என் மலர்tooltip icon

    தரவரிசை

    ரிஷிகேஷ், விவேக் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரம்’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    நாயகன் ரிஷிகேஷ், விவேக், அம்ஷத், அர்ஜுன் சிதம்பரம், சஞ்சிதா ஷெட்டி இந்த ஐந்து பேரும் கொள்ளையடித்து தங்களது தேவையை பூர்த்தி செய்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் கொள்ளையடிக்கும் பணத்தில், ஒரு பங்கை நரேனுக்கும் கொடுத்து வருகின்றனர்.

    சிறு சிறு கொள்ளைகளை நடத்தி வரும் இவர்களுக்கு ஒரு கண்டெய்னரில் விலையுயர்ந்த வைர கற்கள் வருவது நரேன் மூலமாக தெரிகிறது. அதை கொள்ளையடித்தால் தங்கள் வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம் என்று முடிவு செய்து, அதை கொள்ளையடிக்க திட்டம் தீட்டுகிறார்கள்.

    அதன்படி, அந்த கண்டெய்னரில் உள்ள வைர கற்களை கொள்ளையடிக்கின்றனர். கொள்ளையடித்த கற்களை எல்லாம் தன்னுடைய இடத்துக்கு கொண்டு வரும்படி கூறும் நரேன் மீது ரிஷிகேஷுக்கு சந்தேகம் வருகிறது. இதனால் அந்த கற்களை  எல்லாம் வேறு இடத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்கிறார்.

    அப்போது, நரேனின் நண்பனான அர்ஜுன் சிதம்பரம் இவர்களுடன் சேர்ந்துகொண்டு, தனக்கு தெரிந்த பங்களாவில் அந்த கற்களை பத்திரமாக வைக்கலாம் என்று ஆலோசனை கூறுகிறான். அதன்படி, அந்த பங்களாவுக்குள் தாங்கள் கொள்ளையடித்த கற்களை கொண்டு போய் சேர்க்கின்றனர். அந்த பங்களாவுக்குள் ஒரு பேய் இருக்கிறது. அந்த பேய் இவர்களை அங்கிருந்து வெளியே செல்லவிடாமல் பங்களாவுக்குள்ளேயே சிறை வைக்கிறது. இதனால் பயந்துபோன அர்ஜுன் சிதம்பரம் நரேனுக்கு போன்போட்டு தகவல் சொல்ல, அடுத்தநாளே அர்ஜுன் இறந்துபோகிறான்.

    இறுதியில், இவர்களை வெளியே போகவிடாமல் தடுக்கின்ற பேய் யார்? அந்த பேய் நரேனின் ஆளை மட்டும் கொல்ல காரணம் என்ன? நரேனுக்கும் அந்த வீட்டில் உள்ள பேயுக்கும் என்ன சம்பந்தம்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகன் ரிஷிகேஷ் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷுக்கு தம்பியாக நடித்தவர். அந்தவொரு தகுதியை மட்டுமே வைத்துக்கொண்டு இந்த படத்தில் கதாநாயகனாக களமிறங்கியிருக்கிறார். இந்த படத்தில் விவேக் பேசும் வசனம்தான் இவருடைய நடிப்புக்கும் பொருந்தியிருக்கிறது. அதாவது, இந்த மூஞ்சில மட்டும் ஏன் நடிப்பே வரமாட்டேங்குது? என்பதுதான். ரொம்பவும் அப்பாவியான இவரது முகத்தில் நடிப்பை வரவழைக்க ரொம்பவும் திணறியிருக்கிறார். வெறுமனே பொம்மை போல்தான் இவருடைய ஒட்டுமொத்த நடிப்பும் இருக்கிறது.

    சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ் என இரு கதாநாயகிகள் இருந்தாலும் படத்தில் எந்த காதல் காட்சிகளும் இல்லை. சஞ்சிதா ஷெட்டி படம் முழுக்க வலம் வந்திருக்கிறார். ஆனால், மியா ஜார்ஜுக்கே பிற்பாதியில் மட்டுமே வாய்ப்பு கொடுத்திருககிறார்கள். இருவரும் தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    விவேக் தனது பாணியிலான காமெடியில் மீண்டும் கலக்கியிருக்கிறார். அவ்வப்போது இவர் கொடுக்கும் கவுண்டர் வசனங்கள் தியேட்டரில் விசில் சத்தத்தை எழுப்புகிறது. நரேன் மீண்டும் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் வந்து மிரட்டியிருக்கிறார். ஆரம்பத்தில் இவருடைய கதாபாத்திரம் வேறுவிதமாக சென்றாலும், பிற்பாதியில் இவர்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று சொல்லும் விதம் அருமை.

    இயக்குனர் சாய் பரத், தமிழ் சினிமாவுக்கு பழகிப்போன ஒரு பேய் கதையையே வித்தியாசமான கோணத்தில் படமாக்க முயற்சி செய்திருக்கிறார். படத்தில் காமெடி, திரில்லர் என இரண்டையும் சரியாக கலந்து கதையை கொண்டு போயிருக்கிறார். கிராபிக் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

    அனிருத்தின் பிண்ணனி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. சில இடங்களில் இவரது பின்னணி இசை நம்மை மிரள வைக்கிறது. பாடல்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு நிறைவை கொடுத்திருக்கிறது. விக்னேஷ் விசுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘ரம்’ கிக் ஏற்றுகிறது. 
    ரகுமான் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பகடி ஆட்டம்’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    நாயகன் சுரேந்தர் பெண்கள் விஷயத்தில் ரோமியோ. பார்க்கிற பெண்களையெல்லாம் அடையவேண்டும் என்ற எண்ணத்திலேயே சுற்றுபவர். இவருடைய அப்பா நிழல்கள் ரவி பெரிய செல்வந்தர், அம்மா ராஜஸ்ரீ பொறுப்பான குடும்பத் தலைவி. மகன் மீது அதிக பாசத்தை பொழிபவர்.

    இந்நிலையில், சுரேந்தர் ஒருநாள் மோனிகாவை பார்த்ததும் அவள்மீது ஆசைப்படுகிறார். மோனிகாவின் குடும்பம் அவளுடைய அக்கா கௌரி நந்தா ஆட்டோ ஓட்டி கொண்டுவரும் பணத்தில்தான் பிழைப்பு நடத்தி வருகிறது. தனது குடும்ப சூழ்நிலையை மறந்த மோனிகா தன் மீது சுரேந்தர் காட்டும் அக்கறையை காதல் என்று நம்பி அவனது வலையில் விழுகிறாள்.

    இதை அறிந்த கௌரி நந்தா, தனது தங்கையை அழைத்து கண்டிக்கிறாள். அக்காவின் கண்டிப்பில் மனம் திருந்திய மோனிகாவை தனது வழிக்கு கொண்டுவர சுரேந்தர் முயற்சி செய்கிறான். தனது அம்மாவிடம் அவளைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் கூறிவிட்டதாகவும், அம்மாவிடம் வந்து உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு தனது வீட்டிற்கும் அழைத்து செல்கிறான்.

    இதையெல்லாம் உண்மை என்று நம்பி செல்லும் மோனிகாவை, சுரேந்தர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவளை தன்வசப்படுத்தி நெருக்கமாக இருக்கிறான். அதை வீடியோவும் எடுத்துவிடுகிறான். இதனால், தனது மானம் பறிபோனதே என்று பதறும் மோனிகா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொள்கிறாள்.

    தனது தங்கையின் இந்த பரிதாப முடிவுக்கு காரணமான சுரேந்தரை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று துடிக்கிறாள் கௌரி நந்தா. இந்நிலையில், சுரேந்தர் திடீரென காணாமல் போகிறார். அவரை கண்டுபிடிக்க நிழல்கள் ரவி தனது செல்வாக்கை பயன்படுத்தி கமிஷனர் அளவில் போய் பேசுகிறார்.

    இதனால், சுரேந்தரை கண்டுபிடிக்க அசிஸ்டென்ட் கமிஷனரான ரகுமான் நியமிக்கப்படுகிறார். அவர் சுரேந்தரை தனது போலீஸ் மூளையால் கண்டுபிடித்தாரா? காணாமல் போன சுரேந்தர் என்ன ஆனார்? என்பதற்கு பிற்பாதியில் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.

    சுரேந்தர் பெண்கள் மீது மோகம் கொண்டவராக ஒரு ரோமியோ போல் படத்தில் வலம் வந்திருக்கிறார். படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். அதேபோல், நாயகியான மோனிகாவும் தோற்றத்திலேயே நம்மை கவர்கிறார். பள்ளிக்கூடத்திலிருந்து கல்லூரிக்கு போகும் பருவத்தில் உள்ள பெண்ணுக்குண்டான உடல்மொழியில் தனது நடிப்பை அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.

    ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த ரகுமான், இந்த படத்திலும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார். காணாமல் போன சுரேந்தரை கண்டுபிடிக்க இவர் வகுக்கும் வியூகங்கள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன. ராஜஸ்ரீ, பையன் என்ன தவறு செய்தாலும், அது தனது மகன் செய்யவில்லை என்பதுபோன்ற வெகுளியான அம்மாவாக வலம் வந்திருக்கிறார். இவருடைய நடிப்பு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சுரேந்தரின் தந்தையாக வரும் நிழல்கள் ரவி, தனது அதிகாரப் பலத்தால் ஆணவத்துடன் பேசும் இடங்களில் எல்லாம் மிளிர்கிறார்.

    இயக்குனர் ராம் கே.சந்திரன், காதல் என்ற போர்வையில் பெண்களை நாசம் செய்யும் மோசமான இளைஞர்களுக்கு கடைசியில் என்ன தண்டனை கிடைக்கும் என்பதை இப்படத்தில் அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். முதல் பாதி, சுரேந்தர் மற்றும் மோனிகாவின் பின்புலம் இதைப்பற்றியே கதை நகர்வதால், படம் மெதுவாக நகர்வது போல் தோன்றுகிறது. ஆனால், பிற்பாதியில் ரகுமான் வந்தபிறகு, காணாமல் போனவனை கண்டுபிடிக்கும் விசாரணையில் படம் நகர்வதே தெரியாமல் செல்கிறது. முடிவும் எதிர்பார்த்தபடி அமைந்திருப்பது மிகச் சிறப்பு.

    கார்த்திக் ராஜா இசையில் அவரது அப்பா இளையராஜாவின் பாடல்களில் இரண்டை தனது பாணியில் அமைத்துக் கொடுத்திருக்கிறார். அந்த பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. பின்னணி இசையும் கிரைம் திரில்லருக்குண்டான உணர்வை கொடுத்திருக்கிறது. கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘பகடி ஆட்டம்’ ஆடலாம்.
    பரத், கதிர், சஞ்சிதா ஷெட்டி, சாந்தினி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘என்னோடு விளையாடு’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    அக்கவுண்டன்டாக இருக்கும் பரத்துக்கு குதிரைப் பந்தயத்தில் மிகவும் ஆர்வம். பந்தயத்தில் எந்த குதிரை தோற்கும், எந்த குதிரை ஜெயிக்கும் என்பதை தனது கணக்கு மூளையால் கணிப்பதில் வல்லவர். இருப்பினும், இந்த குதிரை பந்தயத்தில் லட்சக்கணக்கான பணத்தை இழந்திருப்பார். இதற்கான காரணத்தை யோசிக்கும்போது, குதிரை பந்தயத்தில் மேட்ச் பிக்சிங் நடப்பதை கண்டுபிடிக்கிறார்.

    ஒருகாலத்தில் குதிரை பந்தயத்தில் கொடிகட்டிப் பறந்த ராதாரவி, ஒரு தோல்வியால் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். பின்னர் நம்பர் 1 இடத்தை பிடிப்பதற்காக மீண்டும் போட்டியில் கலந்துகொள்ள வரும் ராதாரவி, தொடர்ந்து ஜெயித்துக் கொண்டிருக்கும் யோக் ஜேப்பியிடம் பேரம் பேசுகிறார். இதை அறியும் பரத், அந்த பணத்தை கைப்பற்ற நினைக்கிறார்.

    இது ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, மற்றொரு முனையில் பெண்களே பிடிக்காத கதிர், வேலை விஷயமாக சென்னை வரும்போது, கட்டாயத்தின் பேரில் சஞ்சிதா ஷெட்டியுடன் ஒரே வீட்டில் தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. சஞ்சிதா ஷெட்டியின் அப்பா, வீட்டின் பேரில் வாங்கிய கடனால், வீடு ஏலத்துக்குப் போகவே, அந்த வீட்டை எப்படியாவது மீட்கவேண்டும் என்று நினைக்கிறாள். இதை அறியும் கதிர், அவள் மீது பரிதாபப்பட்டு, அவளுக்காக அந்த பணத்தை தயார் செய்து அந்த வீட்டை மீட்டுக் கொடுக்க முடிவு செய்கிறார்.

    இறுதியில், பரத், கதிர் இருவரின் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்ததா? இவர்களுக்கு கிடைக்க வேண்டிய பணம் கிடைத்ததா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

    சென்னையின் முக்கிய பகுதியான கிண்டியில் நடைபெறும் குதிரை பந்தயத்தை இதுவரை தமிழ் சினிமாவில் ஒருசில காட்சிகள்தான் பெயரளவிற்கு வைத்திருந்தார்கள். குதிரை பந்தயத்தை மையமாக வைத்து முழுநீள படமாக இதுவரை எடுத்ததில்லை. இப்படியொரு கதையை தேர்வு செய்ததற்காகவே இயக்குனர் அருண் கிருஷ்ணசாமியை பாராட்டலாம். குதிரை பந்தயத்துக்கு பின் இருக்கும் அரசியல், பந்தயத்தில் வெல்லத் தேவையான சாதுர்யம் ஆகியவற்றை கதையாக்கி, குழப்பாத திரைக்கதை அமைத்து விறுவிறுப்பான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார்.

    நாயகன் பரத்துக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளிவந்திருக்கும் படம். பந்தயத்தில் பணத்தை இழந்தாலும் அதை மீட்பதற்காக இவர் சாதுர்யமாக காய் நகர்த்தும் பாணி அனைவரையும் கவர்ந்திருக்கிறது. பெண்களை கண்டாலே எட்டி நிற்கும் கதாபாத்திரத்தில் கதிரின் நடிப்பு அசத்துகிறது. அதேநேரத்தில், ஒரு பெண்ணுக்காக அவர் படும் கஷ்டங்களையும் படத்தில் அழகாக பிரதிபலித்திருக்கிறார்.

    நாயகிகளான சாந்தினிக்கும், சஞ்சிதா ஷெட்டிக்கும் சரிசமமான கதாபாத்திரத்தை கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை என்பதுபோல் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். ராதாரவி படத்தில் வந்தாலே போதும் என்று கூறும் அளவிற்கு, இந்த படத்திலும் ரொம்பவும் அசால்ட்டாக வந்து மிரட்டிவிட்டு போயிருக்கிறார்.

    யுவாவின் கேமரா, குதிரை பந்தயத்தில் புகுந்து விளையாடியிருக்கிறது. மற்ற காட்சிகளையும் ரொம்பவும் துல்லியமாக படமாக்கியிருக்கிறது. மோசஸ், சுதர்சன் எம்.குமார் ஆகியோரின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான் என்றாலும், சுதர்சன் எம்.குமாரின் பின்னணி இசை கதையோடு பயணிக்கும்படி அமைந்திருப்பது பலம்.

    படத்தில் ஆங்காங்கே ஒருசில குறைகள் இருந்தாலும், படம் பார்க்கும் அனுபவத்தை அது கெடுக்கவில்லை. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது ஒரு திருப்தியான திரில்லர் படத்தை பார்த்த உணர்வை கொடுக்கிறது.

    மொத்தத்தில் ‘என்னோடு விளையாடு’ விளையாடலாம். 
    இளைஞர்களின் உருவாக்கத்தில் வெளிவந்துள்ள காதல் காவியமான ‘காதல் கண்கட்டுதே’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    நாயகன் கே.ஜி. படித்து முடித்துவிட்டு வேலை தேடி வருகிறான். நாயகி அதுல்யா ஒரு பத்திரிகையில் நிருபராக பணிபுரிந்து வருகிறாள். இருவரும் ஒருமுறை சந்தித்து நண்பர்களாக பழகி வருகிறார்கள். இவர்களுடைய நட்பு நாளடைவில் காதலாக மாறுகிறது.

    இந்நிலையில், அதுல்யா வேறு ஊருக்கு மாற்றலாக போகிறாள். இருப்பினும், நாயகனுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துகொண்டே இருக்கிறாள். அதுல்யாவுக்கு கூடவே பணிபுரியும் ஒருவரின் நட்பு கிடைக்கிறது. அவனிடம் பழகுவதை தனது காதலனிடம் மறைக்காமல் போனில் அவனைப் பற்றிய தகவலை சொல்கிறாள்.

    அடிக்கடி, தன்னுடன் வேலை பார்க்கும் அந்த நபரைப் பற்றி நாயகி கூறுவதை கேட்கும் நாயகனுக்கு ஒருகட்டத்தில் அவள்மீது வெறுப்பு வருகிறது. இதனால், இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டு, பிரிந்து போகிறார்கள். இந்த பிரிவு தற்காலிகமாக இருந்ததா? அல்லது நீடித்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    முற்றிலும் புதுமுகங்களை வைத்து ஒரு அழகான காதல் படத்தை கொடுத்திருக்கிறார் புதுமுக இயக்குனர் சிவராஜ். பெரிய, பெரிய இயக்குனர்களால்தான் இந்த மாதிரியான அழகான, நேர்த்தியான படத்தை கொடுக்க முடியும் என்ற நிபந்தனையும் மீண்டும் ஒரு புதிய இயக்குனர் முறியடித்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

    இன்றைய கால இளைஞர்களின் வாழ்க்கையை ரொம்பவும் எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார். படத்தில் நடித்திருக்கிற கதாபாத்திரங்கள் அனைவரும் புதுமுகங்கள் என்று சொல்ல முடியாத அளவுக்கு தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    காதல், மோதல், ஊடல் என தமிழ் சினிமாவுக்கு அதர பழசான கதையாக இருந்தாலும், அதை எடுத்தவிதம் அருமை. ரொம்பவும் எளிமையான நடிப்பு, ஹீரோயிசம் இல்லாத கதாபாத்திரங்கள் என படத்தில் ஒவ்வொன்றும் பாராட்டக்கூடியதாக இருக்கின்றன.

    பவணின் இசையில் பாடல்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது. பின்னணி இசையிலும் கதைக்கு தேவையானதை கொடுத்து கைதட்டல் பெறுகிறார். சிவராஜின் ஒளிப்பதிவு காட்சிகள் ஒவ்வொன்றையும் கலர்புல்லாக காட்டியிருக்கிறது.

    மொத்தத்தில் ‘காதல் கண்கட்டுதே’ கைதட்டலாம்.
    1971-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போருக்கு காரணமான ‘காஸி’ என்ற பாக். நீர்மூழ்கி கப்பலை இந்திய கப்பற்படை வீழ்த்தி அழித்ததை மையமாக வைத்து வெளிவந்து படமே ‘காஸி’. இப்படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    இந்தியாவின் விமானந்தாங்கிப் போர்க்கப்பலான INS விக்ராந்தின் செயல்திறனை நினைத்து பயப்படும் பாகிஸ்தான் கடற்படை, ராணுவத்தையோ, விமானங்களையே அனுப்பி அதை அழிக்கமுடியாத நிலையில், அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்ட அதிநவீன போர்க்கப்பலான ‘காஸி’யை வைத்து INS விக்ராந்த்தை அழிக்க, அது நிறுத்தப்பட்டிருக்கும் விசாகப்பட்டினம் துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கின்றனர்.

    இது இந்திய உளவுத்துறை அறிந்து, இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்திய தலைமையகத்தில் உயர் அதிகாரிகளாக இருக்கும் ஓம் பூரி மற்றும் நாசருக்கு எச்சரிக்கிறது. அவர்கள் கிழக்கு கடற்கரையோர பாதுகாப்பை உறுதிப்படுத்த கோபக்கார கேப்டன் கே.கே.மேனன் மற்றும் சாதுர்யமான கேப்டன் ராணா ஆகியோர் பணிபுரியும் எஸ்21 நீர்மூழ்கி கப்பலை, காஸியை எதிர்க்க அனுப்புகிறார்கள்.

    காஸியை ஒப்பிடும்போதும் பலம் குறைந்த எஸ்-21 எப்படி பாகிஸ்தானின் சதியை முறியடித்து, அதற்கு கடலுக்குள்ளேயே எப்படி சமாதி கட்டுகிறார்கள் என்பதுதான் படத்தின் மீதி விறுவிறுப்பான கதை.

    படத்தின் நாயகன் ராணா டகுபதி, கப்பற்படை அதிகாரி வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இவர் அறிமுக காட்சியில் நடந்துவரும் கம்பீரமே இதற்கு சாட்சி. அதேபோல், வசனங்கள் உச்சரிப்பிலும் நமக்கு வெறி ஏற்றியிருக்கிறார். மற்றொரு கேப்டனாக வரும் கே.கே.மேனன் படத்தின் இன்னொரு ஹீரோ என்று சொல்லலாம். எதிரியை பார்த்தாலே அழித்துவிட வேண்டும் என்கிற இவரது ஆக்ரோஷமான நடிப்பு படத்தில் நன்றாகவே எடுபட்டிருக்கிறது.

    மற்றபடி, கப்பலின் மற்றொரு கேப்டனாக வரும் அதுல் குல்கர்னியும் இவர்களுக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு தனது சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். அகதியாக வரும் டாப்சியை பார்க்கும்போதே நமக்கும் சோகம் தொற்றிக் கொள்கிறது. மற்றபடி, எஸ் 21-ல் பணிபுரியும் வீரர்கள், ஓம் பூரி, நாசர் என அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்து நாம் ஒரு ஆழ்கடல் பயணம் செய்ததுபோன்ற ஒரு உணர்வை கொடுத்திருக்கிறார்கள்.

    அறிமுக இயக்குனர் சங்கல்ப், தான் புதுமுகம் என்று சொல்லமுடியாத அளவுக்கு ஒரு படத்தை இயக்கியிருக்கிறார். ஹாலிவுட் படங்களுக்கு இணையாக படத்தின் திரைக்கதையை விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார். நாம் படம் பார்க்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் ஒவ்வொரு சம்பவங்களையும் மிகவும் திரில்லாக நகர்த்தியிருக்கிறார். நாம் செய்திதாள்களில் படித்த சம்பவங்களை நேரில் பார்க்கும் அனுபவம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. ஒருசில காட்சிகள் நம்மை உணர்ச்சி பரவசத்தில் ஆழ்த்துகிறது என்றால் அது மிகையாகாது.

    குறிப்பாக, காஸியின் தாக்குதலில் இந்தியாவின் எஸ்-21 நீர்மூழ்கி கப்பல் லேசாக விபத்துக்குள்ளாகி தரை தட்டிவிடும். அப்போது, ஒரு குறிபிட்ட தொலைவு வரையே எஸ்-21-ஆல் தாக்குதல் நடத்த முடியும். ஆனால், காஸியோ அந்த எல்லையை தாண்டி நிற்கும். இருப்பினும், இவர்கள் சூழ்ச்சி வலை செய்து காஸியை தாக்கமுடியும் என்ற எல்லைக்கு கொண்டு வர வைக்கும் காட்சிகளில் எல்லாம் கண்ணிமைக்க முடியாமல் வைக்கிறது.

    மதியின் ஒளிப்பதிவு நாம் நீர்மூழ்கி கப்பலுக்குள் பயணிக்கும் உணர்வை கொடுத்திருக்கிறது. கிராபிக்ஸ் காட்சிகளில் மிகவும் தத்ரூபமாக கையாளப்பட்டிருக்கிறது. கே-யின் பின்னணி இசை ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் அளவுக்கு இருக்கிறது. இடத்திற்கு தகுந்தாற்போல் தேவையான இசையை மட்டுமே கொடுத்து கைதட்டல் பெறுகிறார்.

    மொத்தத்தில் ‘காஸி’ போர் வீரர்களுக்கு பெருமை சேர்த்தது.
    சினிமாவின் முக்கிய கலைஞர்களான ‘லைட்மேன்’களின் நிஜ-நிழல் வாழ்க்கையை சொல்லும் படமாக உருவாகியுள்ள ‘லைட்மேன்’ படத்தின் விமர்சனத்தை கீழே விரிவாக பார்ப்போம்.
    கார்த்திக் நாகராஜன் கிராமத்து கூத்து கலைஞர். இவர் சினிமா ஆசையால் சென்னை வருகிறார். கூடவே தன்னுடைய மனைவியையும் அழைத்து வருகிறார். ஆனால் நடிக்க எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. எனவே, ஒரு நடிகையின் மேக்கப் மேனின் உதவியை நாடுகிறார். அவர் மூலம் சினிமாவில் லைட்மேன் ஆக பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கிறது.

    இந்த வேலை கடினமாக இருக்கவே, அவரை மதுப்பழக்கம் தொற்றிக் கொண்டு, அவரது பாதையை மாற்றிவிடுகிறது. இப்படியாக உண்மையிலேயே ‘லைட்மேன்’களாக இருப்பவர்களின் வாழ்க்கையை அவர்களே சொல்வதும் படமாக்கப்பட்டிருகிறது.

    திரைஉலகில் லைட்மேன்களின் பங்கு என்ன? திரை உலகத்துக்கு வெளிச்சம் தரும் இவர்களின் வாழ்க்கை இருள் சூழ்ந்து இருப்பது ஏன்? என்பதை உணர்ச்சிப்பூர்வமாக சொல்வது மீதிக்கதை.

    நாயகன் கார்த்திக் நாகராஜன் கூத்து நடிகராக வரும் போது, பேசும் நீண்ட வசனங்களும், தமிழ் உச்சரிப்பும் அருமை. லைட்மேன் பாத்திரமாகவே மாறி ரசிகர்களை ஒன்ற வைக்கிறார். அவரது மனைவியாக வரும் ஜெனிபர், லைட்மேன்கள் வாசகன், கோவிந்த சுவாமிநாதன் உள்பட அனைவரும் தங்கள் பாத்திரங்களை சிறப்பாக பிரதிபலித்திருக்கிறார்கள்.

    இயக்குனர் வெங்கடேஷ் குமார்ஜியின் வசனம் ‘லைட்மேன்’ படத்துக்கு பலம் சேர்த்து இருக்கிறது. பாலுமகேந்திராவிடம் உதவியாளராக இருந்த இவரது படைப்பும் குருவின் யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது. கதையுடன், லைட்மேன்களின் வாழ்க்கை, வலி, வேதனைகளையும் அவர்களிடமே கேட்டு படத்துடன் இணைத்திருப்பது புதிய யுக்தி.

    பல நடிகர்-நடிகைகளுக்கு ஏணியாக இருக்கும் ‘லைட்மேன்கள்’ பற்றி இதுவரை வெளிச்சத்துக்கு வராத உண்மைகளை, சோக வாழ்க்கையை இயக்குனர் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார். ராகுல் ஒளிப்பதிவு நெகிழ வைக்கும் யதார்த்தம். டோனி பிரிட்டோவின் இசையை ரசிக்கலாம். காட்சிகளுக்கும் பலம் சேர்க்கிறது.

    லைட்மேன்களின் இருண்ட வாழ்க்கையை தனிகதையாக உருவாக்கி அதில் கொஞ்சம் சினிமா அம்சங்களையும் சேர்த்து இருந்தால், படம் ரசிகர்களையும் தன் வெளிச்சத்தால் கவர்ந்து இருக்கும். என்றாலும், இயக்குனர் சொல்ல நினைத்ததை லைட்மேன்களின் கதையுடன் அனுபவத்தையும் கலந்து சொல்லி அவரது நோக்கத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

    மொத்தத்தில் ‘லைட்மேன்’  திரை கலைஞர்களுக்கு வெளிச்சம்.
    ‘ரிங்ஸ்’ என்ற பெயரில் திரில்லர் படமாக ஏற்கெனவே வெளிவந்த இரண்டு பாகங்களை தொடர்ந்து, தற்போது மூன்றாம் பாகம் வெளிவந்திருக்கிறது. இந்த படம் எப்படி திரில்லராக இருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    ரிங்ஸ் என்ற வீடியோவை பார்த்தவர்கள் அடுத்த 7 நாட்களுக்குள் இறந்துவிடுகிறார்கள். அந்த வீடியோவை பார்த்தவர்களுக்கு இது ஒரு சாபமாக ஆகிவிடுகிறது. இந்த சாபத்தில் இருந்து அவர்கள் விடுபடவேண்டுமென்றால், அந்த வீடியோவை பார்த்தவர் ஒரு காப்பி எடுத்து, அதை இன்னொருவரை பார்க்க வைக்க வேண்டும். இதுதான் படத்தின் கதைக்கரு.

    படத்தோட நாயகன் ஜானி காலெக்கியும், ஏமி தெக்கார்டியனும் நெருங்கிய காதலர்கள். இந்நிலையில், ஒருநாள் ஜானி படிப்பதற்காக ஏமியை பிரிந்து வெளியூர் செல்ல வேண்டியிருக்கிறது. அங்கு சென்ற நிலையிலும், தினமும் தனது காதலியிடம் ஜானி வீடியோ மூலம் பேசிக் கொண்டே இருக்கிறார்.

    இந்நிலையில், ஜானி படிக்கும் ஊரில் ஒரு பேராசிரியர் இருக்கிறார். அவருக்கு ரிங்ஸ் சம்பந்தமான வீடியோ ஒன்று கிடைக்கிறது. அந்த வீடியோவால் அவர் பாதிக்கப்படுகிறார். அதிலிருந்து அவர் தப்பிப்பதற்காக ஒவ்வொரு காப்பியாக எடுத்து வெளியிட்டு வருகிறார். இதில் ஜானியும் சிக்கிவிடுகிறார். இதன்பின்னர், தன்னுடன் தொடர்பில்லாமல் இருக்கும் ஜானியை தேடி ஏமி வருகிறாள்.

    இறுதியில், அவள் தனது காதலனை கண்டுபிடித்தாளா? தனது காதலனை பிடித்திருக்கும் சாபத்திலிருந்து அவனை மீட்டாளா? என்பதே மீதிக்கதை.

    ஏற்கெனவே, இந்த படத்தின் இரண்டு பாகங்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் இந்த பாகத்திற்கு பெரிய எதிர்பார்ப்பை கொடுத்திருக்கிறது. அந்த எதிர்பார்ப்பை இந்த படம் ஓரளவுக்கு திருப்திப்படுத்தியிருக்கிறது. படத்தில் பெரும்பாலான காட்சிகள் திரில்லை கொடுக்காவிட்டாலும், ஒன்றிரண்டு காட்சிகள் கண்டிப்பாக திரில்லை கொடுத்திருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.

    தனது காதலனுக்கு ஏற்பட்ட சாபத்தை நீக்குவதற்காக ஹீரோயின் செல்லும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு டுவிஸ்டுகள் அவிழ்க்கப்படும். அந்த காட்சிகள் எல்லாம் ரொம்பவும் சுவாரஸ்யமாகவும், திரில்லாகவும் இருக்கும். படத்தின் கதாநாயகன், கதாநாயகியை பொறுத்தவரை ரெண்டு பேரும் ரொம்பவும் எதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் பேயை பார்த்து நடுங்கும்போது நமக்கும் பயம் வருகிறது.

    மேலும், இந்த படத்தில் கிராபிக்ஸ் பணிகள் ரொம்பவும் கவனிக்கப்பட வேண்டியவை. பேய் வரும் காட்சிகள் கிராபிக்ஸில் உருவாக்கியிருந்தாலும், அதை மிகவும் நேர்த்தியாக செய்திருப்பது சிறப்பு. டிவியில் இருந்து பேய் வரும் காட்சிகளில் எல்லாம் நம்மை உண்மையிலேயே நடுநடுங்க வைத்திருக்கிறார்கள்.

    ஷாரோயின் மியரின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரொம்பவும் தத்ரூபமாக படமாகியிருக்கின்றன. ஒவ்வொரு இடத்தில் இவருடைய ஒளிப்பதிவு கிராபிக்ஸையும் தாண்டி படமாகியிருப்பது சிறப்பு. மாத்தேவ் மார்கேசன் பின்னணி இசை படத்திற்கு மேலும் திரில்லிங்கை கொடுத்திருக்கிறது. படத்தில் இருக்கும் சிறிய பொருளில் வரும் சத்தத்தை வைத்தே நமக்கு திரில் கொடுக்கும் வித்தையை கற்று வைத்திருக்கிறார்.

    மொத்தத்தில் ‘ரிங்ஸ்’ பயமுறுத்துகிறது.
    64 கலைகளில் ஒன்றான கூடு விட்டு கூடு பாய்வதை மையமாக வைத்து ‘பிரகாமியம்’ என்ற படம் வெளியாகியுள்ளது. இப்படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    ஆரூடத்திற்கும் உளவியலுக்கும் இடையில் நடைபெறும் மோதலில் ஏற்படும் விளைவுகளே படத்தின் கதை. மனோதத்துவ நிபுணரான நாயகன் பிரதாப், இவருக்கு ஜோசியத்தின் மீது நம்பிக்கையே கிடையாது. கை, கால் செயலிழந்த பிரதாப்புக்கும் ஜோசியர் ஒருவருக்கும் இடையே மோதல் இருந்துகொண்ட வருகிறது.

    ஒருநாள் ஜோசியர் பிரதாப்பை சந்தித்து, உனக்கு திருமணமே நடக்காது, அப்படி நடந்தாலும் உன் மனைவியோடு நீண்டகாலம் வாழமுடியாது. அதேபோல், உனக்கு குழந்தையும் பிறக்காது, அப்படி பிறந்தாலும் இது உயிரோடு இருக்காது. உன்னால் இந்த வாழ்க்கையை நிம்மதியாகவும் வாழமுடியாது என்று கூறிவிட்டு செல்கிறார்.

    இதை பொய்யாக்கி நிரூபிக்க அவர் எடுக்கிற சில முயற்சிகள் சமூகத்தில் பலவித விளைவுகளை ஏற்படுத்துகிறது. அந்த விளைவுகள் என்னென்ன? ஜோசியத்தை அவர் பொய்யாக்கி காட்டினாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

    படத்தின் தலைப்பான பிரகாமியம் என்பது 64 கலைகளில் ஒன்றாகும். மற்றொருவரின் மனதை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கலையான கூடு விட்டு கூடும் பாயும் வித்தையை இது குறிக்கிறது. தமிழ் சினிமாவுக்கு அரிதான இந்த கதையை இயக்குனர் பிரதாப் தைரியத்துடன் கையிலெடுத்திருக்கிறார். ஆனால், அதை அழகாகவும், தெளிவாகவும் காட்சிப்படுத்துவதற்கு தவறியிருக்கிறார்.

    படத்தின் இயக்குனரும், ஹீரோவும் ஒருவரே. இரண்டுவிதமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், இரண்டுமே ரொம்பவும் மிகையாக இருப்பதால் ரசிக்க முடியாமல் போகிறது. இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள். இரண்டு பேரின் நடிப்பும் ரொம்பவும் செயற்கையாக தெரிகிறது. படத்தில் அனைவரின் வசனங்கள் உச்சரிப்பும் ரொம்பவும் செயற்கையாக தெரிகிறது. எனவே, அவர்கள் அனைவரையும் கதையோடு ஒன்றி பார்க்க முடியவில்லை.

    மொத்தத்தில் ‘பிரகாமியம்’ பிரியமில்லை.
    சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்திருக்கும் ‘எஸ்3’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் போலீஸ் கமிஷனர் ஒருவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை பற்றி துப்பு துலக்குவதற்கு ஆந்திர அரசு, தமிழக போலீஸின் உதவியை நாடுகிறது. எனவே, இந்த கொலையை பற்றி விசாரணை செய்வதற்காக தமிழக அரசு சார்பில் சூர்யா நியமிக்கப்படுகிறார்.

    இதற்காக விசாகப்பட்டினம் வரும் சூர்யாவை விமான நிலையத்தில் இருந்தே அவரின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பின்தொடர்கிறார் ஸ்ருதிஹாசன். அதேசமயம் சூர்யா, கமிஷனரை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்குகிறார்.

    ஒருகட்டத்தில் போலீஸ் கமிஷனர் கொலையில் பெரிய முக்கிய புள்ளிகளின் தொடர்பு இருப்பது சூர்யாவுக்கு தெரிய வருகிறது. அதாவது, வெளிநாட்டிலிருக்கும் வெளிநாட்டு கழிவுகளை இந்தியாவுக்குள் கொண்டுவந்து, ஒரு மர்ம கும்பல் அதை எரிக்கும்போது, காற்று மாசுபட்டு நிறைய குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். மேலும், அந்த கும்பல் வெளிநாட்டில் காலாவதியான மருந்துகளை இந்தியாவுக்கு கொண்டு வந்து அதை விற்பனை செய்வதையும் அறிகிறார். இந்த கும்பலை பிடிக்க முயற்சி எடுத்த கமிஷனர் அந்த கும்பலால் கொலை செய்யப்பட்டதும் சூர்யாவுக்கு தெரிய வருகிறது. மேலும், இந்த கும்பலுக்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் புள்ளிகளும், பெரிய பண முதலைகளும் இருப்பது தெரிய வருகிறது.

    இதையெல்லாம் தனது போலீஸ் மூளையால் சூர்யா கண்டுபிடித்து, சட்டத்தின் முன் அவர்களை எப்படி தண்டித்ததார்? சூர்யாவை தொடர்ந்து பின்தொடரும் ஸ்ருதிஹாசனின் பின்னணி என்ன? என்பதை மிகவும் விறுவிறுப்புடன் சொல்லியிருக்கிறார்கள்.

    ‘சிங்கம்’ படத்தின் மூன்றாம் பாகமாக ‘எஸ்-3’ படம் வெளிவந்திருக்கிறது. கடந்த இரண்டு பாகத்திலும் துரை சிங்கமாக சீறிப் பாய்ந்த சூர்யா, இந்த படத்திலும் தனது ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பலம் கூட்டியிருக்கிறார். படத்தில் எதிரிகளிடம் ஆக்ரோஷமாக இவர் பேசும் வசனங்களில் எல்லாம் அனல் தெறிக்கிறது. படத்தின் பெரும்பகுதியை இவரே ஆக்கிமிரத்திருக்கிறார். எனவே, தனது கதாபாத்திரத்தை உணர்ந்து அவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

    ஸ்ருதிஹாசன் வழக்கம்போல் இல்லாமல் இப்படத்தில் பொறுப்பான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். அனுஷ்காவுக்கு முந்தைய பாகங்களைப் போல் இப்படத்தில் ஒன்றிரண்டு காட்சிகள் வந்து போவது மாதிரியான கதாபாத்திரம்.

    படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றும் மிகவும் வேகமாக நகர்வதால் சூரியின் காமெடியை யோசித்து சிரிப்பதற்கே நேரம் இல்லாமல் போகிறது. இவருடன் வரும் ரோபோ சங்கருக்கும் இந்த படத்தில் சிறப்பான காமெடி, குணச்சித்திர கதாபாத்திரம். அதை உணர்ந்து அவர் சிறப்பாக செய்திருக்கிறார். பாடகர் கிரிஷ் இந்த படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். முதல் படத்திலேயே அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    அரசியல்வாதியாக வரும் சரத் சக்சேனா பார்வையாலேயே மிரட்டுகிறார். இளம் வில்லனாக வரும் தாகூர் அனூப் சிங் தமிழுக்கு புதிது என்றாலும், தனது கதாபாத்திரத்தை அழுத்தமான நடிப்பால் அழகாக பதிவு செய்திருக்கிறார். முந்தைய பாகங்களில் நடித்த ராதாரவி, யுவராணி, நாசர், விஜயகுமார் ஆகியோரும் தங்களது அனுபவ நடிப்பால் படத்திற்கு பலம் கொடுத்திருக்கிறார்கள்.

    முந்தைய பாகங்களைப் போலவே இந்த பாகத்தையும் இயக்குனர் ஹரி, பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் கொண்டு போயிருக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை காட்சிகளின் வேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறார். ஆனால், இந்த வேகம் ஒருகட்டத்தில் சலிப்படைய செய்துவிடுகிறது.

    கனல் கண்ணனின் சண்டைக் காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பலம். வி.டி.விஜயன், டி.எஸ்.ஜாய் ஆகியோர் படத்தொகுப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தின் வேகத்தை சற்று குறைத்து ஒவ்வொரு காட்சியையும் ரசிகர்கள் ரசிப்பதற்கு நேரம் கொடுத்திருக்கலாம். பிரியனின் ஒளிப்பதிவில் சண்டை காட்சியில் கேமரா சுழன்று விளையாடியிருக்கிறது. பாடல் காட்சிகளிலும் இவரது கேமரா பளிச்சிடுகிறது.

    ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் பார்க்கவும், ரசிக்கவும் வைக்கிறது. பின்னணி இசையில் வழக்கம்போல் ஆக்ஷன் படத்திற்குண்டான வேகத்தையும், விறுவிறுப்பையும் கொடுத்திருக்கிறார்.

    மொத்தத்தில் ‘எஸ்3’ வேகம்.

    ஸ்டான்லி டாங் இயக்கத்தில் ஜாக்கிசான், சோணு சுட் நடிப்பில் வெளியாகியுள்ள `குங்பூ யோகா' படம் எப்படி இருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்.
    சீனாவில் மிகப்பெரிய தொல்பொருள் ஆராய்ச்சியாளராக இருக்கிறார் ஜாக்கிசான். இந்திய ராஜவம்சத்தை சேர்ந்த திஷா பதானி  இவரை நேரில் சந்திக்கிறார். அப்போது, 1000 வருடங்களுக்கு முன் சீனா-இந்தியா உறவு நல்லமுறையில் இருந்தபோது,  இந்தியாவில் இருந்து மரகதத்தால் செய்யப்பட்ட சாவி ஒன்றை சீனாவுக்கு கொண்டு வரும்போது, எல்லையில் பனிமலை  சரிவில் சிக்கி, அந்த மரகத சாவி தொலைந்து விட்டதாகவும், அதை கண்டுபிடித்து தரும்படியும் கோருகிறார்.

    ஜாக்கிசானும், தன்னுடைய உதவியாளர்களை அழைத்துக் கொண்டு பனிமலையில் காணாமல்போனதாக கூறப்படும் மரகதச்  சாவியை தேடி புறப்படுகிறார். அதேநேரத்தில், இந்தியாவில் மற்றொரு ராஜ வம்சத்தை சேர்ந்த சோனு சூட், இவர்கள் மரகத  சாவியை தேடி செல்வதை அறிந்து, அதை அடைவதற்காக தன்னுடைய ஆட்களை அனுப்பி அவர்களை வேவு பார்க்க  வைக்கிறார். ஒருகட்டத்தில், அந்த மரகத சாவியை தேடிக்கண்டுபிடிக்கும் ஜாக்கிசான் மற்றும் அவரது உதவியாளர்களை சோனு  சூட்டின் ஆட்கள் அடித்துப்போட்டுவிட்டு அந்த சாவியை அடைய பார்க்கிறார்கள்.

    ஆனால், அதற்குள் ஜாக்கிசானின் உதவியாளர்களில் ஒருவன் அந்த மரகத சாவியை எடுத்துக் கொண்டு துபாய்க்கு  சென்றுவிடுகிறான். அங்கு சென்று அந்த சாவியை அவன் ஏலம் விட பார்க்கிறான். இதை அறிந்த ஜாக்கிசானும், திஷா  பாண்டேவும் துபாய்க்கு சென்று அந்த சாவியை ஏலம் எடுக்க நினைக்கிறார்கள். அதேநேரத்தில் சோனு சூட்டும் அந்த ஏலத்தில்  கலந்துகொள்கிறார்.

    அப்போது, சோனு சூட்டை விட அதிக விலை கொடுத்து ஜாக்கிசான் அந்த சாவியை ஏலத்தில் எடுத்துவிடுகிறார். இதனால்  கோபமடைந்த சோனுசூட், மீண்டும் அந்த சாவியை அவர்களிடமிருந்து அபகரிக்க முயற்சிக்கிறார். அப்போது நடக்கும்  சண்டையில், அந்த சாவி திஷா பதானி கைவசம் செல்ல, அதை அவள் எடுத்துக் கொண்டு இந்தியாவுக்கு வந்துவிடுகிறாள்.

    இதையடுத்து, திஷா பதானியை தேடி ஜாக்கிசானும், சோனு சூட்டும் இந்தியாவுக்கு வருகிறார்கள். இந்தியாவுக்கு வந்து திஷா  பதானியை சந்திக்கும் ஜாக்கிசானிடம், அந்த சாவி, ஒரு கோவிலில் இருக்கும் புதையல் அறைக்குண்டான சாவி என்பதை  கூறுகிறாள். அந்த புதையலை வைத்து தான் நல்லது செய்ய நினைப்பதாகவும் கூறும் திஷாபதானிக்கு ஜாக்கிசான் உதவ  நினைக்கும் நேரத்தில், சோனு சூட், ஜாக்கிசானின் உதவியாளர்களை கடத்தி வைத்துக் கொண்டு அந்த புதையலை கண்டுபிடித்து  தருமாறு கேட்கிறார்.

    இறுதியில், அந்த புதையலை கண்டுபிடித்தார்களா? அந்த புதையல் யார் கைவசம் சென்றது? என்பதே மீதிக்கதை.

    ஜாக்கிசான் நீண்ட இடைவெளிக்கு பிறகு, ஒரு காமெடி கலந்து ஆக்ஷன் படத்தில் நடித்து நம்மை எல்லோரையும் சிரிக்க வைத்து  ரசிக்க வைத்திருக்கிறார். பெரும்பாலான காட்சிகள் சிறுவர்கள் கவரும்படி அமைந்திருப்பது சிறப்பு. தனக்கு மட்டுமில்லாமல், பிற  நடிகர்களுக்கும் நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அதை பாராட்டியே ஆகவேண்டும்.

    குறிப்பாக, காருக்குள் சிங்கத்துடன் பயணிக்கும்போது, பயந்துகொண்டே இவர் செய்யும் முகபாவனைகள் எல்லாம் ரசிக்க  வைக்கின்றன. அதேபோல், பனிக் குகைக்குள் இவர் எதிரிகளை துவம்சம் செய்யும் காட்சிகள் எல்லாம் ரசிகர்களை  கவர்ந்திருக்கின்றன. அதேபோல், சண்டைக் காட்சியிலும் ஒரு நகைச்சுவை இருக்கும்படி தனது வழக்கமான நடிப்பை கொடுத்து  ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியிருக்கிறார். அதேபோல், இந்தியர்களுடன் சேர்ந்து இவர் ஆடும் காட்சிகளில் அவர்களுக்கு  இணையாக நடனமாடி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார்.

    தோனி படத்தின் மூலம் பிரபலமான திஷா பதானி, இந்த படத்தில் ஒரு ஹாலிவுட் ஹீரோயின் அளவுக்கு தனது உடல்வாகை  வைத்து நடித்திருக்கிறார். இந்த படத்தில் சண்டைக் காட்சியிலும் தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். இவருக்கு  தங்கையாக வரும் அனேகன் பட நாயகி அமைரா தஸ்தூரும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக  செய்திருக்கிறார்.

    வில்லனாக வரும் சோனு சூட்டுக்கு, மீண்டும் தனது திறமையை வெளிப்படுத்தக்கூடிய வலுவான கதாபாத்திரம். அதை அவர்  சிறப்பாக செய்திருக்கிறார். டான்ஸ், ஆக்ஷன் என எல்லாவற்றையும் சிறப்பாகவே செய்திருக்கிறார்.

    இயக்குனர் ஸ்டான்லி டாங் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும்படியான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார்  என்றுதான் சொல்லவேண்டும். ஜாக்கிசான் ரசிகர்களின் மனநிலையை புரிந்துகொண்டு, அவர்களுக்கு ஏற்றவாறு கதையை  நகர்த்தி, அதில் ஆக்ஷன், நகைச்சுவை என கலந்து எந்த இடத்திலும் போரடிக்காதவாறு திரைக்கதையை அமைத்திருக்கிறார்.

    கதைப்படி இப்படம் சீனா, இந்தியா, துபாய் என பயணமாகி இறுதியில் இந்தியாவில் வந்தே முடிகிறது. இந்திய கலைகளை இந்த  படத்தில் அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஹாலிவுட் படம் என்ற வரைமுறைகளை தாண்டி இப்படம் இந்திய  ரசிகர்களையும் கவரும் படி எடுத்திருப்பது மிகவும் சிறப்பு.

    நாதன் வாங் இசையில் படத்தில் ஒரேயொரு பாடல்தான். இசைக்கு மொழி கிடையாது என்பதற்கு இந்த பாடலே சாட்சி.  அந்தளவுக்கு ஹாலிவுட் இசைக்கலைஞராக இருந்தாலும் இந்திய ரசிகர்களுக்கு ஏற்றவாறு அந்த பாடலை கொடுத்து, அதை  காட்சியப்படுத்திய விதத்திலும் ரசிகர்களை திருப்திபடுத்தியிருக்கிறார். பின்னணி இசையிலும் தனது திறமையை  நிரூபித்திருக்கிறார்.

    விங் ஹாங் வோங் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக கைகொடுத்திருக்கிறது. இவரது கேமரா படத்தின் ஒவ்வொரு  காட்சிகளையும் கலர் புல்லாக காட்டியிருக்கிறது. சண்டைக் காட்சிகளில் இவரது கேமராக்களின் கோணம் ரசிகர்களை  வியப்படைய வைத்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘குங்பூ யோகா’ ஆரோக்கியம்.
    ஆண்டர்சன் இயக்கத்தில் ஹாலிவுட் பிரபலம் மிலா ஜோவோவிச் நடிப்பில் வெளியான ரெசிடென்ட் ஈவில் - பைனல் சேப்டர் படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    ரக்கூன் சிட்டியில் அமைந்திருக்கும் அம்பெர்லா கார்ப்பரேஷனின் நிறுவனரான விஞ்ஞானி மார்கஸ் கண்டுபிடித்த ‘டி-வைரஸால்’  பாதிக்கப்பட்ட பலர் மிருக மனிதர்களாக சுற்றித் திரியும் நேரத்தில், இந்த வைரஸால் அதிக பலம் கொண்ட ஆலிஷ், அந்த மிருக  மனிதர்களையெல்லாம் கொன்று அழிக்கிறாள். இந்த கதைக்கருவுடன், ஹாலிவுட் படங்களுக்கே உரித்தான புதுப்புது ஆக்சன்  காட்சியமைப்புடன் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது ரெசிடெண்ட் ஈவில் படங்கள். அந்த வரிசையில் தற்போது  வெளியாகியிருக்கிறது ரெசிடென்ட் ஈவில் - பைனல் சேப்டர்.

    ரக்கூன் சிட்டியில் உள்ள அம்பெர்லா கார்ப்பரேஷனை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரெட் குயின் என்ற சூப்பர் கம்யூட்டர்  இதுவரையில் ஆலிஷ்-க்கு எதிராக செயல்பட்டு வந்த நிலையில், இந்த பாகத்தில் அந்த சூப்பர் கம்ப்யூட்டர் ஆலிஷ்-க்கு  ஆதரவாக திரும்புகிறது.

    இந்நிலையில், அம்பெர்லா கார்ப்பரேஷன் வழியாக காற்று மூலமாக பரவக்கூடிய ஆன்ட்டி வைரஸ் ஒன்று பரவி, மிருக  மனிதர்களும், சாதாரண மக்களும் இறக்கப்போவதாக சூப்பர் கம்ப்யூட்டர் ஆலிஷை எச்சரிக்கிறது. அந்த ஆன்ட்டி வைரஸ் 48  மணி நேரத்திற்குள் பரவக்கூடிய அபாயம் இருப்பதால், அம்பெர்லா கார்ப்பரேஷனை நோக்கி ஆலிஷ் பயணப்படுகிறாள்.  அப்போது, அவளுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது.

    அதையெல்லாம் மீறி அம்பெர்லா கார்ப்பரேஷனை ஆலிஷ் அடைந்து, ஆன்ட்டி வைரஸ் பரவாமல் தடுத்தாரா? இல்லையா?  என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் ஆலிஷாக வரும் மிலா ஜோவோவிச்சை சுற்றியே கதை முழுவதும் நகர்கிறது. ஒவ்வொரு பாகத்திலும் இவருடைய  சண்டைக் காட்சிகள் பெரிய வரவேற்பை பெறும், அதேபோல் இந்த பாகத்திலும் இவருடைய சண்டைக் காட்சிகள் எல்லாம்  பிரம்மாண்டமாகவும், அனைவரும் ரசிக்கும்படியாகவும் அமைந்திருக்கிறது. மிலா ஜோவோவிச் படத்தின் முழு பலத்தையும்  தனது தோளில் சுமந்து அதற்கு வலு சேர்த்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

    பேய் படங்களில் ஒரு பில்லியன் டாலர் வசூலை திரட்டிய முதல் படவரிசைக்கான பெருமை இந்த ரெசிடெண்ட் ஈவில்  படங்களுக்கு உண்டு. அந்த வரிசையில் கடைசியாக வெளிவந்த இந்த படத்தில் கதை பெரிதளவில் இல்லாவிட்டாலும், இந்த  படங்களுக்கே உண்டான தனித்துவமான ரசிகர்களால், அந்த படங்கள் எல்லாம் பெரிய வெற்றி பெற்று, வசூலை  வாரிக்குவித்தன.

    அதேபோல், இந்த பாகத்திலும் பெரிய கதையம்சம் என்று இல்லாமல், வழக்கம்போல், எல்லா பாகங்களைப்போலவே  ஹீரோயின் மிருக மனிதர்களை கொல்வது, எதிரிகளை அழிக்க செல்லும் வழியில் ஏற்படும் பிரச்சினைகள், இறுதியில்  எதிரிகளை அழித்து, அடுத்த பாகத்திற்கு வழிகொடுப்பது போலவே முடிவடைந்திருக்கிறது.

    நூல் அளவுதான் கதை என்றாலும், இந்த படத்தின் முந்தைய பாகங்களைப்போலவே ஆக்ஷன் காட்சிகள், புதுப்புது வடிவிலும்,  உருவத்திலும் வரும். மிருக மனிதர்கள், விறுவிறுப்பான காட்சியமைப்புகள், ரொம்பவும் ஷார்ப்பான எடிட்டிங் என படத்தில்  ரசிக்கும்படியான அம்சங்களும் உண்டு. இதை இயக்குனர் பால் ஆண்டர்சன் அழகாக கையாண்டிருக்கிறார்.

    இந்த படங்களை விரும்பும் ரசிகர்களின் மனநிலையை புரிந்து, அவர்களுக்கேற்றார்போல் படமாக்கியிருக்கிறார் ஆண்டர்சன். 2  நாட்களில் நடக்கும் கதையென்பதால், இந்த கதைக்குள் நிறைய புதுமையான காட்சிகளை புகுத்தமுடியாமல் போனது  வருத்தமே. அதேபோல், கிளைமாக்ஸ் காட்சியையும் ரொம்பவும் சாதாரணமாக முடித்திருப்பது ரசிகர்களுக்கு அதிருப்தியை  ஏற்படுத்துகிறது.  

    மொத்தத்தில் ரெசிடெண்ட் ஈவில்-பைனல் சேப்டர் ‘மரணயுத்தம்’
    ஜெயம் ரவி - அரவிந்த்சாமி - ஹன்சிகா ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘போகன்’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    ஜெயம் ரவி அசிஸ்டெண்ட் கமிஷனராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய அப்பா நரேன் வங்கியில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இதே ஊரில், ராஜ பரம்பரையில் இருந்து வந்த வாரிசான அரவிந்த்சாமி, வாழும் வரை ஜாலியாகவும், ஆடம்பரமாகவும் வாழவேண்டும் என்ற குறிக்கோளோடு சொர்க்கலோக வாழ்க்கை வாழ்கிறார்.

    இந்நிலையில், ஒருநாள் அரவிந்த்சாமி ஒரு நகைக்கடையின் முன் தனது காரை நிறுத்துகிறார். காரில் இருந்தபடியே நகைக்கடையின் உள்ளே இருக்கும் பையனை உற்றுப் பார்க்கிறார். அப்போது, அந்த பையன் நகைக்கடைக்குள் இருந்து பணத்தை கொண்டு வந்து இவரது காரில் எதுவும் சொல்லாமல் வைத்துவிட்டு, உடனே மயங்கி விழுகிறான்.

    இதற்கிடையில், ஜெயம் ரவிக்கும் ஹன்சிகாவுக்கும் பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. திருமண தேதி நெருங்கும் சமயத்தில், வழக்கம்போல், அரவிந்த்சாமி தனது காரை நரேன் வேலை பார்க்கும் வங்கியின் முன் கொண்டு வந்து நிறுத்தி, அவரை பார்க்கிறார். அப்போது, நரேன் வங்கி பணத்தை எடுத்துக் கொண்டுவந்து அரவிந்த் சாமியின் காரில் வைத்துவிட்டு மயங்கிப் போகிறார்.

    ஆஸ்பத்திரியில் கண்விழித்துப் பார்க்கும்போது வங்கியில் இருந்த பணம் கொள்ளை போனதாக அறிந்து அதிர்ச்சியடைகிறார் நரேன். வங்கிப் பணம் கொள்ளை தொடர்பாக நரேனை போலீஸ் கைது செய்கிறது. இதையடுத்து, ஜெயம் ரவியை திருமணம் செய்ய ஹன்சிகா வீட்டார் எதிர்ப்பு தெரிவிக்க, அவர்களை பகைத்துக்கொண்டு ஜெயம் ரவியின் வீட்டுக்கே வருகிறார் ஹன்சிகா.

    இந்த இக்கட்டான சூழ்நிலையில், தனது அப்பா நிரபராதி என்பதை நிரூபிக்க ஜெயம் ரவி களத்தில் இறங்குகிறார். அதன்படி, இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்ட அரவிந்த்சாமியை கண்டுபிடித்து விசாரிக்கிறார். விசாரித்துக் கொண்டிருக்கும்போதே, அரவிந்த் சாமி கூடு விட்டு கூடு பாயும் வித்தையை பயன்படுத்தி, ஜெயம் ரவியின் உடம்பில் புகுந்து கொள்கிறார்.

    அப்போதிலிருந்து, அரவிந்த் சாமி ஜெயம் ரவியாகவும், ஜெயம் ரவி, அரவிந்த் சாமியாகவும் மாறிவிடுகிறார்கள். இதைப் பயன்படுத்திக் கொண்டு ஜெயம் ரவி உருவத்தில் இருக்கும் அரவிந்த்சாமி ஜெயிலில் இருந்து தப்பிக்கிறார். அரவிந்த் சாமியின் குணாதிசயத்துடன் திரியும் ஜெயம் ரவியின் உடல், அதன்பிறகு என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தியது. இதையெல்லாம், ஜெயம் ரவியின் குணாதிசயத்துடன் ஜெயிலுக்குள் இருக்கும் அரவிந்த்சாமி எப்படி முறியடித்தார்? என்பதே மீதிக்கதை.

    ஜெயம் ரவிக்கு இந்த படத்தில் இரண்டு மாறுபட்ட நடிப்பினை வெளிப்படுத்தக்கூடிய அழுத்தமான கதாபாத்திரம். அதை அவர் உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். முதல் பாதியில் இவருடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், இரண்டாம் பாதியில் தனக்கு ஏற்ற தீனி கிடைத்துவிட்ட சந்தோஷத்தில், தனது நடிப்பை திறமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல், ரொமான்ஸ் காட்சிகளிலும் வழக்கம்போல் தனது அழகான நடிப்பால் கவர்கிறார்.

    அரவிந்த்சாமி இன்னொரு ஹீரோ போல் படத்தில் வலம் வந்திருக்கிறார். படத்தில் இவர் அறிமுகம் ஆகும் காட்சியையே வித்தியாசமாகவும், ஸ்டைலாகவும் கொடுத்திருக்கிறார்கள். அதேபோல், அழகிகளுடன் ஆடி, பாடும் காட்சிகளில் கிளுகிளுப்பூட்டியிருக்கிறார். படத்தில் இவருடைய கதாபாத்திரமும் வலுவானதுதான். அதை புரிந்துகொண்டு தனக்குண்டான ஒவ்வொரு காட்சியிலும் தனக்கே உரித்தான ஸ்டைலான நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

    ஹன்சிகா வழக்கம்போல கதாநாயகியாக இல்லாமல், இப்படத்தில் சிறப்பான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். படத்தின் இறுதியில், கம்பீரமாகவும், ஆக்ரோஷமாகவும் நடித்துள்ள காட்சி அனைவரையும் கவரும். நாசர், ஆடுகளம் நரேன், விடிவி கணேஷ், வருண், நாகேந்திர பிரசாத் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக செய்திருக்கிறார்கள். படத்தில் அரவிந்த் சாமியின் கதாபாத்திரம் மற்றவர்களின் உடம்பிற்குள் சென்று வருவதுபோன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் தங்கள் கதாபாத்திரம் மட்டுமில்லாது, அரவிந்த் சாமியின் கதாபாத்திரம் போலவும் நடித்தே ஆகவேண்டும். அதை, அனைவரும் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.

    இயக்குனர் லட்சுமண் ஏற்கெனவே ரோமியோ ஜுலியட் என்ற ஹிட் படத்தை கொடுத்தவர். இந்த முறை ஒரு வித்தியாசமான முயற்சியை கையாண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் 80-களுக்கு பிறகு இப்படியொரு படம் வெளிவந்திருக்கிறது. இரண்டாம் படத்திலேயே அகலக்கால் வைத்து விஷப் பரீட்சையில் இறங்கியிருக்கிறார். அது அவருக்கு கைகொடுத்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

    இரு கதாபாத்திரங்களின் தன்மையை ஒரு நடிகரால் கொண்டு வருவது மாதிரியான கதையை உருவாக்கி, அதற்கேற்றவாறு பொருத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்ததிலேயே பாதி வெற்றி பெற்றுவிட்டார். மேலும், விறுவிறுப்பான திரைக்கதையை உருவாக்கி படத்திற்கு முழு வெற்றியைத் தேடிக் கொடுத்திருக்கிறார்.

    படத்தின் முதல் பாதி விறுவிறுப்புடன் நகர்கிறது. இரண்டாம் பாதியில்தான் நடுவில் கொஞ்சம் படம் டல்லடிக்கிறது. இருப்பினும், இறுதியில் அனைவருக்கும் திருப்தி கொடுக்கும்படி முடித்திருப்பது சிறப்பு. மேலும், இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என்ற அறிவிப்போடு முடித்திருப்பது ரசிகர்களுக்கு இப்போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    ‘ரோமியோ ஜுலியட்’ படத்தில் எல்லா பாடல்களையும் ஹிட்டாக்கிய இமான், இப்படத்தில் கொஞ்சம் ஏமாற்றியிருக்கிறார். படத்தில் பாடல்கள் பெரிதளவில் ரசிக்க முடியாவிட்டாலும், பின்னணி இசையில் வெளுத்து வாங்கியிருக்கிறார். படத்தின் வேகத்திற்கு இவரது பின்னணி இசையும் உதவியிருக்கிறது எனலாம். சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. பாடல் காட்சிகளில் இவரது கேமரா கண்கள் புகுந்து விளையாடியிருக்கிறது.

    மொத்தத்தில் ‘போகன்’ வித்தைக்காரன்.
    ×