search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    தமிழ் சினிமாவில் உருவாகியுள்ள `எக்ஸ் வீடியோஸ்
    X

    தமிழ் சினிமாவில் உருவாகியுள்ள `எக்ஸ் வீடியோஸ்'

    தமிழ் சினிமா நாளுக்கு நாள் அடுத்தடுத்த நிலைக்கு உயர்ந்து வரும் நிலையில், தமிழ் சினிமாவில் `எக்ஸ் வீடியோஸ்' படம் உருவாகி இருக்கிறது.
    தமிழ் சினிமாவில் படத்திற்கு பெயர் வைக்க பல இயக்குநர்கள் திணறி வருகின்றனர். இன்னும் சிலர், பழைய படங்களின் பெயர்களையே தற்போதைய படங்களுக்கும் வைத்துவிடுகின்றனர். ஆனால் அதில் முற்றிலும் மாறுபட்டு ஒரு சர்ச்சைக்குரிய பெயரை வைத்திருப்பதை கேட்டதுண்டா. அவ்வாறு தலைப்பு வைக்கப்பட்ட படம் தான் `எக்ஸ் வீடியோஸ்'.

    இதுகுறித்து இயக்குநர் கூறியதாவது, ஆமாம் இது ஆபாசப் படம் தான் என்று தைரியமாகக் கூறுகிறார் `எக்ஸ் வீடியோஸ்' படத்தின் இயக்குநர் சஜோ சுந்தர். மக்கள் இதை ஆபாசப் படம் என்றே நினைக்கவேண்டும் அதற்காகவே இப்படி பெயர் வைத்தோம். ஏனெனில் படம் அதை பற்றித்தான் பேசுகிறது.



    பாலியல் கல்வி இல்லாத நம் நாட்டில் பாலியல் சார்ந்த படம் எடுப்பதில் தவறில்லை. இந்த படத்தின் மூலம் சொல்ல வருவது, ஒரு ரகசியம் கேமராவில் பதிவு செய்யப்பட்டுவிட்டால் அது ரகசியம் இல்லை. அதை எவ்வளவு தான் மறைத்து வைத்துக் காப்பாற்றினாலும் ஒரு நாள் அது யார் மூலமாவது வெளி உலகத்துக்கு வந்தே தீரும் இதுவே படம் தரும் எச்சரிக்கை.

    இது சைபர் யுகம், கண்ணுக்குத் தெரியாத பிரம்மாண்ட உலகம் நமக்குத் தெரியாமல் இயங்கி வருகிறது. அது நம் கண்ணுக்குத் தெரியவில்லையே தவிர, நம்மை அது 24 மணி நேரமும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. அதுவும் அதன் கண்ணில் நமது அந்தரங்கம் சிக்கிக் கொண்டால் எல்லாமே பகிரங்கம் தான். அப்படி ஒரு வலையுலக ஆபத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் தான் `எக்ஸ் வீடியோஸ்'.

    இப்படத்தை சஜோ சுந்தர் இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் ஹரியின் உதவி இயக்குநர். நடிகர் பிரகாஷ் ராஜ், பொம்மரில்லு பாஸ்கர் ஆகியோரிடம் இணை இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.



    இப்படத்தை கலர் ஷேடோஸ் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் எஸ்.பிரகாஷ் தயாரித்துள்ளார்.

    ஆபாச இணைய தளங்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகளையும் அதனால் உண்டாகும் சமூகச் சிக்கலையும் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தான் இப்படம் உருவாகியிருக்கிறது.

    ஆபாசமாகத் தலைப்பு வைத்தது குறித்து சஜோ சுந்தர் தெரிவித்ததாவது, இது இளைஞர்களுக்கான படம், அவர்களின் பாலியல் தொடர்பான உளவியல் சிக்கல், எதிர்காலம் பற்றிப் பேசும் படம். குறிப்பாக இளம் பெண்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதே படத்தின் நோக்கம்.



    படத்தின் தலைப்பைக் கண்டு தவறாக கணிப்பவர்கள் படம் பார்த்த பின் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்வார்கள். ஏனெனில் இது இந்த உலகில் ரகசியம் என்று எதுவுமில்லை என எச்சரிக்கும் படமே. கதையின் இயல்பு தன்மைக்காக முற்றிலும் புதுமுகங்களின் நடிப்பில் படம் உருவாகியுள்ளது.

    சென்னை, பெங்களூர், மும்பை போன்ற இடங்களில் ஐம்பது நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படத்தில் பாடல் காட்சிகளோ சண்டைக் காட்சிகளோ கிடையாது. தமிழ், இந்தி என இரு மொழிப் படமாக இது உருவாகியுள்ளது. இப்படத்துக்கு வின்சென்ட் அமல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, மெட்ரோ புகழ் ஜோஹன் இசையமைத்துள்ளார். படம் வருகிற ஜூலை மாதம் வெளியாக இருக்கிறது.
    Next Story
    ×