என் மலர்tooltip icon

    தரவரிசை

    ரத்தன் கணபதி இயக்கத்தில் விருதகிரி, ஸ்வேதா நடிப்பில் உருவாகி இருக்கும் விருத்தாச்சலம் படத்தின் விமர்சத்தை கீழே பார்ப்போம்.
    நாயகன் விருதகிரியின் முறைப் பெண்ணான நாயகி ஸ்வேதாவைத்தான் சிறுவயதில் இருந்தே திருமணம் செய்து வைக்கப்போவதாக இருவரது வீட்டிலும் சொல்லி வளர்க்கிறார்கள். இதனால், இவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் பாசத்துடன் இருந்து வருகிறார்கள்.

    இந்நிலையில், பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது, ஊர் தலைவரின் பையன் ஒருநாள் நாயகியை கீழே தள்ளிவிட, அவளை தள்ளிவிட்ட கையை நாயகன் வெட்டி விடுகிறான். தன் கையை வெட்டிய நாயகனை வெட்டச்செல்லும்போது தவறுதலாக நாயகியின் அண்ணனை வெட்டி விடுகிறார். இதனால் சம்பவ இடத்திலேயே நாயகியின் அண்ணன் இறந்து போகிறார்.



    இதையடுத்து, போலீஸ் நாயகனையும், ஊர் பெரியவரின் மகனையும் சீர்திருத்த பள்ளியில் அடைக்கிறது. பல வருடங்கள் கழித்து வளர்ந்து பெரியவர்களாகி இருவரும் வெளியே வருகிறார்கள். அதற்குள், நாயகனின் அத்தை கணவனையும், மகனையும் இழந்த சோகத்தில் அந்த ஊரை விட்டு வெளியேறி விடுகிறார்கள்.

    சீர்திருத்த பள்ளியில் இருந்து வெளியில் வந்ததால் ஊரில் யாரும் நாயகனுக்கு வேலை கொடுக்க மறுக்கிறார்கள். இந்நிலையில், ஒரு மரக்கடையில் சேர்ந்து வேலைபார்த்துக் கொண்டிருக்கும் நாயகனுக்கு அந்த ஊரில் டீச்சராக வரும் ஸ்வேதா தனது முறைப்பெண் என்பதை தெரிந்துகொண்டு அவளை பின்தொடருகிறார்.



    ஆனால், ஸ்வேதாவோ, நாயகனை வெறுத்து ஒதுக்குகிறாள். தன்னுடைய நிலைமையை அவளிடம் எடுத்துக்கூற முயற்சி செய்தும் தோற்றுப்போகிறார். அதேநேரத்தில், தான் ஜெயிலுக்கு போக காரணமான நாயகனை எப்படியாவது தீர்த்துக்கட்ட வேண்டும் என்று ஊர் பெரியவரின் மகனான சம்பத் முடிவெடுக்கிறார்.

    இறுதியில், நாயகன் நாயகியிடம் தன்னை பற்றி புரிய வைத்து ஒன்று சேர்ந்தாரா? சம்பத்திடமிருந்து தன்னை காப்பாற்றிக் கொண்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகன் விருதகிரி, வழக்கமாக வரும் நடிகர்களை போல வந்து நடித்துவிட்டு சென்றிருக்கிறார். குறிப்பிட்டு சொல்லும்படியாக எதுவும் இல்லை என்றாலும், படத்தில் கோபக்காரராக நடித்து மிரட்டியிருக்கிறார். நாயகி ஸ்வேதாவின் நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. மற்ற நடிகர்கள் அனைவரும், தங்களது கதாபாத்திரத்திற்கு தேவையானதை சிறப்பாக கொடுத்திருக்கின்றனர். மற்றொரு நடிகரான சம்பத்தின் நடிப்பு பாராட்டும்படியாக உள்ளது.



    ரத்தன் கணபதி திரைக்கதையை அமைத்திருப்பதில் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம். மேலும் படத்தின் நீளத்தையும் கொஞ்சம் குறைத்திருந்தால் படம் ரசிக்கும்படியாக அமைந்திருக்கும். மற்றபடி படம் கரடுமுரடாக உள்ளது.

    ஸ்ரீராம் இசையில் படத்தின் பாடல்கள் பார்க்கும்படியாக இருக்கிறதே, தவிர ரசிக்கும்படியாக இல்லை. படத்தின் பின்னணி இசை படத்திற்கு ஓரளவுக்கு பலம் சேர்த்திருக்கிறது. சிவனேசன் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது.

    மொத்தத்தில் `விருத்தாச்சலம்' வெட்டுக்குத்து.

    2014-ஆம் ஆண்டில் ரஷ்ய மொழியில் வெளியாகி தற்போது தமிழில் டப் செய்யப்பட்டுள்ள `22 நிமிடங்கள்' படத்தின் விமர்சனத்தை கீழே பார்ப்போம்.
    ரஷ்யாவுக்கு சொந்தமான கப்பல் ஒன்று பல டாங்கர்கள் நிறைய எரிபொருள்களை ஏற்றிக் கொண்டு கடலில் செல்கிறது. ஏடன் வளைகுடாவை தாண்டும் சமயத்தில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் அந்த கப்பல் சிறைபிடிக்கப்படுகிறது. இதையடுத்து கப்பலில் இருந்த கடற்படை அதிகாரிகள், டேங்கர்கள் அனைத்தையும் கடற் கொள்ளையர்கள் கைப்பற்றுகின்றனர். இதையடுத்து அவர்களை மீட்க ரஷ்ய அரசு சார்பில், மீட்புக்குழு ஒன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

    அந்த மீட்புக்குழுவில் ஒருவராக வரும் நாயகன் டெனிஸ் நிகிஃபோரவ் உள்ளிட்ட ரஷ்ய கடற்படை அதிகாரிகள் ஏமன் வளைகுடாவிற்கு விரைந்து, சோமாலிய கொள்ளையர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். சோமாலிய கொள்ளையர்களும் பதில் தாக்குதல் நடத்த, திணறிய ரஷ்ய ராணுவம் கரைக்கு திரும்புகிறது. இந்த தாக்குதலில் எதிர்பாராத விதமாக டெனிஸ் கடலில் விழுந்து விடுகிறார். கடலில் விழுந்த அவரை மீட்கும் கடற் கொள்ளையர்கள், டெனிசை டேங்கர்கள் இருக்கும் கப்பலுக்கு கொண்டு செல்கின்றனர்.



    இந்நிலையில், கடற் கொள்ளையர்களில் ஒருவன் டெனிசுக்கு, அவ்வப்போது சில உதவிகளை செய்து வருகிறான். அவனது உதவியுடன் கப்பலில் இருந்தபடியே, ரஷ்ய ராணுவத்திற்கு ஒளி மூலமாக டெனிஸ் சில சில தகவல்களை அனுப்பி வைக்கிறார். மேலும் அடைத்து வைக்கப்பட்டுள்ள கடற்படை அதிகாரிகளுக்கு தேவையான உணவுகளையும் அவ்வப்போது அளித்து வருகிறார்.

    மறுபக்கம் ரஷ்ய ராணுவம், போரில் கைதேர்ந்த ராணுவ வீரர்களை கப்பலுக்கு அனுப்பி வைக்கிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் கப்பலில் உள்ள கொள்ளையர்களை தாக்கி, கப்பலை எப்படி மீட்கிறது. அதற்காக என்னென்ன முயற்சிகள் எடுத்தார்கள்? மேற்கொண்டு என்னென்ன சிக்கல்கள் வந்தன. அதிலிருந்து எப்படி கப்பல் மீட்கப்பட்டது என்பது படத்தின் த்ரில்லிங்கான மீதிக்கதை.



    படத்தின் நாயகன் டெனிஸ் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்கிறார். தனி ஆளாக கப்பலில் சிக்கி இருப்பவர்களுக்கு உதவி செய்வதன் மூலம், தனது பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். கப்பலின் தளபதியாக வரும் விக்டர் சுக்ரோகோவ், மகார் சேப்ரோஸ்கி, எகாட்ரினா, அலெக்சாண்டர் காப்ளின், பீட்டர் கோரோலோவ், எப்ரா டோவ் என அனைவரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக தந்திருக்கின்றனர்.

    2014-லேயே இப்படம் ரஷ்ய மொழியில் வெளியாகியது. தற்போது தமிழில் டப் செய்யப்பட்டுள்ள இப்படம் 3 ஆண்டுகள் கழித்து பார்த்தாலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இருப்பது சிறப்பு. அதற்கேற்றாற்போல் திரைக்கதையை அமைத்ததற்காக இயக்குநர் வேசிலி செரிகோவ்வை பாராட்டலாம்.



    டிமிட்ரி யாஷான்கோவின் ஒளிப்பதிவில் காட்சிகள் தத்ரூபமாக உள்ளன. குறிப்பாக ஆழ்கடலில் அலைகளை காட்சிப்படுத்தியிருப்பது படத்திற்கு ப்ளஸ். இவான் உரியுபினின் பின்னணி இசை கூடுதல் பலம்.

    மொத்தத்தில் `22 நிமிடங்கள்' விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.

    சர்வதேச அளவில் நடக்கும் நாய் கடத்தல்களை பற்றி அலசும் கதையான ஜூலியும் நாலு பேரும் படத்தின் விமர்சனத்தை கீழே பார்ப்போம்.
    கலிபோர்னியாவில் ராசியான நாயாக கருதப்படும் ஜுலியை கடத்தல் கும்பல் ஒன்று அதன் உரிமையாளரை கொன்றுவிட்டு சென்னைக்கு கடத்தி வருகிறது. அந்த நாயை கடத்தி வரச் சொன்னது நாயகி அல்யாவின் தந்தைதான். அந்த நாயை கடத்தி வந்ததற்காக அந்த கடத்தல் கும்பலுக்கு ரூ.1 கோடி ரூபாய் கொடுக்கிறார் அல்யாவின் தந்தை.

    இதுஒருபக்கம் போய்க் கொண்டிருக்கையில், வெவ்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு வேலை தேடி வரும் அமுதவாணன், சதீஷ், விஜய் ஆகிய மூன்று பேரும் வேலை வாங்கித் தருவதாக கூறும் ஒரு மோசடி கும்பலிடம் பணத்தை இழந்து நிற்கின்றனர். அந்த நேரத்தில் இவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் ஆட்டோ ஓட்டுனரான ஜார்ஜ் உடன் நட்பாகிறார்கள்.



    தாங்கள் இழந்த பணத்தை குறுக்கு வழியிலாவது சம்பாதித்துவிட வேண்டும் என்று நினைக்கின்றனர். இந்நிலையில், ஒருநாள் ஜுலி வீட்டைவிட்டு வெளியேறி, எதையோ சாப்பிட்டு மயக்கமடைகிறது. அதை பார்க்கும் நான்கு நண்பர்களும் ஜுலியை காப்பாற்றி, அதன் உரிமையாளரான நாயகியிடம் ஒப்படைக்க, நாயகியும் இவர்களுக்கு நண்பர்களாகிறாள்.

    நடந்த விஷயத்தை நாயகி தனது அப்பாவிடம் கூற, அவர் தனது உதவியாளரை அழைத்து நண்பர்களுக்கு 10 லட்ச ரூபாய் கொடுக்கும்படி கூறிவிட்டு செல்கிறார். ஆனால், அவரது உதவியாளரோ இவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு ஏமாற்றிவிடுகிறார். இதனால் கோபமடைந்த நண்பர்கள் ஜுலியை கடத்திவிடுகிறார்கள்.



    ஜுலியை கடத்தியது யாரென்று தெரியாத நாயகியின் அப்பா, ஜுலி எங்கு சென்றது என்று தேடிவர, மறுபக்கம், ஜுலியை வெளிநாட்டில் இருந்து கடத்திக் கொண்டு வந்த கும்பல், மறுபடியும் அதை கடத்துவதற்கு திட்டம்போட்டு ஜுலியை தேடி வருகிறார்கள். இன்னொரு பக்கம் ஜுலி என்ற பெயரில் காணாமல் போன பெண்ணை தேடி அலையும் போலீசார், சந்தேகத்தின் பெயரில் இவர்கள் பக்கம் பார்வையை திருப்புகின்றனர்.

    இறுதியில், அந்த அதிர்ஷ்ட நாய் ஜுலி யாரிடம் சேர்ந்தது? அந்த நாயால் நண்பர்கள் நன்மை அடைந்தார்களா? அல்லது அவர்களுக்கு இன்னல்கள் ஏற்பட்டதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகர்கள் அமுதவாணன், சதீஷ், விஜய், ஜார்ஜ் உள்ளிட்ட நான்கு பேரும் தொடக்கம் முதல் கடைசி வரை ஒன்றாகவே வலம் வருகின்றனர். அந்த வகையில் அனைவருமே தங்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கின்றனர். அவர்களது நகைச்சுவையும் ரசிக்கும்படி இருக்கிறது. நாயகி அல்யா மனாசா, தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். போலீஸ் அதிகாரியாக வரும் மகாநதி சங்கர், வழக்கம்போல் நகைச்சுவை கலந்த வில்லத்தனத்தில் ரசிக்க வைக்கிறார்.



    இப்படத்தின் இயக்குனர் சதீஷ் ஆர்.வி. ஐடி கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். அப்படியிருக்கையில் சினிமாவில் சாதிக்கவேண்டும் என்ற அவரது முயற்சிக்கு பாராட்டுக்களை தெரிவிக்கலாம். தான் அறிமுகமாகிய முதல் படத்தையே திரையில் அழகாக காட்டியிருக்கிறார். இயக்குனராக மட்டுமில்லாமல், இப்படத்தில் நல்லதொரு கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தும் இருக்கிறார். நண்பர்கள் 4 பேர் ஒன்றாக சேர்ந்தால், என்னென்ன கலாட்டாக்கள் நடக்குமோ அத்தனையையும் நகைச்சுவையாக காட்டியிருப்பது படத்திற்கு ப்ளஸ். அதேநேரத்தில் படத்தின் நீளத்தை குறைத்திருந்தால் கொஞ்சம் விறுவிறுப்பு கூடியிருக்குமோ என்று நினைக்க தோன்றுகிறது.

    இசையமைப்பாளர் ரகு ஷ்ரவன் குமார், திரைக்கதைக்கு ஏற்றபடி நல்ல இசையை அளித்திருக்கிறார். பின்னணி இசை படத்திற்கு ப்ளஸ். கே.ஏ.பாஸ்கரின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.

    மொத்தத்தில் ‘ஜுலியும் 4 பேரும்’ ஓட்டம்.
    எழில் துரை இயக்கத்தில் அவர், மதுமிலா, அபிநயா நடிப்பில் உருவாகி இருக்கும் `செஞ்சிட்டாளே என் காதல' படத்தின் விமர்சனத்தை கீழே பார்ப்போம்.
    நாயகன் எழில் துரை கல்லூரியில் படித்து வருகிறார். வழக்கறிஞரான தந்தை அஜய் ரத்னம், தாய், தங்கை என தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். ஒருநாள் தனது தங்கையின் தோழியான மதுமிலாவை பார்க்கும் நாயகனுக்கு அவர் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. பின்னர்  சில நாட்களுக்கு பிறகு கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் மதுமிலாவை மீண்டும் பார்க்க, அவள் மீதான ஈர்ப்பு காதலாக மாறிவிடுகிறது. ஒரு கட்டத்தில் தனது காதலை அவளிடம் தெரிவிக்க, மதுமிலாவும் சம்மதம் தெரிவிக்கிறாள்.

    பின்னர், இருவரும் சந்தோஷமாக காதலித்து வருகின்றனர். நாயகன் எழிலுக்கு வேலை கிடைக்கவில்லை. அன்றாட பிழைப்புக்கு தனது அப்பாவையே நம்பி இருக்கிறான். இந்நிலையில், கல்லூரி தலைமை பொறுப்புக்கு தேர்தல் வர, அதில் மதுமிலாவும் போட்டியிட்டு வெற்றி பெறுகிறாள். இதையடுத்து, அவளுக்கு மற்றொரு நபருடன் தொடர்பு ஏற்படுகிறது. இதனால் எழிலை பிரிய முடிவு செய்து அவனை வெறுத்து ஒதுக்குகிறாள். இருப்பினும், அவள் பின்னாலேயே சுற்றிவரும் எழில், ஒரு கட்டத்தில் அவளை பிரிகிறார்.



    எழில் அவளை பிரிந்த மனவேதனையில் தான் ஒரு நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று முடிவு செய்து புதிய கம்பெனி ஒன்றை தொடங்கி சமுதாயத்தில் பேசும்படியான நிலைக்கு வருகிறார். அவரது கம்பெனியிலேயே பணிபுரியும் மற்றொரு நாயகியான அபிநயா, எழில் மீது காதல் கொண்டு, தனது காதலை எழிலிடம் தெரிவிக்கிறார். அபிநயாவிடம் தனது முதல் காதல் குறித்து தெரிவிக்கும் எழில், அதேநேரத்தில் மதுமிலாவை இன்னமும் காதலிப்பதாகவும் கூறுகிறார்.

    மறுபக்கத்தில் எழிலை பிரிந்த மதுமிலா, தனது அடுத்த காதலில் தோல்வியடைந்து, பின்னர் மீண்டும் ஒருவரை காதலிக்க அந்த காதலும் தோல்வியடைகிறது. இந்த நிலையில், மதுமிலாவின் தந்தையான மைம் கோபி, எழிலும், மதுமிலாவும் காதலிப்பதாகக் கூறி எழிலின் பெற்றோரிடம் திருமண பேச்சுவார்த்தை நடத்துகிறார். இறுதியில், எழில் தன்னை வேண்டாமென்று ஒதுக்கிய மதுமிலாவுடன் ஒன்று சேர்ந்தாரா? அல்லது தன்னையே உருக உருக காதலிக்கும் அபிநயாவை திருமணம் செய்தாரா? என்பது படத்தின் மீதிக்கதை.



    நாயகன் எழில் துரை தனது முதல் படத்திலேயே சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது செய்கைகளும், பேச்சும் ஒரு முதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. குறிப்பாக வசன உச்சரிப்புகள் அவருக்கு ஏற்றபடி எழுதியிருப்பதாகவே தெரிகிறது. நாயகி மதுமிலாவை பொறுத்தவரை, ஒரு எதிர்மறை கதாபாத்திரத்தில், சிறப்பாக நடித்திருக்கிறார். திரையில் அழகான தேவதையாக வரும் மதுமிலா, ஒரு கட்டத்திற்கு மேல் அவர் மீது வெறுப்பு ஏற்படும்படி நடித்திருப்பது சிறப்பு.

    நடிகை அபிநயாவை பற்றி சொல்ல வேண்டியதில்லை. வாய்பேச முடியாதவர் என்றாலும், எப்போதும் போல தனது எதார்த்தமான நடிப்பால் கலக்கியிருக்கிறார். திரையில் அபிநயா வரும் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. ‘கயல்’ வின்சென்ட் காமெடியில் கலக்கி இருக்கிறார். மைம் கோபி, மகாநதி சங்கர் தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்கின்றனர்.

     

    தனது முதல் படத்திலேயே இயக்குநராகவும், நடிகராகவும் அறிமுகமாகி உள்ள எழில் துரை சிறப்பான பங்களிப்பை தந்திருப்பதற்காக அவருக்கு வாழ்த்துக்கள். இந்த காலகட்டத்தில் உள்ள இளைஞர்கள் தங்களது காதலில் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அதனால் என்னென்ன இன்னல்களுக்கு ஆளாகின்றனர் என்பதை இப்படத்தின் மூலமாக தெளிவாக காட்டியிருக்கிறார். படத்தின் கதையை நிர்மானித்து, இயக்க முடிவெடுத்த எழில் துரை தனது திரைக்கதையில் கொஞ்சம் மெனக்கிட்டு இருக்கலாம். மற்றபடி அவரது இயக்கம் சிறப்பாக உள்ளது.

    படத்தின் இசையை பொறுத்தவரை எஃப்.ராஜ்பரத் சிறந்த இசையை தந்திருக்கிறார். அவரது இசையில் ஒருசில பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பலம். லாரன்ஸ் கிஷோர் ஒளிப்பதிவில், இந்த கால இளைஞர்களின் காதலை சிறப்பாக காட்டியிருப்பது ரசிக்கும்படி இருக்கிறது.

    மொத்தத்தில் ‘செஞ்சிட்டாளே என் காதல’ காதல் போராட்டம்.
    கார்த்தி - அதிதி ராவ் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘காற்று வெளியிடை’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    காற்று வெளியிடை படத்தின் கதை 1999-ல் தொடங்குகிறது. இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையிலான கார்கில் போரில் பைலட்டான கார்த்தி, சண்டையின்போது இவர் பயணித்த போர் விமானம் எதிரிகளின் தாக்குதலுக்கு ஆளாக அதிலிருந்து தப்பித்து பாகிஸ்தானில் விழுகிறார். பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு இருட்டு அறையில் அடைக்கப்படுகிறார். அங்கிருந்தபடியே, தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை கார்த்தி நினைத்துப் பார்ப்பதுபோல் கதை தொடங்குகிறது.

    இந்திய விமானப்படையில் பைலட்டாக இருக்கும் கார்த்திக்கு ஒருநாள் சிறிய விபத்து ஏற்படுகிறது. ராணுவத்தில் டாக்டராக இருக்கும் நாயகி அதிதி ராவ் இவருக்கு சிகிச்சை அளிக்கிறார். முதல் சந்திப்பிலேயே இருவருக்குள்ளும் ஒரு ஆழமான காதல் உருவாகிவிடுகிறது. இருவரும் நெருங்கி பழக ஆரம்பிக்கும்போது, அவர்களுக்குள் அவ்வப்போது ஈகோ ஏற்பட்டு மோதல் உருவாகிறது. இந்த மோதல் நெடுநேரம் நீடிக்காமல் அடிக்கடி சமரசமும் ஆகிக் கொள்கிறார்கள்.



    ஒருகட்டத்தில் திருமணத்திற்கு முன்பே இருவரும் நெருக்கமாகிறார்கள். இதனால், அதிதி ராவ் கர்ப்பமடைகிறாள். இவர்களுக்குள் இருந்த சிறுசிறு மோதல், ஒருநாள் பூதாகரமாகிவிட கோபத்தில் அதிதியை விட்டு பிரிந்துபோகிறார் கார்த்தி. அந்த நேரத்தில்தான் கார்கில் போர் ஆரம்பிக்க, கார்த்தி போருக்கு போய் பாகிஸ்தானில் சிக்கிக் கொள்கிறார்.

    கர்ப்பிணியாக விட்டுவந்த தனது காதலியிடம் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டும் என்று எண்ணத்தில் பாகிஸ்தான் சிறையிலிருந்து தப்பிக்க நினைக்கிறார் கார்த்தி. இறுதியில், அவர் அங்கிருந்து தப்பித்து இந்தியாவுக்கு வந்து தனது காதலியை கரம்பிடித்தாரா? இல்லையா? என்பது படத்தின் மீதிக்கதை.



    கார்த்தி இப்படத்தில் பைட்டர் பைலட்டாக வருகிறார். அந்த கதாபாத்திரத்திற்கு ஓரளவுக்கு பொருந்தியிருக்கிறார் என்று சொன்னாலும், மணிரத்னம் படங்களின் கதாநாயகனுக்கு இவர் பொருந்தவில்லை என்றுதான் தோன்றுகிறது. பெரும்பாலான காட்சிகளில் இவரது முகத்தை குளோசப் காட்சிகளாக காட்டியிருக்கிறார். அந்த இடங்களில் எல்லாம் இவரை பெரிதாக ரசிக்க முடியவில்லை. நடிப்பை பொறுத்த அளவுக்கு தன்னால் எந்தளவுக்கு பெஸ்ட் கொடுக்க முடியுமோ அதை கொடுத்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

    நாயகி அதிதி ராவ் ஹைதரி பார்க்க அழகாக இருக்கிறார். மணிரத்னம் படங்களுக்கு ஏற்ற முகம் இவருக்கு இருக்கிறது. நடிப்பிலும் ஓகே சொல்ல வைக்கிறார். காதல் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் கொடுக்கவேண்டும். டெல்லி கணேஷ் ஒருசில காட்சிகள் வந்தாலும் நிறைவாக செய்துவிட்டு போயிருக்கிறார்.



    ஆர்.ஜே.பாலாஜி இதுவரையில் நடித்த படங்களைவிட இந்த படத்தில் ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். அவருடைய இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கலாம். அதிதியின் தோழியாக வரும் ருக்மிணி தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.

    இயக்குனர் மணிரத்னத்தின் காதல் பட வரிசையில் இந்த படமும் முக்கியமாக பேசப்படும் என நம்பலாம். இராணுவத்தில் இருக்கும் இருவரிடையே வரும் காதல், ஈகோவை இப்படத்தில் காட்டியிருக்கிறார். படத்தில் ராணுவம் சம்பந்தப்பட்ட விஷயங்களை காட்டியிருந்தாலும், முழுக்க முழுக்க ஒரு காதல் கதையாகவே இதை படமாக்கியிருக்கிறார். மணிரத்னத்தால் மட்டுமே இப்படியொரு படத்தை கொடுக்கமுடியும். நிறைய காட்சிகளில் அவரது பழைய படங்களின் சாயல் இருக்கிறது. காதல் படங்களுக்கு மணிரத்னத்தின் வசனங்கள்தான் பெரிய பலம். அது இந்த படத்திலும் பக்கபலமாக அமைந்திருக்கிறது.



    ஏ.ஆர்.ரகுமான் இசைதான் படத்தின் கதையை பாலமாக தாங்கிச் செல்கிறது. பாடல்கள் ஒவ்வொன்றும் மணிமுத்தாக இருக்கிறது. அந்த பாடல்களுக்கு வைரமுத்துவின் வரிகள் கூடுதல் பலம் சேர்க்கிறது. காதல் படங்களுக்கு பின்னணி இசையமைப்பது ஏ.ஆர்.ரகுமானுக்கு கைவந்த கலை. அதை இப்படத்திலும் நேர்த்தியாக செய்திருக்கிறார். ரவிவர்மனின் ஒளிப்பதிவு காஷ்மீரை இன்னொரு கோணத்தில் காட்டியிருக்கிறது.

    மொத்தத்தில் ‘காற்று வெளியிடை’ காதல் போராட்டம்.
    வெற்றி-அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடிப்பில் கிரைம் பின்னணியில் வெளிவந்திருக்கும் ‘8 தோட்டாக்கள்’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    கதாநாயகன் வெற்றி சிறுவயதிலேயே செய்யாத தப்புக்காக ஜெயிலுக்கு போகிறார். சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்படும் வெற்றியை புரிந்துகொண்ட காவலர் ஒருவர் அவனுக்கு உதவி செய்ய நினைக்கிறார். அவனை போலீஸ் அதிகாரியாக ஆகும்படி வற்புறுத்துகிறார். போலீஸ் வேலையில் விருப்பம் இல்லாத வெற்றி, போலீஸ் அதிகாரியின் வேண்டுகோளுக்கு இணங்க பெரியவனானதும் போலீசாகிறார்.

    மைம் கோபி இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கும் போலீஸ் ஸ்டேஷனில் இவர் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார். போலீஸ் வேலையில் நேர்மையாக பணிபுரிந்து வருகிறார். இது அந்த ஸ்டேஷனில் பணிபுரியும் மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால், அவரை எப்படியாவது அந்த ஸ்டேஷனில் இருந்து துரத்திவிடவேண்டும் என்று நினைக்கிறார்கள்.



    இந்நிலையில், பிரபல ரவடி ஒருவரை பின்தொடர வேண்டும் என்ற வேலையை வெற்றிக்கு கொடுக்கிறார் மைம் கோபி. இதற்காக எட்டு தோட்டாக்கள் அடங்கிய ஒரு துப்பாக்கியை அவருடைய பாதுகாப்புக்காக கொடுக்கிறார்கள். அதை வாங்கிக்கொண்டு ரவுடியை பின்தொடரும் வெற்றி, பஸ்ஸில் துப்பாக்கியை பிக்பாக்கெட் அடிக்கும் சிறுவனிடம் பறிகொடுக்கிறார்.

    துப்பாக்கி பறிபோனதும் பதட்டத்தில் இருக்கும் வெற்றி, நேரடியாக மைம் கோபியிடம் சென்று துப்பாக்கி தொலைந்துவிட்டது குறித்து முறையிடுகிறார். அவரோ, வெற்றிக்கு ஒருநாள் அவகாசம் கொடுத்து, துப்பாக்கியை அதற்குள் கண்டுபிடித்து வரவேண்டும் எனவும், இல்லையென்றால் மேலிடத்தில் தகவல் தெரிவித்துவிடுவேன் என்று எச்சரிக்கிறார்.



    இதையடுத்து துப்பாக்கியை தேடி நாயகன் பல்வேறு வகையில் முயற்சி செய்கிறார். ஆனால், அதற்குள் அந்த துப்பாக்கி தடயம் தெரியாத நபர்களிடம் சிக்கி, அதில் உள்ள 7 தோட்டாக்கள் நகரத்தின் பல்வேறு இடங்களில் வெடிக்கிறது. இதன் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து நாசர் தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் குழு விசாரணையில் இறங்குகிறது.

    அந்த துப்பாக்கி கடைசியில் யார் கையில் சிக்கியது? அந்த துப்பாக்கியை வைத்து நடந்த கொலைகளுக்கான காரணம் என்ன? என்றதுடன் கதை விறுவிறுப்புடன் நகர்கிறது.

    நாயகன் வெற்றி, சிறுவயதிலிருந்தே செய்யாத தப்புக்காக சிறை சென்றுவிட்டோமே என்ற குற்ற உணர்வுடன் படம் முழுக்க சோகமயமாகவே வலம் வந்திருக்கிறார். போலீஸ் கெட்டப்புக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் என்றாலும், அவரது கதாபாத்திரத்திற்கு கம்பீரம் தேவைப்படவில்லை. எனவே, அதற்கேற்றார்போல் கனகச்சிதமாக நடித்திருக்கிறார்.



    நாயகி அபர்ணா வழக்கம்போல் தமிழ் சினிமா கதாநாயகியாக வந்துபோகாமல் இந்த படத்தில் அவருக்கு நடிப்பதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. டிவி ரிப்போர்ட்டராக வரும் இவரது நடிப்பு பலே சொல்ல வைக்கிறது. தன்னுடைய தேவைக்காக எதைவேண்டுமானாலும் செய்யத் துணியும் கதாபாத்திரத்தில், ரொம்பவும் எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார். இவருடைய கதாபாத்திரத்தில் போலித்தனம் இல்லாதது சிறப்பு.

    எம்.எஸ்.பாஸ்கர் படத்தின் இன்னொரு நாயகன் என்று சொல்லலாம். அந்தளவுக்கு முக்கியமான கதாபாத்திரம் இவருடையது. தன்னுடைய வயதுக்கேற்ற கதாபாத்திரம் என்பதால் அதற்கு பொருத்தமாகவே இருக்கிறார். இவரது நடிப்புக்கு தீனி போடும் அளவுக்கு படத்தில் ஒரு காட்சியில் 5 நிமிடத்திற்கும் மேல், இவர் தனது சோக கதையை சொல்லி அழும் காட்சிகளில், இவருடைய முகபாவணை மற்றும் நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது.



    விசாரணை அதிகாரியாக வரும் நாசர், வாராவாரம் வெளியாகும் படங்களில் ஏதாவது ஒரு படத்தில் இவருடைய பங்களிப்பு இருந்துகொண்டே இருக்கிறது. ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் வேறுபட்டு இருப்பது பாராட்டுக்குரியது. இந்த படத்திலும் இவருடைய நடிப்பு மெச்சும்படியாக இருக்கிறது.

    இன்ஸ்பெக்டராக வரும் மைம் கோபி, போலீஸ் ஏட்டாக வரும் டி.சிவா, ரவுடி கும்பலின் தலைவனாக வரும் சார்லஸ் வினோத் மற்றும் இவருக்கு மனைவியாக நடித்தவர் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள்.



    இயக்குனர் ஸ்ரீகணேஷ் சிறுவயதிலேயே தனது முதல் படத்தை இவ்வளவு பக்குவத்தோடு இயக்கியிருப்பது சிறப்பு. கிரைம் கதையில் செண்டிமெண்ட், மென்மையான காதல், துரோகம் எல்லாம் கலந்த ஒரு கலவையாக கொடுத்திருக்கிறார். அனைத்து கதாபாத்திரங்களையும் மிகவும் கைதேர்ந்தவர்போல் கையாண்டிருப்பது ஆச்சர்யத்தை கொடுக்கிறது. படத்தின் மிகப்பெரிய பலமே திரைக்கதையும், வசனங்களும்தான். படத்தை ரொம்பவும் வேகமாக கொண்டுசெல்லாமல், நிறுத்தி நிதானமாக கொண்டுசென்று கடைசியில் அழகாக முடித்திருப்பது சிறப்பு.

    தினேஷ் கே.பாபுவின் ஒளிப்பதிவும் பாராட்டும்படி இருக்கிறது. சுந்தரமூர்த்தியின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை கதையின் ஓட்டத்துக்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘8 தோட்டாக்கள்’ வெடிக்கும்.
    அரவிந்த் ரோஷன் - கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள ‘செவிலி’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    நாயகன் அரவிந்த் ரோஷன் பேருந்து நிலையத்தில் வாட்டர் பாக்கெட் விற்பனை செய்பவர். சிறுவயதிலிருந்து இவருக்கு தாய் இருந்தும் அவளுடைய பாசம் கிடைக்காமல் ஏங்கி தவிக்கிறார். அதேபகுதியில் அரசியல்வாதியின் மகளான நாயகி கீர்த்தி ஷெட்டி, கல்லூரிக்கு சென்றுவரும் போது, அடிக்கடி நாயகனுடன் வாக்குவாதம் ஏற்படுகிறது.

    ஒருகட்டத்தில் அவர், அம்மா மீது வைத்திருக்கும் பாசம், பெண்கள் மீது காட்டும் அக்கறை இவையெல்லாவற்றையும் நேரில் பார்க்கும் நாயகிக்கு அவரை பிடித்துப்போகவே காதலிக்க தொடங்குகிறாள். பாசத்துக்காக ஏங்கும் நாயகனும் அவளது காதலை ஏற்றுக் கொள்கிறார்.



    இந்நிலையில் நாயகன், அம்மா பாசத்துக்காக ஏங்கிக் கொண்டு, அவருக்கு ஏதாவது செய்யவேண்டும் என நினைக்கிறார். ஆனால், அவனது அம்மாவோ இவனை வெறுத்து ஒதுக்கிறாள். இந்நிலையில், இவனுடைய தொல்லையில் இருந்து விடுபட, நாயகனுக்கு திருமணம் செய்துவைத்துவிட்டால் சரியாகிவிடும் என்று முடிவெடுக்கிறார் நாயகனின் அம்மா.

    அதற்காக ஒரு பெண்ணும் பார்க்கிறார். இதை நாயகனிடம் சொல்ல, இதுநாள் வரை தன்னை வெறுத்து ஒதுக்கிய அம்மா, இன்று தனக்காக பார்த்திருக்கும் பெண்ணை திருமணம் செய்துகொண்டால் அவளது பாசம் கிடைக்கும் என்று நினைக்கும் நாயகன், நாயகியுடனான காதலை முறித்துவிட்டு, அம்மா பார்த்த பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுக்கிறான் நாயகன்.



    இறுதியில், அம்மா பார்த்த பெண்ணை நாயகன் திருமணம் செய்தாரா? அவரது காதல் என்னவாயிற்று? அம்மாவின் பாசத்திற்காக ஏங்கிய நாயகனுக்கு அது கிடைத்ததா? எதற்காக அந்த தாய் தனது மகனை வெறுத்து ஒதுக்குகிறாள்? என்ற கேள்விகளுக்கு விடை கொடுத்திருக்கிறார்கள்.

    நாயகன் அரவிந்த் ரோஷன் அம்மா பாசத்துக்கு ஏங்கும் காட்சிகளில் எல்லாம் ரொம்பவும் எதார்த்தமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளில்தான் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். நடனமும் முடிந்தளவுக்கு முயற்சி செய்திருக்கிறார்.

    நாயகி கீர்த்தி ஷெட்டி அழகு பதுமையாக வந்துபோயிருக்கிறார். படத்தில் இவருக்கு நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதை சரியாக புரிந்துகொண்டு அழகாக நடித்திருக்கிறார். படத்தில் பாராட்டப்பட வேண்டியவர் நாயகனின் அம்மாதான். ஏற்கெனவே நிறைய படங்களில் அவரது நடிப்பு ரொம்பவும் எதார்த்தமாக அமைந்திருப்பதை பார்த்திருக்கிறோம். இந்த படத்திலும் அதே எதார்த்தத்தை பதிவு செய்திருக்கிறார்.



    நெல்லை சிவா - ஷகிலா ஆகியோரின் காமெடி பெரிய அளவில் எடுபடவில்லை. மற்றபடி படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரங்கள் அனைவரும் புதுமுகங்கள் என்பதால் அவர்களிடமிருந்து பெரிதாக நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை.

    இயக்குனர் ரா.ஆனந்த் அம்மா பாசம், அதனூடே காதல் இரண்டும் கலந்து ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். படத்திற்கு பெரிய பலமே வசனங்கள்தான். வசனங்கள் ஒவ்வொன்றும் அழுத்தமாக அமைந்திருக்கிறது. மற்றபடி, திரைக்கதையில்தான் படத்தை ரசிக்க முடியாமல் செய்திருக்கிறார். அதேபோல், ஒருசில காட்சிகள் தமிழ் சினிமாவில் திரும்ப திரும்ப பார்த்து சலித்துப்போன காட்சிகளாகவே வருவதால், பெரிதாக ஈர்ப்பு இல்லை.

    ஜீவனின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். ரா.ஆனந்தின் ஒளிப்பதி பரவாயில்லை ரகம்தான்.

    மொத்தத்தில் ‘செவிலி’ பாசப்பிணைப்பு.
    ரத்தன் மௌலி, நாயனா நாயர் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘அரசகுலம்’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    நாயகன் ரத்தன் மௌலி படித்து முடித்துவிட்டு எந்த வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றி வருகிறார். இவருடைய அப்பா அந்த ஊரிலேயே பெரிய மனிதராக வலம் வருகிறார். அதேஊரில் டீச்சராக பணிபுரியும் ராஜஸ்ரீ, தனது மகளான நாயகி நாயனா நாயரை மிகவும் கண்டிப்புடன் வளர்த்து வருகிறார்.

    ஒருநாள் வாகனத்தில் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் நாயகனும் நாயகியும் ஒருகட்டத்தில் காதலர்களாகிறார்கள். இவர்களுடைய காதல் ராஜஸ்ரீக்கு தெரியவரவே, இதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஆனால், நாயகனோ தனது வீட்டாரை சென்று ராஜஸ்ரீயிடம் நாயனாவை பெண் கேட்க செல்ல, பிறகு ராஜஸ்ரீ சம்மதிக்கிறார்.



    இதற்கிடையில், நாயகன் தனது நண்பனின் காதலை சேர்த்து வைக்கிறார். வேறு ஜாதி பையனை திருமணம் முடித்ததால் பெண்ணின் அப்பா, இதுகுறித்து நாயகனின் அப்பாவிடம் முறையிடுகிறார். நாயகனின் அப்பா தனது மகன் செய்ததும் சரிதான் என்று தீர்ப்பு சொல்ல, அந்த பெண்ணின் அப்பாவுக்கு நாயகனின் அப்பா மீது பகை உருவாகிறது.

    ஏற்கெனவே, நாயகனின் அப்பா மீது பகையில் இருக்கும் ராஜசிம்மாவுடன் அந்த பெண்ணின் அப்பாவும் சேர்ந்துகொண்டு, நாயகனையும், அவரது அப்பாவையும் தீர்த்துக்கட்ட நினைக்கிறார்கள். மறுமுனையில், ரத்தனுக்கும், நாயனாவுக்கும் திருமண பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கும்போது, நாயகனின் வீட்டில் உள்ள ஆல்பத்தில் இருக்கும் ஒருவருடைய புகைப்படத்தை பார்த்ததும், ராஜஸ்ரீ இந்த திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கிறாள்.



    அந்த புகைப்படத்தில் இருந்தது யார்? எதற்காக ராஜஸ்ரீ இந்த திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கிறாள். எதிரிகளிடம் இருந்து நாயகனும், நாயகனின் அப்பாவும் தப்பித்தார்களா? காதலர்கள் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகன் ரத்தன் மௌலி இளமை துள்ளலுடன் படம் முழுக்க வலம் வந்திருக்கிறார். ரொமான்ஸ், ஆக்ஷன் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் வேண்டும். நாயகி நாயனா நாயர் முகத்தில் ரொம்பவும் முதிர்ச்சி தெரிகிறது. நடிப்பில் ஓ.கே. ரகம்தான்.



    நாயகனின் அப்பாவாக வருபவர் பெரிய மனிதராக பளிச்சிடுகிறார். வீட்டில் உள்ளவர்களுடன் நட்பாக பழகும் காட்சிகள் எல்லாம் ரசிக்கும்படி இருக்கிறது. ராஜஸ்ரீ, தனது அனுபவ நடிப்பில் கவர்கிறார். கொடுமைக்கார தாயாக இவர் நடிக்கும் காட்சிகளில் நமக்கே அவருக்கு மேல் கோபம் வருகிறது. அந்தளவுக்கு எதார்த்தமாக தனது நடிப்பை பதிவு செய்திருக்கிறார். வில்லனாக வரும் ராஜசிம்மா பார்வையால் மிரட்டியிருக்கிறார்.

    இயக்குனர் குமார் மாறன் யாரை திருப்திபடுத்துவதற்காக இந்த படம் எடுத்தார் என்றே தெரியவில்லை. இந்த படத்தில் நடித்தவர்களை குறைகூறுவதைவிட, இந்த படத்தின் கதை, திரைக்கதையை எழுதி இயக்கிய இவரைத்தான் நிறைய குறை கூறவேண்டியிருக்கிறது. இந்த படத்தில் நடித்தவர்கள் எல்லாம் இவர் சொன்னதை செய்துவிட்டு போயிருக்கிறார்கள். ஆனால், இவர் கதையில் என்ன சொல்ல வருகிறார் என்பதுதான் யாருக்கும் தெரியவில்லை. படத்தின் இறுதிவரைக்கும் படத்தின் கதை என்னவென்பதை நாம் தேட வேண்டியிருக்கிறது.



    எஸ்.சந்திரசேகரின் ஒளிப்பதிவு பட்ஜெட்டுக்கு தகுந்தாற்போல் இருக்கிறது. வேலன் சகாதேவனின் பாடல்கள் சுமார் ரகம்தான். பின்னணி இசையும் பெரிய அளவில் எடுபடவில்லை. ஒட்டுமொத்தத்தில் இந்த படத்திற்காக கஷ்டப்பட்ட அனைவரின் உழைப்பையும் இயக்குனர் வீணடித்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

    மொத்தத்தில் ‘அரசகுலம்’ நாசம்.
    ஷிவம் நாயர் இயக்கத்தில் டாப்சி, அக்‌ஷய் குமார், மனோஜ் பாஜ்பாய் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள `நான் தான் ஷபானா' படத்தின் விமர்சனத்தை கீழே பார்ப்போம்.
    மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் டாப்சி தனது தாயுடன் வாழ்ந்து வருகிறார். இயல்பாகவே மிகவும் தைரியமான பெண்ணான டாப்சி, குடோ என்ற தற்காப்புக்கலை பயிற்சியாளராவார். மும்பையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வரும் டாப்சியை அதே கல்லூரியில் படிக்கும் இளைஞர் ஒருவர் காதலிப்பதாகக் கூறுகிறார். அதேநேரத்தில் மர்ம நபர் ஒருவர் டாப்சியை உளவு பார்த்து, டாப்சி குறித்த தகவல்களை ரசிகசியமாக சேகரிக்கிறார். 

    பின்னர் ஒருநாள் டாப்சியும், அந்த இளைஞரும் ஒன்றாக வெளியே செல்லும்போது, அவர்களை ஒரு கும்பல் மறித்து கிண்டல் செய்கிறது. இதனால் கோபமடையும் டாப்சி, அந்த கும்பலுடன் சண்டை போடுகிறாள். இந்த சண்டையின்போது டாப்சியை காதலிக்கும் இளைஞர், அந்த கும்பலால் கொல்லப்படுகிறார். 



    இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து டாப்சி போலீசில் புகார் அளிக்க, மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்க போலீசார் மறுக்கின்றனர். இவ்வாறு தனது காதலரை இழந்து, கவலையில் ஆழ்ந்திருக்கும் டாப்சிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. டாப்சியை உளவு பார்த்த இந்தியாவின் ரகசிய ஏஜென்சியில் இருந்து மனோஜ் பாஜ்பாய், டாப்சியிடம் தொடர்பு கொண்டு பேசுகிறார். அவர், டாப்சியின் காதலரை கொன்றவர்களை பழிவாங்க உதவுவதாக கூறுகிறார். அவ்வாறு உதவ வேண்டுமானால் அவர்கள் கொடுக்கும் வேலையை டாப்சி செய்து முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் கூறுகிறார். 



    இதனையடுத்து, இந்த ஒப்பந்ததத்திற்கு சம்மதம் தெரிவிக்கும் டாப்சி, அவளது காதலரை கொன்றவர்களை பழிவாங்குகிறாள். டாப்சிக்கு அக்‌ஷய் குமார் உள்ளிட்டோர் உதவி செய்கின்றனர். இதையடுத்து டாப்சிக்கு மனோஜ் பாஜ்பாய் என்ன வேலை கொடுக்கிறார்? மனோஜ் பாஜ்பாய் கொடுத்த வேலையை டாப்சி செய்தாரா? அதன் பின்னணியில் யார் யார் இருகிறார்? என்ன நடந்தது? என்பது படத்தின் மீதிக்கதை.

    கனமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் டாப்சி அதற்காக கடினமாக உழைத்திருக்கிறார் என்பது படத்தை பார்க்கும்போதே தெரிகிறது. பேபி படத்தில் ஒரு சிறிய சண்டைக்காட்சியில் வந்து அசத்தியிருப்பார். இப்படத்தில் குடோ பயிற்சியாளரான இவர், சண்டைக்காட்சிகளை அசால்டாக, சிறப்பான முறையில் செய்திருக்கிறார். சண்டைக்காட்சிகளில் அவரது நடிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது. இப்படத்தில் ஒரு ஆணாகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். 



    சிறப்பு தோற்றத்தை ஏற்று நடித்திருப்பதற்காக அக்‌ஷய் குமாருக்கு முதலில் ஒரு பாராட்டை தெரிவிக்கலாம். அவரது வருகைக்கு திரையரங்கில் விசில் பறக்கிறது. படத்தின் இரண்டாவது பாதியில் முக்கியமான காட்சிகளில் வந்து அசத்தியிருக்கிறார். பிரித்விராஜ் வில்லனாக சிறப்பாக நடித்துள்ளார். இரண்டாவது பாதியில் மட்டும்  டானாக வரும் அவர் கதைக்கு பக்கபலமாக இருந்துள்ளார்.

    மனோஜ் பாஜ்பாய்யை பொறுத்தவரை ஒரு தலைமை அதிகாரியாக, ஒரு கெத்தான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். தனது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக அளித்திருக்கிறார். அதேபோல் அனுபம் கெர், முரளி ஷர்மா என அனைவருமே கதைக்கு உறுதுணையாக தங்கள் பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். 

    நீரஜ் பாண்டே திரைக்கதையை சிறப்பாக அமைத்துள்ளது படத்திற்கு பலம் என்றாலும், படத்தின் நீளம் அதிகமாக இருப்பது ஒருவித கடுப்பை கூட்டுகிறது. தேவையில்லாத காட்சிகளை சுருக்கி இயக்குநர் ஷிவம் நாயர் படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம். மேலும் பல காட்சிகளில் பெரிய பில்டப்களை கொடுத்து சாதாரணமாக முடித்திருப்பது படத்திற்கு பின்னடைவு. மற்றபடி காதல் காட்சிகளும், சண்டைக்காட்சிகளும் ரசிக்கும்படி இருக்கிறது. 



    இந்தி ரீமேக் என்பதால், படத்தின் பாடல்கள் அவ்வளவாக ரசிக்கும்படியாக இல்லை என்றாலும், சஞ்சோய் சவுத்ரியின் பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. சுதிர் பால்சேனின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. 

    மொத்தத்தில் `நான் தான் ஷபானா' பெண்மையின் வீரம்.
    கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர், மடோனா செபாஸ்டியன் நடிப்பில் உருவாகியுள்ள `கவண்' படத்தின் விமர்சனத்தை கீழே பார்ப்போம்.
    ஒரே கல்லூரியில் படித்து வரும் விஜய் சேதுபதி - மடோனா செபாஸ்டியன் இருவரும் தொடக்கம் முதலே காதலித்து வருகின்றனர். காதலுடன் சந்தோஷமாக தனது கல்லூரி வாழ்க்கையை அனுபவித்து வரும் இந்த ஜோடி படிப்பை முடிக்கும் தருவாயில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து விடுகின்றனர். ஊடகத்துறையின் மீது அதீத பிரியமுள்ள விஜய் சேதுபதிக்கு, சுமார் 2 வருடங்களுக்கு பிறகு, அக்‌ஷய் சய்கல் நடத்தி வரும் பிரபல தொலைக்காட்சியில் வேலை கிடைக்கிறது. அதே நிறுவனத்தில்தான் மடோனாவும் வேலை செய்து வருகிறார்.

    அது ஒருபுறம் இருக்க, அரசியல்வாதியாக வரும் போஸ் வெங்கட்டுக்கு சொந்தமான தொழிற்சாலை ஒன்றில் இருந்து வெளியேறும் கழிவு நீர், குடிநீர் ஏரி ஒன்றில் கலந்து மாசு ஏற்படுத்துகிறது. இந்நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சமூக அமைப்பு ஒன்று போராட்டம் நடத்துகிறது. இதில் விக்ராந்த் மற்றும் அவரது தோழி உள்ளிட்டோர் போஸ் வெங்கட்டுக்கு எதிராக தீவிர போராட்டத்தில் இறங்குகின்றனர்.



    இதனால் கடுப்பாகும் போஸ் வெங்கட் அந்த அமைப்பின் போராட்டத்தை தடுக்கும் விதமாக, தனது ஆட்களை விட்டு, விக்ராந்தின் தோழியை பாலியல் வன்முறைக்கு ஆளாக்க, அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள். இந்த தகவல் தனது தோழியான மடோனாவிற்கு தெரிய வர அந்த பெண்ணை பார்க்க செல்லும் மடோனா, விஜய் சேதுபதி அவளிடம் வீடியோ பேட்டி ஒன்றை எடுத்து வருகிறார்கள்.

    இதயைடுத்து தான் பணிபுரியும் தொலைக்காட்சியின் ஒரு நிகழ்ச்சியில், அந்த வீடியோவை வெளியிடுகின்றனர். இதனால் கடுப்பாகும் போஸ் வெங்கட் அந்த தொலைக்காட்சியின் நிறுவனரான அக்‌ஷதீப் சய்கலை தொடர்பு கொள்ள இருவருக்கும் இடையே சில ஒப்பந்தங்கள் பேசி அந்த செய்தியை மாற்றி வெளியிடுகின்றனர்.



    இதனையடுத்து, முதல்வன் பட பாணியில் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி ஒன்று நடக்கிறது. இதில் விஜய் சேதுபதி, போஸ் வெங்கட்டை பேட்டி எடுக்கிறார். அந்த பேட்டியில் அவருக்கு எதிரான கேள்விகளை கேட்கக் கூடாது என்றும், அவரது புகழ் பாடும் பேட்டியாக எடுக்க மேலிடம் உத்தரவு போடுகிறது. இந்நிலையில், அந்த பேட்டியை நேரிலையில் பார்த்த, விக்ராந்த், மற்றும் பாதிக்கப்பட்ட பெண் விஜய் சேதுபதியை தொடர்பு கொண்டு கதற, ஏற்கனவே நிர்வாகத்தின் மீது கடுப்பில் இருக்கும் விஜய் சேதுபதி, கோபத்தின் உச்சத்திற்கு செல்ல போஸ் வெங்கட்டிடம் சரமாரியாக கேள்விகளை பொறிந்து தள்ளுகிறார்.

    இதனையடுத்து அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப தொலைக்காட்சி நிர்வாகம் மறுப்பு தெரிவிக்கிறது. இதனையடுத்து, தனது வேலையை உதறிதள்ளும் விஜய் சேதுபதி, எந்த ஒரு பிரச்சனையையும் துணிச்சலுடன் சந்திக்கும் டி.ராஜேந்தர் நடத்தி வரும் ஒரு சிறிய சேனலில் சேருகிறார். அந்த சேனல் மூலம் போஸ் வெங்கட், அக்‌ஷதீப் செய்யும் தவறுகளை மக்களிடம் வெளிச்சம் போட்டு காட்டுகிறார். இதையடுத்து அவர்களை, தனது கவண் மூலம் எப்படி வீழ்த்தினர்? என்பது கவணின் மீதிக்கதை.



    வெகுநாட்களுக்கு பிறகு திரையில் காட்சியளித்துள்ள டி.ராஜேந்தர் தனக்கே உரிய பாணியில் கலக்கி இருக்கிறார். அவரது வசனங்களும், செய்கைகளும் பார்ப்பவர்களுக்கு உணர்ச்சியை தூண்டுவதுடன், ஆர்வத்தையும் கூட்டுகிறது. முதல்பாதியில் அவருக்கு குறைவான காட்சிகளே இருந்தாலும், இரண்டாவது பாதியில் திரையை கலக்கியதுடன் தான் வரும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். வெகுநாட்களுக்கு பிறகு திரையில் தோன்றினாலும், முந்தைய படங்களில் வருவது போல இப்படத்திலும் உணர்ச்சிகரமாக நடித்திருக்கிறார். குறிப்பாக அவரது காட்சிகளுக்கு விசில் பறக்கிறது.

    இப்படத்தில் விஜய் சேதுபதி கனமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். எப்போதும் போல அவருக்கே உரித்தான ஸ்டைலில், நடிப்பில் பாராட்டு பெறுகிறார். அவர் பேசும் வசனங்கள் ரசிக்கும்படியும், சிந்திக்கும்படியும் இருக்கிறது. கல்லூரி மாணவர், தொலைக்காட்சி நிருபர் மற்றும் சமூக ஆர்வலர் என மிரட்டியிருக்கிறார். குறிப்பாக பத்திரிக்கை நிருபராக இவரது தோற்றம் ரசிக்க வைக்கிறது.



    மீடியாவில் வேலை செய்யும் பெண்ணாக வரும் மடோனா செபாஸ்டியனும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கனமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் மடோனா நடிப்பில் ஒருபடி மேல சென்றுள்ளார். இப்படத்தில் அவரது நடிப்பு பேசுப்படியாக இருக்கிறது. விக்ராந்த் தனக்குரிய கதாபாத்திரத்தை உணர்ந்து செயல்பட்டிருக்கிறார். இப்படத்தில் அவரது கதாபாத்திரம் பேசும்படியாக உள்ளது. மேலும் அவரது கோபமும், உணர்ச்சியும் மக்களை உணர்ச்சிவசப்பட வைக்கும்படி உள்ளது. குறைவான நேரங்களில் வந்தாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் நின்றிருக்கிறார்.

    அயன் படத்திற்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் தலைகாட்டியுள்ள அக்‌ஷதீப் சய்கல் இப்படத்திலும் மிரட்டி இருக்கிறார். தொலைக்காட்சி நிறுவனராகவும், வில்லனாகவும் வலம் வரும் அவருக்கு, அந்த வேடம் கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. மேலும் போஸ் வெங்கட் அரசியல்வாதியாகவே வாழ்ந்திருக்கிறார். அரசியல் ரவுடியாக தனது மற்றொரு முகத்தை காட்டியிருப்பது காட்சிகளோடு ஒன்றியிருக்கிறது.



    சில மீடியாக்களில் தவறு நடக்கிறது என்பதை சுட்டிக்காட்டும் விதமாக இப்படத்தை இயக்கியிருக்கிறார். அதேசமயம் சமூகத்தின் மீது அக்கறை உள்ளவர்கள், உண்மைச் செய்திகளை கொடுத்து, அதே மீடியா மூலமே தவறுகளை சுட்டிக்காட்ட முடியும் என்பதையும், அதற்கு விடை காணமுடியும் என்பதையும் விளக்கியிருக்கும் கே.வி.ஆனந்தின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

    மேலும் வசனங்கள் அனைத்தும் ரசிக்கும்படியும், சிந்திக்கும்படியும் இருப்பது படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. கோ படத்திற்கு பிறகு, அவருக்கே உரித்தான பாணியில் திரைக்கதை அமைத்துள்ளது சிறப்பு. அதற்காக கபிலன் வைரமுத்துக்கு ஒரு பாராட்டுக்களை தெரிவிக்கலாம். விக்ராந்த், டி.ஆர். வரும் காட்சிகளை உணர்ச்சிகரமாக அமைத்தது படத்திற்கு மேலும் பலம்.

    தனக்குரிய தனித்துவமான இசையில் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் பாடல்கள் சரியான இடைவெளியில் அமைந்துள்ளது. குறிப்பாக "ஆக்ஸிஜன் தந்தாலே", "ஹேப்பி ஹேப்பி நியூ இயர்" உள்ளிட்ட பாடல்கள் ரசிக்கும்படி உள்ளது. பின்னணி இசை படத்திற்கு மேலும் பலத்தை கூட்டியிருக்கிறது.

    திரையில் ரசிக்க வைக்கும்படியான ஒளிப்பதிவை கொடுத்திருக்கும் அபிநந்தன் ராமானுஜத்தின் முயற்சிகளுக்கு பலன் கிடைத்துள்ளது. சிறப்பாக காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

    மொத்தத்தில் `கவண்' குறி தப்பாது.
    தாஸ் ராமசாமி இயக்கத்தில் நயன்தாரா, தம்பி ராமைய்யா நடிப்பில் திகில் பின்னணியில் உருவாகி உள்ள `டோரா' படத்தின் விமர்சனத்தை கீழே பார்ப்போம்.
    நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நயன்தாராவுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவரது தந்தை தம்பி ராமையா விரும்புகிறார். இதற்காக, குலதெய்வம் கோயிலுக்கு நயன்தாராவை அழைத்துச் சென்று வழிபட முடிவு செய்து, கால் டாக்சி நிறுவனம் நடத்தி வரும் பணக்கார தங்கையிடம் சென்று டாக்சியை இலவசமாக அனுப்புமாறு கேட்கிறார். பணக்கார திமிருடன் நடந்துகொள்ளும் தங்கை, அவர்களை அவமானப்படுத்தி அனுப்புகிறார்.

    அவமானத்தில் திரும்பும் நயன்தாராவும், தம்பி ராமையாவும் சொந்தமாக கால்டாக்சி நிறுவனம் தொடங்க முடிவெடுக்கிறார்கள். செகண்ட் ஹேண்டில் கார் பார்க்க செல்லும் அவர்களது கண்ணில் ஒரு பழங்காலத்து கார் ஒன்று தென்படவே, நயன்தாரா அதை வைத்து புதுமையான முறையில் விளம்பரம் செய்து சம்பாதிக்கலாம் என முடிவு செய்கிறார்.



    அந்த காரை வைத்துக்கொண்டு சிறியதாக கால் டாக்சி நிறுவனம் தொடங்குகிறார் நயன்தாரா. அவளது கால் டாக்சி நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்கள் குவியாவிட்டாலும், அவ்வப்போது ஆர்டர்கள் வருகிறது. அப்படி ஒருநாள், கொடைக்கானலுக்கு செல்ல வாடிக்கையாளர் ஒருவர் இவர்கள் நிறுவனத்தை நாடுகிறார். அப்போது, நயன்தாரா தனது காருக்கு ஒரு டிரைவரை போட்டு கொடைக்கானலுக்கு அனுப்பி வைக்கிறார்.

    கொடைக்கானலுக்கு செல்லும்போது, அங்கு வழியில் செல்லும் ஒரு நபரை பார்த்தவுடன், அந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தானாகவே சென்று அந்த நபரை துரத்துகிறது. ஆனால், அந்த நபரை பிடிக்கமுடியாமல் போனவுடன் அங்கேயே நின்றுவிடுகிறது. காரில் பயணம் செய்த அனைவரும் பதட்டத்தில், காரில் இருந்து இறங்கி ஓடிவிடுகிறார்கள்.



    இது நயன்தாராவுக்கு தெரியவே, தனது காரை மீட்பதற்காக கொடைக்கானல் போகிறார். கொடைக்கானலில் இருந்து தனது காரை ஊருக்கு எடுத்து வரும்போது, அதே நபர் மறுபடியும் குறுக்கிட, கார் நயன்தாராவின் கட்டுப்பாட்டை இழந்து அந்த நபரை துரத்தி கொல்கிறது.

    என்ன நடக்கிறது என்று தெரியாமல் ஒருநிமிடம் திகைத்து நிற்கும் நயன்தாரா, இதற்காக ஒரு சாமியாரை சந்திக்கிறார். அவர் காரில் ஒரு நாயின் ஆவி இருப்பதாகவும், அந்த ஆவி சிலபேரை கொல்ல துடிப்பதாகவும் கூறுகிறார். மேலும் அந்த நாய்க்கு தேவையான ஒன்று நயன்தாராவிடம் இருப்பதாகவும் கூறுகிறார்.



    இவ்வாறு சிக்கலில் மாட்டிக் கொண்ட நயன்தாரா அந்த பிரச்சனையில் இருந்து எப்படி மீண்டார்? அது கொலை செய்ய துடிக்கும் நபர்கள் யார்? நயன்தாராவை வைத்து ஏன் அந்த நபர்களை பழி வாங்குகிறது? என்பது படத்தின் மீதிக்கதை.

    நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாராவுக்கு இப்படம் நல்ல தீனியாக அமைந்துள்ளது. முதல் பாதியில் இவரது கதாபாத்திரம் காமெடியாக செல்கிறது. பிற்பாதியில், நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு கொடுத்திருக்கிறார் இயக்குனர். அதை சரியாக பயன்படுத்திக்கொண்டு தனது திறமையை நிரூபித்திருக்கிறார். தம்பி ராமையா உடனான காட்சிகளில் கலகலப்பான மகளாக வரும் நயன்தாரா, திகில் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.



    தம்பி ராமையா தனக்கே உரித்தான ஸ்டைலில் காமெடியில் கலக்கி இருக்கிறார். முதல் பாதி முழுவதும் காமெடியில் ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளது சிறப்பு. அவரது ஒவ்வொரு வசனங்களும், செய்கைகளும் ரசிக்கும்படி உள்ளது. தந்தை-மகள் பாசத்திலும் கலக்கியிருக்கிறார். போலீஸ் அதிகாரியாக வரும் ஹரிஷ் உத்தமனின் நடிப்பும் பிரமாதம். பிளாஸ்பேக்கில் வரும் சிறுமியின் நடிப்பும் சிறப்பு. இவர்களை தவிர படத்தில் மற்ற கதாபாத்திரங்கள் யாரும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. இருப்பினும், அவரவர் தங்கள் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.

    இயக்குநர் தாஸ் ராமசாமி தனது முதல் படத்திலேயே காமெடி கலந்த திகில் படத்தை கொடுத்திருப்பதற்காக அவரை பாராட்டலாம். முதல் பாதி காமெடியாக மெதுவாக சென்றாலும், பிற்பாதியில், திகில் கொடுத்து நம்மை பயமுறுத்திருக்கிறார். அந்த அளவுக்கு திரைக்கதையை விறுவிறுப்பாக கொடுத்திருக்கிறார். காரை வைத்துக் கொண்டு ஒரு புதுமையான கதையை சொல்ல முயற்சி செய்திருக்கிறார். அவருடைய முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. கார் தானாகவே இயங்குவது உள்ளிட்ட ஒருசில காட்சிகள் மட்டும் படத்தை ஒரு பேண்டஸி படமாக காண்பித்துள்ளது.



    படத்தின் பாடல்களும் நன்றாக உள்ளது. குறிப்பாக பிளாஸ்பேக்கில் வரும் பாடல் பார்க்கவும், கேட்கவும் இனிமையாக இருக்கிறது. பின்னணி இசையை பொறுத்தவரை விவேக் மெர்வின் மிரட்டியிருக்கிறார். காருக்கென்று தனியாக இவர் கொடுத்துள்ள தீம் மியூசிக் சபாஷ். தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு, திரையில் பிரமாண்டம் காட்டுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் நடக்கும் காட்சிகளை அவரது கேமரா கண்கள் அழகாக படம்பிடித்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘டோரா’ அனைவருக்கும் பிடித்தமானவள்.
    கார்த்திகேயன், ஷாரியா, இவன்ஸ்ரீ, ஜெகதீஷ் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    ஷாரியா தனது அண்ணன், அப்பாவுடன் வசித்து வருகிறார். இவருடைய அப்பா நேர்மையான போலீஸ் அதிகாரி. இந்நிலையில், ஷாரியாவின் அண்ணன் ஒரு விபத்தில் இறக்க, அவரது இறுதிஊர்வலத்தில் கலந்துகொள்ள வரும் ஷாரியா அண்ணனின் நண்பர்களான கார்த்திக்கேயன், இவன்ஸ்ரீ, ஜெகதீஷ் ஆகியோரின் நட்பு ஷாரியாவுக்கு கிடைக்கிறது. அன்றுமுதல், இவர்கள் நான்கு பேரும் நண்பர்களாகிறார்கள்.

    கார்த்திகேயன், ஷாரியாவுக்கு வேண்டிய உதவிகள் எல்லாம் செய்கிறார். கார்த்திகேயன், இவன்ஸ்ரீ, ஜெகதீஷ் மூன்று பேரும் தங்களது கைசெலவுக்காக அவ்வப்போது சிறுசிறு வழிப்பறி கொள்ளைகள் செய்து பிழைப்பை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் செய்யும் வேலை ஒருநாள் ஷாரியாவுக்கு தெரிய வருகிறது.



    உடனே, நண்பர்கள் தாங்கள் வழிப்பறி கொள்ளை செய்வதற்கான காரணத்தை ஷாரியாவுக்கு விளக்கிச்சொல்ல அதையும் அவர் நம்புகிறார். இந்நிலையில், வெளிநாடு செல்ல ஆசைப்படும் ஷாரியாவுக்கு போதிய பணம் இல்லாததால், இவர்களுடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபடுகிறார்.

    இந்நிலையில், இவர்களுக்கு பேங்கில் இருந்து ஒருவர் ரூ.5 லட்சம் எடுக்கப் போவதாக தெரிய வருகிறது. உடனே, நண்பர்கள் அனைவரும் அதை திருடுவதற்கான திட்டம் போடுகின்றனர். அதன்படி, அந்த பணத்தை அவரிடமிருந்து திருடிக் கொண்டு செல்லும்போது, கடைசியில் ஷாரியாவின் கைக்கு அந்த பணம் முழுவதும் கிடைக்கிறது.

    இந்நிலையில், போலீஸ்காரர் ஒருவர் ஷாரியாவை பின்தொடர, பதட்டத்தில் கையில் இருக்கும் பணப்பையை ஒரு காலி மைதானத்தில் போட்டுவிட்டு செல்கிறார். பின்னர், திரும்பி வந்து பார்க்கும்போது, அந்த பணப்பை காணாமல் போகிறது. உடனே, நண்பர்கள் அனைவரும் ஷாரியா மீது சந்தேகப்படுகிறார்கள்.

    அவர்களில் கார்த்திகேயன், ஷாரியாவிடம் இன்னும் ஒரு வாரத்தில் ரூ.5 லட்சம் பணத்தை எப்படியாவது திருப்பிக் கொடுக்கவேண்டும். இல்லையென்றால், பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்து அனுப்புகிறார்.



    ஷாரியாவும் என்னசெய்வதென்று தெரியாமல் வீட்டுக்கு வருகிறார். திருடு போன பணத்தை திருப்பி கொடுக்க ஷாரியா என்ன செய்தார்? நண்பர்களால் இவருக்கு என்ன நேர்ந்தது? கடைசியில் திருடு போன பணம் இவர்களுக்கு கிடைத்தா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.

    கதாநாயகன் கார்த்திகேயனுக்கு அதிகமான வசனங்கள் இல்லாவிட்டாலும், அவரது நடிப்பிலேயே வில்லத்தனம் கலந்து நடித்திருப்பது சிறப்பு. வில்லத்தனமான கதாபாத்திரத்தை இவர் ரொம்பவும் அழகாக ஏற்று நடித்திருக்கிறார். படம் முழுக்க Life is Good என்ற ஒரு வார்த்தையை அடிக்கடி உபயோகிக்கிறார். அவர், சொல்லுகிற இடம், சொல்லுகிற ஸ்டைல் எல்லாமே நன்றாகவே இருக்கிறது.

    நண்பர்களாக வரும் ஷாரியா, இவன்ஸ்ரீ, ஜெகதீஷ் ஆகியோரில், இவன்ஸ்ரீ சீரியசாக செய்யும் விஷயங்கள் எல்லாம் நமக்கு நகைச்சுவையை கொடுத்திருக்கிறார். ஷாரியா, வெகுளியான இளைஞன் எப்படி நடந்துகொள்வானோ அதற்கேற்ற நடிப்பை அழகாக பிரதிபலித்திருக்கிறார். தனது நடிப்பில் எதார்த்தம் மாறாமல் அழகாக நடித்திருக்கிறார். ஜெகதீஷும் தனது கதாபாத்திரத்திற்கேற்ற சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.



    படத்தில் நிறைய சஸ்பென்ஸ் காட்சிகள் உள்ளன. ஒரு கிரைம் கதையை விறுவிறுப்பாக கொண்டு போயிருக்கிறார் இயக்குனர் தினேஷ் செல்வராஜ். கிரைம் கதையில் கொஞ்சம் விறுவிறுப்பு கொடுத்து அனைவரும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.

    நவீன் மற்றும் பியோன் சரோவின் இசையில் கதையோடு ஒட்டிய ஒரேயொரு பாடல்தான். மற்றபடி, பின்னணி இசையில் கிரைம் கதைக்கு தேவையான விறுவிறுப்பை அழகாக கொடுத்திருக்கிறது. பகத்சிங் ஒளிப்பதிவில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். இன்றைக்கு உள்ள தொழில்நுட்பத்தோடு ஒப்பிட்டு பார்க்கும்போது, இந்த படம் பழைய படத்தை பார்ப்பதுபோன்ற ஒரு உணர்வை கொடுத்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ நல்லா இருக்கு.
    ×