண்டிஷன்கள் போட்டு, அவர் பார்த்து வைக்கும் சாந்தி கிருஷ்ணாவை திருமணம் செய்து கொள்கிறார் எஸ்.வி.சேகர். அதன்பிறகு, தனது எட்டு கண்டிஷன்களுக்கும் அவள் சற்றும் பொருத்தமானவள் இல்லை என்று தெரிந்ததும், வேறு வழியில்லாமல் அவளுடனேயே 34 வருடங்கள் வாழ்ந்து விடுகிறார்.

    35 வருடங்களுக்கு பிறகு மணல் கயிறு 2-ம் பாகத்தில் எஸ்.வி.சேகருக்கு திருமண வயதில் பெண் இருக்கிறாள். அவள்தான் பூர்ணா. திருமணத்தில் பூர்ணாவுக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை. எந்நேரமும் பிசினஸிலேயே பிசியாக இருக்கிறாள். இந்நிலையில், பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் திருமணம் செய்ய சம்மதிக்கும் பூர்ணா, தனது அப்பா போலவே தனக்கு வரும் மாப்பிள்ளை தன்னுடைய 8 கண்டிஷன்களுக்கும் ஒத்துப்போனவராக இருக்க வேண்டும் என்று கூறுகிறாள்.

    தனக்கு பெண் பார்த்த விசுவையே தனது பெண்ணுக்கும் மாப்பிள்ளை தேட அழைக்கிறார் எஸ்.வி.சேகர். அவர் பூர்ணாவின் எட்டு கண்டிஷன்களுக்கும் பொருத்தமானவர் அஸ்வின் சேகர்தான் என்று கூற இருவருக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு பிறகு, அஸ்வின் சேகர் தன்னுடைய 8 கண்டிஷன்களுக்கும் எதிரானவர் என்பது பூர்ணாவுக்கு தெரிய வருகிறது.

    இதன்பிறகு இருவரும் ஒன்று சேர்ந்து வாழ்ந்தார்களா? இல்லையா? என்பதை காமெடி கலந்து சொல்லியிருக்கிறார்கள்.

    முதல்பாகத்தில் வந்த எஸ்.வி.சேகர், விசு, குரியகோஸ் ஆகியோர் அதே கதாபாத்திரங்களை இந்த பாகத்திலும் ஏற்று நடித்திருக்கிறார்கள். தங்களது அனுபவம் மிகுந்த நடிப்பை இதிலும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். முதல் பாகத்தில் நடித்த சாந்தி கிருஷ்ணா வேடத்தில் ஜெயஸ்ரீ கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.

    நாயகன் அஸ்வின் சேகர் ஆக்ஷன், காமெடி, செண்டிமெண்ட் என எல்லா ஏரியாவிலும் தனது பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார். பூர்ணாவுக்கு இப்படத்தில் பலமான கதாபாத்திரம். அவருடைய நடிப்பை பிரதிபலிக்கக்கூடிய கதாபாத்திரம் என்பதால் அவரும் தன் பங்குக்கு சிறப்பான நடிப்பை கொடுத்து கைதட்டல் பெறுகிறார்.

    ஜோசியராக வரும் எம்.எஸ்.பாஸ்கர், அரசியல்வாதியாக வரும் நமோ நாராயணன், விளம்பர படம் இயக்குபவராக வரும் ஜெகன், அவரது உதவியாளராக வரும் ஜார்ஜ் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். நாரதர் நாயுடுவின் உதவியாளராக வரும் சுவாமிநாதன், விசுவுக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்.

    முதல் பாதியில் எப்படி காமெடி, செண்டிமெண்ட், சமூக கருத்துக்கள் இருந்ததோ, அதையே இரண்டாம் பாகத்திலும் கொடுத்திருக்கிறார் இயக்குனர் மதன்குமார். படத்தின் முதல் பாதி நாடகத்தன்மையுடன் இருந்தாலும் கலகலப்புடன் நகர்வதால் படம் பெரிதாக போரடிக்கவில்லை. இரண்டாம் பாதியில் பூர்ணாவின் திருமணம், அதன்பிறகு நடக்கும் பிரச்சினைகள், செண்டிமெண்ட் என கொஞ்சம் மெதுவாக நகரும் திரைக்கதை ரசிகர்களை சோர்வடைய வைக்கிறது. இருப்பினும், பாசிட்டிவான கிளைமாக்ஸ் ரசிகர்களை திருப்தியடைய வைக்கிறது.

    எஸ்.வி.சேகரின் திரைக்கதையோடு மதன்குமாரின் இயக்கமும் இணைந்து பயணித்திருப்பது படத்தை கொஞ்சம் சுவாரஸ்யமாக கொண்டு சென்றிருக்கிறது.

    தரணின் இசையில் பாடல்கள் நன்றாக இருக்கிறது. குறிப்பாக, அனிருத் பாடியுள்ள ‘அடியே தாங்கமாட்டே’ பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது. பின்னணி இசையும் ஓ.கே. ரகம்தான். ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக கைகொடுத்திருக்கிறது.

    மொத்தத்தல் ‘மணல் கயிறு 2’ அவிழ்க்க முடியாத முடிச்சு.
    ரிச்சர்டு, மனோ சித்ரா நடிப்பில் வெளிவந்துள்ள அந்தமான் படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்..
    அந்தமானில் இருந்து சென்னை வரும் விமானம் நடுவழியில் விபத்துக்குள்ளாகிறது. அப்போது, அதில் பயணம் செய்த ஒரு கர்ப்பிணிக்கு குழந்தை பிறக்கிறது. தாய் இறந்துவிட, குழந்தையை தலைவாசல் விஜய் தனது காப்பகத்தில் வைத்து வளர்த்து வருகிறார். அந்த குழந்தைதான் நாயகன் ரிச்சர்டு. வளர்ந்து பெரியவனாகும் ரிச்சர்டு, மண் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி படிப்பை படித்து வருகிறார்.

    ரிச்சர்டு தனது ஆராய்ச்சியின் மூலம் ஒரு மெஷின் ஒன்றை கண்டுபிடிக்கிறார். மண்ணின் தன்மை பற்றி அனைவரும் எளிதில் அறிந்துகொள்ளக்கூடிய வகையில் அந்த மெஷினை உருவாக்கி வருகிறார். இதற்கிடையில், நாயகியை எதேச்சையாக சந்திக்கும் நாயகன் முதலில் அவளுடன் நட்பாக பழகிறார். பிறகு, அந்த நட்பு காதலாகிறது.

    இந்நிலையில், பல அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்துவிழுந்து நிறைய பேர் இறக்கிறார்கள். இடிந்து விழுந்த கட்டிடம் எழுப்பப்பட்ட இடத்தின் மண்ணை நாயகன் ஆராய்ச்சி செய்து பார்த்ததில் அந்த இடத்தில் கட்டிடமே எழுப்ப முடியாத அளவில் மண்ணின் தன்மை இருப்பதை கண்டறிகிறார். இந்த விபத்துக்கு காரணமான வில்லனுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி, கமிஷனரிடம் புகாராக கொடுக்கிறார்.

    கமிஷனரும் வில்லனை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிடுகிறார். அதன்படி, வில்லனும் கைதாகிறார். பின்னர், தனது பண பலத்தாலும், அதிகார பலத்தாலும் சிறையில் இருந்து வெளியே வரும் வில்லன், தனது ஆட்களை வைத்து தனக்கு எதிராக ஆதாரங்களை திரட்டிய ரிச்சர்ட்டை அடித்து துவம்சம் செய்கிறார்.

    ரிச்சர்டு இறந்துவிட்டதாக வில்லன் நினைத்துக் கொண்டிருக்கையில், அவனை காப்பாற்றி தலைவாசல் விஜய்யும், நாயகியும் அந்தமானுக்கு அனுப்பி வைக்கிறார்கள். அந்தமானுக்கு செல்லும் நாயகன், அங்கேயும் வில்லன் சட்டவிரோதமாக போதை மருந்து கடத்திக் கொண்டிருப்பதை கண்டுபிடிக்கிறார். இதையறியும் வில்லன், நாயகன் உயிரோடு இருப்பதை அறிந்து அவனை தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறார்.

    இதிலிருந்து நாயகன் தப்பித்தாரா? தனது காதலியுடன் மீண்டும் இணைந்தாரா? என்பதே மீதிக்கதை.

    நாயகன் ரிச்சர்டு கதாநாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் மற்றொரு படம். இப்படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆராய்ச்சி மாணவர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். நாயகி மனோசித்ரா பார்க்க அழகாக இருக்கிறார். நடிப்பிலும் ஓகே சொல்ல வைக்கிறார்.

    தலைவாசல் விஜய், மனோபாலா, கிரேன் மனோகர், சாம்ஸ், போண்டா மணி உள்ளிட்டோருக்கு சரியான வாய்ப்புகள் கொடுக்கவில்லை. இருப்பினும், தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள். இயக்குனர் ஆதவன் உண்மைக் கதையோடு சேர்ந்த சமூகத்திற்கு அத்தியாவசியமான கருத்தை படத்தின் மூலம் சொல்ல வந்திருக்கிறார். நடிகர்களை இன்னும் கொஞ்சம் அழகாக வேலை வாங்கியிருக்கலாம். திரைக்கதையில் விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம்.

    செல்வாவின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். செல்வதாசனின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

    மொத்தத்தில் ‘அந்தமான்’ பார்க்கலாம்.
    புதுமுகங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள ‘விருகம்’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    நாயகன் சிவாவுக்கு நான்கு நண்பர்கள். நண்பர்கள் அனைவரும் ஒவ்வொரு வேலையில் இருக்கிறார்கள். இந்நிலையில், நண்பர்களில் ஒருவர் கதை எழுதுவதில் வல்லவர். அவருக்கு தினமும் இரவில் மர்ம நபர் ஒருவர் தனது நண்பர்களை கொலை செய்வது போல் கனவு வருகிறது.

    அப்படி இவர் கனவில் கொல்லப்படும் ஒவ்வொரு நண்பனும் மறுநாள் காணாமல் போகிறார்கள். இதனால் பயந்துபோன அவர், இதுபற்றி நாயகன் சிவாவிடம் கூறுகிறார். சிவாவும் தனது நண்பனின் கனவில் தோன்றிய இடத்திற்கு சென்று அங்கு ஏதாவது தடயம் இருக்கிறதா? என்று தேடிப் பார்க்கிறார்.

    ஆனால், அப்படி அவர்கள் கொலை செய்யப்பட்டதற்காக தடயங்கள் எதுவுமே அந்த இடத்தில் இருப்பதில்லை. உண்மையில் நடந்தது என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    தமிழ் சினிமாவுக்கு வழக்கமான பழிவாங்கும் கதையையே ‘விருகம்’ படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சிவா. இவரே நாயகனாகவும் படத்தில் நடித்திருப்பதால், இவரிடமிருந்து நடிப்பாவது புதிதாக வரும் என்றால் அதுவும் இல்லை. நடிப்பை முகத்தில் கொண்டுவர ரொம்பவுமே சிரமப்பட்டிருக்கிறார். ஆக்ரோஷம், ரொமான்ஸ் என எதுவுமே இவரிடமிருந்து பெரிதாக வெளித் தெரியவில்லை.

    நாயகியாக ஜென்னிஸ், ஒரு சில காட்சிகள் வந்தாலும், மனதில் பதிய மறுக்கிறார். நடிப்பிலும் சுமார் ரகம்தான். நண்பர்களாக வருபவர்களும் புதுமுகங்கள் என்பதால் அவர்களிடமிருந்தும் பெரிதாக நடிப்பை எதிர்பார்க்கமுடியவில்லை. இயக்குனர் சிவா, திரில்லர் கதையில் இன்னும் ஏதாவது புதுமையை புகுத்தியிருக்கலாம். அதேபோல், கதாபாத்திரங்களையும், இன்னும் கொஞ்சம் சிரமப்பட்டு வேலை வாங்கி நடிக்க வைத்திருக்கலாம்.

    பிரபுவின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையில் திரில்லிங் பிரதிபலிக்கவில்லை. எஸ்.ஏ.ராஜீன் ஒளிப்பதிவும் பெரிதாக எடுபடவில்லை.

    மொத்தத்தில் ‘விருகம்’ வெறுமை.
    2014-ல் ஹாலிவுட்டில் வெளிவந்த ‘3 days to kill’ சினிமா தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவந்திருக்கிறது. அப்படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    அமெரிக்காவின் சிஐஏ அமைப்பு உல்ப் தலைமையில் இயங்கும் பயங்கரவாத கும்பலை கண்டுபிடிக்க 10 வருடங்களாக முயற்சி செய்து வருகிறது. உல்ப் எப்படி இருப்பான் என்பது சிஐஏ அமைப்புக்கு தெரியாது. இருப்பினும், அவனது கும்பலின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது சிஐஏ. அதன்படி, ஜெர்மனியில் உல்ப் கும்பல் அணு ஆயுதங்களை கைமாற்றப் போவதாக செய்திகள் கிடைக்கிறது.

    அவனையும் அவனது கும்பலையும் பிடிக்க கெவின் கான்ஸ்டர் தலைமையில் குழு களமிறங்குகிறது. ஜெர்மனியில் உல்ப் கும்பலைப் பிடிக்க முற்படும்போது, இருவருக்கும் மிகப்பெரிய சண்டை நடக்கிறது. இதில் உல்ப் கும்பல் அனைவரையும் தாக்கிவிட்டு, தப்பிக்க நினைக்கிறது. அப்போது கெவின் தனியொரு ஆளாக இருந்து அவர்களை சுட்டு வீழ்த்துகிறார்.

    இதில், ஒருவன் மட்டும் தப்பித்துச் செல்கிறான். அந்த நேரத்தில் கெவினின் உடல்நிலையும் மோசமாகி மயக்கமடைகிறார். அவரது உடல்நிலையை காரணம் காட்டி சிஐஏ அவரை பணியில் இருந்து விலக்குகிறது. மேலும், டாக்டர்களும் அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமாகி வருவதாகவும் கூடிய விரைவில் அவர் இறந்துவிடக்கூடும் என்று கூறுகிறார்கள்.

    இந்நிலையில், கெவின் தனது வாழ்நாளின் கடைசியில் தனது குடும்பத்துடன் சேர்ந்து வாழ முடிவு செய்கிறார். இதற்காக தன்னை விட்டு பிரிந்துசென்ற மனைவியையும், குழந்தையும் தேடி செல்கிறார். அவர்களை சந்தித்து இனிமேல் சிஐஏ வேலைக்கு செல்லமாட்டேன் என்ற வாக்குறுதியோடு சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

    இந்நிலையில், உல்ப்பை தேடிக் கண்டுபிடிக்க சிஐஏ அமைப்பால் நியமிக்கப்பட்ட பெண் ஒருத்தி, கெவினை சந்திக்கிறாள். அவள் கெவினை வற்புறுத்தி உல்ப்பை கண்டுபிடிக்க உதவி கோருகிறார். முதலில் இதற்கு கெவின் மறுக்கிறார். ஆனால், அவளோ கெவியின் வாழ்நாளை நீட்டிப்பதற்காக விலையுயர்ந்த மருந்து ஒன்றை தான் வைத்திருப்பதாகவும், அந்த மருந்து வேண்டுமானால், தனக்கு உதவி செய்யவேண்டும் என்று கூறுகிறாள்.

    தனது வாழ்நாளை நீட்டிக் கொள்வதற்காக அவளுக்கு உதவி செய்வதற்கு கெவின் முன்வருகிறார். ஆனால், இந்த விஷயம் தனது குடும்பத்துக்கு தெரியாமல் பார்த்துக்கொள்கிறார்.

    கடைசியில் கெவின் எப்படி தனது குடும்பத்தை சமாளித்து உல்ப்பை தேடும் பணியை செய்து முடித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    கெவின் காஸ்ட்னர் செண்டிமென்ட், ஆக்ஷன் என இரண்டிலும் தனது அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார். தனது குடும்பத்திற்கு தெரியாமல் உல்ப்பை தேடும் காட்சிகளிலும், அதேநேரத்தில் தனது குடும்பத்திலிருந்து அழைப்பு வந்ததும், அந்த பணியை அப்படியே விட்டுவிட்டு ஓடி வருவதும் என ஆங்காங்கே ரசிக்க வைக்கிறார்.

    மனைவியாக வரும் கோனி நீல்சன், மிகவும் அழகாக வந்து போயிருக்கிறார். செண்டிமென்ட் காட்சிகளில் எல்லாம் ரசிக்க வைக்கிறார். இவர்களுக்கு குழந்தையாக நடித்திருப்பவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தில் சண்டைக் காட்சிகளுக்கு இணையாக செண்டிமென்ட் காட்சிகளை வைத்து ஓரளவுக்கு ரசிக்கும்படி படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் ஜோசப் மெக்கிண்டி நிக்கோல். சண்டை காட்சிகளை எதிர்பார்த்து சென்றவர்களுக்கு ஓரளவுக்கே திருப்தி ஏற்படும். மற்றபடி படம் ரசிக்கும்படி இருக்கிறது.

    தியரி ஆர்போகஸ்ட் ஒளிப்பதிவு படத்தில் நேர்த்தியாக இருக்கிறது. ரச்செலின் இசையும் மிரட்டல்.

    மொத்தத்தில் ‘த்ரி டேஸ் டு கில்’ ரசிக்கலாம்.
    விக்ரம் பிரபு - ஷாமிலி ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘வீரசிவாஜி’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    பாண்டிச்சேரியில் கால் டாக்சி டிரைவராக இருக்கிறார் விக்ரம் பிரபு. இவருக்கு சொந்தமென்று சொல்வதற்கு யாருமில்லை என்றாலும், வினோதினி இவரை தம்பி போல பார்த்துக் கொள்கிறார். இவரும் வினோதினியை அக்கா என்று சொல்லி அவருக்கு உறுதுணையாக இருக்கிறார்.

    வினோதினிக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில், ஒரு நாள் விபத்தில் நாயகியை சந்திக்கும் விக்ரம் பிரபு பார்த்தவுடனேயே காதல் வயப்படுகிறார். மோதலில் தொடங்கும் இவர்களின் சந்திப்பு நாளடைவில் காதலாக மாறுகிறது. அதைத் தொடர்ந்து யோகி பாபு, ரோபோ சங்கர் ஆகியோருடனும் இவருக்கு நட்பு ஏற்படுகிறது.

    இந்நிலையில், வினோதினியின் குழந்தைக்கு மூளையில் கட்டி வர, உடனே ஆபரேசனுக்கு ரூ.25 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. உடனே, விக்ரம் பிரபு தன்னிடம் இருக்கும் கால்டாக்சியை விற்று ரூ. 5 லட்சம் கொண்டு வருகிறார். ஆனால், அந்த பணம் ஆபரேசனுக்கு போதுமானதாக இல்லாததால் யோகி பாபு, ரோபோ சங்கரின் மூலம் குறைந்த பணத்துக்கு அதிக பணம் தருவதாக கூறும் ஜான் விஜய்யை சந்திக்கிறார்.

    அவரிடம் தன்னிடம் இருக்கும் ரூ.5 லட்சத்தையும் கொடுக்கிறார் விக்ரம் பிரபு. மறுநாள் பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு கூறும் ஜான் விஜய், மறுநாள் யாருக்கும் தெரியாமல் ஓடி விடுகிறார். இதனால் என்னசெய்வதென்று தெரியாமல் விழிக்கும் விக்ரம் பிரபு, அவரை தேடிக் கண்டுபிடிக்க புறப்படுகிறார். ஒருகட்டத்தில் ஜான் விஜய்யை பிடித்து, தனக்கு சேரவேண்டிய மொத்த பணத்தையும் எடுத்துக் கொண்டு திரும்பி வரும் வேளையில், இவருடைய கார் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகிறது.

    இந்த விபத்தில் விக்ரம் பிரபுவின் தலையில் அடிப்பட்டு, அவருக்கு பழைய நினைவுகள் எல்லாம் மறந்து போகிறது. இறுதியில், விக்ரம் பிரபுவுக்கு பழைய நினைவுகள் திரும்பி வந்ததா? இவர் கொண்டு வந்த பணத்தை வைத்து குழந்தைக்கு ஆபரேஷன் நடந்ததா? என்பதே மீதிக்கதை.

    விக்ரம் பிரபு கால் டாக்சி டிரைவராக வந்தாலும், படம் முழுக்க கலர்புல் உடையுடனே வருகிறார். இவருக்கு ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் சிறப்பாக வருகிறது. ஆனால், ரொமான்ஸ் காட்சிகளில்தான் ரொம்பவும் சிரமப்பட்டு நடித்திருக்கிறார். அதேபோல், கலகலப்பான காட்சிகளிலும் நடிக்க திணறியிருக்கிறார்.

    குழந்தை நட்சத்திரமாக ரசித்த ஷாமிலி நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது கதாநாயகியாக மாறியிருக்கிறார். விஜய் ரசிகையாக வரும் இவருடைய நடிப்பு பரவாயில்லை. வழக்கமான ஹீரோயின்போல் காதல், டூயட்டுக்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறார்.

    படத்திற்கு மிகப்பெரிய பலமே யோகி பாபு, ரோபோ ஷங்கர் கூட்டணியின் காமெடிதான். ரமேஷ் - சுரேஷ் என வரும் இவர்களின் காமெடி படம் முழுக்க வந்து ரசிகர்களை கலகலப்பூட்டியிருக்கிறது. ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் வழக்கம்போல் சத்தம் போட்டுக்கொண்டே வந்து மிரட்டுகிறார்கள்.

    படத்தின் முதல்பாதியை மிகவும் கலகலப்பாக கொண்டு போயிருக்கிறார் இயக்குனர் கணேஷ் விநாயக். முதல் பாதி எதை நோக்கி பயணிக்கிறது என்பது தெரியாமலே நகர்ந்தாலும், குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு சூடு பிடிக்கிறது. படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள் இருக்கின்றன. கடைசியில் படத்தை எங்கு முடிப்பது என்று தெரியாமல் குழம்பி நின்றுள்ளார் இயக்குனர்.

    இமான் இசையில் பாடல்கள் எல்லாம் சூப்பர். குறிப்பாக சொப்பன சுந்தரி பாடல் எழுந்து நின்று ஆட வைக்கிறது. தாறுமாறு பாடலும் ரசிக்கும் ரகம். பின்னணி இசை சிறப்பாக இருக்கிறது. சுகுமார் ஒளிப்பதிவு காட்சிகளை தெளிவாக படமாக்கியிருக்கிறது.

    மொத்தத்தில் ‘வீர சிவாஜி’ வீரம் குறைவு
    மலையாளத்தில் ‘ஆடுபுலியாட்டம்’ என்ற பெயரில் ஜெயராம் - ரம்யா கிருஷ்ணன் நடித்த படமே தமிழில் ‘செண்பக கோட்டை’ என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டுள்ளது. படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    காட்டுவழியாக செல்லும் அரசர் வேடர் குலத்தை சேர்ந்த பெண்ணை பார்த்தவுடன் காதல்வயப்படுகிறார். அந்த பெண்ணின் தந்தையிடம் பேசி அவளை திருமணமும் செய்துகொள்கிறார். பின்னர் அவளுக்காக அந்த காட்டுக்குள்ளேயே செண்பக கோட்டை ஒன்றை கட்டிக் கொடுத்து, அவளை அதற்கு அரசியாக முடிசூட்டி விட்டு தனது நாட்டுக்கு திரும்புகிறார்.

    இவர் சென்ற நேரம், எதிரிகள் இவரது நாட்டை சூழ்ந்துவிடுகின்றனர். இவரது உயிருக்கும் ஆபத்து ஏற்படுகின்றன சூழ்நிலை உருவாகிறது. இதனால், உயிரை காப்பாற்றிக் கொள்ள செண்பக கோட்டைக்கு வருகிறார். செண்பக கோட்டையில் அரசியாக இருக்கும் வேடர் குலத்து பெண், அரசனின் உயிரை காப்பாற்றுவதற்காக தனது உயிரை மாய்த்துக் கொண்டு, பேயாக மாறி அந்த கோட்டையையும் மன்னனையும் காப்பாற்றி வருகிறாள்.

    பின்னர், பல நூறு வருடங்களுக்கு பிறகு கதை நகர்கிறது. செண்பகக் கோட்டையில் வசித்து வந்த அனைவரும் இறந்துபோக அந்த கோட்டையே பாழடைந்து போகிறது. ஆனால், அந்த பெண்ணின் ஆவி மட்டும் அந்த கோட்டையை சுற்றி வருகிறது. இந்நிலையில், அந்த ஆவியை சாந்தப்படுத்துவதற்காக கோட்டையின் வாயிலில் காளி கோவில் ஒன்றை நிறுவி, அந்த கோவிலில் பூஜை செய்து வருகிறார் ரம்யா கிருஷ்ணன்.

    கணவனை இழந்த ரம்யா கிருஷ்ணனுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில், செண்பக கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களை அபகரிக்க நினைக்கும் நரேன், அதை செய்ய முடியாததால் ஜெயராம் உதவியை நாடுகிறார். ஜெயராமும் பணத்துக்காக அதை செய்ய முடிவெடுக்கிறார்.

    அதற்காக செண்பகக் கோட்டைக்கு செல்லும் ஜெயராம், ரம்யா கிருஷ்ணன் மற்றும் அவளது குழந்தையிடம் நல்ல விதமாக பழகி அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாகிறார். ஒருகட்டத்தில் ரம்யா கிருஷ்ணனையும் திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்கு பிறகு செண்பகக் கோட்டைக்கு சொந்தமான நிலங்களின் பத்திரங்களை எல்லாம் தன் பெயரில் மாற்றிக் கொண்டு இவர்களை விட்டு செல்கிறார்.

    ஜெயராம் சென்றதும் ரம்யா கிருஷ்ணனின் மகள் இறந்து போகிறாள். ரம்யா கிருஷ்ணனும் என்ன ஆனாள் என்று தெரியவில்லை. சில ஆண்டுகள் கழிந்த நிலையில், ஜெயராமுக்கு திருமணமாகி குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில், ஒரு ஆவி இவர்களது குடும்பத்தை தொடர்ந்து தொந்தரவு செய்து வருகிறது. இதனால், சாமியாரான ஓம் பூரியை நாடுகிறார் ஜெயராம். அவர் மூலமாக, ரம்யா கிருஷ்ணன் மகளுடைய ஆவிதான் இவரது குடும்பத்தை பழிவாங்க துடிக்கிறது என்பதை அறிந்து கொள்கிறார்.

    இறுதியில், அந்த ஆவியிடமிருந்து ஜெயராம் தனது குடும்பத்தை காப்பாற்றினாரா? அல்லது ஆவி இவரது குடும்பத்தை பழி வாங்கியதா? என்பதே மீதிக்கதை.

    ஜெயராம் இரு விதமான கெட்டப்புகளில் வந்து அசத்தியிருக்கிறார். ரம்யா கிருஷ்ணனுடன் வரும்போது இளமையான தோற்றத்திலும், அதன்பிறகு, ஒரு குழந்தைக்கு அப்பாவான பிறகு தாடி லுக்கிலும் பார்க்க ரொம்பவும் அழகாகவே இருக்கிறார். தனக்கே உரித்த தனி பாணியில் சிறப்பாகவும் நடித்திருக்கிறார்.

    ரம்யா கிருஷ்ணனுக்கு அம்மன் வேடமேற்று நடிப்பதற்கு சொல்லித்தர தேவையில்லை. அந்த கதாபாத்திரத்திற்கு அப்படியே அச்சு அசலாக பொருந்தியிருக்கிறார். செண்டிமென்ட் காட்சிகளில் வழக்கம்போல் தனது யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஜெயராமின் குழந்தையாக நடித்துள்ள சிறுமியும், ரம்யா கிருஷ்ணனின் குழந்தையாக வரும் சிறுமியும் குறை சொல்லமுடியாத அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

    ‘ஆடுகளம்’ நரேன் ஒரேயொரு காட்சியில் வந்தாலும் நிறைவாக செய்திருக்கிறார். சம்பத்துக்கும் பெரிய அளவில் காட்சிகள் இல்லாவிட்டாலும், அழகான கதாபாத்திரம், அதை உணர்ந்து செய்திருக்கிறார். சாமியாராக வரும் ஓம் பூரி ஆர்ப்பாட்டமில்லாத, அழுத்தமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார்.

    இப்படத்தில் மூன்று விதமான கதைகளை சொல்லி, அதை ஒவ்வொன்றுக்கும் தொடர்புபடுத்தியிருக்கிறார் இயக்குனர் தாமரைக்குளம் கண்ணன். படத்தின் முதல் பாதியிலேயே கதையை சொல்லி முடித்துவிடுகிறார். அதன்பிறகு, படத்தில் என்ன சொல்லப் போகிறார் என்று பார்த்தால், ரம்யா கிருஷ்ணன் - ஜெயராம் காதல், அதைத் தொடர்ந்து துரோகம், திரில் என படத்தை கொண்டு போய் ரசிக்க வைத்திருக்கிறார்.

    ரத்தீஷ் வேகாவின் இசையில் ரம்யா கிருஷ்ணன் ஆடிப் பாடும் சாமி பாடல் ரசிக்க வைக்கிறது. மற்ற பாடல்கள் சுமார் ரகம்தான். பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். ஜித்து தாமோதரின் ஒளிப்பதிவு காட்சிகளை ரொம்பவும் அழகாக படமாக்கியிருக்கிறது.

    மொத்தத்தில் ‘செண்பகக் கோட்டை’ சுற்றி பார்க்கலாம்.

    நாசரின் மகன் லுத்புதீன் பாட்ஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘பறந்து செல்ல வா’ படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்..
    தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு வேலை தேடி செல்கிறார் நாயகன் லுத்புதீன் பாட்ஷா. அங்கு நண்பன் சதீஷ், ஆனந்தி ஆகியோருடன் ஒரே வீட்டில் தங்கியிருந்து வேலை தேடி வருகிறார். எந்த பெண்ணை பார்த்தாலும் உடனே காதல்வயப்படும் லுத்புதீன், அந்த பெண்ணிடம் சென்று தன்னை காதலிக்குமாறு கேட்பது வழக்கம்.

    இதனால், இவருடன் தங்கியிருக்கும் பெண்கள் இவரை எப்போதும் கிண்டல் செய்து வருகின்றனர். இதனால், தான் யாரையாவது காதலிப்பதுபோல் அவர்களிடம் காட்டி வாயை அடைக்க முடிவு செய்கிறார். இதற்காக, வழியில் கிடக்கும் பேப்பரில் அவர் பார்த்த நார்லே கேங்க்கை தனது ஜோடியாக தேர்வு செய்கிறார்.

    பின்னர் ஆர்.ஜே.பாலாஜியின் ஆலோசனையை கேட்கிறார். ஆர்.ஜே.பாலாஜி, அந்த பெண்ணின் பெயரில் போலி பேஸ்புக் பக்கத்தை ஒன்றை உருவாக்கி, அதில் லுத்புதீனும், நார்லேவும் சேர்ந்து இருப்பதுபோல் புகைப்படங்களை உருவாக்கி பதிவு செய்கிறார். இதையெல்லாம் பார்த்த லுத்புதீனின் தோழிகள் இதை உண்மையென்றே நம்புகிறார்கள்.

    இதற்கிடையில், லுத்புதீனுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவெடுக்கின்றனர். ஐஸ்வர்யா ராஜேஷின் அவரது செல்போன் எண்ணை  லுத்புதீனுக்கு அனுப்பி வைக்கிறார்கள். லுத்புதீனும் ஐஸ்வர்யா ராஜேஷிடம் பேசியதும் அவளது குரல் பிடித்துப்போக, அவருடன் பழக ஆரம்பிக்கிறார்.

    இந்நிலையில், தனது பெயரில் போலி பேஸ்புக் பக்கத்தை தொடங்கி தன்னை ஏமாற்றிவரும் லுத்புதீனை தேடி புறப்படுகிறாள் நார்லே. அவனைத் தேடிக் கண்டுபிடித்து, அவனை காதலிப்பதாக கூறுகிறாள். ஆனால், லுத்புதீனோ அந்த காதலை ஏற்க மறுக்கிறார்.

    இறுதியில், லுத்புதீன் பெற்றோர் பார்த்த ஐஸ்வர்யா ராஜேஷை கரம்பிடித்தாரா? தன்னை காதலிப்பதாக கூறும் நார்லேவை கரம்பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

    சைவம், இது என்ன மாயம் என்ற ஆகிய படங்களில் சிறிய வேடங்களில் நடித்த லுத்புதீன் இதில் முழு நீள கதாநாயகனாக மாறியிருக்கிறார். மாடர்ன் உடைகளில் கதாநாயகனுக்குண்டான தோற்றத்தை வெளிப்படுத்தினாலும், நடிப்பில் இன்னும் கொஞ்சம் தேற வேண்டும். ரொமான்ஸ் காட்சிகளில் நெருங்கி நடிக்க கொஞ்சம் தயங்கியிருக்கிறார். இருப்பினும், பாடல் காட்சிகளில் அழகாக நடனமாடியிருக்கிறார்.

    நாயகியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அழுத்தமான கதாபாத்திரம் இல்லை. கிராமத்து பெண்ணாக ரசித்த இவரை, மாடர்ன் பெண்ணாக பார்க்கும்போதும் ரசிக்க வைக்கிறார். சிறு கதாபாத்திரம் என்றாலும் சிறப்பாக நடித்திருக்கிறார். மற்றொரு நாயகியாக சிங்கப்பூரை சேர்ந்த நார்லேவுக்கு அடிதடியான கதாபாத்திரம். இவர் பார்வையாலேயே அனைவரையும் மிரள வைக்கிறார்.

    சதிஷ், ஆர்.ஜே.பாலாஜி, மனோபாலா, கருணாகரன் என காமெடிக்கு பலபேர் இருந்தாலும் படத்தில் பெரிதாக காமெடி எடுபடவில்லை. நாயகனின் அப்பாவாக வரும் ஞானசம்பந்தம் அனுபவ நடிப்பில் கவர்கிறார். ஆனந்தி படம் முழுக்க கவர்ச்சியை வாரி இறைத்திருக்கிறார்.

    தமிழ் சினிமாவுக்கு வழக்கமான முக்கோண காதல் கதையை சிங்கப்பூரில் வைத்து சொல்லியிருக்கிறார் இயக்குனர். அதுமட்டும்தான் வித்தியாசமே தவிர, படத்தில் புதுமை என்று சொல்லும் அளவிற்கு எதுவுமில்லை. படத்தில் லொக்கேஷன்கள் எல்லாம் தேடிக் கண்டுபிடித்து கண்களுக்கு குளிர்ச்சியாய் படமெடுத்திருக்கிறார். படத்தில் நிறைய கதாபாத்திரங்களை வீணடித்திருப்பதுபோல் தெரிகிறது. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

    ஜோஷ்வா ஸ்ரீதர் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசையும் சிறப்பாக இருக்கிறது. சந்தோஷ் விஜயகுமாரின் கேமரா சிங்கப்பூர் அழகை வித்தியாசமான கோணங்களில் படம்பிடித்திருக்கிறது. அதேபோல், புதுமையான லொக்கேஷன்களையும் தேடிக் கண்டுபிடித்து அதை அழகாக காட்டியிருக்கிறது.

    மொத்தத்தில் ‘பறந்து செல்ல வா’ முயற்சி.
    2007-ல் சூப்பர் ஹிட்டான ’சென்னை 600028’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான வெங்கட் பிரபு இப்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்திருக்கிறார். அப்படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    ‘சென்னை 600 028’ முதல் பாகத்தில் ஷார்க்ஸ் அணியில் இருந்தவர்களில் சில வேலை காரணமாக பிரிந்துவிட, பத்து வருடங்களாக சிவா, நிதின் சத்யா, விஜய் வசந்த், அஜய் ராஜ், ஜெய், பிரேம்ஜி ஆகியோர் மட்டும் நெருக்கமான நண்பர்களாக பழகி வருகிறார்கள். இதில், ஜெய், பிரேம்ஜிக்கு மட்டும் திருமணம் ஆகவில்லை.

    இந்நிலையில், ஜெய்யும் நாயகன் சானா அல்தாப்பும் காதலித்து வருகிறார்கள். இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் பச்சைக் கொடி காட்டவே, நாயகியின் சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் இவர்களது திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறுகிறது. திருமண நிச்சயதார்த்தத்துக்கு தேனிக்கு தனது நண்பர்களுடன் செல்கிறார் ஜெய்.

    அந்த ஊரில் இவர்களை பிரிந்து சென்ற நண்பன் அரவிந்த் ஆகாஷை ஒரு அடிதடியில் சந்திக்கிறார்கள். அப்போதுதான், அவருக்கும் அந்த ஊரில் கிரிக்கெட் விளையாட்டில் பெரிய ஆளாக இருக்கும் வைபவ்-க்கும் பிரச்சினை என்று தெரிகிறது. தனது நண்பனுக்காக வைபவ்வை எதிர்க்க முடிவு செய்கிறார்கள்.

    அரை இறுதி போட்டியில் இவர்களை எதிர்த்து விளையாடிய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் வைபவ் அணியை எதிர்க்க தயாராகிறார்கள். இவர்களின் விளையாட்டை பார்த்து அதிர்ந்துபோன வைபவ் அவர்களை அந்த போட்டியில் இருந்து எப்படி வெளியேற்றுவது என்று திட்டம் போடுகிறார்.

    அதன்படி, போட்டிக்கு முந்தைய நாள் பார்ட்டியில் நண்பர்களுக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து ஜெய்யை மட்டும் மனிஷா யாதவ்வுடன் நெருக்கமாக இருப்பதுபோன்று புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு போட்டியில் தோல்வியடைய வேண்டும் என்று மிரட்டுகிறார். இதனால், அவர்களும் வேறு வழியின்றி போட்டியில் தோற்று போகிறார்கள்.

    ஆனால், வைபவ்வின் நண்பன் ஒருவன் ஜெய், மனிஷா யாதவ்வுடன் நெருக்கமாக இருந்த போட்டோவை வெளியிட்டு விடுகிறான். இது ஜெய்யின் காதலிக்கும், அவளுடைய அப்பாவான சிவாவுக்கும் தெரியவர, இவர்களது திருமணம் நின்று போகிறது. இறுதியில், ஜெய் இந்த பிரச்சினைகளை சமாளித்து நண்பர்களுடன் சேர்த்து எப்படி தீர்வு கண்டார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    ‘சென்னை 600 028’ முதல் பாகத்தைப்போல இரண்டாம் பாகத்தையும் ரொம்பவும் ஜாலியாகவும், ரகளையாகவும் கொண்டு சென்றிருக்கிறார் வெங்கட் பிரபு. கிரிக்கெட், அதைச்சுற்றி நடக்கும் போட்டி மனப்பான்மை, நட்பு, செண்டிமென்ட், காதல், நகைச்சுவை என அனைத்தும் இந்த பாகத்திலும் தொடர்ந்திருக்கிறது.

    பிரேம்ஜியைத் தவிர இப்படத்தில் நடித்திருக்கிற நாயகர்கள் அனைவருக்கும் ஜோடி உண்டு. அதேபோல், முந்தைய பாகத்தைவிட இந்த படத்தில் அதிக கதாபாத்திரங்களையும் சேர்த்திருக்கிறார். அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். முதல் பாகத்தில் ஷார்க்ஸ் அணிக்கு எதிராக வரும் ராக்கர்ஸ் அணியை இந்த பாகத்தில் இணைத்த விதம் சிறப்பு. முதல் பாகத்தைப் போலவே இதிலும் மூன்று கிரிக்கெட் போட்டிகள் விரிவாக வருகிறது. ஷார்க்ஸ் அணியினர் கிரிக்கெட் ஆடும் அழகை அவர்களது மனைவிகளே கலாய்ப்பது, ஆலோசனை சொல்வது கலகலப்பு.

    படத்தில் ஜெய்க்கு கொஞ்சம் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பொறுப்பை அவர் உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். மிர்ச்சி சிவாவுக்கு இது மிகச்சரியான ரீ-என்ட்ரி படமாக இருக்கும் என்று சொல்லலாம். தனது பாணியிலான காமெடி வசனங்களில் அசத்தியிருக்கிறார். இணையதள விமர்சகர்களை இவர் கலாய்த்திருக்கும் விதம் சிறப்பு.

    வில்லனைப் போல் வரும், வைபவ் தேனி வட்டார வழக்கு பேச்சில் மட்டுமல்ல, நடை, உடை பாணியிலும் திமிர் கலந்த அடாவடி இளைஞனாக நம் மனதில் பதிந்திருக்கிறார். பிரேம்ஜி தனது வழக்கமான பாணியிலேயே காமெடி செய்தாலும் எங்கும் அலுப்பு ஏற்படவில்லை. நிதின் சத்யா, விஜய் வசந்த், அஜய்ராஜ், அரவிந்த் ஆகாஷ், மஹத், கார்த்திக், சுப்பு பஞ்சு, சந்தான பாரதி டி.சிவா என அனைவரும் தங்களது பங்கை சரியாக செய்திருக்கிறார்கள்.

    முதல் பாதியில் ஷார்க்ஸ் அணியை கடைசியில் தோற்கடிக்கும் அணியின் சிறுவனாக வந்த ஹரி பிரஷாந்த் இந்தப் படத்தில் இளைஞனாக வந்து தனி முத்திரை பதிக்கிறார். சிவாவின் மனைவியாக வரும் விஜயலட்சுமி, நிதின் சத்யாவின் மனைவியாக வரும் கிருத்திகா, அஜய்ராஜின் மனைவியாக வரும் மகேஷ்வரி, ஜெய்யின் காதலி சானா அல்தாஃப், விஜய் வசந்தின் மனைவியாக வரும் அஞ்சனா கீர்த்தி ஆகியோரும் குறை சொல்ல முடியாத அளவுக்கு நடித்திருக்கிறார்கள். ‘சொப்பன சுந்தரி’ பாடலுக்கு வந்து கவர்ச்சியை அள்ளித் தெளித்து இளைஞர்களை கிறங்கடிக்கிறார் மனிஷா யாதவ். படவா கோபியின் கமெண்டரி ரசிக்கும்படி இருக்கிறது.

    யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை பிரமாதம். ‘சொப்பன சுந்தரி’ பாடல் ஆட்டம் போட வைக்கிறது. ‘வர்றோம் சொல்லு தள்ளி நில்லு’ பாடல் ரசிக்க வைக்கிறது. ராஜேஷ் யாதவ்வின் ஒளிப்பதிவு சென்னையையும் பசுமை நிறைந்த தேனியையும் சிறப்பாக படம்பிடித்துள்ளது.

    மொத்தத்தில் ‘சென்னை 600 028 இரண்டாம் இன்னிங்ஸ்’ கோப்பையை வெல்லும்.
    விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘மாவீரன் கிட்டு’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    ஜாதி பிரிவினை உச்சத்தில் இருந்த 1980-களில் நடக்கும் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் மாவீரன் கிட்டு. பழனி அருகில் உள்ள கிராமத்தில் கீழ் ஜாதியைச் சேர்ந்த தலைவர் ஒருவர் இறக்க, அவருடைய பிணத்தை மேல் ஜாதியினர் வசிக்கும் பகுதி வழியாக எடுத்துச் செல்வதற்கு மேல் ஜாதியைச் சேர்ந்த தலைவர் நாகிநீடு வெள்ளங்கி மற்றும் ஊர்க்காரர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

    இதனால், அவர்களுக்கு எதிராக கீழ் ஜாதியைச் சேர்ந்த பார்த்திபன் போராடி, தங்கள் ஊர் தலைவரின் உடலை மேல் ஜாதியினர் பகுதி வழியாக எடுத்துச் செல்ல வழிவகை செய்கிறார். இந்நிலையில், கீழ் ஜாதியை சேர்ந்த விஷ்ணு விஷால், பிளஸ் 2 தேர்வில் மாநிலத்தின் முதல் மாணவனாக தேர்ச்சி பெறுகிறார். அவரை கலெக்டர் ஆக்கவேண்டும் என்று பார்த்திபன் முயற்சி செய்கிறார்.

    ஆனால், கீழ்ஜாதியை சேர்ந்த விஷ்ணுவிஷால் பெரிய ஆளாக வளர்வது மேல் ஜாதிக்காரர்களுக்கு பிடிக்கவில்லை. அதே நேரத்தில், மேல் ஜாதியைச் சேர்ந்த ஸ்ரீதிவ்யாவின் அப்பா, கீழ் ஜாதிக்காரர்களுக்கு ஆதரவாக இருப்பதும் அவர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே, ஸ்ரீதிவ்யாவின் அப்பாவை மேல் ஜாதிக்காரர்களே கொலை செய்துவிட்டு, அந்த கொலைப் பழியை விஷ்ணுவிஷால் மீது போட்டு, கைது செய்து சிறையில் அடைக்கின்றனர்.

    பின்னர் ஜாமினில் வெளியே வரும் விஷ்ணுவிஷாலை உயர் ஜாதியை சேர்ந்த போலீஸ் அதிகாரியான ஹரிஷ் உத்தமன் மீண்டும் விசாரணை என்ற பெயரில் ஜெயிலுக்கு கொண்டு சென்று அடித்து உதைக்கிறார். இதன்பிறகு விஷ்ணு மாயமாகிறார். அவர் எங்கு சென்றார் என்று ஊரே தேட ஆரம்பிக்கிறது.

    இனியும் அமைதியாக இருந்தால் சரிப்பட்டு வராது என்று மேல் ஜாதிக்காரர்களுக்கு எதிராக திட்டம் ஒன்றை தீட்டி தனது போராட்டத்தை தொடங்குகிறார் பார்த்திபன். இந்த போராட்டம் வெற்றி பெற்றதா? மாயமான விஷ்ணு விஷால் கிடைத்தாரா? என்பதே மீதிக்கதை.

    மாவீரன் கிட்டு என்ற படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு விஷ்ணு விஷாலுக்கு இப்படத்தில் கம்பீரமான கதாபாத்திரம். அதை தனது இயல்பான நடிப்பால் நடித்து கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். ஸ்ரீதிவ்யா பாவாடை தாவணியில் கிராமத்து பெண் மாதிரி வந்து போயிருக்கிறார். நடிப்பிலும் ஓகே சொல்ல வைக்கிறார்.

    இதுவரை பார்த்திராத புதுவிதமான பார்த்திபனை இப்படத்தில் பார்க்க முடிகிறது. ஆர்ப்பாட்டமில்லாத, அமைதியான நடிப்பை கொடுத்து ரசிக்க வைக்கிறார். இவர்தான் முதல் ஹீரோ என்று சொல்லும்விதமாக இவரது கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இவர் பேசும் வசனங்களில் அனல் தெறிக்கிறது.

    1980-களில் வேரூன்றியிருந்த ஜாதி பிரிவினையை இப்படத்தில் அழகாக எடுத்துக்காட்டியுள்ளார் சுசீந்திரன். அவர் என்ன நினைத்தாரோ அதை சுதந்திரமாக இந்த படத்தில் பதிவு செய்திருக்கிறார். படத்தின் பிற்பாதியில் வரும் பாடல்கள் படத்திற்கு கொஞ்சம் தொய்வை கொடுத்திருக்கின்றன. கமர்ஷியல் படத்திற்குண்டான அம்சங்கள் படத்திற்கு கைகொடுக்காவிட்டாலும் திரைக்கதையின் பலம் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது. யுகபாரதியின் வசனங்கள் படத்தின் வேகத்தை கூட்டியிருக்கிறது.

    டி.இமானின் பின்னணி இசை பிரமாதமாக இருக்கிறது. பாடல்கள் அனைத்தும் இதம். குறிப்பாக ‘இணைவோம்’ என்ற பாடலும் சரி, அதற்கான காட்சிகள் அமைத்த விதமும் அருமையாக இருக்கிறது. படத்தின் கதைக்களம் 80-களில் நடப்பதால் அந்தக் காலகட்டத்திற்குண்டான ஒளியமைப்புடன் கூடிய காட்சியமைப்புகளை கச்சிதமாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சூர்யா.

    மொத்தத்தில் ‘மாவீரன் கிட்டு’ வெற்றி பெறுவான்.
    ×