என் மலர்
சினிமா செய்திகள்

எம்.ஆர். ராதாவுக்கு ரத்தக் கண்ணீர், ராதிகாவுக்கு தாய் கிழவி - நடிகர் சிவகுமார்
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள புதிய படம் 'தாய் கிழவி'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இந்தப் படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், தாய் கிழவி படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வசூல் ரீதியிலும் இந்தப் படம் வெற்றி பெற்றுள்ளது. தாய் கிழவி படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள், பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்த வரிசையில், நடிகர் சிவகுமார் தாய் கிழவி படத்தை பார்த்துவிட்டு நடிகை ராதிகாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து ராதிகா சரத்குமார் X தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "சிவகுமார் அண்ணா, நன்றி" என குறிப்பிட்டுள்ளார். இத்துடன் அவர் நடிகர் சிவகுமாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் சிவகுமார் கைப்பட எழுதிக் கொடுத்த பாராட்டையும் புகைப்படமாக பதிவேற்றம் செய்துள்ளார்.
அதன்படி சிவகுமார் எழுதி கொடுத்த பாராட்டில், "நடிக வேள் எம்.ஆர். ராதாவுக்கு ரத்தக் கண்ணீர், அவர் மகள் ராதிகாவுக்கு தாய் கிழவி. வாழ்த்துக்களுடன் சிவகுமார், சூர்யா, கார்த்தி, பிருந்தா குடும்பத்தினர்," என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.






