என் மலர்tooltip icon

    தரவரிசை

    புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ‘கன்னா பின்னா’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    நாயகி அஞ்சலி ராவ் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு இருந்து வருகிறார். இவரைப்போலவே சினிமாவில் கேமரா மேன், இசையமைப்பாளர் ஆகவேண்டும் என்ற கனவோடு அவரது நண்பர்களுடம் உடனிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு படத்தை எடுக்கவேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில், நாயகி ஒரு தயாரிப்பாளரை பார்த்து கதை சொல்வதற்காக செல்கிறார். அப்போது, அந்த தயாரிப்பாளர், ஆக்ஷன், செண்டிமெண்ட் இல்லாமல் முழுக்க முழுக்க காமெடியான ஒரு கதை இருந்தால் சொல்லுங்கள், படம் பண்ணலாம் என்று கேட்கிறார். நாயகியும் தன்னிடம் ‘கன்னா பின்னா’ என்ற தலைப்பில் ஒரு காமெடி இருப்பதாக அவரிடம் கூறுகிறார்.



    தலைப்பிலேயே மயங்கிப்போன தயாரிப்பாளர் மேற்கொண்டு அவரிடம் எந்த கதையும் கேட்காமல், அட்வான்ஸ் தொகையாக ரூ.5 லட்சத்தை கொடுத்துவிட்டு, அவரை ஒப்பந்தம் செய்கிறார். வீட்டுக்கு திரும்பிய நாயகி, தனது நண்பர்களிடம் நடந்ததை சொல்கிறாள். கதையே இல்லாமல் கதை இருப்பதாக பொய் சொல்லி தயாரிப்பாளரிடம் பணம் வாங்கிவிட்டு வந்திருப்பதாக நாயகி ஒரு குண்டை போடுகிறார்.



    இருப்பினும், தயாரிப்பாளர் கொடுத்த தேதிக்குள் ஒரு காமெடி கதையை தயார் செய்துவிடலாம் என்ற நம்பிக்கையில் மூன்றுபேரும் கதையை தேடி புறப்படுகிறார்கள். அப்போது, நாயகன் தியா நாயரை சந்திக்கிறார்கள். பஸ் ஸ்டாண்டில் சாக்லேட் கொடுத்து பெண்களை தன்னை காதலிக்கும்படி கெஞ்சும் நாயகனை பார்த்ததும் அவனை சுற்றிவந்தால் ஒரு காமெடி கதை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவனை பின்தொடர முடிவு செய்கிறார்கள்.

    இறுதியில் அவர்களுக்கு நல்ல கதை கிடைத்து, படம் எடுத்தார்களா? நாயகனின் குடும்பம் எவ்வளவு சிறந்தது. நாயகனைச் சுற்றி எந்தமாதிரியான சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெறுகிறது? என்பதை நகைச்சுவையுடன் சொல்ல கடுமையாக முயற்சி செய்திருக்கும் படம்தான் ‘கன்னா பின்னா’.



    இப்படத்தின் நாயகன் தியா நாயர்தான் இயக்குனரும்கூட. படம் முழுக்க அவர் வெகுளித்தனத்துடனயே நடித்திருக்கிறார். எந்தளவுக்கு வெகுளித்தனம் என்றால், பேஸ்புக் கணக்கை தொடங்குவதற்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்யக்கூடிய அளவுக்கு வெகுளியான ஆள். வில்லத்தனமான கதாபாத்திரத்திற்கு பொருந்தக்கூடிய உடலமைப்பை வைத்துக்கொண்டு கோமாளித்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதை பார்க்கும்போது ஏனோ ரசிக்க முடியவில்லை.

    அதேபோல் நாயகி அஞ்சலி ராவ், படத்தை பார்ப்பவர்களின் வேதனை தெரியாமல், அடிக்கடி வந்து சிரித்து பார்ப்பவர்களை மேலும் வெறுப்பேற்றியிருக்கிறார். வில்லனாக வரும் சிவாவுக்கு வில்லத்தனமான கதாபாத்திரத்திற்கு பொருத்தமான உடலமைப்பு இருந்தும், இவருடைய நடிப்புக்கு ஏற்ற கதாபாத்திரம் இல்லாதது வருத்தம். இனிவரும் படங்களில் தனக்கு பொருந்தக்கூடிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்தால் சிறப்பாக இருக்கும்.



    நாயகனின் நண்பர்களாக வருபவர்கள், நாயகியின் நண்பர்களாக வருபவர்கள் தங்கள் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். படத்தில் வரும் நிறைய கதாபாத்திரங்களும் ஜிம்மில் ஓர்க் அவுட் பண்ணியவர்கள் போல கட்டுமஸ்தான உடம்புடனே வருகிறார்கள். அந்த உடம்பை வைத்துவிட்டு காமெடி பண்ணுவதுபோல் நடிக்க முற்படும்போது அது எடுபடாமல் போய்விடுகிறது. இயக்குனர் தியா நாயர் படத்தின் தலைப்புக்கேற்றவாறு கன்னா பின்னாவென்று படத்தை எடுத்து வைத்திருக்கிறார்.

    ரோஷன் சேதுராமன் இசையில் ‘லிங்கரி மிட்டாய்’ பாடல் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், அதை படமாக்கியவிதம் பாடலை கெடுத்துவிட்டதுபோல் தெரிகிறது. மற்ற பாடல்கள் சுமார் ரகம்தான். பின்னணி இசையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஜெரால்டு ராஜமாணிக்கத்தின் ஒளிப்பதிவும் பரவாயில்லை ரகம்தான்.

    மொத்தத்தில் ‘கன்னா பின்னா’ கண்ணை மூடித்தான் பார்க்கணும்.

    சிபிராஜ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வாஸ்து மீனை மையமாக வைத்து வெளிவந்துள்ள ‘கட்டப்பாவ காணோம்’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    சிறுவயதில் இருந்தே ராசியில்லாத பையன் என்ற அடைமொழியோடு வளர்ந்து வருகிறார் நாயகன் சிபிராஜ். இவருடைய அப்பா சித்ரா லட்சுமண் பல தொழில்களை செய்தும் நஷ்மடைந்து கடைசியில் ஜோசியராக மாறிவிடுகிறார். இந்நிலையில், சிபிராஜ் ஒருநாள் நாயகி ஐஸ்வர்யாவை கிளப்பில் பார்க்கிறார்.

    இருவரும் ஒருவருக்கொருவர் பேசி நெருக்கமாகிறார்கள். ஐஸ்வர்யா தன்னிடம் தான் ராசியில்லாத பையன் என்று கூறும் சிபிராஜுடைய அப்பாவித்தனம் பிடித்துப்போக, அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார் ஐஸ்வர்யா. ஒருகட்டத்தில் இருவரும் காதலர்களாகிறார்கள்.



    திருமணம் செய்ய ஆசைப்படும் இவர்களுக்கு ஜோசியத்தின் மீது நம்பிக்கையுள்ள சித்ரா லட்சுமணனோ ரெண்டுபேருக்கும் ராசி சரியில்லை என்று திருமணத்துக்கு தடை போடுகிறார். இருப்பினும், அதை பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் இரண்டுபேரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். தனியாக வீடு பிடித்து குடியும் போகிறார்கள்.

    இந்நிலையில், மிகப்பெரிய தாதாவான மைம் கோபியும் ஜோசியத்தின் மீது நம்பிக்கையுடையவராக இருக்கிறார். இவர் கட்டப்பா என்று வாஸ்து மீனை வளர்த்து வருகிறார். அதனால்தான் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் இருந்து வருகிறார்.



    இந்நிலையில், அந்த மீனை யோகி பாபு திருடிச் சென்றுவிடுகிறார். திருடிச் சென்றவர் அந்த மீனை தண்ணி லாரியில் போட்டுவிடுகிறார். கடைசியில் அந்த மீன், வளர்ப்பு மீன்கள் கடை வைத்திருக்கும் லிவிங்ஸ்டன் வசம் சென்றுவிடுகிறது. ஏர்ஹோஸ்டசான சாந்தினி, தனது சிறுவயது தோழனான சிபிராஜுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக அந்த வாஸ்து மீனை வாங்கிக் கொண்டு, சிபிக்கு பரிசாக கொடுக்கிறாள். அதேநேரத்தில், காணாமல் போன வாஸ்து மீனை திருடியவனை தனது ஆட்களை விட்டு தேடி வருகிறார் மைம் கோபி.

    இறுதியில், அந்த வாஸ்து மீன் மைம் கோபியின் கைக்கு கிடைத்ததா? சிறு வயதில் இருந்தே ராசியில்லாத பையன் என்று வளர்ந்த சிபிராஜ் கையில் கிடைத்த வாஸ்து மீன் அவருக்கு ராசியை கொடுத்ததா? வாஸ்து மீன் தனது கைக்கு வந்தபிறகு சிபிராஜின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    சிபிராஜ் இப்படத்தில் ஹீரோயிசம் காட்டாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். படத்தில் இவருக்கு ஆக்ஷன் காட்சிகளே கிடையாது. முழுக்க முழுக்க நகைச்சுவையுடன் கூடிய கதாபாத்திரம். அதிலும், கதைக்கு என்ன தேவையோ அதற்கேற்ற நடிப்பை மட்டும் கொடுத்து கைதட்டல் பெறுகிறார்.

    ஐஸ்வர்யா ராஜேஷ் மாடர்ன் பெண்ணாக வருகிறார். இந்த படத்தில் மதுபானங்கள் குடிப்பதுபோன்றெல்லாம் துணிச்சலாக நடித்திருக்கிறார். படத்தில் இவருடைய கதாபாத்திரம்கூட துணிச்சல்மிக்கதுதான். அதே துணிச்சலுடன் நடித்து அசத்தியிருக்கிறார். அதேநேரத்தில் படத்தில் இரட்டை அர்த்த வசனங்களும் பேசி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.



    காளி வெங்கட் படத்தின் காமெடிக்கு ரொம்பவும் உதவியிருக்கிறார். சர்ப்ரைஸ் ஷீலாவாக வரும் சாந்தினி கலகலப்பான பெண்ணாக வந்து ரசிக்க வைக்கிறார். மைம் கோபி ரெண்டு, மூன்று காட்சிகள் வந்தாலும் வில்லத்தனத்தில் மிரட்டிவிட்டு போயிருக்கிறார். யோகி பாபுவுக்கும் ஒரு சில காட்சிகள்தான். இருப்பினும், அவர் வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பு கொடுக்கிறது.

    சித்ரா லட்சுமணன், களவாணி திருமுருகன், டிடெக்டிவாக வரும் சரவணன் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள்.

    இயக்குனர் மணி சேயோன் தனது முதல்படத்திலேயே மூடநம்பிக்கையை கதைக்கருவாக வைத்துக் கொண்டு அதில் வெற்றிபெற முயற்சி செய்திருக்கிறார். வாஸ்து மீன் என்ற ஒன்றை வைத்துக்கொண்டு அதைச் சுற்றி நடக்கும் கதையை நகைச்சுவையோடு கொண்டுபோய் ரசிக்க வைத்திருக்கிறார். இருப்பினும், படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம் இருப்பதால் குடும்பத்தோடு சென்று பார்க்க முடியாத அளவுக்கு இருக்கிறது. அதையெல்லாம் கொஞ்சம் தவிர்த்திருந்தால் அனைவரும் ரசிக்கும்படியான படமாக இது இருந்திருக்கும் என்பது மட்டும் உண்மை.


    ஆனந்த் ஜீவாவின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாக படமாக்கியிருக்கிறது. வீட்டுக்குள் நடக்கும் காட்சிகளில் எல்லாம் தேவையான ஒளியில் படமாக்கி கைதட்டல் பெறுகிறார். பாடல் காட்சிகள் குளுமை இருக்கிறது. சந்தோஷ் குமார் தயாநிதியின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசை ரசிக்க வைக்கிறது.

    மொத்தத்தில் ‘கட்டப்பாவ காணோம்’ காமெடி கலாட்டா.
    கிங் காங் என்ற கொரில்லா குரங்கை மையமாக வைத்து உருவாகியுள்ள `காங்: ஸ்கல் ஐலேண்ட்' படத்தின் விமர்சனத்தை கீழே படிப்போம்.
    அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி ஜான் குட்மேன். பசுபிக் பெருங்கடலில் அவர் நடத்திய ஆராய்ச்சியின் போது மறைவாக உள்ள ஸ்கல் ஐலேண்ட் என்ற தீவு  ஒன்றை கண்டுபிடிக்கிறார். யாரும் நுழைய முடியாத அளவுக்கு அந்த தீவில் ஒருவித சூறாவளி போன்ற சுழற்காற்று ஒன்று  தடுக்கிறது. எனவே அங்கு ஆராய்ச்சி மேற்கொண்டால் பல புதுமையான கனிமங்கள் மற்றும் படிமங்கள் கிடைக்கும் என்று நம்பும்  விஞ்ஞானி குட்மேன் அந்த தகவலை தனக்கு நம்பமகமான முன்னாள் ராணுவ வீரர், படத்தின் ஹீரோவான டாம் ஹிடில்சனிடமும்,  பெண் புகைப்பட கலைஞர் ஒருவரிடமும் தெரிவிக்கிறார்.

    அதனைத்தொடர்ந்து அங்கு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள அமெரிக்க அரசிடம் இருந்து அனுமதி பெற்று அந்த தீவுக்கு தனது  விஞ்ஞானிகள் குழுவுடன் செல்கிறார். அந்த விஞ்ஞானிகள் குழுவுடன், அமெரிக்க ராணுவக்குழு ஒன்றும், மருத்துவக்குழு ஒன்றும்  செல்கிறது.



    அந்த தீவுக்கு செல்லும் இராணுவ குழுவை சாமுவேல் ஜேக்சன் வழிநடத்தி செல்கிறார். மூன்று குழுக்களும் அந்த தீவினை நெருங்கும்  போது சுழற்காற்று வீசுத் தொடங்குவதால் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தீவுக்குள் நுழைகின்றனர்.

    தீவுக்குள் நுழையும் போதே ஒருவித புதுமையை உணரும் அந்த குழுவினர் அங்கு தரையிறங்கும் முன்பு பாறைப்படுகையை  கண்டறிய குண்டுமழை பொழிகின்றனர். அப்போது எதிர்பாரதவிதமாக வரும் கிங்காங் மீதும் அக்குழு தாக்குதல் நடத்துகிறது. அதனை  கண்டு மிரண்ட கிங்காங் தன்னை தாக்கும் ஹெலிகாப்டர்களை அடித்து நொறுக்கி துவம்சம் செய்கிறது. இதில் ராணுவ குழுவில் உள்ள  பெரும்பாலானோர் பலியாகின்றனர். உயிர்தப்பும் மற்ற குழுவினர் கிங்காங்கிடமிருந்து தப்பிக்க காட்டுக்குள் செல்கின்றனர்.



    அதே நேரத்தில் அந்த காட்டுக்குள் வசிக்கும் காட்டுவாசி குழு மற்றும் இதற்கு முன்பு ஆராய்ச்சி செய்ய வந்து அந்த காட்டுக்குள் சிக்கிக்  கொண்ட விஞ்ஞானி ஒருவரையும் உயிர்தப்பியவர்களில் சிலர் சந்திக்கின்றனர். அங்கு பல ராட்சத விலங்குகளை பார்க்கும் ஆராய்ச்சி  குழுவினர் ஒருவித பெரிய பல்லி போன்ற விலங்கிடம் சிக்கிக் கொள்கின்றனர். அவர்கள் எப்படி தப்பித்தார்கள்? அவர்களை கிங்காங்  எப்படி காப்பாற்றியது. ஏன் காப்பாற்றியது ? ஏன் காப்பாற்றியது என்பது படத்தின் மீதி கதை.

    படத்தில் டாம் ஹிடில்சன், ஜான் குட்மேன், சாமுவேல் ஜாக்சன், பிரெய் லார்சென், ஜேசன் மிட்செல், ஜான் ஆர்டிஸ், கோரி  ஹாக்கின்ஸ், தாமஸ் மேன் உள்ளிட்ட அனைவரும் தங்களது நடிப்பை சிறப்பாக தந்துள்ளனர். குறிப்பாக ஜான் ரெய்லி வரும் காட்சிகள்  அனைத்தும் ரசிக்கும்படி உள்ளது. சரியான நேரத்தில் அவரது காமெடியும் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது.



    படத்தில் டப்பிங் கலைஞர்கள் தமிழுக்கு ஏற்றவாறு அழகாக, நேர்த்தியாக குரல்களை கொடுத்துள்ளதால் தமிழில் படம் பட்டயை  கிளப்புகிறது என்று சொல்லலாம். குறிப்பாக படத்தை 3டி-யில் பார்க்க ரம்மியமாக உள்ளது.

    படத்தின் இயக்குநரான ஜோர்டன் ரோபர்ட்ஸ் காட்சிகளை நேர்த்தியாக வடிமைத்துள்ளார். குறிப்பாக கிங்காங் வரும் காட்சிகளும் சரி,  ராட்ச பல்லி உள்ளி காட்டு மிருகங்களை திரையில் பார்க்க ரம்மியமாக உள்ளது. படத்தின் கதையை பொறுத்தவரை அமெரிக்க தனது  ஆயுதங்களை பொதுவான இடத்தை தேர்வு செய்து அதில் சோதனை செய்து பார்க்கும். அதாவது வியட்நாம் போர் என்பது நாம்  அறிந்ததே. முன்பு ஒருமுறை தனது ஆயுத பலங்களை வியட்நாமின் மீது சோதித்து பார்த்தது. அந்த நேரத்தில் வியட்நாமில் உள்ள  மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டாலும், அந்த போரில் அமெரிக்க படை தோல்வியையே சந்தித்தது. அமெரிக்க படைகளை விரட்ட  வியட்நாம் படை கொரில்லா படைபெயடுப்பை நடத்தியது. அந்த கதையை மையக் கருத்தாகக் கொண்டு இந்த கதை உருவாகியுள்ளது  என்றும் பார்க்கலாம்.



    படத்தின் வி.எப்.எக்ஸ் காட்சிகளை பொறுத்தவரை தொழில்நுட்பக் கலைஞர்கள் சிறப்பாக பணியாற்றி உள்ளனர். குறிப்பாக காடுகள்  மற்றும் அதன் தோற்றம் சிறப்பாக காட்டப்பட்டுள்ளது. மேலும் கிங்காங் வரும் காட்சிகளும் சரி, ராட்ச பல்லி உள்ளி காட்டு மிருகங்கள்  வரும் காட்சிகளும் ரசிக்கும்படி உள்ளது. பிரம்மிக்க வைக்கிறது.

    மொத்தத்தில் `காங்: ஸ்கல் ஐலேண்ட்' கர்ஜனை
    மைக்கேல் அருண் இயக்கத்தில் அஜய்-அபினயா இணைந்து நடித்துள்ள `நிசப்தம்' படத்தின் விமர்சனத்தை கீழே பார்ப்போம்.
    பெங்களூரில் நடந்த உண்மை சம்பவங்களை மையப்படுத்தி தனது முதல் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குனர்  மைக்கேல் அருண். இவருக்கு ஒரு சபாஷ் சொல்லி விமர்சனத்தை தொடங்குகிறேன்.

    பெங்களூரில் வாழ்ந்துவரும் அஜய்-அபினயா தம்பதிக்கு 8 வயதில் சாதன்யா என்றொரு மகள். அஜய் ஒரு கார் கம்பெனியில்  மெக்கானிக்காகவும், அபினயா தனது வீட்டுக்கு கீழே கடையும் நடத்தி வருகிறார். வேலையை விட்டு வீட்டுக்கு வந்தாலும்  அஜய், எந்நேரமும் கிரிக்கெட் பார்ப்பதையே வழக்கமாக வைத்து இருக்கிறார். அபினயாவும் கடையிலேயே முழு கவனமும்  செலுத்துவதால், சாதன்யா மீது அக்கறை இல்லாமலேயே இருக்கிறார்கள்.



    இதனால் சாதன்யா, தான் தனிமையாக இருப்பதாக உணர்கிறாள். இந்த நிலையில் ஒருநாள் பள்ளிக்கு செல்லும்நிலையில் ஒரு  இளைஞர், மழை பெய்துகொண்டிருப்பதால் தன்னை தன் வீட்டில் விட்டுவிடும்படி சாதன்யாவிடம் உதவி கேட்கிறான்.  சாதன்யாவும் உதவுவதாக அவனுடைய வீட்டுக்கு அழைத்து செல்கிறாள்.

    ஆனால், அந்த இளைஞன், சிறுமி சாதன்யாவை மறைவான இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துவிடுகிறான். பின்னர்  இது போலீசுக்கு தெரிய வர, உதவி ஆணையர் கிஷோர், சாதன்யாவை மீட்டு, மருத்துவமனையில் சேர்க்கிறார். பின்னர், அவளது  பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கிறார்.



    இதன்பிறகு அந்த சிறுமிக்கு ஏற்பட்ட நிலை என்ன? அவளது பெற்றோர்கள் அந்த சிறுமியை எவ்வாறு பழைய நிலைமைக்கு  கொண்டுவந்தார்கள்? மீடியாக்கள் இந்த சம்பவத்தை எப்படி அணுகுகிறது? சட்டம் அந்த குற்றவாளிக்கு எந்தமாதிரியான தீர்ப்பை  வழங்கியது? இதுபோன்று பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எந்த மாதிரியான மருத்துவம் கொடுக்கவேண்டும் என்பன போன்ற  விஷயங்களை மிகவும் வலியுடன் சொல்லியிருக்கும் படம்தான் ‘நிசப்தம்’.

    நாயகன் அஜய்க்கு, முதல் பாதியில் முழுமையான நடிப்பை வெளிப்படுத்தமுடியாத அளவுக்கு காட்சிகள் அமைந்துள்ளது.  ஆனால், தனது குழந்தை பாலியல் துன்பத்துக்கு ஆளான பிறகு, ஒரு தந்தையாக அக்குழந்தையை சகஜ நிலைக்கு கொண்டு வர  இவர் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கிறது. முதல்படத்திலேயே ஒரு குழந்தைக்கு அப்பாவாக  தனது நடிப்பை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்.



    அபினயா நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த ‘குற்றம் 23’  படத்திற்கு பிறகு அடுத்தவாரத்திலேயே அவரது நடிப்பை  மெச்சும்படியான இன்னொரு படமும் வெளிவந்திருப்பது சிறப்பு. இந்த படத்தில் 8 வயது சிறுமியின் தாயாக வலம் வரும்,  அபினயாவின் உச்சரிப்புக்கும், டப்பிங்குக்கும் கொஞ்சம் வித்தியாசம் தெரிந்தாலும், தனது திறமையான நடிப்பால்  அதையெல்லாம் மறக்கடிக்க வைத்திருக்கிறார்.

    உதவி ஆணையராக வரும் கிஷோர், நேர்மையான அதிகாரியாக பளிச்சிடுகிறார். இவருடைய திறமையான நடிப்புக்கு இந்த  படத்தில் சரியான தீனி இல்லை என்றுதான் சொல்லவேண்டும். 

    சிறுமி சாதன்யா, அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறாள் என்றுதான் சொல்லவேண்டும். அவளுடைய பிஞ்சு நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது. மேலும், படத்தின் நாயகியே இவள்தான் என்பதுபோல் இவரது கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. அதை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறாள்.

    நாயகனுடைய நண்பராக வரும் பழனி மற்றும் அவருடைய  மனைவியாக வரும் ஹம்சா ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார்.



    இயக்குனர் மைக்கேல் அருண் பெங்களூரில் நடந்த சில சம்பவங்களை பத்திரிகைகளில் படித்து இந்த படத்தை எடுத்திருக்கிறார்.  பாலியல் துன்புறுத்தல் சம்பந்தப்பட்ட செய்திகளை நாம் ஒரு சம்பவமாக படித்துவிட்டு சென்றுவிடுவோம். ஆனால்,  இயக்குனரோ, இந்த மாதிரியான சம்பவங்கள் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். ஆகையால், இது நடக்காமல்  இருப்பதற்கு நாம் தான் நம்முடைய குழந்தைகளை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ளவேண்டும் என்ற கருத்தை  வலியுறுத்தியும், அதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தபிறகு, அந்த சிறுமிக்கும், குடும்பத்துக்கும் ஏற்படும் கஷ்டங்களையும் இந்த  படத்தில் மிக ஆழமாக பதிவு செய்திருக்கிறார். இந்த பதிவினால் படம் பார்ப்பவர்களுக்கு தங்களுடைய குழந்தைகள் மீதுள்ள  அக்கறை மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி. தற்போதைய சூழ்நிலையில், தனது முதல் படத்தையே மக்கள் மத்தியில்  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எடுத்திருக்கும் இயக்குனரை கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும்.



    அடுத்ததாக இந்த படத்தில் பாராட்டப்படவேண்டியவர் தயாரிப்பாளர் ஏஞ்சலின் டாவின்சி. இவர் இயக்குனர் மைக்கேல் அருணின்  சகோதரி. தனது சகோதரனை இயக்குனராக்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஏஞ்சலின் டாவின்சி இந்த படத்தை  தயாரித்திருந்தாலும், அந்த படம் சமூக அக்கறையுடன் இருக்கவேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு தயாரிக்க முன்வந்த  ஏஞ்சலினை பாராட்டித்தான் ஆகவேண்டும். இவருக்கு உறுதுணையாக இருந்த அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும்  நன்றிகளும் பாராட்டுக்களும்.

    எஸ்.ஜே.ஸ்டாரின் ஒளிப்பதிவு படத்தில் ஒவ்வொரு காட்சியையும் ரசிக்க உதவியிருக்கிறது. எந்த இடத்திலும் பிசிறு தட்டாமல்  இவரது ஒளிப்பதிவு அமைந்திருப்பது சிறப்பு. ஷவான் ஜசிலின் பின்னணி இசை கதையின் ஓட்டத்திற்கு ஏற்றவாறு  அமைந்திருப்பது சிறப்பு. கதைக்கு என்ன தேவையோ அதைமட்டும் கொடுத்து நிறைவை கொடுத்திருக்கிறார்.

    மொத்தத்தில் ‘நிசப்தம்’ விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
    சந்தீப் கிஷன், ஸ்ரீ-ரெஜினா நடிப்பில் உருவாகியுள்ள மாநகரம் படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்.
    சந்தீப் கிஷன், ஸ்ரீ, சார்லி, ராம்தாஸ்... இவர்களை சுற்றி நடக்கும் கதைதான் மாநகரம். சந்தீப் கிஷன் கல்லூரிப் படிப்பு  முடித்துவிட்டு, எந்த வேலைக்கும் போகாமல் நாயகி ரெஜினாவையே பின்தொடர்ந்து வருகிறார். ஐடி கம்பெனியில் பெரிய  பதவியில் இருக்கும் ரெஜினாவுக்கு, சந்தீப் மீது பிரியம் இருந்தும் அதை வெளிக்காட்டாமல் இருக்கிறார். சந்திப் கிஷன் ‘சத்யா’  படத்தில் கமல் கதாபாத்திரத்தை போன்று மிகவும் துணிச்சலானவர். எந்த விஷயத்தையும் செய்யவேண்டும் என்று நினைத்தால்  அதை தில்லாக செய்யக்கூடியவர்.

    இவர்களுடைய கதை இப்படியாக பயணித்துக் கொண்டிருக்கும், ரொம்பவும் நேர்மையான ஸ்ரீ, திருச்சியிலிருந்து சென்னைக்கு  வேலை தேடி வருகிறார். ரெஜினாவின் கம்பெனிக்கு இன்டர்வியூவுக்கு செல்லும், அவருக்கு அங்கேயே வேலையும் கிடைத்து  விடுகிறது. வேலை கிடைத்த சந்தோஷத்தில் ஸ்ரீ, நண்பர்களுக்கு பார்ட்டி கொடுக்கிறார். பார்ட்டி முடிந்து வெளிவரும்போது,  ரவுடிகளிடம் ஏற்பட்ட கைகலப்பில், ஸ்ரீ தன்னுடைய ஒரிஜினல் சர்டிபிகேட் எல்லாவற்றையும் இழக்கிறார். இதை கண்டுபிடித்து  திரும்பி அந்த வேலைக்கு சேர்வதா? அல்லது வெறும் கையுடன் ஊருக்கு திரும்புவதா? என்ற குழப்பத்தோடு சென்னையிலேயே  சுற்றி வருகிறார்.



    இன்னொரு பக்கம், சார்லி தனது 8 வயது பையனுக்கு உடல்நிலை சரியில்லாததால் சென்னைக்கு அழைத்து வந்து சிகிச்சை  பார்க்கிறார். சென்னையிலேயே பெரிய தாதாவாக இருக்கும் மதுசூதனனிடம் வாடகைக்கு கார் எடுத்து ஓட்டி பிழைப்பை நடத்தி  வருகிறார். அதிலேயே தனது மகனின் வைத்திய செலவையும் ஈடுகட்டும் முயற்சியில் இருக்கிறார்.

    மற்றொரு பக்கம் ரொம்பவும் அப்பாவியான ராம்தாஸ், பணம் சம்பாதிப்பதற்காக ரவுடி கும்பலிடம் சேர்கிறார். அவர் மிகவும்  திறமைசாலி என்று ஒருவரின் அறிமுகத்தோடு ரவுடிகளிடம் வேலைக்கு சேர்கிறார். இவரை வைத்து ஒரு பள்ளியில்  படிக்கக்கூடிய குழந்தையை கடத்திவர சொல்கிறார்கள். இவர் கடத்தி வரச்செல்லும் பையனின் பெயரில் நிறைய பேர் அந்த  பள்ளியில் இருப்பதால், இவர் கடத்திவரும் பையனுக்கு பதிலாக மதுசூதனன் பையனை கடத்தி வந்துவிடுகிறார்.



    இந்த பையனை கடத்திய சம்பவத்தில் சந்தீப் கிஷன், ஸ்ரீ, சார்லி, ராம்தாஸ் என நான்கு பேருமே பாதிக்கப்படுகிறார்கள்.  இதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள்? என்பதுதான் படத்தின் கதை.

    நாயகன் சந்தீப் கிஷனுக்கு ரொம்பவும் துணிச்சல் மிக்க கதாபாத்திரம். தன்னுடைய தோற்றத்திலேயே அனைவரையும் ரசிக்க  வைக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் பளிச்சிடுகிறார். காதல் காட்சிகளிலும் ரொம்பவும் வழிந்து நடிக்காமல், அந்த  கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு தமிழ் படங்களில் தொடர்ந்து இவருக்கு  வாய்ப்புகள் வரும் என்று நம்பலாம்.

    இதுவரை வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஸ்ரீக்கு இப்படமும் ஒரு வித்தியாசமான கதைக்களம்தான்.  தன்னுடைய கதாபாத்திரத்தில் எந்த இடத்திலும் மிகையான நடிப்பை கொடுக்காமல் அழகாகவும், நேர்த்தியாகவும் தனது  கதாபாத்திரத்தை அழகாக செய்திருக்கிறார். ஐ.டி. பையனாக அழகாக அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.



    காட்சிக்கு காட்சி விறுவிறுப்புடன் நகரும் கதையின் ஊடே, வரும் ராமதாஸின் காமெடி படத்தின் சுவாரஸ்யத்திற்கு எந்த  இடையூறும் இல்லாமல் இருப்பது சிறப்பு. இவர் வரும் காட்சிகள் எல்லாம் ரசிகர்கள் கலகலப்பாகிவிடுகிறார்கள். தனி ஒரு  ஆளாக இப்படத்தின் நகைச்சுவைக்கு பெரிதும் உதவியிருக்கிறார்.

    ஐடி கம்பெனியில் பணிபுரிபவராக வரும ரெஜினா, தனது கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை ரொம்பவும் எதார்த்தமாக  வெளிப்படுத்தியிருக்கிறார். சார்லியும் தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி படத்தின் கதையோட்டத்துக்கு பெரிதும்  உதவியிருக்கிறார்.



    இந்த படத்தை கதையாக விவரிக்கமுடியாது. ஆனால், முழுக்க முழுக்க திரையரங்கில் அமர்ந்து ரசிக்கக்கூடிய படமாக இதை  கொடுத்திருக்கிறார்கள். அடுத்து என்ன நடக்கும், அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத அளவுக்கு காட்சிகளை  அமைத்து, அழகான திரைக்கதையில் அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இரண்டே  நாட்கள் நடக்கிற கதைதான். படத்தில் எந்த இடத்திலும் சுவாரஸ்யம் குறையாமல் நகர்த்தி சென்றிருக்கிறார்.

    படத்தில் காதல், செண்டிமெண்ட், நகைச்சுவை, ஆக்ஷன் என எல்லாவற்றையும் சமமாக வைத்து, சமார்த்தியமாக கையாண்டு  கைதட்டல் பெறுகிறார். குறிப்பாக, ராம்தாஸ் கதாபாத்திரத்தை விறுவிறுப்பிற்கு நடுவிலும், நகைச்சுவையுடன் கொண்டு  போயிருப்பது படத்திற்கு பலம் கொடுத்திருக்கிறது. முதல் படத்திலேயே தனது அழகான திரைக்கதையால் ரசிகர்களிடம் பாராட்டு  பெறுகிறார்.



    படத்தில் நிறைய கதாபாத்திரங்களை சுற்றி நகரும் நிகழ்வுகளை படமாக்கியிருந்தாலும், எங்கேயும் குழப்பம் வராமல், படம்  பார்க்கும் ரசிகனுக்கு ஒரு அழகான படத்தை கொடுத்திருக்கிறார். படம் ஒரு ரோலர் கோஸ்டர் மாதிரி ஆரம்பத்தில் மெதுவாக  நகர்ந்து, இறுதியில் விறுவிறுப்பாக சென்று முடிகிறது. டைட்டில் கார்டு போடும்போது வரும் அனிமேஷன் காட்சிகள் எல்லாம்  சிறப்பாக இருக்கிறது.

    செல்வகுமாரின் ஒளிப்பதிவில் நிறைய காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. பெரும்பாலான காட்சிகள் இரவிலேயே  படமாகியிருப்பதாலும், ரசிகர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் கதைக்கு தேவையான ஒளியமைப்பை வைத்து கைதட்டல்  பெறுகிறார். விறுவிறுப்பான திரைக்கதைக்கு இவருடைய கேமராவும் அழகாக கைகொடுத்திருக்கிறது.

    ஜாவித் ரியாஷின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். டைட்டில் கார்டில் அனிமேஷனோடு வரும் பாடல் சிறப்பு. மற்றபடி,  பிற பாடல்களும் ரசிக்கும்படி இருக்கிறது. பிலோமின் ராஜின் எடிட்டிங், கதையின் விறுவிறுப்புக்கு இடைஞ்சல் கொடுக்காமல்  இருக்கிறது.

    மொத்தத்தில் ‘மாநகரம்’ புதுமையானது.

    ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    சென்னையில் நேர்மையான போலீஸ் கமிஷனராக பணிபுரிந்து வருகிறார் சத்யராஜ். அதேநேரத்தில் வனத்துறையில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த ராகவா லாரன்ஸ், சென்னைக்கு மாற்றலாகி வருகிறார். சென்னையில் இவருடைய கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் நிலையத்தில் கோவை சரளா, சதீஷ், சாம்ஸ் உள்ளிட்டோரும் பணிபுரிந்து வருகின்றனர்.

    போலீஸ் வேலையில் கொஞ்சம்கூட நேர்மையில்லாமல், கொள்ளையடிப்பவர்களிடம் கமிஷன் வாங்குவதும், கொலை செய்பவர்களிடம் லஞ்சம் வாங்குவதுமாக இருந்து வருகிறார் ராகவா லாரன்ஸ். இந்நிலையில், ஒருநாள் டிவி ரிப்போர்ட்டராக வரும் நாயகி நிக்கி கல்ராணியை பார்த்ததும் காதல் வயப்பட்டு விடுகிறார். தனது தங்கையான நிக்கி கல்ராணிக்கு போலீஸ் அதிகாரியைத்தான் திருமணம் செய்துவைப்பேன் என்ற கொள்கையுடன் இருக்கும் தேவதர்ஷினியையும் சந்தித்து, தனது காதலுக்கு ஓகே வாங்குகிறார்.



    இந்நிலையில், அரசியலில் மிகப்பெரிய புள்ளியான அசுதோஸ் ராணாவுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறார் ராகவா லாரன்ஸ். அசுதோஸ் ராணா அரசியல் பின்புலத்தை வைத்துக்கொண்டு சட்டத்திற்கு புறம்பான விஷயங்களை செய்து வருகிறார். இதற்கிடையில், தனது தம்பியான வம்சி கிருஷ்ணாவையும் அரசியலுக்குள் கொண்டுவர நினைக்கிறார்.



    இந்நிலையில், ஒருநாள் வம்சி கிருஷ்ணா போதையில் ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் பெண்ணை கற்பழிக்க முயற்சி செய்கிறார். அதை பார்க்கும் வாய்பேச முடியாத ஒரு பெண், அந்த பெண்ணை காப்பாற்ற நினைக்கிறாள். ஆனால், வம்சி கிருஷ்ணாவோ ஐடி பெண்ணை விட்டுவிட்டு, வாய் பேசமுடியாத அந்த பெண்ணை கற்பழித்து கொன்று விடுகிறார்.

    தனது அரசியல் பலத்தால் இந்த வழக்கிலிருந்து தனது தம்பியை வெளியே கொண்டுவரவேண்டும் என்று முயற்சி செய்கிறார் அசுதோஸ் ராணா. ஆனால், சத்யராஜோ அசுதோஸ் ராணாவை எப்படியாவது இந்த வழக்கில் சிக்கவைத்துவிட வேண்டும் நினைக்கிறார். அதற்கு, லாரன்சின் உதவியை நாட நினைக்கும் சத்யராஜுக்கு லாரன்ஸ் தன்னுடைய மகன் என்பது தெரிய வருகிறது.



    சிறுவயதில், சத்யராஜ் பணியில் ஈடுபாடு காட்டியதன் விளைவால் தனது மனைவியை இழக்க நேரிடுகிறது. இதை அருகில் இருந்து பார்த்த ராகவா லாரன்ஸ் வீட்டை விட்டு வெளியேறி, காவல்துறை அதிகாரியாக உருவெடுத்து, தனது அப்பா பணியாற்றிவரும் காவல்துறையை களங்கப்படுத்த வேண்டும் என்ற நினைப்போடு வந்திருப்பது சத்யராஜுக்கு தெரிய வருகிறது.

    எனவே, சத்யராஜ், உடனடியாக ராகவா லாரன்ஸை சந்தித்து, அன்று தனக்கு நேர்ந்த நிலைமையை புரிய வைக்கிறார். இதனால், சத்யராஜ் மீதிருந்த தவறான அபிப்ராயம் ராகவா லாரன்ஸ் மனதில் மறைய ஆரம்பிக்கிறது. அதன்பிறகு, இறந்த அந்த பெண்ணிற்கு நீதி தேடி புறப்படுகிறார்.

    இறுதியில், அதற்கு நீதி கிடைத்ததா? இல்லையா? என்பதை ஆக்ஷன் கலந்து விறுவிறுப்புடன் சொல்லியிருக்கிறார்கள்.

    ராகவா லாரன்ஸ், ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் என எல்லாவற்றிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். முதல் பாதியில் கோவை சரளா, சாம்ஸ், சதிஷ் ஆகியோருடன் இணைந்து இவருடைய காமெடிகள் ரசிக்க வைக்கின்றன. பிற்பாதிக்கு பிறகு ஆக்ஷனில் களமிறங்கி மாஸ் ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில் நடித்திருக்கிறார். இவர் பேசும் வசனங்களில் அனல் தெறிக்கிறது.



    நிக்கி கல்ராணி, அழகு பதுமையாக வந்து போயிருக்கிறார். ரிப்போர்ட்டர் கதாபாத்திரத்திற்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். ஏனோ, அந்த கதாபாத்திரத்தோடு இவரை ஒப்பிட்டு பார்க்கமுடியவில்லை. ராகவா லாரன்சுடன் சேர்ந்து ஆடும்போதும் கொஞ்சம் திணறியிருக்கிறார். மற்றபடி, அவரது முயற்சிக்கு பாராட்டு தெரிவிக்கலாம்.

    கோவை சரளா, சாம்ஸ், சதிஷ் ஆகியோரின் காமெடி படத்தில் ஓரளவுக்குத்தான் எடுபட்டிருக்கிறது. நேர்மையான போலீஸ் அதிகாரியாக வரும் சத்யராஜ், கம்பீரமான தோற்றம், சாந்தமான முகம் என ரசிக்க வைக்கிறார். வில்லனாக வரும் அசுதோஸ் ராணா, இன்னும் கொஞ்சம் மிரட்டியிருக்கலாம் என்று தோன்றுகிறது. வம்சி கிருஷ்ணா சமீபகாலமாக அவர் நடித்த படங்களிலிருந்து இதில் மாறுபட்டு தெரிகிறார்.

    இயக்குனர் சாய் ரமணி, முழுக்க முழுக்க ஒரு கமர்ஷியல் படமாக கொடுத்திருக்கிறார். படத்தின் முதல்பாதியில் காவல்துறையையும், பத்திரிகையாளர்களையும் கிண்டல் செய்கிறேன் என்ற பெயரில் காமெடியாக கொண்டுபோக முயன்றிருக்கிறார். அந்த காமெடியெல்லாம் பெரிய அளவில் எடுபடவில்லை. ஆனால், பிற்பாதியில் ஆக்ஷன் என களமிறங்கியதும் படம் விறுவிறுப்படைகிறது. ராகவா லாரன்ஸுக்கு ஏற்றவாறு சண்டைக்காட்சிகளை அமைத்திருப்பது மேலும் சிறப்பு. சண்டை காட்சிகள்தான் படத்தின் விறுவிறுப்புக்கு ரொம்பவும் உதவியிருக்கிறது.



    அம்ரீஷ் கணேஷ் இசையில் பாடல்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது. அறிமுக பாடலில் ராகவா லாரன்ஸ் ஆடும் ஆட்டம்  ரசிகர்கள் ஆட்டம் போட வைத்திருக்கிறது. அதேபோல், ‘ஹர ஹர மகாதேவி’ பாடலுக்கு ராகவா லாரன்ஸும், ராய் லட்சுமியும் போட்ட குத்தாட்டம் தியேட்டரில் விசிலை பறக்க விட்டிருக்கிறது. பின்னணி இசையிலும் அம்ரீஷ் மிரட்டியிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

    சர்வேஸ் முராரியின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள் எல்லாம் பளிச்சிடுகிறது. சண்டை காட்சிகளிலும் அனல் தெறிக்கிறது. சாதாரண காட்சியைக்கூட இவரது கேமரா ரொம்பவும் மாஸாக காட்டியிருக்கிறது.

    மொத்தத்தில் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ ஒருமுறை தரிசிக்கலாம்.
    ‘துப்பாக்கி’ படத்தில் வில்லனாக நடித்த வித்யூத் ஜம்வால், நாயகனாக இந்தியில் களமிறங்கிய ‘கமாண்டோ’ படத்தின் இரண்டாம் பாகம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளிவந்திருக்கிறது. அந்த படம் எப்படி? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    இந்தியாவில் பெரும் சர்ச்சைக்கு ஆளான 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புடன் படம் தொடங்குகிறது. இந்த அறிவிப்புக்கு பின்பு, இந்தியாவில் பெரிய புள்ளிகளின் கருப்பு பணங்கள் மத்திய அரசின் சிக்குகிறது. இந்நிலையில், வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் பெரிய புள்ளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட விக்கி சத்தா என்பவன் மலேசியாவில் பிடிபடுகிறான்.

    அவனை இந்தியாவுக்கு கொண்டுவர இந்தியாவிலிருந்து நான்கு பேர் கொண்ட குழுவை அனுப்ப மத்திய அரசு திட்டமிடுகிறது.  விக்கி சத்தா இந்தியா கொண்டுவரப்பட்டால் தான் மட்டுமில்லாது, தன்னை சார்ந்த நிறைய பேர் பிரச்சினையில் சிக்கக்கூடும் என்று நினைக்கும் மத்திய உள்துறை மந்திரியின் மகன், விக்கி சத்தாவை மலேசியாவிலேயே தீர்த்துக்கட்ட நினைக்கிறார்.



    அதனால், உள்துறை மந்திரியான தனது அம்மாவிடம் விக்கி சத்தாவை இந்தியாவுக்கு கொண்டு வந்தால் அரசியலிலேயே பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறி தனக்கு சாதகமான நான்கு பேரை, விக்கி சத்தாவை மீட்டுக் கொண்டு வருவது என்று மத்திய அரசு சார்பில் நியமிக்க வைக்கிறார். அந்த குழுவில் இன்ஸ்பெக்டரான நாயகி அடா சர்மாவும் இணைகிறார்.

    இதையெல்லாம் அறிந்த, இண்டர்போல் ஆபிசரான நாயகன் வித்யூ ஜம்வால், விக்கி சத்தாவை உயிரோடு இந்தியாவுக்கு அழைத்து வரவேண்டும் என்று முடிவு செய்கிறார். அதன்படி, அந்த நான்கு பேரில் ஒருவரை சாதுர்யமாக பின்வாங்க வைத்து, அந்த குழுவில் இணைந்து மலேசியாவுக்கு புறப்படுகிறார்.

    மலேசியாவுக்கு சென்ற வித்யூத் ஜம்வாலை சந்திக்கும் விக்கி சத்தாவின் மனைவியான இஷா குப்தா, தாங்கள் நிரபராதி என்றும், தங்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க உதவுவதாக வாக்குறுதி அளித்தால், உண்மையான குற்றவாளியை கண்டுபிக்க தான் உதவுவதாக அவள் கூறுகிறாள். இதனை நம்பும் வித்யூத் ஜம்வால் அவளுடன் செல்கிறார்.



    இறுதியில் வித்யூத் ஜம்வால், விக்கி சத்தாவை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று தன்னுடன் வந்திருக்கும் மூன்று பேரையும் மீறி விக்கி சத்தாவை இந்தியா கொண்டு வந்தாரா? விக்கி சத்தா உண்மையான குற்றவாளி இல்லையென்றால், உண்மையான குற்றவாளி யார்? என்பன போன்ற கேள்விகளுக்கு பிற்பாதியில் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.

    படத்திற்கு பெரிய பலமே வித்யூத் ஜம்வாலின் ஆக்ஷன்தான். நடிப்பு பெரியதாக எதிர்பார்க்கமுடியாவிட்டாலும் ஹாலிவுட் ஸ்டார்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். இவர் செய்யும் சில ஆக்ஷன் காட்சிகளில் எல்லாம் நம்மை படபடக்க வைக்கிறார். ரொமான்ஸ் காட்சியிலும் கொஞ்சம் ரசிக்க வைக்கிறார்.



    இன்ஸ்பெக்டராக வரும் அடால் சர்மா ரசிக்க வைக்கிறார். இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்திற்கும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இந்தியில் வெளிவந்த ‘கமாண்டோ’ படமே தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளிவந்திருப்பதால், இந்தி நட்சத்திரங்களே பெரும்பாலும் நடித்திருக்கிறார்கள். வித்யூத் ஜம்வால் மட்டும் தமிழில் ’துப்பாக்கி’ படத்தில் நடித்திருப்பதால், அவர் மட்டுமே நமக்கு அறிமுகமாக தெரிகிறார். அதனால், மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் பெரும்பாலும் அறிமுகம் இல்லாவிட்டாலும், அவர்கள் தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.

    கறுப்பு பணத்தை மையமாக வைத்து அறிமுக இயக்குனர் தேவன் போஜனி இப்படத்தை இயக்கியிருக்கிறார். படத்தின் தலைப்புப் போலவே ஆக்ஷனை மையமாக வைத்து இப்படத்தை கொடுத்திருக்கிறார். ஆக்ஷன் பிரியர்களுக்கு கண்டிப்பாக இந்த படம் பிடிக்கும். அதேபோல், மலேசியாவில் உண்மையான குற்றவாளியை பிடிக்க வித்யூத் ஜம்வால் வகுக்கும் வியூகங்கள் எல்லாம் வியக்க வைக்கிறது.

    சிரந்தன் தாஸின் ஒளிப்பதிவு ஆக்ஷன் காட்சிகளில் பலே சொல்ல வைத்திருக்கிறது. பிரசாத் சாஸ்தேவின் பின்னணி இசை மிரட்டியிருக்கிறது. மன்னன் ஷாவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான்.

    மொத்தத்தில் ‘கமாண்டோ’ ஆக்ஷன் பிரியர்களுக்கு மட்டும்.
    எக்ஸ் மேன் வரிசையில் வோல்வோரின் கதையின் கடைசி பாகமாக வெளியாகியுள்ள `லோகன்' படத்தின் விமர்சனத்தை கீழே பார்ப்போம்.
    படத்தின் நாயகர்களான வோல்வோரின், பேராசிரியர் எக்ஸ் மற்றும் கேலிபர் ஆகிய 3 பேரும் மெக்சிகோ நகருக்கு வெளியே  ஒளிவுமறைவாக வாழ்ந்து வருகின்றனர். வோல்வோரின் பிறந்து கிட்டத்தட்ட 150 வருடங்களுக்கும் மேல் ஆகிறது என்பது நாம்  அறிந்ததே. அவரது உடல்நிலை முன்பு போல சரிவர ஒத்துழைப்பதில்லை. அவரது சக்திகளும் வரவர குறைந்து வருகிறது.  ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால், அதிலிருந்து மீள முடியாமல் அவை தழும்புகளாக மாறி விடுகிறது.

    இது ஒருபுறம் இருக்க பேராசிரியர் எக்ஸ்-ம் ஒரு வித மூளை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அந்த பாதிப்பின் காரணமாக சுமார்  100-க்கும் மேற்பட்ட எக்ஸ்-மேன்களையும் கொன்று குவித்துள்ளார். பேராசிரியர் எக்ஸின் அறிவுரைப்படியே வோல்வோரின்  ஒவ்வொரு வேலையையும் செய்து வருகிறார்.



    இந்நிலையில், ட்ரான்ஸ்ஜென்ஸ் என்னும் இடத்தில் இருந்து தப்பி வரும் பெண் ஒருவர், வோல்வோரினை மறைமுகமாக  சந்தித்து லாரா என்னும் பெண்ணை பார்த்துக் கொள்ளும்படி கேட்கிறார். மேலும் லாராவை கனடாவில் உள்ள ஒரு இடத்தில்  பத்திரமாக கொண்டு சேர்க்கும்படியும் கேட்கிறாள். முதலில் அந்த பெண்ணின் கோரிக்கையை ஏற்க மறுக்கும் வோல்வோரின்  பணம் பெற்றுக்கொண்டு ஒருவழியாக ஒத்துக் கொள்கிறார்.

    அதே நேரத்தில் லாராவை கொல்ல ஒரு கும்பல் தேடி வருகிறது. அந்த நேரத்தில் லாரா தனது மகள் என்னும் உண்மையை  அறியும் வோல்வோரின், லாராவை அந்த கும்பலிடமிருந்து எப்படி காப்பாற்றினார்? என்னென்ன இன்னல்களை சந்தித்தார்? அதன்  பின்னணியில் என்ன நடந்தது என்பது படத்தின் ஸ்வாரஸ்யமான மீதிக்கதை.



    வோல்வோரின்னாக வரும் ஹீ ஜேக்மேன் அவரது இயல்பான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். படம் முழுவதும்  வயதான தோற்றத்தில் வரும் வோல்வோரின் சண்டைக்காட்சிகளில் எப்போதும் போல அசத்தியுள்ளார். எக்ஸ் மேன்  படங்களிலேயே வோல்வோரின் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும் படமாக அமைந்ததற்கு ஹீ ஜேக்மேனும் ஒரு முக்கிய  காரணம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

    அதே போல் பேட்ரிக் ஸ்டீவர்ட்(போராசிரியர் எக்ஸ்), ரிச்சர்ட், பாய்ட், ஸ்டீபன் மெர்சண்ட், டஃப்னே கீன் உள்ளிட்ட அனைவரது  நடிப்பும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக சண்டைக்காட்சிகளில் டஃப்னே கீனின் நடிப்பு மிகவும் ஆக்ரோஷமாக உள்ளது படத்திற்கு  ப்ளஸ்.



    எக்ஸ் மேன் வரிசையில் 17 வருடங்களாக படங்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், வோல்வோரினுக்காக 3 பாகங்கள்  உருவாகியுள்ளன. அதில் லோகன் படமே 3வது மற்றும் கடைசி பாகமாகும். எக்ஸ் மென் வரிசையிலேயே வோல்வோரின்  பாகமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கு முன்னதாக கடந்த 2009-ஆம் ஆண்டு எக்ஸ் மேன் வோல்வோரின் என்ற  முதல் பாகமும், 2013-ஆம் ஆண்டு தி வோல்வோரின் என்ற இரண்டாவது பாகமும் வெளியான நிலையில், வோல்வோரின்  கதையின் கடைசி பாகமாக லோகன் படத்தை இயக்குநர் ஜேம்ஸ் மேன்கோல்டு இயக்கியுள்ளார்.

    வோல்வோரின் படத்தின் 2வது பாகத்தையும் இவரே இயக்கியிருந்தார். வோல்வோரின் படத்திலேயே லோகன் பாகமே சிறந்த  அதிரடி படமாக உருவாகியுள்ளது படத்தின் சிறப்பு. முழுக்க முழுக்க அதிரடி படமாக உருவாகியுள்ள லோகன், டார்க் நைட்  படத்திற்கு பிறகு அதிகமாக பேசப்படும் படமாக உருவாகியுள்ளது. குறிப்பாக படத்தில் வோல்வோரின் வாராவை தனது மகள் என  மறுக்கும் காட்சிகளும், லாராவுக்கு ஆபத்து வந்தால் அதில் வோல்வோரினுக்கு ஏற்படும் கோபத்தையும் இயக்குநர் சிறப்பாக  காட்சிப்படுத்தியுள்ளார்.



    படத்தின் சண்டைக்காட்சிகள் மலைப்பாகவும், விரும்பிப் பார்க்கும்படியும் உள்ளது. குறிப்பாக வோல்வோரின், டஃப்னே கீன்  சண்டைக்காட்சிகளில் படத்தின் சண்டை இயக்குநர் சிறப்பாக பணியாற்றியுள்ளதை படத்தில் காண முடிகிறது. ஜான்  மேத்திசனின் ஒளிப்பதிவும், வி.எஃப்.எக்ஸ். காட்சிகளும் ரசிக்கும்படி உள்ளது.

    மொத்தத்தில் லோகன் வன்முறை விருந்து.
    கிருஷ்ணா - சுவாதி ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘யாக்கை’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    நாயகன் கிருஷ்ணா கோயம்புத்துரில் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். நாயகி சுவாதியும் அதே கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறாள். அவளை பார்த்தவுடனேயே காதல் வயப்படுகிறார் கிருஷ்ணா. ஒருகட்டத்தில் இருவரும் நட்பாக பழக ஆரம்பிக்க, நாளடைவில் அது காதலாக மாறுகிறது.

    சுவாதி படிப்பு மட்டுமில்லாமல், தனது அப்பா நடத்திவரும் ஊனமுற்ற குழந்தைகளின் காப்பகத்திலும் சென்று அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையை நடத்தி வரும் குரு சோமசுந்தரம், அரிய வகை ரத்தங்கள் உள்ள அனைவரையும் தேடிக்கண்டுபிடித்து, அவர்களை ஏதாவது ஒரு விபத்துக்குள்ளாக்கி, அந்த ரத்தத்தை எடுத்து வெளிநாடுகளுக்கு சப்ளை செய்து பணம் சம்பாதித்து வருகிறார்.



    இதில், சுவாதியின் ரத்தமும் அரிய வகை ரத்தம் என்று அறியும் குரு சோமசுந்தரம், அவளை நோக்கியும் தனது பார்வையை செலுத்துகிறார். இதற்கிடையில், சென்னையில் குரு சோமசுந்தரத்தின் அப்பாவான ராதாரவி மர்மமான முறையில் இறக்கிறார். அவரது கொலை விசாரிக்க வரும் போலீஸ் அதிகாரி பிரகாஷ் ராஜ் கொலைக்கான காரணத்தை தேடுகிறார். ஒருகட்டத்தில் குரு சோமசுந்தரம் அந்த கொலையை செய்திருப்பாரா? என்ற சந்தேகமும் அவருக்கு எழுகிறது. ஆனால், அவர் அந்த கொலையை செய்யவில்லை என்பது தெரியவருகிறது.



    அப்படியானால் ராதாரவியை கொன்றது யார்? அவருடைய கொலைக்கு பின்னணி என்பதை பிரகாஷ் ராஜ் கண்டுபிடித்தாரா? குரு சோமசுந்தரத்தால், சுவாதியின் நிலை என்னவாயிற்று? என்பதற்கு பிற்பாதியில் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.

    கல்லூரி நாயகனாக கிருஷ்ணா துள்ளலான நடிப்பில் அசத்தியிருக்கிறார். சுவாதியுடன் ரொமான்ஸ் காட்சிகளில் எல்லாம் தனது திறமையான நடிப்பில் கவர்கிறார். கிளைமாக்ஸ் காட்சிகளில் செண்டிமெண்டாக நடித்து அனைவரையும் அழ வைத்திருக்கிறார்.



    சுவாதி படத்தில் ரொம்பவும் அழகாக தெரிகிறார். இவர் கொடுக்கும் ஒவ்வொரு முகபாவணைகளும் அத்தனை அழகு. படத்தில் ரொம்பவும் மெச்சூரிட்டியான கதாபாத்திரம். அதை சிறப்பாக செய்திருக்கிறார். காது கேட்காத, வாய் பேச முடியாத குழந்தைகளிடம் இவர் பழகும் காட்சிகள் எல்லாம் அருமை.

    விசாரணை அதிகாரியாக வரும் பிரகாஷ் ராஜ் அலட்டல் இல்லாத நடிப்பில் அனைவரையும் கவர்கிறார். இவருக்கு ஆக்ஷன் என்று எதுவுமே இல்லாவிட்டாலும், அமைதியாக வந்து அசத்தியிருக்கிறார். வில்லனாக வரும் குரு சோமசுந்தரத்தை ‘ஜோக்கர்’-இல் பார்த்து ரசித்த அளவுக்கு இந்த படத்தில் ஏனோ முழுமையாக ரசிக்க முடியவில்லை. கோட் சூட் என இவர் பேசும் ஆங்கில வசனங்கள்கூட ரொம்பவும் செயற்கையாக இருப்பதுபோல் தெரிகிறது. ராதாரவி ஒன்றிரண்டு காட்சிகள் வந்து, தனது நடிப்பை நிறைவு செய்திருக்கிறார்.



    இயக்குனர் குழந்தை வேலப்பன் பணத்துக்காக மக்களின் உயிரோடு விளையாடும் தனியார் மருத்துவத்துறையின் தகிடுதத்தங்களை படம் பிடித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்றிருக்கிறார். இதற்காக அவருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கலாம். ஆனால், படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள் இருப்பதால் படம் எதிர்பார்த்த சுவாரஸ்யத்தை கொடுக்கவில்லை. அதேபோல், திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி, அனைவருக்கும் நன்கு புரியும்படியும் படத்தை கொடுத்திருக்கலாம்.

    யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது. பின்னணி இசையும் நிறைவாக இருக்கிறது. சத்யா பொன்மாரின் ஒளிப்பதிவு நிறைய காட்சிகள் நமக்கு அழகிய ஓவியமாக தெரிகிறது. பாடல் காட்சிகளில் இவரது கேமரா மேலும் பளிச்சிடுகிறது.

    மொத்தத்தில் ‘யாக்கை’ நம்பிக்கை இல்லை.
    சாந்தனு - சிருஷ்டி டாங்கே நடிப்பில் உருவாகியுள்ள ‘முப்பரிமாணம்’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    நாயகன் சாந்தனுவும், நாயகி சிருஷ்டி டாங்கேவும் பொள்ளாச்சியில் சிறு வயதிலேயே பக்கத்து பக்கத்து வீட்டில் ஒன்றாக வளர்ந்து வருகிறார்கள். சாந்தனுவின் அப்பா ஒரு போலீஸ்காரர். நாயகியின் அண்ணன் ரவி பிரகாஷ் ஒரு சாதி வெறியர். ஒருமுறை தனது சாதிக்காரப் பொண்ணு சாதி மாறி திருமணம் செய்துகொண்டதால், காதல் ஜோடியை கொலை செய்கிறார். இதனால், சாந்தனுவின் அப்பா அவரை கைது செய்து சிறையில் அடைக்கிறார்.

    இதனால், சாந்தனுவின் குடும்பத்துக்கும் சிருஷ்டியின் குடும்பத்துக்கும் பகை ஏற்படுகிறது. சிருஷ்டியின் அப்பா தனது அரசியல் பலத்தை வைத்துக்கொண்டு சாந்தனுவின் அப்பாவுக்கு வேறு ஊருக்கு மாற்றல் வாங்கி கொடுக்கிறார். ரவி பிரகாஷையும் வெளியே கொண்டு வருகிறார்.



    தனியாக பிரிந்த நாயகனும், நாயகியும் வளர்ந்து பெரியவர்களாகிறார்கள். வேறு ஊருக்கு மாற்றலாகி சென்ற சாந்தனுவின் குடும்பம் சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பொள்ளாச்சிக்கே வருகிறது. பிளஸ் டூ படிக்கும் சிருஷ்டியிடம் தனது நட்பை புதுப்பித்துக் கொள்ள சாந்தனு படாதபாடு படுகிறார். ஒருகட்டத்தில் சாந்தனுவும், சிருஷ்டியும் பழைய நட்பை புதுப்பித்து காதலர்களாகிறார்கள்.

    இந்நிலையில், பிளஸ் 2 படிப்பை முடித்த சிருஷ்டி, மருத்துவ படிப்புக்காக சென்னை செல்கிறாள். சென்னைக்கு சென்றாலும் சாந்தனு, அடிக்கடி சிருஷ்டியை சந்தித்து காதலை வளர்த்து வருகிறார். ஒருகட்டத்தில் சிருஷ்டியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படுகிறது. இதற்கு காரணமாக, சாந்தனுவிடம் தனது வீட்டில் தங்களது காதல் விவகாரம் தெரிந்துவிட்டதாகவும், இதனால், இரண்டு பேரின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாகவும் கூறுகிறாள்.



    அவள்மீது உள்ள அளவு கடந்த காதலால் சாந்தனு, அவளது உயிரை இழக்க விரும்பாமல் காதலை மட்டும் விட்டுக்கொடுத்துவிட்டு, தன்னை வருத்திக் கொள்கிறார். போதைக்கு அடிமையாகி சிருஷ்டி டாங்கேவை மறக்க நினைக்கிறார். ஒருகட்டத்தில் போதைக்கு முழுவதும் அடிமையாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையும் பெறுகிறார்.
    சிகிச்சை பெற்று வெளியே வரும் நாளில், சிருஷ்டி டாங்கேவுக்கும், நடிகரான ஸ்கந்தா அசோக்குக்கும் திருமணம் நடைபெறவிருக்கிறது. அப்போது திடீரென்று அந்த திருமணத்தின் உள்ளே புகுந்து, துப்பாக்கி முனையில் சிருஷ்டி டாங்கேவை கடத்திக்கொண்டு கேரளாவுக்கு செல்கிறார் சாந்தனு.



    சாந்தனு மீது விருப்பமில்லாத சிருஷ்டி டாங்கேவை அவர் கடத்தி செல்ல காரணம் என்ன? சிருஷ்டி டாங்கே சாந்தனுவை வெறுக்க காரணம் என்ன? என்பதை பிற்பாதியில் விளக்கியிருக்கிறார்கள்.

    சாந்தனு படத்தின் ஆரம்பத்தில் சாக்லேட் பாயாக வந்து கலகலப்பாகவும், பிற்பாதியில் மொட்டை போட்டு, வித்தியாசமான கெட்டப்புடன் வில்லத்தனம் கலந்து நடிப்பதாகவும் தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். சிருஷ்டி டாங்கேவுடான காதல் காட்சிகளில் தனக்கே உரித்தான ஸ்டைலில் நடித்து அசத்தியிருக்கிறார்.

    சிருஷ்டி டாங்கேவுக்கு படத்தில் வலுவான கதாபாத்திரம். ஆனால், அந்த கதாபாத்திரத்தை உணராமல் படம் முழுக்க சிரித்துக் கொண்டே வந்து அந்த கதாபாத்திரத்தின் உள்ள வலுவை தவிடு பொடியாக்கியிருக்கிறார். இதனால், இவரது கதாபாத்திரத்தை ரசிக்க முடியாமலேயே போய்விடுகிறது. இருப்பினும், கிளைமாக்ஸ் காட்சியில் செண்டிமென்ட்டாக நடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றிருக்கிறார்.



    ஸ்கந்தா அசோக் படத்திலும் நடிகனாகவே வந்து, தனது நடிப்பால் அவரது கதாபாத்திரத்தை பூர்த்தி செய்திருக்கிறார். சாதி வெறி பிடித்தவராக வரும் ரவி பிரகாஷ் நடிப்பில் அசத்தியிருக்கிறார். படம் முழுக்க ஒரு வித்தியாசமான வில்லனாக இவரை பார்க்க முடிகிறது. தம்பி ராமையா, அப்புக்குட்டி, லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோர் காமெடிக்கென்று இருந்தாலும் இவர்களது காமெடி பெரிதாக எடுபடவில்லை.

    இயக்குனர் அதிரூபன் படத்தின் தலைப்புக்கேற்றவாறு பால்ய வயது நட்பு, அதன்பிறகு ஏற்படும் இளம் வயது காதல், காதல் முறிவுக்கு பிறகு ஏற்படும் பிரச்சினை என முப்பரிமாணங்களில் இப்படத்தை கொடுத்திருக்கிறார். முதல் பாதி காதல், ஊடல் என படம் மெதுவாக சென்றாலும், பிற்பாதியில், அவளை கடத்தியதற்கான காரணங்களின் முடிச்சுகளை அவிழ்க்கும் இடங்களில் எல்லாம் படம் விறுவிறுப்படைகிறது. இருப்பினும், திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். கிளைமாக்சில் தனது குரு பாலாவின் பாணியை கடைபிடித்து அனைவரையும் கண்கலங்க வைத்துவிடுகிறார்.



    ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். திரையுலக பிரபலங்கள் அனைவரும் சேர்ந்து ஆடும் ‘பார்ட்டி சாங்’ பாடல் மட்டும் ரொம்பவும் ரசிக்கும்படி இருக்கிறது. பின்னணி இசையில் ஜி.வி.பிரகாஷ் தனது பாணியை பின்பற்றி பாராட்டு பெறுகிறார். ராசாமதியின் ஒளிப்பதிவில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

    மொத்தத்தில் ‘முப்பரிமாணம்’ முயற்சி தேவை
    அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய்-மகிமா நம்பியார் நடிப்பில் வெளியாகியுள்ள குற்றம் 23 படத்தின் விமர்சனத்தை கீழே பார்ப்போம்.
    சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் பாதிரியார் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். அதே நேரத்தில் அந்த பாதிரியாரை பார்க்க செல்லும் பெண் காணாமல் போகிறார். காணாமல் போன அந்த பெண்ணின் கணவரான பிரபல தொழிலதிபர் ஒருவர் போலீஸ் கமிஷனரான விஜயகுமாரின் உதவியை நாடுகிறார். இந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை துணை ஆணையராக வரும் அருண் விஜய் அந்த பெண் மாயமானது குறித்த தீவிர விசாரணையில் இறங்குகிறார்.

    அதே நேரத்தில் பாதிரியார் இறந்துவிட்டதாக போலீசில் தகவல் தெரிவிக்கிறார் படத்தின் நாயகி மகிமா நம்பியார். அடுத்த 2 நாட்களுக்கு பின்னர் காணாமல் போன தொழிலதிபரின் மனைவி கொலை செய்யப்பட்டு, அவரது உடல் குப்பைக் கிடங்கில் கண்டெடுக்கப்படுகிறது. எனவே இந்த சம்பவம் குறித்த தீவிர விசாரணையில் இறங்கும் அருண் விஜய் மகிமா நம்பியாரிடம் தனது விசாரணையை தொடங்குகிறார்.



    இந்த சம்பவம் குறித்து அருண் விஜய் அடிக்கடி மகிமாவை தொடர்பு கொள்வதால் மகிமாவின் பெற்றோர் கடுப்பாகின்றனர். இந்த நேரத்தில் மகிமாவை தனக்கு கல்யாணம் செய்து வைக்கும்படி நாயகன் அருண் விஜய் கேட்க அவரது பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்கின்றனர். அதனைத்தொடர்ந்து அருண் விஜய்-மகிமா இடையே காதல் மலர்கிறது. அப்போது, கொலை சம்பவம் குறித்த சில முக்கிய தகவல்களை அருண்விஜய்யிடம் மகிமா தெரிவிக்கிறார்.

    அதே நேரத்தில் குழந்தை இல்லாமல் தவிக்கும் அருண் விஜய்யின் அண்ணியும், அமித் பார்கவியின் மனைவியுமான அபிநயா கர்ப்பம் தரிக்கிறாள். பின்னர் ஒருநாள் அபிநயா தூக்கு மாட்டி இறக்கிறாள். இந்த வழக்கையும் விசாரிக்கும் அருண் விஜய், தனது விசாரணையில் கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து உயிரிழப்பது குறித்த முக்கிய தகவலை கண்டுபிடிக்கிறார். இந்த குற்றத்தின் பின்னணியில் இருப்பது யார்? அந்த குற்றவாளிகளை அருண் விஜய் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது படத்தின் த்ரில்லிங்கான மீதிக்கதை.



    அருண் விஜய்யை பொறுத்தவரையில், முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தாலும் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப கனகச்சிதமாக பொருந்தி இருக்கிறார். படத்தில் விசாரணை காட்சிகளில் மட்டுமல்லாமல், அனைத்து இடத்திலும் தேவையான நடிப்புகளை கொடுத்து, ஆர்ப்பாட்டம் இன்றி அழகாக நடித்திருப்பது சிறப்பு. குறிப்பாக தன்னுடைய அண்ணி உயிரிழப்பு குறித்த வழக்கில் ஒரு போலீஸ் அதிகாரியாக தனது அண்ணனையே விசாரிக்கும் அந்த காட்சியில் முத்திரை பதித்திருக்கிறார்.



    மகிமா நம்பியார் படம் முழுக்க அழகாக வந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். ஒரு சில காட்சிகளில் வந்து செல்லும் நடிகையைப் போல் இல்லாமல், படம் முழுவதும் வலம் வருகிறார். இதற்கு முன்பு நடித்த படங்களை விட இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் பேசப்படும்படி உள்ளது. இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் மகிமா, தன்னால் முன்னணி நடிகர்களுடனும் நடிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.



    நடிகர் விஜயகுமார் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் தனது அனுபவ நடிப்பின் முதிர்ச்சியை காட்டியுள்ளார். விசாரணையின் போது அருண் விஜய்யுடன் வரும் தம்பி ராமையா, தனக்குரிய மைண்ட் வாய்ஸ் பாணியில் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார். குறிப்பாக அரவிந்த் ஆகாஷ் கொலையின் போது அவர் பேசும் வசனங்கள் ரசிக்கும்படி உள்ளது.

    மற்ற படங்களைப் போலவே இந்த படத்திலும் அபிநயா தனக்குரிய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். இப்படத்தில் கனமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள அபிநயாவின் நடிப்பும் அவரது பேச்சும் ரசிக்கும்படி உள்ளது. படத்தில் வில்லன்களாக வரும் வம்சி கிருஷ்ணா மற்றும் அரவிந்த் ஆகாஷ் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள். இருவருமே தனக்குரிய கதாபாத்திரத்தை சிறப்பாக அளித்துள்ளனர். சண்டைக் காட்சிகளிலும் சற்றும் பின்வாங்காத அவர்களது நடிப்பு ரசிக்கும்படி உள்ளது.



    இயக்குநர் அறிவழகன் தனக்குரிய ஸ்டைலில் குற்றம் 23 படத்தை தொய்வு ஏதுமின்றி சிறப்பாக இயக்கியுள்ளார். பெரிய படங்களை இயக்கும் இயக்குநர்களுக்கு மத்தியில் சிறிய அளவிலான பட்ஜெட்டில் இப்படத்தை இயக்கியுள்ள அறிவழகன் இந்த படத்தின் மூலம் தன்னை மீண்டும் திறமையான இயக்குனர் என்பதை நிரூபித்துள்ளார்.

    படத்தில் இடம்பெறும் எந்த காட்சிகளும் ஒதுக்கும்படி இல்லாமல் அனைத்து காட்சிகளையும் அழகாக, நேர்த்தியாக கொடுத்துள்ளார். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் திறம்பட கையாண்டிருக்கிறார். குறிப்பாக இந்த படத்தில் திருமணமாகி குழந்தையில்லாமல் தவிக்கும் பெண்களின் மனநிலையை தெளிவுபடுத்தியதில் அவர் நின்றிருக்கிறார். குழந்தை பெற முடியாமல் தவிக்கும் பெண்களை அவர்களின் மாமியார் வார்த்தையால் நோகடிப்பது, அவர்களுக்கு என்னமாதிரியான வலியை கொடுக்கும் என்று அருண்விஜய் பேசும் வசனங்கள் அந்த வேதனையை அழகாக சுட்டிக் காட்டியிருக்கிறது. குழந்தை பெற, வசதியான பெண்கள் செய்யும் குற்றச் செயல்களையும் சிறப்பாக காட்டியுள்ளார்.

    சாதாரண மெடிக்கல் குற்றப் பின்னணி கொண்ட படங்களைப் போல் இல்லாமல், ஒரு சிறந்த கதைக்களத்துடன் ரசிக்கும்படி சில தகவல்களை கூறி அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார். குறிப்பாக படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள் அனைத்தும் ரசிக்கும்படி உள்ளது. படத்தின் இசையைப் பொறுத்தவரை இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் படத்தின் கதையை ஒட்டியே பாடல்களை அமைத்துள்ளது சிறப்பு. படத்தின் பின்னணி இசையை பொறுத்தவரை மிரட்டியிருக்கிறார். கே.எம்.பாஸ்கரின் ஒளிப்பதிவு வித்தியாசமான ஒளியில் அழகாக காட்சிகளை படம்பிடித்திருக்கிறார்.

    மொத்தத்தில் ‘குற்றம் 23’ குறை இல்லை.

    ஜீவா சங்கர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி - மியா ஜார்ஜ் இணைந்து நடித்துள்ள `எமன்' படத்தின் விமர்சனத்தை கீழே பார்ப்போம்.
    சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த விஜய் ஆண்டனி தனது தாத்தாவின் அறுவை சிகிச்சைக்குப் பணம் திரட்ட தான் செய்யாத  குற்றத்திற்கு பொறுப்பேற்று ஜெயிலுக்கு செல்கிறார். அங்கு மாரிமுத்துவின் அறிமுகம் கிடைக்கிறது. பின்னர் தனது எதிரியான ஜெயக்குமாருடன் இணையும் மாரிமுத்து, விஜய் ஆண்டனியை கொல்லவதற்கான சதியில் உடன்படுகிறார். அதேநேரத்தில் தனது தம்பியை கொன்ற மாரிமுத்து, ஜெயக்குமாரை பழிவாங்க முன்னாள் எம்.எல்.ஏ.வான தியாகராஜன், விஜய் ஆண்டனியை பயன்படுத்துகிறார்.

    பின்னர் விஜய் ஆண்டனியை வைத்தே அவர்கள் இருவரையும் தீர்த்துகட்டுகிறார்.  அதன்மூலம் தியாகராஜனின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகிறார் விஜய் ஆண்டனி.



    இந்நிலையில், விஜய் ஆண்டனியின் தந்தையை கொன்ற ஆளுங்கட்சி அமைச்சரான அருள்ஜோதி, விஜய் ஆண்டனியையும் கொலை  செய்ய திட்டமிடுகிறார். இதற்கிடையில், விஜய் ஆண்டனியின் தோழியான மியா ஜார்ஜுக்கு அருள்ஜோதியின் மகன் தொல்லை  கொடுக்கிறார்.

    இதிலிருந்து தப்பிக்க அரசியலில் நுழையும் விஜய் ஆண்டனி, அவருக்கு எதிரான தடைகளை தகர்த்து, சூழ்ச்சிகளை எவ்வாறு  முறியடித்தார் என்பதே படத்தின் மீதிக்கதை.



    அரசியல்வாதியாக வரும் விஜய் ஆண்டனி அந்த வேடத்திற்கு ஏற்ற நடிப்பை சிறப்பாக கொடுத்தாலும் படத்தின் காதல்  காட்சிகளில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். அவரது மற்ற காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும் காதல் காட்சிகளில் அவரை  ரசிக்க முடியவில்லை. குறிப்பாக சண்டைக்காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.

    மியா ஜார்ஜுக்கு பெரிய அளவில் நடிப்பு இல்லை என்றாலும், மியா வரும் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது. குறிப்பாக மியா ஒரு பாடலுக்கு சிறப்பாக நடனமாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

    அரசியல்வாதியாக வரும் தியாகராஜன் அந்த இடத்திற்கு தேவையானவற்றை சிறப்பாக கொடுத்துள்ளார் என்று தான் சொல்ல  வேண்டும். அரசியல்வாதியின் அத்தனை அம்சங்களும் அவருக்கு சரியாக பொருந்தியிருக்கின்றன. சிறப்பான நடிப்பில்  மிரட்டியிருக்கிறார்.



    அரசியலில் புதுமையை கொண்டுவர முயற்சி செய்திருக்கும் இயக்குநர் ஜுவா சங்கர் அரசியல் சூழ்ச்சிகளை உருவாக்கியுள்ள காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும், படத்தின் நீளம் அதிகமாக இருப்பதால் பார்வையாளர்களுக்கு சளிப்பை ஏற்படுத்துகிறது. படத்தின் திரைக்கதைகளில் வரும் எதிர்பாராத திருப்பங்கள் படத்திற்கு வலுகொடுத்திருக்கின்றன. எனினும் பாடல்கள்  வேகத்தடையாக அமைந்தது திரைக்கதையில் மைனஸ். படத்தில் ஒரு சில முக்கிய காட்சிகள் நம்பகத்தன்மைக்கு ஏற்றதாக  உள்ளது. வசனங்கள் படத்திற்கு மேலும் பலத்தை கூட்டிருக்கிறது.



    படத்தின் பின்னணி இசையில் மிரட்டிய விஜய் ஆண்டனி பாடல்களை கோட்டைவிட்டிருக்கிறார். பாடல்கள் விரும்பி பார்க்கும் படி  இல்லை என்றாலும், "என் மேல கைவைச்சா காலி" பாடலும் அதன் வரிகளும் ரசிகர்களால் கவரும்படி உள்ளது. அமைச்சராக வரும் அருள் ஜோதி ரசிகர்களின் மனதில் நின்றிருக்கிறார். திருநெல்வேலி வட்டார பேச்சில் அவர்  கலக்கியிருக்கிறார். மேலும் சார்லி, சங்கிலி முருகன், லொள்ளு சபா சுவாமிநாதன், மாரிமுத்து ஆகியோரும் கதைக்கு ஏற்ப  தங்களது கதாபாத்திரத்தை சிறப்பாக அளித்திருக்கின்றனர்.

    ஒளிப்பதிவில் இயக்குனர் ஜீவா சங்கர் நிறைவைத் தந்துள்ளார். வீரசெந்தில் ராஜின் படத்தொகுப்பு பணிகளும் சிறப்பாக உள்ளது.

    மொத்தத்தில் `எமன்' வென்றான்.
    ×