

ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜி.ஆர். மதன்குமார் தயாரிப்பில் கருணாநிதி இயக்கத்தில் கிஷோர்- TTF வாசன், அபிராமி, குஷிதா ஆகியோரின் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் "ஐபிஎல்".
பிச்சு மணி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்திருக்கிறார். திரில்லராக தயாராகி இருக்கும் இப்படம் வரும் 28ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், இத்திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் முத்திரை பதித்த இயக்குநர் கே. பாக்யராஜ் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, படக்குழுவினருடன் இயக்குநர்கள் ஆர். கே. செல்வமணி, ஆர். வி. உதயகுமார், பேரரசு ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.
இயக்குநர் ஆர். கே. செல்வமணி பேசுகையில்," நாயகன் டிடிஎஃப் வாசன் என்னிடம் என்னை மெருகேற்றிக் கொள்ள இன்னும் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டார். அவரிடம் எதையும் கற்றுக் கொள்ளாதே. நீ இப்போது எப்படி இருக்கிறாயோ, அப்படியே இரு. அனைவருடனும் நட்பாக இரு. ஹீரோ ஆனதுக்கு பிறகு மாறி விடாதே. இயல்பாக இருந்தால் போதும். மற்றவை அனைத்தும் தானாக நடக்கும். வாய்ப்புகள் வரும் போதும், வாய்ப்புகள் வழங்கும் போதும் தயாரிப்பாளர்களிடம் எவ்வளவு தூரம் நீங்கள் நட்பாக இருக்கிறீர்களோ, அதுவே உங்களை காப்பாற்றும்" என்றார்.