search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    விசாகன், சவுந்தர்யா ரஜினிகாந்த்
    X
    விசாகன், சவுந்தர்யா ரஜினிகாந்த்

    லண்டனில் ரஜினி மருமகனின் பாஸ்போர்ட் திருட்டு

    லண்டனில் நடிகர் ரஜினிகாந்தின் மருமகன் விசாகனின் பாஸ்போர்ட் மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா. முதல் திருமணம் விவாகரத்து ஆன பின், கோவையை சேர்ந்த தொழில் அதிபர் வணங்காமுடியின் மகன் விசாகன் என்பவருக்கும் சவுந்தர்யாவுக்கும் சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் திருமணம் நடைபெற்றது. விசாகனுக்கு வெளிநாடுகளிலும் தொழில்கள் இருக்கின்றன. அவற்றை கவனிக்க அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வருவார். சவுந்தர்யா தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் கிராபிக்ஸ் தொழில்நுட்ப கலைஞராகவும் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.

    2 நாட்களுக்கு முன்பு சவுந்தர்யாவும் விசாகனும் லண்டன் நகரத்துக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தார்கள். அதற்காக சென்னையிலிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் லண்டன் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்தனர். பிசினஸ் கிளாஸ் வகுப்பில் இருவருக்கும் டிக்கெட் புக் செய்யப்பட்டு பயணம் மேற்கொண்டனர். சென்னையில் இருந்து கிளம்பிய விமானம் லண்டன் ஹீப்ரு விமான நிலையத்தை அடைந்தது.

    விசாகன், சவுந்தர்யா ரஜினிகாந்த்

    விமானத்தில் இருந்து விசாகன், தன் மனைவி சவுந்தர்யாவுடன் இறங்கி விமான நிலையத்துக்குள் வந்தார். எமிரேட்ஸ் சேவை மையத்தில் பாஸ்போர்ட் அடங்கிய பையை விசாகன் எடுக்க முயன்றபோது, பாஸ்போர்ட் இருந்த பிரீப் கேஸ் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் எமிரேட்ஸ் விமானத்தின் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அவர்கள் விமானத்தில் தேடினார்கள். விமானத்தில் அந்த பை இல்லை.

    பாஸ்போர்ட்டுடன் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலரும் அந்த பையில் இருந்தது. பாஸ்போர்ட் இல்லாமல் விமான நிலையத்தை விட்டு விசாகன்-சவுந்தர்யா இருவரும் வெளியேற முடியாததால் விமான நிலைய அதிகாரிகளிடம் முறையிட்டனர். அவர்களும் புகாரை பதிவு செய்துகொண்டு விமான நிலையத்தில் உள்ள ஓய்வறையில் இருவரையும் தங்க வைத்தனர். இந்த தகவல் உடனடியாக இந்திய தூதரகத்துக்குத் தெரிவிக்கப்பட்டது.

    விசாகன், சவுந்தர்யா ரஜினிகாந்த்

    தூதரக அதிகாரிகள் வந்து இருவரிமும் விசாரித்தபோதுதான் விமான நிலையத்தில் சிக்கிக் கொண்டிருப்பது நடிகர் ரஜினியின் மகள், மருமகன் என்பது தெரிய வந்தது. உடனடியாக டூப்ளிகேட் பாஸ்போர்ட் எடுக்கப்பட்டு விமான நிலையத்தில் என்ட்ரி போடப்பட்டு இருவரும் வெளியே வந்தனர். தன் மகள் லண்டன் விமான நிலையத்தில் சிக்கிய தகவல் ரஜினிக்கு தெரிந்து, அவரும் தனக்கு வேண்டிய நண்பர்களை தொடர்புகொண்டு உதவி செய்ய கோரினார். விசாகன் அளித்த புகாரை அடிப்படையாக வைத்து அவருடைய கைப்பையை திருடியவர் யார் என்று சி.சி.டி.வி. கேமரா மூலம் லண்டன் காவல்துறை ஆராய்ந்து வருகிறது.
    Next Story
    ×