பெண் சிங்கம் சாய் தன்ஷிகா.. 'யோகிடா' படம் எப்படி? - திரைவிமர்சனம்

டூப் இல்லாமல் நடித்திருக்கும் சண்டை காட்சிகளில் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.
பெண் சிங்கம் சாய் தன்ஷிகா.. 'யோகிடா' படம் எப்படி? - திரைவிமர்சனம்
Published on

நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டரான நாயகி சாய் தன்ஷிகா, அடிக்கடி டிரான்ஸ்பர் பெற்று வருகிறார். அந்த வகையில் சென்னை வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு வந்து சேருகிறார் சாய் தன்ஷிகா. அந்த பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்து கொலை, அடிதடி, போதை மருந்து கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வரும் தாதா கபீர் துஹான் சிங்குடன் தன்ஷிகாவுக்கு நேரடி மோதல் உருவாகிறது.

மத்திய அமைச்சராக இருக்கும் அண்ணன் ஷாயாஜி ஷிண்டேவின் அரசியல் ஆதரவுடன் வில்லன் கபீர் சிங் அராஜகம் செய்து வருகிறார்.

இறுதியில் கபீர் சிங் செய்யும் அராஜகங்களுக்கு தன்ஷிகா எப்படி பதிலடி கொடுத்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகியாக நடித்திருக்கும் சாய் தன்ஷிகா அதிரடி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். கிராப் ஹேர்ஸ்டைல், மிடுக்கான தோற்றம், ஆக்ஷன் காட்சிகளில் காட்டும் உடல் மொழி ஆகியவை கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கின்றன. குறிப்பாக, டூப் இல்லாமல் நடித்திருக்கும் சண்டை காட்சிகளில் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.

விஜயசாந்தி படங்களை நினைவூட்டும் வகையில், முழுக்க பெண் மைய ஆக்ஷன் படமாக யோகிடாவை உருவாக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் கவுதம் கிருஷ்ணா. ஆனால், கதையும் திரைக்கதையும் புதுமை இல்லாத வழக்கமான போலீஸ்–வில்லன் பாதையிலேயே பயணிக்கிறது. தாதா வில்லன், அரசியல் ஆதரவு, நேர்மையான அதிகாரிக்கு எதிரான சதிகள் என ஏற்கனவே பல படங்களில் பார்த்த அம்சங்களே அதிகம் இடம்பெறுகின்றன. வில்லன் கபீர் சிங், ஷாயாஜி ஷிண்டே மற்றும் பல கதாபாத்திரங்களுக்கு எதிர்பார்த்த அளவு அழுத்தமான காட்சிகள் அமையவில்லை.

பூபதியின் ஒளிப்பதிவு மற்றும் கணேஷ் குமாரின் சண்டை அமைப்பு படத்திற்கு பலம் சேர்க்கின்றன. தீபக் தேவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

மாலைமலர் ரேட்டிங்: 2 / 5

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com