என் மலர்tooltip icon

    சினி வரலாறு

    தன்னுடைய முதல் படமான ``16 வயதினிலே'' படத்தை விஜயகுமார் பார்க்க வராததால், பாரதிராஜா கோபம் கொண்டார். ``தன் படங்களில் நடிக்க அவரை அழைப்பதில்லை'' என்று முடிவு செய்தார்.
    தன்னுடைய முதல் படமான ``16 வயதினிலே'' படத்தை விஜயகுமார் பார்க்க வராததால், பாரதிராஜா கோபம் கொண்டார்.  ``தன் படங்களில் நடிக்க அவரை அழைப்பதில்லை'' என்று முடிவு செய்தார்.

    ஆனாலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாரதிராஜா இயக்கிய `கிழக்குச்சீமையிலே' படத்தில் விஜயகுமாரை நடிக்க வைக்க வேண்டிய கட்டாயம் பாரதிராஜாவுக்கு ஏற்பட்டது.

    பாரதிராஜாவுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி நடிகர் விஜயகுமார் கூறியதாவது:-

    ``ஜானகி சபதம் படத்தில் அசோசியேட்டாக பணியாற்றிய போதே பாரதிராஜாவின் திறமையை தெரிந்து கொண்டேன். எனக்கும் `வெண்ணிற ஆடை' நிர்மலாவுக்குமான பாடல் காட்சியை எப்படி எப்படி எடுத்தால் சிறப்பாக அமையும் என்று பாரதிராஜா விலாவாரியாக என்னிடம் விவரித்தபோது, ``இவர் சினிமாவில் உயர்ந்த இடத்தைப் பிடிப்பார்'' என்பதை உணர்ந்து கொண்டேன்.

    படத்தின் தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி.யிடம், பாடல் காட்சி பற்றிய பாரதிராஜாவின் அற்புதமான கற்பனை பற்றி நான் கூறியபோது அவரும் ஆச்சரியப்பட்டார். அப்போது நான் பிஸியாக இருந்த நிலையிலும், ``மறுபடியும் அந்தப் பாடல் காட்சியை எடுப்பதாக இருந்தால் கால்ஷீட் தருகிறேன். அதோடு பாடல் காட்சிக்கு தேவையான பிலிம் செலவையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்'' என்று கே.ஆர்.ஜி.யிடம் கூறினேன்.

    ஆனால் கே.ஆர்.ஜி., அதற்கு உடன்படவில்லை ``மறுபடியும் படப்பிடிப்பு நடத்த நேரம் இல்லை'' என்று கூறி விட்டார்.

    அந்தப் படம் ரிலீசான ஒரு சில மாதங்களில், `16 வயதினிலே' படத்தை பாரதிராஜா இயக்குவதாக செய்திகள் வந்தன. நான் குடும்பத்துடன் தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் குடியிருந்து வந்தேன். பாரதிராஜாவும் அதே எல்லையம்மன் காலனியில்தான் தன் குடும்பத்தை குடி வைத்திருந்தார். நான் படப்பிடிப்புக்கு காரில் புறப்படும்போதோ, இரவில் திரும்பி வரும்போதோ பெரும்பாலும் பாரதி என் பார்வையில் படுவார். ஒரு சில வினாடிகள் நலம் விசாரித்துக் கொள்வோம்.

    இப்படி நான் பிஸியாக படங்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில், ஒருநாள் காலையில் படப்பிடிப்புக்கு புறப்பட்டேன். கார் புறப்பட்டு தெருமுனையைக் கடந்த போது திடீரென காரை கைகாட்டி நிறுத்தச் சொன்னார், பாரதி.

    கார் நின்றதும், ``என்ன பாரதி? என்ன விஷயம்?'' என்று கேட்டபடி இறங்கினேன்.

    ``16 வயதினிலே என்று ஒரு படம் இயக்கியிருக்கிறேன். இன்று மாலை படத்தின் சிறப்புக் காட்சி இருக்கிறது. அவசியம் நீங்கள் வந்து படத்தை பார்த்து கருத்து சொல்ல வேண்டும்'' என்றார், பாரதி.

    நான் அவரிடம், ``படப்பிடிப்பு சீக்கிரம் முடிந்து விட்டால், நிச்சயம் வந்து விடுவேன். தவிர்க்க முடியாமல் படப்பிடிப்பு நீண்டு போனால் மட்டும் வர முடியாமல் போய் விடும், எனவே, வர முடியாவிட்டால் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள்'' என்று சொன்னேன்.

    ஆனால், சொல்லி வைத்த மாதிரி அன்றைய படப்பிடிப்பு இரவு 9 மணி வரை நீண்டு விட்டது. இதனால் பாரதிராஜா படத்தின் `பிரிவிï' காட்சிக்கு போக முடியவில்லை.

    அதற்குப் பிறகு அந்த விஷயத்தை நான் மறந்து விட்டேன். ஆனால் பாரதிராஜா மறக்காமல் இருந்திருக்கிறார். 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு மறுமலர்ச்சியையும், கதைப்புரட்சியையும் உருவாக்கி, மிகப் பெரிய இயக்குனர் என்ற அந்தஸ்துக்கு வந்து விட்டார். தொடர்ந்து `கிழக்கே போகும் ரெயில்'', ``சிகப்பு ரோஜாக்கள்'', ``நிறம் மாறாத பூக்கள்'' என்று, அவர் இயக்கத்தில் வெளி வந்த எல்லாமே வெற்றிப் படங்களாயின.

    நானும் அவர் வளர்ச்சியில் பெருமைப்பட்டேன். நான் பிஸியாக இருந்ததால் அவர் படங்களில் நடிக்க என்னை அழைக்காததை ஒரு விஷயமாகவும் எடுத்துக் கொள்ளவில்லை.

    இப்படி வருஷங்கள் ஓடிக் கொண்டிருந்த நேரத்தில் தயாரிப்பாளர் `கலைப்புலி' தாணு சார், பாரதிராஜா இயக்கத்தில் ``கிழக்குச் சீமையிலே'' என்ற படத்தை தயாரிக்கவிருந்தார். அண்ணன் - தங்கையின் பாசப் பிணைப்பு தான் கதையின் முடிச்சு என்பதால் அண்ணன்- தங்கை கேரக்டர்களில் யார் யாரைப் போடலாம் என்று தாணு சார் பாரதிராஜாவிடம் ஆலோசித்திருக்கிறார்.

    தங்கை கேரக்டரில் நடிக்க ராதிகா முடிவானார்.

    இந்நிலையில், `கலைப்புலி' தாணு சாரிடம் இருந்து எனக்கு போன் வந்தது. `கிழக்குச் சீமையிலே' என்று ஒரு படம் தயாரிக்கிறேன், பாரதிராஜா டைரக்டு செய்கிறார். அண்ணன்- தங்கை இடையேயான அளப்பரிய பாசம்தான் கதை. அண்ணன் கேரக்டர் சிவாஜி சார் பண்ணக்கூடிய அளவுக்கு வலுவானது. நீங்கள் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று பாரதிராஜாவிடம் சொன்னேன். அவரோ ``முடியாது. நான் இயக்கும் படங்களில் அவரைப் போடுவதில்லை'' என்று கூறி விட்டார். காரணம் கேட்டேன். அதற்கு அவர், ``நான் முதன்முதலாக இயக்கிய ``16 வயதினிலே' படத்தின் `பிரிவிï' காட்சியை பார்க்க  வருந்தி அழைத்தும் வராமல் இருந்து விட்டார். அப்போதே நான் இயக்கும் படங்களில் அவரை நடிக்க வைக்கக்கூடாது என்று தீர்மானித்து விட்டேன்'' என்றார்.

    பாரதிராஜா என்ற பெரிய கலைஞனுக்குள் இப்படியொரு குழந்தையா? எனக்குள் அந்த நேரத்தில் ஆச்சரியம் தான் தலைதூக்கியது. ``நானே போய் பாரதியை பார்த்து பேசுகிறேன் சார்!'' என்று தாணுவிடம் கூறி விட்டேன்.

    நேராக பாரதிராஜா வீட்டுக்கு போனேன். என்னைப் பார்த்ததும் அவருக்கு புரிந்து விட்டது. என்றாலும் இயல்பாக வரவேற்றுப் பேசினார்.

    ``ஒரு பிஸி நடிகரின் அன்றாட நாட்கள் கூட அவனுக்கு சொந்தமில்லை என்பதை உங்கள் திரைவாழ்விலும் பார்த்திருப்பீர்களே'' என்று பேச்சின் இடையே கூறினேன். பாரதியிடம் நெகிழ்ச்சி தெரிந்தது. `கிழக்குச் சீமையிலே' படத்தில் நான் அண்ணன் ஆனது இப்படித்தான். அண்ணன்- தங்கை பாசத்தை மையமாக கொண்ட அந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது.''

    இவ்வாறு கூறினார், விஜயகுமார்.

    பாரதிராஜா விஜயகுமாரை இத்தோடு விட்டு விடவில்லை. அடுத்து அவர் இயக்கிய ``அந்தி மந்தாரை'' படத்திலும் அவரை நடிக்க வைத்தார். சிறந்த படத்துக்கான மத்திய அரசு விருது அப்படத்துக்கு கிடைத்தது. தமிழக அரசு அவருக்கு சிறந்த நடிகருக்கான சிறப்புப் பரிசை வழங்கி கவுரவப்படுத்தியது.

    ஆனாலும் விஜயகுமாருக்கு மத்திய அரசின் சிறந்த நடிகர் விருது கிடைக்காததில் பாரதிராஜாவுக்கு ரொம்பவும் வருத்தம்.

    அதுபற்றி விஜயகுமார் கூறியதாவது:-

    ``மதுரையில் நடந்த படவிழாவில் எனக்கு மத்திய அரசின் விருது கிடைக்காத வேதனையை பாரதிராஜா பகிர்ந்து கொண்டார். ``இந்தப் படத்துக்கு மத்திய அரசு விருது கிடைத்த மாதிரி, படத்தில் அற்புதமாக நடித்த விஜயகுமாருக்கும் விருது கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அந்த வாய்ப்பு நழுவிப் போய் விட்டது. என்றாலும் நிச்சயம் என் வாழ்நாளில் நான் இயக்கி அவர் நடிக்கும் படத்தில் அவருக்கு தேசிய விருது பெற்றுத் தந்தே தீருவேன்'' என்று உணர்ச்சிமயமாய் பேசினார்.

    பாரதிராஜா என் நடிப்பு மீது வைத்த இந்த நம்பிக்கையை விடவா எனக்கு விருது பெரிது? அப்போதே தேசிய விருது பெற்றதை விட அதிக சந்தோஷம் அடைந்தேன்''

    இவ்வாறு விஜயகுமார் கூறினார். 
    தொடர்ந்து 3 ஆண்டுகள் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த விஜயகுமார், ``அக்னி நட்சத்திரம்'' படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றார். இதன் மூலம் திரை உலகில் தனது 2-வது ரவுண்டை வெற்றிகரமாகத் தொடங்கினார், விஜயகுமார்.
    தொடர்ந்து 3 ஆண்டுகள் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த விஜயகுமார், ``அக்னி நட்சத்திரம்'' படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றார். இதன் மூலம் திரை உலகில் தனது 2-வது ரவுண்டை வெற்றிகரமாகத் தொடங்கினார், விஜயகுமார்.

    ``கதாநாயகனாக நடித்த நீங்கள் வில்லனாக நடிக்கத்தான் வேண்டுமா?'' என்று மதுரை ரசிகர்கள் கேட்டதால், படங்களில் நடிப்பதை நிறுத்தினார், விஜயகுமார். ஆனால், ஒரு திறமையான நடிகர் திரையுலகில் இருந்து ஒதுங்கி இருப்பதை தவிர்க்கும் விதத்தில் மீண்டும் அவரை `அக்னி நட்சத்திரம்' படத்தில் நடிக்க அழைப்பு விடுத்தார், மணிரத்னம்.

    ஒரு அப்பாவின் இரண்டு மனைவிகளுக்கு பிறந்த 2 மகன்களும் ஒருவரை மற்றவர் சந்திக்கும் போதெல்லாம் அக்னி நட்சத்திரமாக உரசிக் கொள்வார்கள். இந்த 2 மகன்களின் உணர்வுகளையும் அன்பால் கட்டுப்படுத்தும் அப்பா கேரக்டரில் விஜயகுமார் பிரமாதப்படுத்தியிருந்தார். படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

    இந்த படத்தில் நடிக்க நேர்ந்த அனுபவம் குறித்து விஜயகுமார் கூறியதாவது:-

    சினிமாவில் நடிப்பதில்லை என்று முடிவெடுத்ததும் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மஞ்சுளா பெயரில் ஒரு சைவ உணவகம் தொடங்கி நடத்தினோம். மூன்று வருடங்களுக்குள் மிகச்சிறந்த உணவகமாக அது வளர்ந்து வந்த நேரத்தில் சென்னைக்கு ஒரு வேலையாக வரவேண்டியிருந்தது. இங்கே வந்தபோதுதான் மீண்டும் படத்தில் நடிக்கும் அழைப்பு தேடி வந்து விட்டது.

    ``பட அதிபர், ஜீ.வி. என் நண்பர். அவர் தனது தம்பி மணிரத்னம் இயக்கத்தில் `நாயகன்' படத்தை எடுத்தபோதே அந்தப் படம் விஷயமாக பேசிக் கொண்டிருப்போம். நாயகன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதோடு, படத்தின் ஒட்டுமொத்த டீமும் புகழ் பெற்றது.

    இதே ïனிட் அடுத்த `அக்னி நட்சத்திரம்' படத்தை ஆரம்பிக்கும்போது, ஒட்டுமொத்த கதையையும் தூக்கி நிறுத்தும் அந்த `அப்பா' கேரக்டரில் யாரைப் போடலாம் என்று யோசித்திருக்கிறார்கள். டைரக்டர் கே.சுபாஷ் அப்போது மணிரத்னத்திடம் அசோசியேட் இயக்குனராக இருந்தார். அவர் ஒருநாள் என்னை இந்தப் பட விஷயமாக சந்தித்து பேசினார்.

    ``படத்தின் முதுகெலும்பாக விளங்கக் கூடிய அந்த அப்பா கேரக்டரில் நடிகர் திலகம் சிவாஜி சாரை போடலாமா என்று யோசித்தோம். சிவாஜி சார் நடிக்கும்போது அவருக்கே உரிய அற்புத நடிப்பாற்றல் வெளிப்பட்டு படத்தையும் தாண்டி அவர்தான் நிற்பார். இந்தப் படத்தை பொறுத்தவரையில், படம் பேசப்படும். அதே நேரத்தில் அந்த அப்பா கேரக்டரும் பேசப்பட வேண்டும். `அப்படி ஒரு அப்பா'வுக்கு யோசித்ததில் எங்களுக்கு சட்டென நினைவுக்கு வந்தவர் நீங்கள்தான். எனவே மறுக்காமல் நீங்கள் அந்த கேரக்டரில் நடிக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்.

    நான் அவரிடம், ``நான் நடிப்பில் இருந்து விடுபட்டு 3 வருஷம் ஆகி விட்டது. உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முடியாத நிலையில் இருக்கிறேன்'' என்று சொன்னேன்.

    அவரோ விடவில்லை. ``சார்! எங்களுக்காக இந்த ஒரு படத்தில் மட்டுமாவது நடியுங்கள். இந்த கேரக்டருக்கு உங்களைத் தவிர வேறு யாரையும் எங்களால் யோசிக்க முடியவில்லை'' என்றார், விடாப்பிடியாக.

    சினிமாவில் வழக்கமாக இரண்டு பெண்டாட்டிக்காரர் கதை என்றால், இரண்டு பெண்டாட்டிகளுக்கு இடையே மாட்டிக் கொள்ளும் கணவர் கேரக்டரை நகைச்சுவையாகவே சித்தரிப்பார்கள். மனைவியர் என்ன சொன்னாலும் அதற்கு `ஆமாம்... ஆமாம்' சொல்கிற கணவராக இவர்கள் ரசிகர்களை சிரிக்க வைப்பார்கள்.

    ஆனால் மணிரத்னம் என்னிடம் அந்த அப்பா கேரக்டரை விவரித்தபோது நிஜமாகவே பிரமிப்பு ஏற்பட்டது. `இந்த கேரக்டரையா விட இருந்தோம்?' என்கிற சிந்தனையை இந்த கேரக்டர் எனக்குள் ஏற்படுத்தி விட்டது.

    படம் ரிலீசான போது, என்னைப் பாராட்டாதவர் கள் இல்லை. குறிப்பாக அந்த அப்பா கேரக்டரில் நடிக்கவில்லை; `வாழ்ந்த மாதிரி' இருக்கிறது என்று பாராட்டியவர்கள் அதிகம். இந்த படத்துக்குப் பிறகு நான் மீண்டும் படங்களில் பிஸியாகி விட்டேன்.''

    இவ்வாறு விஜயகுமார் கூறினார்.

    டைரக்டர் அவினாசிமணி இயக்கத்தில் `ஜானகி சபதம்' என்ற படத்தில் நடிகை கே.ஆர்.விஜயா ஜோடியாக விஜயகுமார் நடித்தார்.

    அந்தப் படத்தில் அவினாசிமணியின் உதவி யாளராக ஓடியாடி வேலைபார்த்த இளைஞரை விஜயகுமாருக்கு ரொம்பவே பிடித்துப் போயிற்று. சினிமாவில் இப்படி அக்கறையாய் தொழில் செய்யும் இளைஞர்கள்தான் பின்னாளில் தங்கள் திறமை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கும் நேரத்தில் சிகரம் தொடுவார்கள்.

    விஜயகுமார் இப்படி வியந்து பார்த்த அந்த உதவி இயக்குனர் வேறு யாருமல்ல; பாரதிராஜாதான்!

    பாரதிராஜாவுடன் அந்தப் படத்தில் விஜயகுமாருக்கு வித்தியாசமான ஒரு அனுபவம் கிடைத்தது. அதுபற்றி விஜயகுமார் கூறுகிறார்:

    ``ஜானகி சபதம் படத்தில் எனக்கும், நிர்மலாவுக்கும் ஒரு பாடல் காட்சி. இந்த பாடல் காட்சியை படமாக்கும் பொறுப்பை டைரக்டர் அவினாசிமணி, பாரதிராஜாவிடம் ஒப்படைத்திருந்தார். பாடல் காட்சி படமாக்கப்படுவதற்கு முன்பு, பாரதிராஜா என்னிடம் ``இந்தப் பாடலை இந்த மாதிரியான சூழ்நிலையில் எடுத்தால் பிரமாதமாக இருக்கும்'' என்றார்.

    எதிர்காலத்தில் அவர் பெரிய இயக்குனராக வருவார் என்பதை அப்போதே தெரிந்து கொண்டேன். 
    நடிகர் விஜயகுமார் புகழின் உச்சியில் இருந்தபோது நடிகை மஞ்சுளாவை திடீர் திருமணம் செய்து கொண்டார்.
    நடிகர் விஜயகுமார் புகழின் உச்சியில் இருந்தபோது நடிகை மஞ்சுளாவை திடீர் திருமணம் செய்து கொண்டார்.

    விஜயகுமார், அப்போது மிகவும் `பிசி'யான நட்சத்திரம். இரவும் பகலுமாக படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். சில நாட்கள் வீட்டுக்கே போக முடியாத அளவுக்கு ஸ்டூடியோவிலேயே குட்டித் தூக்கம் போட்டு விட்டு, அடுத்த படப்பிடிப்புக்கு போய் விடுவார்.

    சொந்த ஊரில் இருந்து மனைவி முத்துக்கண்ணுவை அழைத்து வந்து விட்டார். 1970-ல் மகள் கவிதா, 1973-ல் அடுத்த மகள் அனிதா, 1976-ல் மகன் அருண்குமார் என மூன்று வாரிசுகள்.

    1976-ல் ஏ.பீம்சிங் டைரக்ஷனில் ``உன்னிடம் மயங்குகிறேன்' படத்தில் நடித்த போதுதான் நடிகை மஞ்சுளாவையும் திருமணம் செய்து கொண்டார். அந்தப் படத்தில் நடிகை மஞ்சுளா விஜயகுமாரின் ஜோடியாக நடித்தார். படப்பிடிப்பு இடைவேளையில் அவர்கள் பொதுவான விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தபோதுதான் எதிர்பாராமல் நிகழ்ந்தது அந்த கல்யாணத் திருப்பம்.

    அதுபற்றி விஜயகுமார் கூறுகிறார்.

    ``தயாரிப்பாளர் ராஜ்கண்ணுவின் சகோதரர்தான் ``உன்னிடம் மயங்குகிறேன்'' படத்தின் தயாரிப்பாளர். இவர் ஏற்கனவே ``ஆசை 60 நாள்'' படத்தை தயாரித்தவர். ``உன்னிடம் மயங்குகிறேன்'' படத்தின் கதாநாயகியாக மஞ்சுளாவை `புக்' செய்திருந்தார். நான் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தேன்.

    மஞ்சுளா அப்போது தெலுங்கிலும் பிரபலமாக இருந்தார். தெலுங்கின் முன்னணி நடிகர்கள் நாகேஸ்வரராவ், என்.டி.ராமராவ், சோபன்பாபு என மாற்றி மாற்றி நடித்துக் கொண்டிருந்தார். தமிழில் இந்தப் படத்தில் நடித்தபோது `லஞ்ச் பிரேக்'கில், சின்னச்சின்ன இடைவேளைகளில் ஏதாவது பேசிக்கொண்டிருப்போம். பேச்சு பொதுவாக இருக்கும். பல நேரங்களில் சுவராசியமாக எங்கள் உரையாடல் போய்க் கொண்டிருக்கும்.

    இப்படித்தான் ஒரு நாள் பேசிக் கொண்டிருக்கும் போது, திடீரென மஞ்சுளாவிடம், ``மஞ்சு! உங்களை நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். நீங்க என்ன சொல்கிறீங்க?'' என்று கேட்டு விட்டேன்.

    எதிர்பாராத அந்தக் கேள்வியில், மஞ்சுளாவும் திடுக்கிட்டுப் போனது அவரது முகபாவத்தில் தெரிந்தது.

    பொதுவாகவே, உள்மனதின் ஆழத்தில் நம்மையும் அறியாமல் சில விஷயங்கள் புதையுண்டு போயிருக்கும். மஞ்சுளாவிடம் பேசிப்பழக ஆரம்பித்த இந்த சில நாட்களில் அவரைப் பற்றி எண்ணங்கள் காதலாக மாறியிருந்தன.

    அதுதான் சட்டென வார்த்தைகளில் வெளிப்பட்டு விட்டது.

    என் கேள்விக்கு பதிலை மஞ்சுளாவின் அதிர்ச்சி முகமே எனக்கு சொல்லிவிட்டது. அவர் பதிலாகக் கூட எதுவும் சொல்லவில்லை.

    மறுநாள் எனக்கு மதியம் 2 மணிக்குத்தான் படப்பிடிப்பு. செட்டுக்கு வந்தபோது அங்கே மஞ்சுளா ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்தார். காட்சியை முடித்து விட்டு வந்தவரிடம் ``நேற்று நான் சொன்னதை யோசித்தீர்களா? பதில் ஒன்றும் சொல்ல வில்லையே'' என்றேன் மறுபடியும்.

    இப்போது மஞ்சுளாவின் முகம் எனக்கு பதில் சொல்லத் தயங்கும் `தர்மசங்கடமான' நிலையை உணர்த்தியது. மெதுவாக என்னைப் பார்த்தவர், ``யோசித்து சொல்கிறேன்''  என்றார். பிறகு அவரே, ``இந்த விஷயத்தில் நானாக எந்த முடிவும் எடுக்க முடியாது. அப்பா- அம்மாவிடமும் கலந்து பேச வேண்டும்'' என்றார்.

    அடுத்தடுத்து வந்த இரண்டொரு நாட்களில் மஞ்சுளாவின் பெற்றோரை சந்தித்தேன். அவர்களோ, ``எங்கள் பெண் விருப்பம் எதுவோ, அதுவே எங்கள் விருப்பமும். உங்கள் விருப்பம் பற்றி மஞ்சுளா எங்களிடம் சொன்னாள். மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசியது எங்களுக்கும் பிடித்திருக்கிறது. எனவே திருமண விஷயத்தில் எங்களுக்கும் சம்மதமே'' என்றனர்.

    திருமணத்தை எளிமையாக நடத்தினோம். திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதை படிப்படியாக குறைத்துக் கொண்டார் மஞ்சுளா.

    இவ்வாறு விஜயகுமார் கூறினார்.

    படங்களில் நடிப்பது தொடர்ந்தாலும், ஒரே மாதிரியான கதைகள் விஜயகுமாரை சற்று யோசிக்க வைத்தது. அதனால் வித்தியாசமான கதைகளைத் தேட ஆரம்பித்தார்.

    இந்த சமயத்தில் வில்லனாக நடிக்கவும் அழைப்புக்கள் வந்தன. கதாநாயகனாக ரஜினி நடிப்பில் முன்னணியில் இருந்த நேரத்தில் அவரது படங்களில் கூட வில்லனாக? நடித்தார், விஜயகுமார்.

    தயாரிப்பாளரும் நடிகருமான கே.பாலாஜியின் ``சவால்'', ``தியாகி'' போன்ற படங்களிலும் வில்லனாக நடிப்பதைத் தொடர்ந்தார்.

    இப்படி வில்லன் நடிப்பில் பிஸியாக இருந்த நேரத்தில் மதுரையில் நடந்த ஒரு விழாவுக்கு விஜயகுமார் போனார். அப்போது சில ரசிகர்கள் அவரிடம், ``ஹீரோவாக நடித்து எங்களை சந்தோஷப்படுத்திய நீங்கள், இப்போது வில்லனாக நடிப்பது எங்களுக்கு வேதனை தருகிறது'' என்று சொல்ல, ரசிகர்களின் ஒட்டுமொத்த உணர்வாக அதை எடுத்துக் கொண்டு நடிப்பதையே நிறுத்தி விட்டார், விஜயகுமார்.

    மூன்றாண்டுகள் இந்த நிலை நீடித்தது. மறுபடியும் விஜயகுமார் நடிக்க ஆரம்பித்தது குணசித்ர வேடங்களில்.

    அதற்கான வாய்ப்பு, `ஜீ.வி.' பட நிறுவனம் மூலம் வந்தது.

    விஜயகுமார் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய நேரத்தில், ரஜினி வில்லனாக தனது நடிப்பு அத்தியாயத்தை தொடங்கியிருந்தார். விஜயகுமார் கதாநாயகனாக நடித்த "மாங்குடி மைனர்'' உள்ளிட்ட சில படங்களில், ரஜினி வில்லனாக நடித்திருக்கிறார்.
    விஜயகுமார் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய நேரத்தில், ரஜினி வில்லனாக தனது நடிப்பு அத்தியாயத்தை தொடங்கியிருந்தார். விஜயகுமார் கதாநாயகனாக நடித்த "மாங்குடி மைனர்'' உள்ளிட்ட சில படங்களில், ரஜினி வில்லனாக நடித்திருக்கிறார்.

    ரஜினி பற்றி விஜயகுமார் கூறியதாவது:-

    "நான் முதலில் தங்கியிருந்த புதுப்பேட்டை முரளி வீட்டில்தான் பின்னாளில் ரஜினியும் தங்கியிருக்கிறார். பிறகு நான் புரசைவாக்கம் விடுதிக்கு வந்துவிட்டேன்.

    ஒருநாள் படப்பிடிப்பு முடிய நேரமாகி விட்டது. படப்பிடிப்பில் ரஜினியும் இருந்தார். "நான் உங்களை `டிராப்' பண்ணிடறேன்'' என்று சொல்லி எனது காரில் ஏற்றிக்கொண்டேன்.

    புதுப்பேட்டையில் காரை ரஜினி நிறுத்தச்சொன்ன இடம், முன்பு நான் தங்கியிருந்த அதே இடம்! ரஜினியிடம் இதைச் சொன்னபோது அவரும் ஆச்சரியப்பட்டார்.

    1976-ல் டைரக்டர் பீம்சிங் இயக்கிய "உன்னிடம் மயங்குகிறேன்'' படத்தில் என்னுடன் ரஜினியும் நடித்தார். அப்போதெல்லாம் தூங்காமல் படப்பிடிப்பில் நான் கலந்து கொண்டிருந்தேன்.

    காலையில் ஒரு படப்பிடிப்பை முடித்து விட்டு வந்தவன், வாகினியில் இருந்த செட்டுக்கு மதியம்

    2 மணிக்கு வந்தேன். முந்தின இரவு தூங்காததால் சாப்பிட்டு விட்டு கொஞ்சம் தூங்க விரும்பி மேக்கப் ரூமுக்கு போனேன்.

    அங்கே ரஜினி இருந்தார். அடுத்த காட்சியில் அவருக்கு நடிக்க வேண்டிய பேண்ட் - ஜிப்பா கொடுத்திருந்தார்கள். ஜிப்பாவை போட ரஜினி முயற்சிக்கிறார்; முடியவில்லை! ரஜினியும் எப்படியாவது அந்த ஜிப்பாவை உடம்புக்குள் நுழைத்துவிட முயன்று கொண்டிருந்தார்.

    இதைப் பார்த்த நான் ரஜினியிடம், "இந்த சின்ன ஜிப்பா, உங்கள் உடம்புக்கு எப்படிப் பொருந்தும்'' என்று கேட்டேன்.

    "காஸ்ட்ïமர்'' இதைத்தான் கொடுத்திட்டுப் போனார்'' என்றார், ரஜினி.

    நான் உடனே காஸ்ட்ïமரை அழைத்து, "இந்த ஜிப்பா இவருக்குப் பொருந்தவில்லை. வேறு ஜிப்பா கொண்டு வந்து கொடுங்கள்'' என்று கேட்டுக் கொண்டேன். உடனடியாக காஸ்ட்ïமர் வேறு ஜிப்பா வாங்கி வந்து கொடுத்தார். அது ரஜினிக்கு பொருத்தமாக இருந்தது. அதை அணிந்து கொண்டு, அன்றைய படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

    அன்றைய படப்பிடிப்பில் ஒரே ஷாட்டில் 4 பக்க வசனம் அவருக்கு கொடுத்திருந்தார்கள். `கடகட'வென அவருக்கே உரிய பாணியில் ஒரே டேக்கில் பேசி, காட்சியை ஓ.கே. பண்ணினார் ரஜினி.''

    இப்படிச் சொன்ன விஜயகுமார், ஆந்திர மாநிலம் நகரியில் "என் கேள்விக்கென்ன பதில்'' படப்பிடிப்பு நடந்தபோது, ஏற்பட்ட பரபரப்பான சம்பவம் ஒன்றையும் குறிப்பிட்டார்.

    "நகரியில் நான், ரஜினி உள்ளிட்ட நடிகர் குழுவினர் நடித்துக்கொண்டிருந்தோம். டைரக்டர் பி.மாதவன் டைரக்ட் செய்தார்.

    திடீரென பொதுமக்கள் கூட்டத்தில் நின்ற சிலர் வேண்டுமென்றே எங்களிடம் தகராறு செய்தார்கள். படப்பிடிப்பு கேமராவை பிடுங்கிக் கொண்டார்கள்.

    நான் அவர்களிடம் பேசிப்பார்த்தேன். அவர்களோ வேறு ஏதோ நோக்கம் வைத்துக் கொண்டு எங்களிடம் தகராறு செய்து

    கொண்டிருந்தார்கள்.இனியும் இங்கே இருந்தால், அடுத்த கட்ட பிரச்சினை உருவாகலாம் என்று நினைத்து, டைரக்டரின் யோசனைப்படி அங்கிருந்து காரில் புறப்பட்டோம். ஒரு பியட் காரில் என்னையும், ரஜினியையும் டைரக்டர் பி.மாதவன் சார் சென்னைக்கு அனுப்பி வைத்தார். கார் புறப்பட்டதும் கூடியிருந்த கும்பலை விலக்கும் பொருட்டு, ஜன்னலுக்கு வெளியே நானும், ரஜினியும் கைகளை நீட்டி `ஓரம்போ ஓரம்போ' என்று சொல்லிக் கொண்டே வந்தோம்.

    `இனி பிரச்சினையில்லை' என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட நேரத்தில், `கார்' மக்கர் செய்து ஒரு இடத்தில் நின்று விட்டது. என்ன முயற்சி செய்தும் கார் நகரவில்லை.

    உடனே, அந்த ஊரில் உள்ள பஸ் ஸ்டாண்டுக்கு சென்று, பஸ்சில் ஏறினோம். டாக்சி ஸ்டாண்ட் இருந்த இடத்திற்கு பஸ் வந்தபோது, அங்கே நிறுத்தி இறங்கிக் கொண்டு, டாக்சி பிடித்தோம். அம்பத்தூர் வரை அந்த டாக்சியில் பயணம் செய்தோம்.

    ரஜினியைப் பொறுத்தமட்டில் நடிக்க வந்த புதிதில் எப்படி இருந்தாரோ, அப்படியேதான் இப்போதும் இருக்கிறார். ஆனால் இன்றைக்கு அவருக்கு உள்ள பெயரும், புகழும் வேறு. இப்போதும் நண்பர்களிடம் முன்பு காட்டிய அதே அன்புதான்; அதே பண்புதான். எப்போதாவது சந்தித்து பேச வாய்ப்பு கிடைக்கும்போது, அவராகவே பழைய நாட்கள் பற்றி நினைவுபடுத்துவார்.

    ஒரு கட்டத்தில் நான் அவருக்கே அப்பாவாக நடிக்க வேண்டி வந்தது. கமலுக்கும் நான் அப்பாவாக நடித்திருக்கிறேன். இப்போதும் எங்களுக்குள் அதே அன்புதான் நீடிக்கிறது.

    நாட்டாமை படத்தில் நான் நடித்த `நாட்டாமை' கேரக்டர் பற்றி ரஜினி ரொம்பவும் புகழ்ந்து பேசினார். `அமைந்தால் இப்படி கேரக்டர் அமையவேண்டும்' என்று சொல்லிக் கொண்டிருந்தார். அந்த கேரக்டர் அப்படியே அவருக்குள் ஊடுருவி, நாட்டாமையை தெலுங்கில் `பெத்தராயுடு' என்ற பெயரில் எடுக்கச் செய்து, அதில் நான் நடித்த நாட்டாமை கேரக்டரையும் செய்து அசத்தினார்.

    இந்த கேரக்டர் பற்றி அவர் என்னிடம் சொல்லும்போது, "விஜி! உங்க ஸ்டைல் எனக்கு வரலை. அதனால் நாட்டாமை கேரக்டரில் சுருட்டு பிடிக்கும் மேனரிசத்தை சேர்த்துக் கொண்டேன்.''

    மற்றவர்களின் திறமையை மதிக்கும் பண்பு, அவருக்கு எப்போதுமே உண்டு. என்னுடன் சேர்ந்து நடித்த காலகட்டங்களில் படப்பிடிப்புக்கு அவர் தாமதமாக வந்து நான் பார்த்ததே இல்லை. இப்போதும் இந்த நேரம் தவறாமைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.

    தொழிலை நேசிக்கத் தெரிந்தவர். அதனால்தான் அவரது தொழிலான சினிமாவும் அவரை சிகரத்தில்  ஏற்றி வைத்திருக்கிறது.''

    இவ்வாறு விஜயகுமார் கூறினார். 
    தன்னுடன் சேர்ந்து நடிக்கும் பட வாய்ப்பை விஜயகுமாருக்கு வழங்கினார், எம்.ஜி.ஆர்.
    தன்னுடன் சேர்ந்து நடிக்கும் பட வாய்ப்பை விஜயகுமாருக்கு வழங்கினார், எம்.ஜி.ஆர்.

    "இளைய தலைமுறை'' படப்பிடிப்பின்போது 9 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த விஜயகுமாருக்கு தோள்பட்டை பிசகி, சில நாட்கள் ஓய்வில் இருந்தார். புதிய பட வாய்ப்பு கிடைத்து சத்யா ஸ்டூடியோ சென்றபோது, எதிர்பாராதவிதமாக எதிரில் எம்.ஜி.ஆர். வந்து கொண்டிருந்தார்.

    தான் நேசிக்கும் எம்.ஜி.ஆர். எதிரில் வந்ததும் ஒரு கணம் செய்வதறியாது திகைத்து விட்டார், விஜயகுமார். "வணங்கிச் செல்வதா? வழி விடுவதா?'' என்று அவர் முடிவெடுத்து செயல்படுவதற்குள் எம்.ஜி.ஆரே அவரை நெருங்கி கைகளைப் பற்றிக்கொண்டு நலம் விசாரித்தார்.

    இதுபற்றி விஜயகுமார் கூறியதாவது:-

    "அண்ணன் எம்.ஜி.ஆர். நான் கொஞ்சமும் எதிர்பார்க்காமல் என் கைகளை பற்றிக்கொண்டு, "கை எப்படி இருக்கிறது விஜயகுமார்?'' என்று கேட்டதும் ஒரு கணம் திகைத்துப் போனேன். வார்த்தைகள் உடனடியாக வரவில்லை. இருந்தாலும் பதட்டத்தைத் தவிர்த்து, "பரவாயில்லை. வலி குறைந்து விட்டது'' என்று தெரிவித்தேன்.

    அப்போதும் அவர் போய்விடவில்லை. "சினிமாவில் இந்த மாதிரி ரிஸ்க்கெல்லாம் எடுக்கக் கூடாது. எந்த வகை அதிரடி காட்சி என்றாலும் அதை ஒரிஜினல் மாதிரி வெளிப்படுத்த தெரிந்து கொள்ள வேண்டும்'' என்றார்.

    அதன் பிறகு எந்த மாதிரி சிகிச்சைகள் தரப்பட்டன என்பது பற்றி கேட்டார். சொன்னேன். `பிஸியோதெரபி' சிகிச்சை மூலம், கைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவது பற்றியும் விவரித்தேன்.

    பொறுமையாக கேட்டவர், "எனக்கும் இந்த மாதிரி அனுபவம் இருக்கிறது. இதற்கு நாட்டு மருந்து நல்ல பலன் தரும். மைலாப்பூர் கச்சேரி ரோட்டில் நாட்டு மருந்துக்கடை இருக்கிறது. அங்கே `கரியபவளம்' என்ற நாட்டு மருந்து கேட்டால் தருவார்கள். அதை உரசி, சதைப் பிடிப்பு இருக்கிற இடத்தில் போட்டால் தசைப்பிடிப்பில் ஏற்பட்டு இருக்கும் இறுக்கம் சரியாகி விடும். இன்றைக்கே வாங்கி போட்டுப் பாருங்கள்'' என்று சொல்லிவிட்டு, விடைபெற்றுச் சென்றார்.

    அவருக்கும் அன்றைய தினம் சத்யா ஸ்டூடியோவில்தான் படப்பிடிப்பு இருந்தது. அதனால் மதியம் `லஞ்ச் பிரேக்'கின்போது எனக்கு அழைப்பு விடுத்தார். நான் கொஞ்சம் தயக்கத்துடன் போய் சந்தித்தபோது, "என்னுடன் சாப்பிடுங்கள்'' என்று கூறினார். அந்த அன்பை தவிர்க்க முடியுமா? பாக்கியமாக எண்ணிக்கொண்டேன்.

    ஒருவரை பிடித்துவிட்டால், அவர் விஷயத்தில் தனி அக்கறை செலுத்துவது எம்.ஜி.ஆருக்கு உரிய பண்பாடு என்று பிறர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதை என் விஷயத்திலும் பரிபூரணமாய் உணர்ந்தேன்.

    டைரக்டர் கே.சங்கர் இயக்கத்தில் வி.டி.எல்.எஸ். என்ற படக்கம்பெனி "இன்று போல் என்றும் வாழ்க'' என்ற படத்தை தயாரித்தார்கள். எம்.ஜி.ஆர்.தான் கதாநாயகன். படம் தொடங்க இருந்த நேரத்தில், திடீரென ஒருநாள் அந்த கம்பெனியின் தயாரிப்பு நிர்வாகி என்னை சந்தித்தார். "இந்தப்படத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். `சின்னவர்' உங்களை அவரது தங்கை கணவர் கேரக்டரில் போடச் சொன்னார்'' என்றார்.

    எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. `சின்னவர்' என்றால் யார் என்று தெரியாததுதான் இதற்குக் காரணம். அப்புறம் தான் எம்.ஜி.ஆரை எல்லாரும் `சின்னவர்' என்றுதான் சொல்வார்கள் என்று சொன்னார்கள்.

    (எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி `பெரியவர்' என்று அழைக்கப்பட்டார்)

    அப்போது என் சம்பள விஷயம் பற்றி எதுவும் அந்த தயாரிப்பு நிர்வாகி பேசவில்லை. முதல் படத்தில் நான் வாங்கிய சம்பளம் ஆயிரம் ரூபாய்தான். அதுவும் முதலில் 200. பிறகு 300. பிறகு ரிலீசுக்கு முந்தின நாள் 500 என்று கொடுத்தார்கள்.

    பிறகு தொடர்ந்து படங்கள் வரவர, சம்பளமும் 5 ஆயிரம்,

    7 ஆயிரம் என்று கூடியது. தொடர்ந்த வாய்ப்புகளில் 10 ஆயிரத் தில் நின்று கொண்டிருந்தது.

    சிவாஜி  சாருடன் நடித்த பிறகு 12 ஆயிரம் வாங்கினேன்.

    எம்.ஜி.ஆர். பட தயாரிப்பு நிர்வாகி என்னிடம், "என்ன சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள்?'' என்று கேட்டார்.

    பதிலுக்கு நான், "சம்பளம் இருக்கட்டும் சார்! எந்த தேதிகள் வேண்டும் என்று சொல்லுங்க. கால்ஷீட் போட்டுக்கலாம்'' என்றேன்.

    நான் என் சம்பள விஷயம் சொல்லத் தயங்குகிறேன் என்பதை புரிந்து கொண்ட அந்த நிர்வாகி, "சரி! இப்ப பத்தாயிரம் ரூபாய் அட்வான்சாக வைத்துக் கொள்ளுங்கள். மற்றதை அப்புறம் பேசிக்கொள்ளலாம்'' என்று பணத்தை கொடுத்தார்.

    எனக்கு அதிர்ச்சி. அட்வான்சே பத்தாயிரமா? அதுவரை நான் வாங்கிய மொத்த சம்பளமே கிட்டத்தட்ட இதே அளவில்தான்!

    எனக்கு 10 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து என் சம்பளத்தை அதிகமாக்கியவரே அண்ணன் எம்.ஜி.ஆர்.தான்.

    "இன்று போல் என்றும் வாழ்க'' படப்பிடிப்பில் அவரை சந்தித்தேன். என்னைப் பார்த்ததும் அருகில் அழைத்தவர், பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டார். படப்பிடிப்பில் மற்ற எல்லாருமே 50 அடி தூரத்தில்தான் அவருக்கு முன்பாக நின்று கொண்டிருந்தார்கள்.

    அப்போது அவர் அ.தி.மு.க.வை தொடங்கியிருந்த நேரம். காங்கிரஸ் ஆதரவுடன் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கவும் தயாராக இருந்தார். அவர் "எம்.பி.'' தேர்தலில் போட்டியிட தேர்ந்தெடுத்த 40 பேர், படப்பிடிப்பு தளத்தில் அவரை சந்திக்க வந்திருந்தார்கள். அவர்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார்.

    அன்று மாலை `பாம்குரோவ்' ஓட்டலில் கட்சி பொதுக்குழுவை கூட்டியிருந்தார். "ஒருவேளை படப்பிடிப்பு முடிய நேரமாகி விட்டால் என்னை எதிர்பார்க்காதீர்கள். எனக்கு பதிலாக இந்த தம்பியை அனுப்பி வைக்கிறேன்'' என்று என்னை அவர்களிடம் சுட்டிக்காட்டிச் சொன்னார். அந்த அளவுக்கு அவர் என் மீது நம்பிக்கை வைத்திருந்தார் என்பதற்காக இதைச்      சொன்னேன்.''

    இவ்வாறு கூறினார், விஜயகுமார்.

    புராணப் படங்களை இயக்குவதில் பெரும் புகழ் பெற்ற ஏ.பி.நாகராஜனின் "கந்தன் கருணை'' படத்தில் முருகனாக நடிக்கும் வாய்ப்பு விஜயகுமாருக்கு வந்து கைநழுவிப் போனது. போட்டியில் சிவகுமார் வெற்றி பெற்றார்.
    புராணப் படங்களை இயக்குவதில் பெரும் புகழ் பெற்ற ஏ.பி.நாகராஜனின் "கந்தன் கருணை'' படத்தில் முருகனாக நடிக்கும் வாய்ப்பு விஜயகுமாருக்கு வந்து கைநழுவிப் போனது. போட்டியில் சிவகுமார் வெற்றி பெற்றார்.

    டைரக்டர் ஏ.பி.நாகராஜன் டைரக்ஷனில் ஏ.எல்.சீனிவாசன் தயாரித்த "கந்தன் கருணை'' படத்தில், வீரபாகு வாக சிவாஜி நடித்தார். முருகன் வேடத்தில் நடிக்க ஒரு புதுமுக இளைஞர் தேவைப்பட்டார். இந்த வேடத்துக்கு நடிகர் சிவகுமாரும், விஜயகுமாரும் முயற்சி

    மேற்கொண்டார்கள்.அந்த அனுபவம் குறித்து விஜயகுமார் கூறியதாவது:-

    "புராணப் படங்கள் என்றால் அது ஏ.பி.நாகராஜன் படம் என்றிருந்த நேரம் அது. என்னுடன் நாடகத்தில் நடித்த ஈ.ஆர்.சகாதேவன், டைரக்டர் ஏ.பி.நாகராஜனின் நண்பர். கந்தன் கருணை படத்தில் முருகனாக நடிக்க ஒரு புதுமுகம் தேடுகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு, எனக்காக சிபாரிசு செய்யும்படி ஈ.ஆர்.சகாதேவனிடம் கேட்டுக்கொண்டேன். அவரும் எனக்காக ஏ.பி.நாகராஜனிடம் பேசினார். "மேக்கப் டெஸ்ட் எடுப்போம். சாரதா ஸ்டூடியோவுக்கு நாளை மாலை வரச்சொல்லுங்க'' என்று ஏ.பி.நாகராஜன் சொல்லிவிட்டார்.

    நான் சாரதா ஸ்டூடியோவுக்கு போனபோது, முருகன் வேடத்தில் நடிக்க "மேக்கப் டெஸ்ட்''டுக்கென இன்னொரு இளைஞரும் வந்திருந்தார். அவர் பெயர் சிவகுமார் என்றும் சிவாஜி சார் சிபாரிசில் அவர் வந்திருக்கிறார் என்றும் தெரிந்து கொண்டேன்.

    சிவகுமாருக்கு முதலில் மேக்கப் போட்டார்கள். சிவாஜி சாரின் ஆஸ்தான மேக்கப் மேன் ரெங்கசாமிதான் சிவகுமாருக்கு `முருகன்' மேக்கப் போட்டார். அருகே நடிகர் அசோகன் இருந்தார். மேக்கப் போடுவது பற்றி, அக்கறையுடன் யோசனை சொல்லிக் கொண்டிருந்தார்.

    ஒரு வழியாக சிவகுமாருக்கு மேக்கப் டெஸ்ட் முடிந்து, நான் அழைக்கப்பட்டேன்.

    என் மார்பில் நிறைய முடி இருந்தது. கையில் ஒரு பிளேடை கொடுத்து, எல்லா முடியையும் மழிக்கச் சொன்னார்கள்! சில இடங் களில் பிளேடு பட்டு ரத்தம் வழியத் தொடங்கியது. எல் லாம் முடிந்து ரத்தம் கழுவி மேக்கப்புக்குஉட்கார்ந்தேன்.

    மேக்கப் மேன் ரெங்கசாமி, எனக்கு அவசரம் அவசரமாக மேக்கப் போட்டு முடித்தார். "போகலாம்'' என்றார்.

    அப்போது ஈ.ஆர்.சகா தேவன் அங்கு வந்தார். `மேக்கப் 'பில் என்னைப் பார்த்தவர் முகத்தில் கோபத்தின் அறிகுறி தெரிந்தது. "யார் மேக்கப் போட்டது?'' என்று கேட்டார். நான் சொன்னதும் மேக்கப் மேனிடம் "என்ன இப்படி மேக்கப் போட்டு இருக்கிறீங்க?'' என்று கேட்டார். அவரோ, "டைம் ஆகிப் போச்சுங்க'' என்று சொல்லிவிட்டு புறப்பட்டு விட்டார்.

    என்னையும் சிவகுமாரை யும் கம்பெனி காரில் மேக்கப் கோலத்தில் அழைத்துச் சென்றார்கள். அதுவரை நானும், சிவகுமாரும் பேசிக் கொள்ளவில்லை. ஆனால், காரில் போகும்போது சிவகுமார் என்னிடம், "நீங்க கேரளாவா?'' என்று கேட்டார்.

    அவர் என்னை கேரளா என்று கேட்டதில், கொஞ்சம் அதிர்ச்சியாகி விட்டேன். "நான் தமிழ்நாடுதான். தமிழன். சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை'' என்று தமிழனாக என்னை வெளிப்படுத்திய அதே வேகத்தில், "நீங்க எந்த ஊருங்க?'' என்று அவரிடம் கேட்டேன்.

    "நான் ஓவியக் கலையில் தேறி, ஓவியராக இருக்கிறேன். சொந்த ஊர் கோவை. அப்பா இல்லை. அம்மா மட்டும் இருக்கிறாங்க. சென்னையில் இப்ப இருக்கிறது ஒரு வாடகை வீட்டில்தான்'' என்றார்.

    பதிலுக்கு நான், புரசைவாக்கத்தில் உள்ள எஸ்.எஸ்.மேன்ஷனில் இருப்பதாக சொன்னேன்.

    கம்பெனி வந்ததும் நாங்கள் காரில் இருந்து இறங்கினோம். மேக்கப் டெஸ்ட்டுக்காக நான் சைக்கிளில் வந்த மாதிரி சிவகுமாரும் சைக்கிளில் வந்திருந்தார். அன்றைக்கு தொடங்கிய அறிமுகம், அடுத்தடுத்த சந்திப்பில் எங்களை நண்பர்களாக்கியது. மேக்கப் டெஸ்ட் முடிவு அறிவிக்கப்படும் முன்பே, "முருகன் வேடம் இவருக்கே கிடைக்கட்டும்'' என்று நான் நினைக்கிற அளவுக்கு சிவகுமார் தனது அன்பான நட்பில் என்னைக் கவர்ந்து விட்டிருந்தார்.

    அது 1966-ம் ஆண்டு சிங்கப்பூரில் இருந்த உறவினர் பிரம்மநாதன் அங்கு நடக்கும் ஒரு விழாவுக்காக அறிஞர் அண்ணாவை அழைத்துச் செல்ல `தேதி' கேட்டு வந்திருந்தார். அப்போது பக்தவச்சலம் முதல்-அமைச்சராக இருந்தார். அண்ணா அரசியலில் வளர்ந்து வந்த நேரம்.

    தி.மு.க. அலுவலகம் அப்போது ராஜாஜி ஹாலில் இருந்தது. நாவலர் நெடுஞ்செழியன் மூலமாக அண்ணாவை சந்திக்க என் உறவினர் புறப்பட்டார். அப்போது என்னையும் உடன் அழைத்துச் சென்றார். அண்ணாவை சந்தித்து விட்டு ஆயிரம் விளக்கு வழியாக வந்தபோது, நாவலர் எங்களை கலைஞரிடம் அழைத்துப்போனார். அப்போது முரசொலி அலுவலகம் ஆயிரம் விளக்கில் இருந்தது. நள்ளிரவை நெருங்கி விட்ட 11-30 மணிக்கு கலைஞர் எழுதிக் கொண்டிருப்பதை பார்த்தேன். என் உறவினரை நாவலர் அறிமுகப்படுத்தியதும், கலைஞரின் பார்வை இப்போது என் மீது இருந்தது. என் உறவினர் அவரிடம் "பையனுக்கு நடிப்பு ஆர்வம். இப்பக்கூட ஏ.பி.நாகராஜன் எடுக்கப்போகிற கந்தன் கருணை படத்தில் முருகன் வேஷத்துக்கு `மேக்கப்' டெஸ்ட் எடுத்திருக்கிறாங்க'' என்று சொல்லிவிட்டார்.

    கலைஞர் கொஞ்சமும் தாமதிக்காமல் உடனே ஒரு காரியம் செய்தார். போனில் ஏ.பி.நாகராஜன் வீட்டுக்கு பேசினார். "ஏ.பி.என்! நான் மு.க. பேசுகிறேன். பட்டுக்கோட்டை சிவகுமார் (அப்போது என் பெயரும் சிவகுமார்தான்) நம்ம பையன். பார்த்து பண்ணுங்க'' என்றார். ஏ.பி.நாகராஜன் சொன்ன பதிலில் திருப்தியடைந்தவர், "நிச்சயம் கிடைக்கும்'' என்று சொன்னார். சந்தோஷமாய் அவரிடம்

    விடைபெற்றோம்.ஆனால் முருகன் வேடம் கிடைத்தது சிவகுமாருக்குத் தான்.

    இதில்கூட பெயர்க்குழப்பம் தான் பிரதானம். சினிமா வுக்காக நான் என் பெயரை `சிவகுமார்' என்று மாற்றிக் கொண்டிருந்தேன். என்னுடன் மேக்கப் டெஸ்ட் போட்டுக் கொண்டவரும் சிவகுமார்தான். இரண்டு சிவகுமாரில் யாருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அது "சிவகுமாருக்கு'' கிடைத்த வாய்ப்பே! இந்த வகையில் சிவகுமாருக்கு வாய்ப்பு கொடுக்கச் சொல்லி கலைஞர் போன் செய்தபடி, எங்கள் இருவரில் ஒரு சிவகுமாருக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

    மேக்கப் டெஸ்ட் முடிவு எனக்கு தெரியவந்தபோதும் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள இதுவும் ஒரு காரணம்.''

    இவ்வாறு விஜயகுமார் கூறினார்.

    முருகன் வேடம் கிடைக்காததால், விஜயகுமார் ஊருக்குத் திரும்பினார். விவ சாயம் அல்லது அப்பாவின் ரைஸ்மில் ஏதாவது ஒன்றை பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தார். அப்பாவும் "நடிக்க ஆசைப்பட்டே! ஒண்ணு ரெண்டு படத்தில் நடிச்சும் பார்த்திட்டே. சினிமா வை மறந்துட்டு, ஊரோடு இருந்துவிடு'' என்றார்.

    ஊருக்கு வந்து அப்படியும் இப்படியுமாக 6 வருடம் ஓடிவிட்டது. இதற்கிடையே 1969-ம் ஆண்டில் முத்துக்கண்ணுவுடன் திருமணமும் நடந்து முடிந்து விட்டது.

    சென்னையில் சினிமா வாய்ப்புக்காக முயன்ற நாட்களில் விஜயகுமாருக்கு மு.க.முத்து நண்பராகியிருந்தார். விஜயகுமார் சினிமாவே வேண்டாம் என்று ஊருக்கு வந்திருந்த நேரத்தில் மு.க.முத்து நடித்த "பிள்ளையோ பிள்ளை'' படம் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது.

    இந்தப் படத்தை பார்த்ததும், தனது நண்பர்களில் ஒருவர் நடிகராகி விட்ட சந்தோஷம் விஜயகுமாருக்கு! அதோடு, `நாமும் சென்னைக்குப் போய், இன்னும் ஒரு தரம் முயன்று பார்த்தால் என்ன?' என்ற எண்ணமும் எழுந்தது. "திருமணமாகிவிட்டதே. இனி ஊரில் இருந்தால்தானே சரியாக இருக்கும்'' என்று மனதின் குறுக்கே ஓடிய கேள்வியை புறந்தள்ளினார். அப்பாவை சந்தித்தவர், "இன்னும் ஒரேயொரு தடவை மட்டும் சென்னைக்கு போய் நடிக்க முயற்சி செய்து பார்க்கட்டுமா?'' என்று கேட்டார்.

    அதுபற்றி விஜயகுமார் கூறுகிறார்:

    "மகன் இனி ஊரோடு செட்டிலாகி விடுவான். தொழிலில் நமக்கு உறுதுணையாக இருப்பான் என்று அப்பா நம்பினார். என் சினிமா ஆசை என்னை விட்டுப் போய் விட்டதை அறிந்த பிறகே திருமணமும் செய்து வைத்தார். இப்போது என் நண்பர் மு.க.முத்து நடிக்க வந்ததும் எனக்குள் இருந்த சினிமா ஆர்வம் பொங்கியெழுந்து விட்டதை புரிந்து கொண்டார்.  "ஒரு வருஷம் மட்டும் கடைசியாக முயற்சி செய்து பார்க்கிறேன். 365 நாள் வரையிலும் வாய்ப்பு கிடைக்காமல் போனால், மறுநாள் ஊரில் இருப்பேன். அதன் பிறகு `சினிமா' என்கிற வார்த்தையை கூட உங்களிடம் பேசமாட்டேன் என்றேன்.

    அப்பா என்னை கூர்மையாக பார்த்தார். நேராக வீட்டுக்குள் போனவர் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து வந்து என்னிடம் கொடுத்தார். "நீ சென்னையில் இருக்கிற நாட்களில் பணப்பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது. அதற்காக இதை வைத்துக்கொள். சினிமாவுக்கு கடுமையாக முயற்சி பண்ணு. ஆனால் சொன்னபடி ஒரே வருஷம்தான். சினிமாவில் உன் முயற்சி வெற்றி பெற்றால் உன்னை விடவும் நான் அதிகம் சந்தோஷப்படுவேன்''  என்றபடி என்னை வழியனுப்பி வைத்தார்.''

    இவ்வாறு கூறினார், விஜயகுமார். 
    டைரக்டர் ஸ்ரீதர் படத்தில் நடிக்க விரும்பிய விஜயகுமார், அவர் நடத்திய புதுமுகங்களுக்கான தேர்வில் கலந்து கொண்டார்.
    டைரக்டர் ஸ்ரீதர் படத்தில் நடிக்க விரும்பிய விஜயகுமார், அவர் நடத்திய புதுமுகங்களுக்கான தேர்வில் கலந்து கொண்டார்.

    சிவாஜியும், பத்மினியும் நடித்த "ஸ்ரீவள்ளி'' படத்தில் பாலமுருகனாக நடித்தாலும் அதற்குப்பிறகு புதிய படங்கள் எதுவும் விஜயகுமாருக்கு கிடைக்கவில்லை. இதனால் நாடகங்களில் நடித்தபடி, சினிமா வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருந்தார்.

    நாலைந்து வருடம் இதே நிலை நீடித்தது. ஆனாலும் சோர்ந்து விடாமல் எஸ்.வி.எஸ். நாடகக் குழுவில் சேர்ந்து நடித்துக் கொண்டு இருந்தார்.

    இந்த சமயத்தில் டைரக்டர் ஸ்ரீதரின் "நெஞ்சில் ஓர் ஆலயம்'' படம் வந்தது. காதலை புதிய கோணத்தில் அணுகிய காட்சிகள் ஸ்ரீதருக்கு பெரும் புகழைத் தந்ததோடு, படத்தையும் வெற்றிப் பட்டியலில் சேர்த்தது.

    இந்தப்படம் வெளிவந்த நேரத்தில் வையாபுரி ஜோதிடர் மூலம் விஜயகுமாருக்கு நடிகர் முத்துராமன் அறிமுகமானார். முத்துராமன் படங்களில் நடித்து வந்ததோடு நாடகங்களிலும் நடித்தார். அப்போது `வடிவேல் வாத்தியார்', தேரோட்டி மகன்' நாடகங்கள் ரசிகர்களை பெரும் அளவில் ஈர்த்தன. முத்துராமன் படங்களில் வளரத் தொடங்கிய நேரமாதலால், அப்போது அவர் நடித்து வந்த இந்த நாடகங்களில் தொடர்ந்து நடிக்க நேரம் கிடைக்காத நிலை. அதனால், தான் நடித்து வந்த கேரக்டரில் விஜயகுமாரை நடிக்க வைக்க முத்துராமனே சிபாரிசு செய்தார்.

    இதைத் தொடர்ந்து "சுயம்வரம்'' என்ற புதிய நாடகத்திலும் விஜயகுமாருக்கு முக்கிய வேடம் கிடைத்தது. இதில் "இரவும் பகலும்'' பட கதாநாயகி வசந்தா, காந்திமதி ஆகியோரும் நடித்தார்கள். இரவில் நாடகத்தில் நடிப்பது, காலையில் பட வாய்ப்புக்கான முயற்சி என்று விஜயகுமார் தீவிரப்பட்டது இந்த சமயத்தில்தான்.

    இந்த நேரத்தில்தான் டைரக்டர் ஸ்ரீதர் புதுமுகங்களை அறிமுகப்படுத்துவதில் அதிக அக்கறை காட்டி வந்தார். இதே மாதிரியான எண்ணம் மற்ற டைரக்டர்களுக்கும் இருந்தது. இதனால், டைரக்டர் ஸ்ரீதர், டைரக்டர்கள் ராமண்ணா, பீம்சிங், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், பி.மாதவன் ஆகியோர் ஒன்று சேர்ந்து, "மூவி மேக்கர்ஸ் கவுன்சில்'' என்ற அமைப்பை உருவாக்கினர்.

    இந்த அமைப்பு மூலம் புதுமுகங்களை தேர்ந்தெடுத்து படம் தயாரிப்பது அவர்கள் எண்ணம். இதற்காக புதுமுகத் தேர்வும் நடத்தினார்கள். அதில் விஜயகுமாரும் கலந்து கொண்டார்.

    அதுபற்றி அவர் கூறுகிறார்:-

    டைரக்டர் ஸ்ரீதர் புதுமையை விரும்பினார். துணிச்சலாக தனது படங்களில் புதுமுகங்களை நடிக்க வைத்தார். படத்தையும் வெற்றிப் படமாக்கினார்.

    புதுமுகங்களை தேர்ந்தெடுக்க, ஸ்ரீதரும், மற்ற டைரக்டர்களும் இணைந்து, "மூவி மேக்கர்ஸ் கவுன்சில்'' தொடங்கினர். இதுபற்றி பட உலகில் பரபரப்பாக பேசப்பட்டது. ஐந்தாறு வருடங்களாக புதியவர்கள் சினிமாவுக்குள் வரமுடியாமல் இருந்த நிலை, இனி மாறும் என நம்பிக்கையும் ஏற்பட்டது.

     புதுமுகத் தேர்வு சென்னையில் உள்ள நார்த்போக் ரோட்டில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது. கட்டுக்கடங்காத கூட்டம். பார்க்கிற முகங்களில் எல்லாம் `கதாநாயக' களை. இந்த அமைப்பில் டைரக்டர் ராமண்ணாவும் இருந்ததால், நிச்சயம் நாம் தேர்வு செய்யப்பட்டு விடுவோம் என்று நம்பினேன்.

    இந்த இடத்தில் டைரக்டர் ராமண்ணா பற்றி சொல்லியே ஆகவேண்டும். "ஸ்ரீவள்ளி'' படத்திற்குப் பிறகு, "நேரம் வரட்டும்; நானே கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறேன்'' என்று சொல்லியிருந்தார். அதனால் நாடகங்களில் நடித்தாலும் அவ்வப்போது வந்து அவரிடம் `ஆஜர்' கொடுத்து விடுவேன்.

    இந்த மாதிரியான ஒருவேளையில் அவர் "சொர்க்கத்தில் திருமணம்'' என்ற படத்தை இயக்கினார். படத்தின் ஹீரோயின் லதா. என்னை ஹீரோவாக போட ராமண்ணா முடிவு செய்திருந்தார். ஆனாலும் ரவிச்சந்திரனே ஹீரோவாக நடித்தார். இதனால் நான் மனதளவில் உடைந்து போய்விடக்கூடாது என்பதற்காக, படத்தில் லதாவை ஒருதலையாக விரும்பும் ஒரு கேரக்டரில் என்னை நடிக்க வைத்தார்.

    இப்படி நம் மேலும் அக்கறைப்பட ஒரு டைரக்டர் இருக்கிறார் என்பது இயல்பாகவே ஒரு தைரியத்தை என் மனதிற்குள் ஏற்றி வைத்திருந்தது. தேர்வுக் குழுவில் டைரக்டர் ராமண்ணாவும் இடம் பெற்றிருந்ததால் நிச்சயம் தேர்வாவோம் என்ற நம்பிக்கையும் வலுப்பெற்றது.

    என் முறை வந்தபோது, ஏதாவது ஒரு காட்சியை நடித்துக்காட்ட சொன்னார்கள். நான் அப்போது நடித்துக் கொண்டிருந்த "வடிவேலு வாத்தியார்'' நாடகத்தில் நான் நடித்த ஒரு காட்சியை நடித்துக் காட்டினேன்.

    ஆயிரக்கணக்கானோர் தேர்வுக்கு வந்த இடத்தில், தேர்வானவர்கள் ஐந்தே ஐந்து பேர்தான். அந்த ஐந்து பேரில் நானும் ஒருவன். ஆம்பூர் பாபு, "அலைகள்'' செல்வகுமார் ஆகியோரும் இந்த ஐவர் குழுவில் இடம் பிடித்திருந்தனர்.

    ஆனாலும் 2 பேர் மட்டும்தான் அப்போது தேவை என்பதற்காக டைரக்டர்கள் குழு மீண்டும் பரிசீலனை செய்தது. முடிவில் `அலைகள்' செல்வகுமார், ஆம்பூர் பாபு ஆகியோரை எடுத்துக்கொண்டு மற்ற 3 பேரிடமும் "முகவரியைக் கொடுத்து விட்டுப் போங்கள். பிறகு தகவல் தெரிவிக்கிறோம்'' என்றார்கள்.

    எனக்கு கோபம் வந்துவிட்டது. என் மீது அக்கறையுள்ளவர் என்பதால் டைரக்டர் ராமண்ணாவை சந்தித்து என் ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன். "என்ன சார்! நீங்கள் இருந்தும் எனக்கு இப்படி ஆகிவிட்டதே!'' என்றேன், வேதனையுடன்.

    நான் இப்படிக் கூறியதும், ராமண்ணாவிடம் இருந்து சிரிப்புதான் பதிலாக வந்தன.

    "என் வேதனை புரியாமல் சிரிக்கிறீர்களே அண்ணா!'' என்றேன்.

    பதிலுக்கு அவரோ, "இவங்க படம் எதுவும் எடுக்க மாட்டாங்க. நீ ஏன் கவலைப்படுகிறாய்? உனக்கு நான் இருக்கிறேன்!'' என்றார்.

    மூவி மேக்கர்ஸ் கவுன்சில் பற்றி அவர் சொன்னது உண்மை ஆயிற்று. கடைசி வரை அவர்கள் படமே எடுக்கவில்லை.''

    இவ்வாறு நடிகர் விஜயகுமார் கூறினார். 
    சினிமாவில் நடித்தே தீருவது என்ற உறுதியுடன் இருந்ததால், விஜயகுமார் சினிமாவில் நடிப்பதற்கு தந்தை அனுமதி அளித்தார்.
    சினிமாவில் நடித்தே தீருவது என்ற உறுதியுடன் இருந்ததால், விஜயகுமார் சினிமாவில் நடிப்பதற்கு தந்தை அனுமதி அளித்தார்.

    நடிக்கும் ஆசையில் ஊரில் இருந்து ரெயில் ஏறிய விஜயகுமார், சென்னை வந்து பெட்டிக்கடை வைத்திருக்கிற அண்ணனை சந்தித்தார். அண்ணனுக்கு இவரைப் பார்த்ததும் அதிர்ச்சி.

    இதுபற்றி விஜயகுமார் கூறியதாவது:-

    "எந்தவித தகவலும் இல்லாமல் தன்னந்தனியாய் தஞ்சையில் இருந்து சென்னைக்கு வந்து அண்ணனை பார்த்ததும் அவருக்கு தூக்கிவாரிப் போட்டது. "என்னப்பா திடீர்னு?'' என்று அதிர்ச்சி விலகாமல் கேட்டார்.

    அண்ணன் கேட்ட தோரணையிலேயே எனது சென்னை விஜயம் அவருக்குப் பிடிக்கவில்லை என்பது புரிந்து போயிற்று. நடிக்கும் ஆர்வத்தில் சென்னைக்கு வந்ததாக கூறினால், மறுநிமிடமே ஊருக்கு அனுப்பி வைத்துவிடுவார் என்று தோன்றியது. இதனால் "ஊரை சுற்றிப் பார்க்க வந்தேன்'' என்று பொய் சொல்லி சமாளித்து விட்டேன்.

    ஆனாலும் அண்ணனிடம் நாலைந்து நாட்களுக்கு மேல் இருக்க முடியவில்லை. அண்ணன் கடையில் சுப்பாராவ் என்பவர் வேலை பார்த்தார். அந்த சின்னக் கடையில் ஒரே நேரத்தில்

    2 பேருக்கு மேல் நிற்க முடியாது. என்றாலும் தங்கும் ஆசையில் `பீடா' தயாரிக்க கற்றுக் கொடுக்கும்படி கடையில் இருந்த சுப்பாராவிடம் கேட்டேன்.

    அவர் கற்றுக்கொடுப்பதற்குள் அண்ணன் என்னைப் புரிந்து கொண்டு, புது டிரெஸ், ஷு எல்லாம் வாங்கிக் கொடுத்து ஊருக்கு ரெயிலேற்றி விட்டுவிட்டார்.

    ஒரு வாரம்கூட ஆகவில்லை. போன வேகத்தில் திரும்பி வந்த என்னை அப்பா ஆச்சரியமாக பார்த்தார். அப்பா எனது சென்னைப் பயணம் உடனடியாக முடிந்து போனது பற்றி கேட்டபோது, "மறுபடியும் சென்னைக்குப்போய் நடிக்கும் முயற்சியை தொடங்கப் போகிறேன்'' என்றேன்.

    இப்போது அப்பா என்னிடம், "சென்னையில் உனக்கு தெரிந்தது உன் அண்ணன் மட்டும்தானே. இது மாதிரி ஏதாவது ஏடாகூடம் பண்ணி வைக்கக்கூடாது என்பதற்காகத்தானே உன்னை உடனடியாக ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டான்'' என்றார்.

    இப்போது அப்பாவிடம் கொஞ்சம் தைரியமாக வாய் திறந்தேன். "சென்னையில் எனக்குத் தெரிந்த இன்னொருவர் இருக்கிறார். அவரது அறையில் தங்கிக்கொண்டு சினிமாவுக்கும் முயற்சிப்பேன்'' என்றேன்.

    என் பிடிவாதமும், அதில் நிலைத்து நின்ற உறுதியும் அப்பாவுக்கு பிடித்திருக்க வேண்டும். என் விருப்பத்துக்கு பச்சைக்கொடி காட்டினார்.

    "சரி சரி. மாதம் உனக்கு நான் எவ்வளவு பணம் அனுப்பி வைக்கவேண்டும்?'' என்று கேட்டார்.

    "மாதம் முன்னூறு ரூபாய் அனுப்பினால் போதும்'' என்றேன். முன்னூறு ரூபாய் என்பது அப்போது கொஞ்சம் பெரிய தொகைதான். ஏனென்றால் தஞ்சையில் இருந்து சென்னை வர ரெயில் கட்டணமே 7 ரூபாய்தான்!

    நான் தெளிவாக சொல்லி விட்டபிறகு அப்பா எந்த குறுக்கீடும் செய்யவில்லை. "போய் முயற்சி பண்ணு. உன் ஆசை அதுதான் என்றால், அதிலேயே தீவிரமாக முயற்சி செய்'' என்று என்னை சென்னைக்கு அனுப்பி வைத்தார், அப்பா.''

    இவ்வாறு விஜயகுமார் கூறினார்.

    இப்படியாக இரண்டாவது முறையும் சென்னை வந்த விஜயகுமாருக்கு, சுப்பாராவ் தங்கியிருந்த மைலாப்பூர் அப்பு முதலி தெருவில் இருந்த அறை அடைக்கலம் கொடுத்தது. தம்பி வந்தது அண்ணனுக்கும் தெரிந்து போயிற்று. இதற்குள் தம்பியின் நோக்கம் அப்பாவால் `தபால்' மூலம் அண்ணனுக்கு விளக்கப்பட்டுவிட, அண்ணன் தரப்பிலும் எதிர்ப்பில்லை.

    சுப்பாராவின் முயற்சியில் விஜயகுமாருக்கு முதலில் அமைந்தது நாடகத்தில் நடிக்கும் வாய்ப்புதான்.

    அதுபற்றி விஜயகுமார் விவரிக்கிறார்:-

    "அப்போது ஆர்.எஸ்.மனோகர் நாடகம் பிரபலம். அவரிடம் நடித்துக்கொண்டிருந்த சரோஜா பிரிந்துபோய் "சரோஜ் நாடக தியேட்டர்'' ஆரம்பித்தார். இந்த கம்பெனியின் மானேஜர் மகாதேவ அய்யரிடம் சுப்பாராவ் என்னை சிபாரிசு செய்தார். என்னிடம் ஒன்றிரண்டு கேள்விகளை கேட்ட மகாதேவ அய்யர், அப்போது தயாராக இருந்த "ராமபக்தி'' நாடகத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு தந்தார்.

    அதுவும் முதல் நாடகத்திலேயே எனக்கு இரட்டை வேடம்! நாடகத்தின் தொடக்கத்தில் பிள்ளையார் வேடம்; முடியும்போது மகாவிஷ்ணு

    வேடம்!நாடக ஒத்திகைகள் மளமளவென நடந்தன. இதற்குள் சுப்பாராவுடன் நான் தங்கியிருந்த மேன்சனில் ஒன்றிரெண்டு பேர் நண்பர்கள் ஆனார்கள். நான் நடிக்கப்போகும் விஷயத்தை அவர்களிடம் சொல்லியிருந்தேன்.

    நாடகத்தின் முதல் நாள் காட்சி தொடங்கவிருக்கிறது. என்னைத்தவிர மற்ற எல்லாருக்கும் `மேக்கப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒரு கட்டம் வரை பொறுத்துப் பார்த்த நான், "எனக்கு மேக்கப் போடவில்லையே'' என்று கேட்டுவிட்டேன். கேட்டதுதான் தாமதம், விநாயகர் கவசத்தை என் தலையில் மாட்டி நாடக அரங்கில் உட்கார வைத்து விட்டார்கள். கையில் ஒரு எழுத்தாணியும் கொடுத்திருந்தார்கள்.

    நாடக காட்சிக்கான திரைவிலகியதும், விநாயகரானநான் எழுத்தாணியால் எழுதுகிற காட்சிதான் ரசிகர்களுக்கு தெரியும்.

    நாடக இடைவேளை வந்தபோது மேன்ஷன் நண்பர்கள் என்னை வந்து பார்த்தார்கள். அவர்களிடம், தலைக்கு கவசம் போட்டபடி விநாயகராக வந்தது நான்தான் என்று சொன்னதை அவர்கள் நம்பவில்லை! அந்த நாட கத்தில் கடைசியில் நான் ஏற்றிருந்த "மகா விஷ்ணு'' வேடம் தான் அவர்களை நம்ப வைத்தது.''

    இவ்வாறு கூறினார், விஜயகுமார்.

    18 வயதில் நாடகம் மூலம் நடிகராக வெளிப்பட்ட நடிகர் விஜயகுமாருக்கு, சினிமா வாய்ப்பு ஏற்படக் காரணமாக இருந்தவர் ஒரு ஜோதிடர். அதுபற்றி விஜயகுமார் கூறுகிறார்:

    "நான் நாடகங்களில் நடித்து வந்த நேரத்தில் கும்பகோணம் வையாபுரி ஜோசியர்எனக்கு அறிமுகமானார். இவர் டைரக்டர்கள் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், மல்லியம் ராஜகோபால் போன்றவர்களுக்கு ஆஸ்தான ஜோதிடராக இருந்தார்.

    இவரது நட்பு எனக்கு கிடைத்தபோது, அவருடன் தொடர்பு வைத்திருந்த எல்லா சினிமா கம்பெனிகளுக்கும் என்னையும் அழைத்துப் போனார். அப்படி அழைத்துப்போனபோது டைரக்டர் ராமண்ணா எனக்கு அறிமுகமானார். என் நடிப்பு ஆர்வம் ஜோதிடர் மூலமாக அவருக்கு சொல்லப்பட்டதும் அவர், "இப்போது சிவாஜி - பத்மினி நடித்து படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் "ஸ்ரீவள்ளி'' படத்தில் சின்ன வயது முருகனாக நடிக்க ஒரு இளைஞர் தேவைதான்'' என்றவர், அந்த வாய்ப்பை எனக்கு வழங்கினார். இந்த வகையில் படத்தின் பெரிய முருகன் சிவாஜி; சின்ன முருகன்

    நான்!1961-ல் வெளியான இந்தப்படம்தான் தமிழில் தயாரான முதல் கலர் படம்.

    இந்தப்படம் வந்தபோது, ஒரே நாளில் எங்கள் சொந்த ஊரான "நாட்டுச்சாலை'' முழுக்க பிரபலமாகி விட்டேன்'' என்றார்,

    விஜயகுமார்.படத்தில் நடித்துவிட்ட போதிலும், தொடர்ந்து வாய்ப்புகள் வரவில்லை. அதற்குக் காரணம் அவரது 18 வயதுப் பருவம்தான். சிறுவனாகவும் இல்லாமல், இளைஞனாகவும் இல்லாத அந்த இரண்டுங்கெட்டான் வயதில் இருந்த விஜயகுமாரிடம், "கொஞ்சம் பொறுமையாக இருங்கள். கதாநாயகன் வாய்ப்பை நானே தருகிறேன்'' என்று டைரக்டர் ராமண்ணா கூறினார்.

    அதன்படி விஜயகுமார் பொறுமையுடன் காத்திருந்தார். ஒரு ஆண்டோ, இரண்டு ஆண்டோ அல்ல; ஐந்து ஆண்டுகள்! 
    தமிழ்ப்பட உலகில் கதாநாயகனாக அடியெடுத்து வைத்து, நடிப்பின் பல பரிமாணங்களை வெளிப்படுத்தியவர் விஜயகுமார். 400 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர், இன்றும் புகழுடன் நடிப்பைத் தொடருகிறார்.
    தமிழ்ப்பட உலகில் கதாநாயகனாக அடியெடுத்து வைத்து, நடிப்பின் பல பரிமாணங்களை வெளிப்படுத்தியவர் விஜயகுமார். 400 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர், இன்றும் புகழுடன் நடிப்பைத் தொடருகிறார்.

    டைரக்டர் பி.மாதவன், "பொண்ணுக்குத் தங்கமனசு'' என்ற படத்தில் கதாநாயகனாக விஜயகுமாரை அறிமுகப்படுத்தினார்.

    நடிகர் கமலஹாசன் ஹீரோவாக வளரத்தொடங்கியிருந்த காலகட்டத்தில் விஜயகுமாரும் ஹீரோவாக நடித்தார். இதே நேரம் நடிகர் ரஜினி, வில்லனாக தன் திரையுலகப் பிரவேசத்தைத் தொடங்கியிருந்தார்.

    இந்த வகையில் ரஜினி, கமல் இருவருடனும் சம கேரக்டர்களில் நடித்த அனுபவமும் விஜயகுமாருக்கு உண்டு. பின்னாளில் இதே ஹீரோக்களுக்கு தன்னை `அப்பா'வாக மாற்றிக்கொண்ட அனுபவமும் இவருக்கு உண்டு.

    சினிமாவில் பல அவதாரம் எடுத்தாலும் சினிமாவில் நடிக்க விஜயகுமார் பல அவதாரங்கள் எடுக்க வேண்டியிருந்தது.

    வருவார்; முயற்சிப்பார்; திரும்பிப் போவார்; மறுபடி வருவார்; போராடுவார்; திரும்பிப் போவார். - இப்படி போராடி, மூன்றாவது முறையாகத்தான் போராட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது.

    விவசாய குடும்பத்தைச் சேர்ந்த விஜயகுமாருக்கு சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த நாட்டுச்சாலை கிராமம்.

    அப்பா எம்.என்.ரெங்கசாமி. அம்மா சின்னம்மாள். அப்பா ஊரில் 2 ரைஸ்மில்களுடன் வசதியாக வாழ்ந்தவர்.

    விஜயகுமாருக்கு, அது நிஜப்பெயரல்ல; பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் `பஞ்சாட்சரம்.' சினிமாவுக்கு வரவிரும்பி இவருக்கு இவராகவே வைத்துக் கொண்ட பெயர் "சிவகுமார்.''

    அப்போது ஏற்கனவே சினிமாவில் ஒரு சிவகுமார் நடிக்கத் தொடங்கியிருந்ததால், டைரக்டர் பி.மாதவன் இவருக்கு விஜயகுமார் என்ற பெயரைச் சூட்டினார்.

    தனது கலையுலகப் பிரவேசம் பற்றி விஜயகுமார் கூறியதாவது:-

    "அப்பா 1918-ல் சென்னை வந்து தம்புசெட்டித் தெருவில் அரிசிக்கடை வைத்தார். 2 வருஷம் அங்கே தொழில் செய்த பிறகு சிங்கப்பூருக்கு போயிருக்கிறார். அப்போது சிங்கப்பூருக்கு சென்னையில் இருந்து `தர்ம கப்பல்' போகுமாம். அதாவது, அந்த கப்பலில் சிங்கப்பூருக்கு இலவசமாகவே போகலாம். அப்போது சிங்கப்பூரில் `டிரெய்னேஜ் காண்ட்ராக்ட்' எடுத்திருந்தவர்கள் வேலையின் பொருட்டும் இப்படி இலவச கப்பலில் ஆட்களை அழைத்துக்கொண்டு போயிருக்கிறார்கள்.

    சிங்கப்பூரில் சம்பாதித்த பணத்தில்தான் ஊரில் 2 ரைஸ்மில்களை தொடங்கியிருக்கிறார் அப்பா. தினமும் எங்கள் ரைஸ்மில்லில் இருந்து கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு 100 மூட்டை அரிசி போகும். எங்க குடும்பம் தவிர, வேலையாட்கள் எல்லாம் சேர்த்தால் தினமும் 20 பேருக்கு எங்கள் வீட்டில்தான் சாப்பாடு.

    நாங்கள் சகோதரர்கள் மொத்தம் ஐந்து பேர். பெரிய அண்ணன் ராமச்சந்திரன் சென்னைக்குப்போய் அங்குள்ள காசினோ தியேட்டர் அருகில் ஒரு பெட்டிக்கடை வைத்திருந்தார். அடுத்த 2 அண்ணன்கள் சிங்கப்பூர் போய் விட்டார்கள். அடுத்தது நான். எனக்கு ஒரு தம்பி. நானும் தம்பியும் படித்துக் கொண்டிருந்தோம்.

    அது 1962-ம் வருஷம். அப்போதெல்லாம் என் பொழுதுபோக்கே சினிமாவாகத்தான் இருந்தது. எங்கள் ஊரில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் ராஜாமணி, நீலா, முருகையா என்ற தியேட்டர்கள் இருந்தன. படம் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இரவில் ரைஸ்மில்லில் தங்கிவிடுவதாக வீட்டில் சொல்லி விடுவேன். படம் போடுகிற நேரத்துக்கு கொஞ்சம் முன்னதாக கட்டிலில் தலையணையை ஒரு ஆள் படுத்திருக்கிற மாதிரி வைத்து, போர்வையை போர்த்திவிட்டு சைக்கிளில் பறந்து விடுவேன்.

    சினிமாவில் எனக்கு எம்.ஜி.ஆர். படம், சிவாஜி படம் என்ற பேதம் எதுவும் கிடையாது. யார் நடித்த படம்  என்றாலும் பார்த்து விடுவேன். இப்படி வீட்டுக்குத் தெரியாமல் ரைஸ்மில்லில் படுத்திருப்பதாக `பேர் பண்ணிக்கொண்டு' படம் பார்க்கப்போனது ஒருநாள் அப்பாவுக்குத் தெரிந்து போயிற்று.

    ஒருநாள் இரவு ஏதோ விஷயமாக என்னைப் பார்க்க ரைஸ்மில்லுக்கு வந்திருக்கிறார், அப்பா. அப்போது என் குட்டு உடைந்து விட்டது! காலையில் எழுந்ததும் அப்பா செய்த முதல் காரியம், வீட்டுத் தூணில் என்னைக் கட்டிப்போட்டதுதான்! "உன்னை டாக்டராகவோ, என்ஜினீயராகவோ பார்க்க ஆசைப்பட்டதுக்கு இப்படி சினிமா பார்த்து படிப்பை தொலைச்சு, என் கனவை கலைச்சிட்டியே'' என்று வேதனைப்பட்டார் அப்பா.

    இதன் பிறகு என்னை அவர் தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கினார்.

    பள்ளிக்கூடத்தில் ரொம்ப கண்டிப்போடு பாடம் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது கும்பகோணத்தில் "வீரபாண்டிய கட்டபொம்மன்'' நாடகம் நடத்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன் வருவதாக ஊர் முழுக்க மைக்செட் கட்டிய வண்டிகளில் விளம்பரம் செய்தார்கள்.

    எங்கள் ஊரில் இருந்து, கும்பகோணத்துக்கு 40 மைல். ஆனாலும் சிவாஜியை பார்க்கும் ஆவலில் 30 நண்பர்கள் ஆளுக்கொரு வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு பறந்தோம். கும்பகோணத்தில் நாடகம் நடக்கவிருந்த இடத்துக்கு அருகே, ஒரு புளிய மரத்தின் அடியில் சைக்கிள்களை போட்டுவிட்டு மரங்களில் ஏறிக்கொண்டோம்.

    40 ஆயிரம் பேராவது வந்திருப்பார்கள். கும்பகோணம் மகாமகத்துக்குத்தான் இப்படி கூட்டம் கூடும் என்றார்கள்.

    எனக்கு எப்படியாவது சிவாஜியை பார்த்தால் போதும் என்ற நிலை. மரத்தின் உச்சியில் இருந்து பார்த்தால் கீழே நிற்பவர்களின் முகங்கள் மிகச் சிறிதாகத் தெரிந்தன.

    அந்த நேரத்தில், சிவாஜியின் குரல் `மைக்'கில் கேட்டது. சிவாஜியை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் கூட்டத்தினர் முண்டியடித்துக் கொண்டு முன்னேற, கூட்டத்தில் கலாட்டா ஏற்பட்டது. அதைக் கட்டுப்படுத்த, இரும்புத்தொப்பி போலீசார் வந்தார்கள். கூட்டத்தினரை இருபுறமாக பிரித்து, அவர்கள் ஏற்படுத்திய பாதையில் சிவாஜி நடந்து வந்தார். "நடிகர் திலகம் வாழ்க'' என்ற கோஷம் விண்ணை முட்டி எதிரொலித்தது. நான் மரத்தில் இருந்தபடி, வைத்தகண் வாங்காமல் பிரமிப்புடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

    அப்போதுதான் எனக்குள் மின்னல் மாதிரி ஒரு எண்ணம். சினிமாவில் நடித்ததால்தானே சிவாஜிக்கு இப்படியொரு புகழ்; அவரைப் பார்க்க இவ்வளவு பெரிய கூட்டம்! இவ்வளவு சக்தி வாய்ந்த சினிமாவில் நடிக்க, நாமும் ஏன் முயற்சிக்கக் கூடாது?- இப்படி நான் நினைத்தபோது எனக்கு 16 வயதுதான்! சென்னைக்கு போனால் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து விடுமா என்ற தயக்கம் கூட எட்டிப் பார்க்கவில்லை! சிவாஜியை பார்த்த இரண்டு நாளில், சென்னைக்கு ரெயில் ஏறிவிட்டேன்!

    அப்போது, எங்கள் ஊரில் இருந்து சென்னைக்கு ரெயில் கட்டணம் 7 ரூபாய்தான். வீட்டில் சொல்லாமல் புறப்பட்டாலும் சென்னையில் கடை வைத்திருக்கிற அண்ணனைப் பார்த்து, சினிமாவில் நடிக்கும் ஆசையை சொல்லி விட முடிவு செய்திருந்தேன்.

    சென்னைக்கு, என் முதல் ரெயில் பயணம் இவ்வாறாகத் தொடங்கியது.'' - இவ்வாறு விஜயகுமார் கூறினார்.

    சினிமாவில் `பிசி'யாக இருந்த நேரத்திலும், ஏராளமான டெலிவிஷன் தொடர்களில் மூர்த்தி நடித்தார். அவர் பங்கு கொண்ட "மீண்டும் மீண்டும் சிரிப்பு'' தொடர், ஐந்தாண்டுகள் ஒளிபரப்பு ஆயிற்று.
    சினிமாவில் `பிசி'யாக இருந்த நேரத்திலும், ஏராளமான டெலிவிஷன் தொடர்களில் மூர்த்தி நடித்தார். அவர் பங்கு கொண்ட "மீண்டும் மீண்டும் சிரிப்பு'' தொடர், ஐந்தாண்டுகள் ஒளிபரப்பு ஆயிற்று.

    இப்போது சின்னத்திரையில் இருக்கும் பிரபலங்கள் பலரும், பெரிய திரையிலும் ஜொலித்தவர்கள். இவர்களில் சிலர், சின்னத்திரை உதயமான நேரத்தில் அதைப்பற்றி வெளிப்படையாக கிண்டல் செய்தவர்கள், பெரிய திரையில் தொடர்ந்து நீடிக்க முடியாத நேரத்தில், சின்னத்திரைக்கு வந்து, "இதுதான் அதிக அளவில் மக்களை சென்றடைகிறது'' என்று முழங்கவும் செய்தார்கள்.

    ஆனால், தொடக்கம் முதலே சின்னத்திரையின் சக்தியைப் புரிந்து கொண்டு நல்ல புகழோடு இருந்த நேரத்திலேயே சின்னத்திரையிலும் தனது படைப்பு மூலமாக புகழ் பெற்றவர் டைரக்டர் கே.பாலசந்தர். நடிகர்களில் "வெண்ணிற ஆடை'' மூர்த்தி.

    சென்னை டெலிவிஷனின் ஆரம்ப காலத்தில், எஸ்.வி.ரமணனின் `தினேஷ் - கணேஷ்' தொடராக ஒளிபரப்பானது. இதில் காமெடி செய்தார், மூர்த்தி.

    மூர்த்தியிடம் எழுத்தாற்றலும் இருந்ததால் அவரே கதை, வசனம் எழுதி, "ஜுலை-7'' என்ற திகில் சீரியலை இயக்கினார். சன் டி.வி.யில் 13 வாரங்கள் ஒளிபரப்பான இந்த சீரியல், மூர்த்தியின் இயக்கும் திறனுக்கும் எடுத்துக்காட்டாய் அமைந்தது.

    தொடர்ந்து `ஜிஇசி' டி.வி.யில் "கேரி ஆன் கிட்டு'' என்ற நகைச்சுவை தொடரை இயக்கி நடித்தார்.

    இப்படி திகில், காமெடி இரண்டிலும் தன்னை வெளிப்படுத்திய மூர்த்திக்கு, அடுத்து வந்த சின்னத்திரை வாய்ப்பு முற்றிலும் அவரே எதிர்பாராதது. ஜோதிடத்தில் அவரது ஆற்றலை அறிந்த ஜெயா டிவி, ஜோதிட நிகழ்ச்சியை வழங்க அழைத்தது.

    ஜோதிடம், வாஸ்து தொடர்பான இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து 13 வாரம் வழங்கினார், மூர்த்தி. இதில்கூட வெறும் ஜோதிடத்தை கூறுவதுடன் நில்லாமல், இடையிடையே புராணக்கதைகளையும் சுவாரஸ்யமாக கலந்து டி.வி. ரசிகர்களை கவர்ந்தார்.

    தொடர்ந்து பல சீரியல்களில் நடிப்பைத் தொடர்ந்தவருக்கு, தேடி வந்த `ஜாக்பாட்' அதிர்ஷ்டம்தான் "மீண்டும் மீண்டும் சிரிப்பு'' நிகழ்ச்சி. இது "சன் டிவி''யில் ஒளிபரப்பாகி, மூர்த்தியின் நகைச்சுவை கீர்த்தியை பிரபலப்படுத்தியது.

    இதுபற்றி அவர் கூறியதாவது:-

    "ஐந்தாண்டுகளாக ரசிகர்களின் உணர்வோடு கலந்து போன ஒரு நிகழ்ச்சியாக, மீண்டும் மீண்டும் சிரிப்பு'' நிகழ்ச்சி அமைந்து விட்டது. ஒரு எபிசோடில் நகைச்சுவைப் பின்னணியில் ஒரு கதையை எடுத்துக் கொண்டு, அதில் ஒரு நல்ல மெசேஜ் வருகிற மாதிரி முடிக்க வேண்டும்.

    தொடக்கத்தில் இது பெரிய சவாலாகவே தெரிந்தது. என்றாலும் போகப்போக பழகிவிட்டது. நான் தொடர்ந்து 210 எபிசோடுகளை உருவாக்கினேன். நடப்பு விஷயங்களை நன்கு தெரிந்து வைத்திருப்பதால், அந்தப் பின்னணியில் காட்சிகளை உருவாக்குவது சிரமமாக இல்லை. இதற்குப் பிறகு ராதாகிருஷ்ணன் கைகொடுத்தார். அவர் 350 எபிசோடுகள் வரை உருவாக்கினார். சமீபத்தில் இந்த தொடர் சன் டிவி.யில் நிறைவு பெற்றது.

    நான் டி.வி.யிலும் நிகழ்ச்சிகள் வழங்கியதை பாராட்டி விருது கொடுத்தார்கள். தமிழ்நாடு சினிமா கலைமன்றம் முதன் முதலாக எனக்கு `நகைச்சுவை களஞ்சியம்' விருது கொடுத்து பாராட்டியது. இந்த பாராட்டு தந்த உற்சாகத்தில் சின்னத்திரைக்குள் இன்னும் தீவிரமானேன்.

    இந்த வகையில் தூர்தர்ஷனில் கதை வசனம் எழுதி, 5 சீரியல்களை இயக்கியிருக்கிறேன். தனியார் டி.வி.யில் 24 சீரியல்களில்

    நடித்திருக்கிறேன்.1992-ல் தமிழக அரசின் "கலைமாமணி'' விருது கிடைத்து, என் கலைப் பொறுப்பை அதிகமாக்கியது.''

    இவ்வாறு மூர்த்தி கூறினார்.

    கலைவாணர் விருது, நடிகர் சங்கத்தின் கலைச்செல்வம் விருது ஆகியவற்றோடு தெலுங்கின் பிரபல விருதான பிரகாசம் விருதையும் பெற்றவர், மூர்த்தி.

    சென்சார் போர்டு உறுப்பினராக 2 ஆண்டுகள், பட்ஜெட் படங்களை தீர்மானிக்கும் குழுவில் 2 ஆண்டுகள் சிறந்த படங் களை தேர்வு செய்யும் குழுவில் 2 ஆண்டுகள் என மத்திய, மாநில அரசுகளின் கவுரவப் பொறுப்புகளிலும் நீடித்திருக்கிறார்.

    நடிப்பில் தன்னை பல கோணங்களில் வெளிப்படுத்திய மூர்த்தி, நாணயங்களை சேகரிப்பதிலும் ஆர்வம் கொண்டவர். இந்திய நாணயங்கள், வெளிநாட்டு நாணயங்கள் 3 ஆயிரத்துக்கு மேல் இவர் கலெக்ஷனில் உள்ளன.

    பேசி சிரிக்க வைத்தவர் எழுதியும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். "வெண்ணிற ஆடை மூர்த்தியின் ஜோக்ஸ் டயரி'' பாகம்-1, பாகம்-2 என்ற பெயரில் 2 புத்தகங்களாக வெளிவந்திருக்கிறது. "சூப்பர் மார்க்கெட்'' என்ற புத்தகத்தையும் எழுதியிருக்கிறார்.

    `குட், பேட், அக்ளி' என்ற ஆங்கிலப் புத்தகம் வெளிவரும் தறுவாயில் இருக்கிறது.

    அமெரிக்காவில் இயங்கி வரும் "வடஅமெரிக்க தமிழ்ச்சங்க கூட்டணி'', நடிகர் நாகேஷையும், மூர்த்தியையும் அழைத்து கவுரவித்திருக்கிறது.

    வெளிநாடுகளில் "நட்சத்திர இரவு'' கலை நிகழ்ச்சிகளுக்கு `பிள்ளையார் சுழி' போட்டவரும் இவரே. அன்றைய பிரபலம் மோகன் - அமலா ஆகியோரை பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு அழைத்துச் சென்றார். மக்கள் கலைஞர் ஜெய்சங்கர், ராஜசுலோசனா, சி.ஐ.டி.சகுந்தலா உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களை தென்னாப்பிரிக்காவுக்கு அழைத்துச் சென்று வந்தார்.

    தென்னாப்பிரிக்காவிலும் தொடர்ந்து சிங்கப்பூரிலும் இந்த கலைக்குழுவினர் 30 நாட்களில் 26 மேடை நிகழ்ச்சிகள் நடத்தி அங்குள்ள தமிழர்களை பரவசப்படுத்தினார்கள்.

    "நம் நாட்டில் மட்டுமின்றி அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் மக்களை ஜோதிட மோகம் பிடித்து ஆட்டுகிறது'' என்கிறார், மூர்த்தி. அதற்கு உதாரணமாக அமெரிக்க சம்பவம் ஒன்றை சொன்னார்:

    "நம் நாட்டில் தாயத்தில் தொடங்கி நவரத்ன கற்கள் வரை ஜோதிட நம்பிக்கைக்கு ஆதாரங்களாக இருப்பது போல அமெரிக்காவிலும் இருக்கவே செய்கிறது. அங்கும் ஜோதிட நிலையங்கள் உள்ளன. பிரபல ஜோதிடர்கள் இதை நடத்துகிறார்கள்.

    சான்பிரான்சிஸ்கோவில் என் மகன் இருக்கும் பகுதியில்கூட "சைக்கிக் ஐ'' என்ற பெரிய ஜோதிட நிலையம் இயங்கி வருகிறது. ஒருநாள் என் மகன் மனு என்னிடம், "அப்பா! நீங்கள் பெரிய ஜோதிட நிபுணர் ஆயிற்றே! இங்குள்ள ஒரு ஜோதிடரை சந்தித்தால் என்ன?'' என்று கேட்டான். எனக்கும் அது சரியாகப்பட்டதால் சம்மதம் சொன்னேன். மகனே சந்திக்கும் நேரத்தை உறுதிப்படுத்தினான்.

    நான் ஜோதிட நிலையத்துக்குள் போய் அதன் தலைவரை சந்திக்க போனபோது, அங்கிருந்தவர் தலைவர் அல்ல; தலைவி!  கொஞ்சமே கொஞ்சமான வெளிச்சத்தில் அந்த ஜோதிட பெண்மணி அமர்ந்திருந்தார். என்னை சந்தித்ததும் எழுந்து கைகுலுக்கி வரவேற்றார். உடனே நான் அவரிடம், "மேடம்! நீங்கள் சிம்ம ராசிதானே?'' என்று கேட்டேன்.

    அந்தப் பெண்மணிக்கு ஆச்சரியமோ ஆச்சரியம். "சரிதான்! எப்படிச் சொன்னீர்கள்?'' என்று வியப்பை கண்களில் வெளிப்படுத்தினார்.

    நான் அவரிடம், "இது என் ஜோதிட குருநாதர் பண்டிட் கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வெளிப்படுத்திய `உத்தி.' ஒருவரை நாம் சந்திக்கும் நேரத்தை வைத்தே அவரது ராசியை கணக்கிட்டு விடலாம். அந்த அடிப்படையில்தான் உங்கள் ராசியை கணக்கிட்டேன்'' என்றேன். நான் விடைபெறும் வரை அவர் அந்த ஆச்சரியத்தில் இருந்து விடுபடவே இல்லை.

    அந்த நேரத்தில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வந்தது. புஷ்சை எதிர்த்து அல்கோரி போட்டியிட்டார். நவம்பரில் தேர்தல். நான்  ஜோதிடக் கணித அடிப்படையில் கணக்கிட்டு, "புஷ்தான் ஜனாதிபதியாவார்'' என்று என் மகனிடம் எழுதிக் கொடுத்தேன்.

    தேர்தலில் புஷ் வென்று, ஜனாதிபதியானார். ஆச்சரியப்பட்ட என் மகன், "அப்பா! இதை இங்குள்ள ஏதேனும் ஒரு `நெட்' மூலமாக வெளிப்படுத்தியிருந்தால் உங்கள் சரியான கணிப்புக்காக ஒரே நாளில் உலகப்புகழ் பெற்றிருப்பீர்கள்'' என்றான்.

    நான் அவனிடம் "இருக்கலாம். அதன் பிறகு தேர்தலில் நிற்கும் உலகத் தலைவர்கள் என்னை வேலை பார்க்க விடமாட்டார்களே! ஏற்கனவே கலைத்துறை மூலம் உலகம் முழுக்க உள்ள கலா ரசிகர்களுக்கு தெரிந்தவனாக, அவர்களால் கொண்டாடப்படுகிறவனாக இருக்கிறேனே! அந்த சந்தோஷம், அந்தப் புகழ் மட்டுமே போதும் என்றேன்.''

    புன்னகை முகமாய் சொல்லி முடித்தார், வெண்ணிற ஆடை மூர்த்தி.
    சினிமாவில் நடிக்க வரும் முன்னரே மூர்த்திக்கு நடிகர் நாகேஷ் பழக்கமாகியிருந்தார், மூர்த்தி. அப்போது சட்டக் கல்லூரி மாணவர். சென்னை சட்டக் கல்லூரியில் படித்தவர். தி.நகரில் உள்ள `கிளப் அவுசில்' அறை எடுத்து தங்கினார்.
    சினிமாவில் நடிக்க வரும் முன்னரே மூர்த்திக்கு நடிகர் நாகேஷ் பழக்கமாகியிருந்தார், மூர்த்தி. அப்போது சட்டக் கல்லூரி மாணவர். சென்னை சட்டக் கல்லூரியில் படித்தவர். தி.நகரில் உள்ள `கிளப் அவுசில்' அறை எடுத்து தங்கினார்.

    இந்த கிளப் அவுசில் கேரம்போர்டு விளையாட நடிகர்கள் நாகேஷ், ஸ்ரீகாந்த், கவிஞர் வாலி ஆகியோர் வருவதுண்டு. அப்போது இவர்களுடன் ஏற்பட்ட நட்பு, இன்றும் இவர்களை நல்ல நண்பர்களாக வைத்திருக்கிறது.

    அதுபற்றி மூர்த்தி கூறுகிறார்:-

    "நாகேஷ் சார் அப்போது ரெயில்வேயில் பணியாற்றிய வேலையை விட்டுவிட்டு, நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தார். சினிமா வாய்ப்பை எதிர்பார்த்து இருந்த நேரத்தில் கிளப் அவுசுக்கு வருவார். அவரும், ஸ்ரீகாந்தும், வாலியும் கேரம் போர்டில் ரொம்பவும் ஆர்வம் காட்டுவார்கள். மாலைப் பொழுது முழுக்க இவர்களுடன்தான் போகும்.

    சாதாரணமாக ஆரம்பித்த எங்கள் நட்பை, கேரம் போர்டு நெருக்கமாக்கியது. நாகேஷ் சார் அப்போதே என்னை உரிமையுடன் `வாடா போடா' என்பார். இரவு லேட்டானால் கிளப் அவுசில் உள்ள எனது அறையில் தங்கிச் செல்வார்.

    சில வருடங்கள் சந்திக்கவில்லை. நானும் சட்டம் முடித்து சினிமாவுக்கு வந்தேன். மறுபடி நாங்கள் சந்தித்தது முக்தா சீனிவாசனின் `தேன்மழை' படத்தில். இந்தப் படத்தில் நாகேஷ் சார் நடித்தார். நானும் இருந்தேன்.

    முதல் நாள் படப்பிடிப்பில் நாகேஷ் சாருக்கு என்னை அறிமுகம் செய்து வைக்க விரும்பிய டைரக்டர் முக்தா சீனிவாசன், என்னை அழைத்துக்கொண்டு நாகேஷ் சாரிடம் சென்றார். நாகேஷ் சாரை நெருங்கியதும், "மூர்த்தி! நாகேஷ் சாரை தெரியுமா? இவர்தான்'' என்று சரளமாக பேசியவர், நாகேஷிடம், "நாகேஷ்! இவர்தான் மூர்த்தி. நம்ம படத்தில் நடிக்கிறார்'' என்றார்.

    பார்த்த மாத்திரத்தில் என்னை நாகேஷ் தெரிந்து கொண்டார். பிறகு டைரக்டரிடம் "ஓய்! எனக்கு மூர்த்தியை அறிமுகப்படுத்துகிறீராக்கும்?'' என்று சொல்லிச் சிரித்தவர், எங்கள் `கிளப் அவுஸ்' கால நட்பு பற்றி விலாவாரியாக சொன்னார். டைரக்டர் மட்டுமல்ல, செட்டில் இருந்தவர்களும் ஆச்சரியப்பட்டார்கள்.

    தமிழ் சினிமாவில் அதுவரை `டான்ஸ்' ஆடத் தெரிந்த நகைச்சுவை நடிகர் என்றால் சந்திரபாபு என்ற நிலைமை இருந்தது. நாகேஷ் நடிக்க வந்த பிறகு, அந்த நிலைமை மாறிற்று. நடனத்திலும் அற்புதமான கோணங்களை வெளிப்படுத்தி ரசிகர்களை ஈர்த்தார். அப்போது புகழேணியின் உச்சியில் இருந்த அண்ணன் எம்.ஜி.ஆர்., அண்ணன் சிவாஜி இருவரின் படங்களிலும் இவர்தான் காமெடி என்கிற அளவுக்கு சினிமாவில் மிகப் பெரிய இடம் பிடித்தார்.

    அப்போதெல்லாம் ஒரு நாளைக்கு 3 கால்ஷீட் கூட கொடுத்தார். ஒரு கால்ஷீட் என்பது 8 மணி நேரம்.

    3 கால்ஷீட் என்னும்போது ஒரு நாள் முழுக்க ஓய்வேயில்லாமல் நடித்துக் கொடுக்க வேண்டும். அதாவது, தூங்கப் போகும் நேரத்தில் கூட ஏதாவது ஒரு செட்டில் நடித்துக் கொண்டிருப்பார். அந்த மாதிரி உழைத்து யாரையும் நான் பார்த்ததில்லை. ஷாட் இடைவேளையில் கிடைக்கிற அரை மணி, ஒரு மணி `கேப்'பில் தூங்கினால்தான் உண்டு. அப்படியும்கூட இவரை பார்க்கும் இயக்குனர்கள், `சார்! ஒரு மணி நேரம் வந்துட்டு போனீங்கன்னா உங்க போர்ஷனை முடிச்சிடுவேன்' என்று கேட்டுக் கொண்டிருப்பார்கள். நடிப்பில் தனி மேனரிசத்தைக் கையாண்டு ரசிகர்களை சிரிக்க வைத்ததற்குப் பின்னணியில் இவரது கடுமையான உழைப்பு உண்டு.

    நடிகர் தேங்காய் சீனிவாசன் நகைச்சுவையில் புது ஸ்டைல் மூலம் தன்னை நிலை நிறுத்தியவர். என் மீது ரொம்பவே பிரியம் கொண்டவர். ஒருமுறை என் ஆரோக்கியம் வேண்டி கீழ் திருப்பதியில் இருந்து ஏழுமலையான் கோவிலுக்கு நடந்தே சென்று வேண்டுதலை நிறைவேற்றியிருக்கிறார். இதுபற்றி தெரிய வந்தபோது, நெகிழ்ந்து போனேன். கூப்பிட்டு உரிமையுடன் கண்டித்தபோது, என் கண்டிப்பை கண்டுகொள்ளவே இல்லை. அவருக்கே உரிய சிரிப்புடன் நகர்ந்து போய்விட்டார்.

    சினிமாவில் நான் உருவாக்கிய ஸ்டைலை, தேங்காய் சீனிவாசனும் பின்னாளில் செய்தார். ஆனால் அதை அவருக்கே உரிய ஸ்டைலில் செய்தபோது ரசிகர்கள் பெரிய அளவில் ரசித்தார்கள்.

    நடிகர் வி.கே.ஆர். சாரை (வி.கே.ராமசாமி) நடிப்புக்கு மட்டுமின்றி அவரது தலைசிறந்த பண்புக்காகவும் நேசித்திருக்கிறேன். தன்னைவிட சிறு வயதுக்காரர்களைக் கூட `வாங்க' என்று மரியாதையுடன் அழைப்பது அவருக்கே உரிய பண்பு.

    ஒருமுறை அவருடன் மைசூரில் படப்பிடிப்புக்கு போயிருந்தபோது பழைய கால கதைகளை சுவாரசியத்துடன் அவர் சொன்ன அழகு, இப்போதும் கண்ணுக்குள் நிற்கிறது. என்போன்ற நகைச்சுவை நடிகர்களில் பலரும் கதைக்குள் நுழைகிறபோதுதான் காமெடி வரும். இவரோ சாதாரணமாய் பேசிக்கொண்டிருக்கும்போதுகூட காமெடி இவரிடம் இருந்து அருவியாய் கொட்டும்.

    இன்றைக்கு `ஆச்சி' என்ற அடைமொழியுடன் ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் `ஆச்சி' மனோரமாவுடன் சில படங்கள் சேர்ந்து நடித்திருக்கிறேன். செட்டில் நடிக்கும்போது இவரது நடிப்பைப் பார்த்தாலே புதியவர்களும் நடிப்பு கற்றுக்கொள்ளலாம்.

    ஒரு சீனில் தனது நடிப்பு பிடிக்கவில்லையானால் திரும்பவும் அந்த காட்சியில் நடித்துக் கொடுப்பார். சில காட்சிகளில் இயக்குனரே திருப்தி ஏற்பட்டு, "போதும்'' என்று சொன்னாலும் உடன்படமாட்டார். "எனக்கு ஏதோ ஒண்ணு திருப்தியில்லாமல் தெரிந்தது. என் திருப்திக்கு இன்னொரு `டேக்' எடுத்துடுங்களேன்'' என்று கேட்டு நடித்துக் கொடுப்பார். தொழிலில் இன்றைக்கும் அவருக்கு இருக்கும் இந்த ஈடுபாடுதான் இப்போதும் அவரை ரசிகர்கள் மனதில் நிரந்தரமாக்கி இருக்கிறது.

    அதுமாதிரி டிரெஸ்ஸிங் சென்ஸ் அதிகம். மேக்கப்பிலும் தனி கவனம் செலுத்துவார். அகில இந்திய அளவில் சிறந்த நடிகைகளாக, தொழில் பக்தியில் தேர்ந்தவர்களாக ஏழெட்டு நடிகையரை பட்டியல் போட்டால் இந்த பட்டியலில் மனோரமாவுக்கும் நிச்சயம் இடம் உண்டு.

    மனோரமா தவிர என்னுடன் ஜோடி சேர்ந்து காமெடி செய்தவர்களில் காந்திமதி, கோவை சரளா ஆகியோருக்கும் தமிழ் சினிமா நகைச்சுவைப் பட்டியலில் இடம் உண்டு. காந்திமதியின் தனித்துவ உச்சரிப்பு, அவருக்கே உரியது. கோவை சரளாவிடம் சுறுசுறுப்பு அதிகம். கற்றுக் கொள்வதிலும் ஆர்வம் அதிகம்.

    சினிமாவில் நான் வியந்து பார்த்த ஒரு நடிகர் எஸ்.வி.ரங்காராவ் அவர்கள். எந்த கேரக்டரானாலும், அதில் இவர் வெளிப்படுகிற விதம் பிரமிப்பாகவே இருக்கும்.

    நான் நடிக்க வந்த நேரத்தில் ஒரு படத்திலாவது இவருடன் நடித்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். `சீர்வரிசை' என்ற படத்தில் அப்படியொரு வாய்ப்பு வந்தது. ஆனாலும் என் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. அந்தப் படத்தில் நடித்த நேரத்தில் மரணம் அவரை அழைத்துக்கொண்டுவிட்டது. பிறகு அவர் கேரக்டரில் டி.கே.பகவதி நடித்தார்.

    எஸ்.வி.ரங்காராவ் மாதிரியே கொடுத்த கேரக்டருக்குள் தன்னை மறைத்துக் கொண்டு கேரக்டராகவே மாறிவிடும் இன்னொரு நடிகர் எஸ்.வி.சுப்பையா. பூக்காரி, சமையல்காரன் என 2 படங்களில் சேர்ந்து நடிக்கும்போது, `எப்பேர்ப்பட்ட கலைஞருடன் சேர்ந்து நடிக்கிறோம்' என்ற பிரமிப்பு ஏற்பட்டது.

    பட அதிபர்களுக்கு, முழு ஒத்துழைப்பு கொடுப்பவர் வெண்ணிற ஆடை மூர்த்தி. இதன் காரணமாக, சிலர் மனம் மகிழ்ந்து, பேசிய தொகைக்கு அதிகமாக சம்பளம் கொடுத்து, மூர்த்தியை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது உண்டு.
    பட அதிபர்களுக்கு, முழு ஒத்துழைப்பு கொடுப்பவர் வெண்ணிற ஆடை மூர்த்தி. இதன் காரணமாக, சிலர் மனம் மகிழ்ந்து, பேசிய தொகைக்கு அதிகமாக சம்பளம் கொடுத்து, மூர்த்தியை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது உண்டு.

    வசனம் பேசிக்கொண்டிருக்கும் போதே இடைச் செருகலாக புதிய வார்த்தைகள் எதையாவது கோர்த்து விடுவார், மூர்த்தி. நாளடைவில் ரசிகர்கள் அதை ரசிக்கத் தொடங்கி விட்டார்கள். ஒவ்வொரு படத்தில் மூர்த்தியைப் பார்க்கும்போதும், இந்தப் படத்தில் அதுமாதிரி புதுசாக என்ன சொல்லப்போகிறார் என்று எதிர்பார்க்கத் தொடங்கி விட்டார்கள்.

    இதுபற்றி மூர்த்தி கூறுகிறார்:-

    "சி.வி.ராஜேந்திரன் டைரக்ஷனில் "சுமதி என் சுந்தரி'' படத்தில் சகோதரி ஜெயலலிதா ஒரு சினிமா நடிகையாகவே வருவார். படத்தில் அவருக்கு நான் செகரட்டரி.

    இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, வசனத்தில் புதிதாக எதையாவது சேர்த்து புதுமை செய்யலாம் என்று தோன்றியது. அதற்கான முதல் அடி மட்டும் எடுத்து வைத்தேன். நான் சரியாகச் செய்யவில்லையோ அல்லது ரசிகர்களிடம் என் புதுமுயற்சி சேரவில்லையோ, அந்தப் படத்தில் நான் காட்டிய வித்தியாசம் எடுபடாமல் போய்விட்டது.

    டைரக்டர் மகேந்திரனின் "நெஞ்சத்தைக் கிள்ளாதே'' படத்தில் அடுத்த முயற்சியைத் தொடங்கினேன். அப்போது தோன்றிய `தம்ரி' என்ற வார்த்தையை மேனரிசத்துடன் செய்தேன். இந்த சவுண்டு `டெவலப்' ஆகி, அதுமுதல் என் புதிய படங்களிலும் அது மாதிரி ஏதாவது செய்தால்தான் ஆயிற்று என்கிற அளவுக்கு என்னைக் கொண்டுபோய் விட்டது.

    ஒருகட்டத்தில் இதை விட்டுவிட முடிவுசெய்தேன். ஆனால் படத்தின் டைரக்டர்கள் விடவில்லை. "மூர்த்தி சார்! வழக்கமான உங்கள் ஸ்டைல் வார்த்தைகள் வர்ற மாதிரியும் பேசிடுங்க'' என்பார்கள். கடைசியில் ரசிகர்கள் விருப்பம் எதுவோ அதுவே என் விருப்பமும் என்று இருந்துவிட்டேன்.''

    இவ்வாறு கூறினார், மூர்த்தி.

    மூர்த்திக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருந்தாலும் அவரது மகன் மனோ நடிகர் அர்ஜ×னின் தீவிர ரசிகர். தீவிர சைவரான மூர்த்தி, மகனை மட்டும் இது விஷயத்தில் கட்டுப்படுத்தவில்லை. விளைவு, சென்னையில் உள்ள சைனீஷ் ஓட்டல் ஒன்றில் மனோ நிரந்தர வாடிக்கையாளர். இங்குதான் நடிகர் அர்ஜ×னை சந்தித்திருக்கிறார் மனோ. சாப்பாட்டு வேளை, அவர்களின் நட்பு வேளையும் ஆயிற்று. அர்ஜ×னின் அதிரடி ஆக்ஷன் படங்கள் பார்த்ததில் அர்ஜ×னின் தீவிர ரசிகர் என்ற வட்டத்திலும் மனோ நெருங்கியிருந்தார்.

    இதுபற்றி மூர்த்தி கூறியதாவது:-

    "பி.எஸ்.வி. பிக்சர்சின் ஒரு படத்தில் அர்ஜ×னுடன் நானும் நடித்தேன். அப்போது ஏற்பட்ட நட்பில் அர்ஜ×ன் எங்கள் வீட்டுக்கும் வருவார். என் மகனின் பழக்கவழக்கங்கள், அணுகுமுறை என அத்தனையும் அவருக்கு தெரியவர, மனோ மீது அதிகப்படியான அன்பு செலுத்தினார். தனது நண்பர்களிடம், "பிள்ளை வளர்த்தால் மூர்த்தி சார் மாதிரி வளர்க்கணும்'' என்று சொல்கிற அளவுக்கு மனோவின் நட்பும், நடவடிக்கையும் அவருக்கு பிடித்துப்போயிருக்கிறது.

    மகன் திருமணத்துக்கு வந்து வாழ்த்தினார். மகன் மூலம் இறுகிய எங்கள் நட்பு, தொழிலிலும் எங்களை இணைத்தது. அவர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் சமீபத்திய `வேதம்' படத்தில்கூட எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.''

    இவ்வாறு சொன்னார், மூர்த்தி.

    சினிமாவில் "பிரிக்க முடியாதது எதுவோ?'' என்று சிவபெருமான் - தருமி திருவிளையாடல் பாணியில் கேட்டால் - "நடிகர்களும் சம்பளப் பாக்கியும்'' என்று சொல்லலாம். இந்த பாக்கியை அடுத்தடுத்த படங்களில் கொடுத்து சரி செய்து விடும் தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள். சம்பளம் பாக்கி வரவேண்டியிருக்கிறது என்பதை சொல்லாமலே மோப்பம் பிடித்து தேடி வந்து `பாக்கியை' கொடுக்கும் தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள்.

    மூர்த்திக்கும் இப்படி இரண்டொரு `இன்ப அதிர்ச்சி' இருக்கவே இருக்கிறது. அது பற்றி கூறுகிறார்:-

    டைரக்டர் பாசில் தயாரிப்பாளராகவும் மாறி உருவாக்கிய படம், `அரங்கேற்றவேளை.' இந்தப் படத்தில் நடிக்க பாசிலின் சகோதரர்தான் எனக்கு சம்பளம் பேசினார். சம்பளத்தில் 5 ஆயிரம் ரூபாய் வரவேண்டியிருந்தது. டப்பிங் பேசப்போனபோது, பாக்கி பணத்தை கொடுத்துவிட்டார்கள்.

    நான் டப்பிங் பேசி முடித்து டப்பிங் தியேட்டரில் இருந்து புறப்பட்ட நேரத்தில், டைரக்டரும் தயாரிப்பாளருமான பாசில் என்னை அழைப்பதாக பாசிலின் உதவியாளர் சொன்னார். அவரை சந்தித்தேன். "படத்தில் எனக்கு நல்லவிதமாக ஒத்துழைச்சீங்க. அதுக்கு என்னோட சின்ன அன்பளிப்பு'' என்று கூறிய பாசில், சட்டென என் கையில் 5 ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டார். சரியாக ஐயாயிரம். எனக்கு இன்ப அதிர்ச்சி. எனக்கு வரவேண்டிய பாக்கியாக இருந்த 5 ஆயிரத்தை கொடுத்திருந்தால், நான் வாங்கிக்கொள்ள முடியாது. கொஞ்சம் முன்னாடிதான் பாக்கி தொகையை வாங்கியிருக்கிறேன். எனவே நான் பதறியபடி, "என்ன சார் நீங்க? எனக்கு சம்பள பாக்கி கிடையாது. டப்பிங்குக்கு வந்ததுமே தரவேண்டியிருந்த 5 ஆயிரத்தையும் கொடுத்து விட்டார்கள்'' என்று சொல்லி பணத்தை அவரிடம் திரும்பவும் கொடுக்க முயன்றேன்.

    ஆனால் பாசிலோ பிடிவாதமாக, "நோ! நோ! இது நானாக உங்களுக்கு கொடுக்கிறேன் சார். படத்தில் உங்கள் ஈடுபாடு பார்த்து பிடித்து நானாகக் கொடுக்கிற இந்த அன்பளிப்பை மறுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும்'' என்று சொல்லிவிட்டார்.

    இவர் மாதிரியே டைரக்டர் கே.எஸ்.சேதுமாதவன் தயாரிப்பாளராக இருந்த "ஏணிப்படிகள்'' படத்திலும் நடந்தது. சிவகுமார் - ஷோபா நடித்த அந்தப் படத்தை டைரக்டர் பி.மாதவன் இயக்கினார். படம் ரிலீசாகப் போகிற சமயத்தில் என்னை வரச்சொல்லி சேதுமாதவன் சந்தித்தார். "நம்ம படம் ரிலீசாகப் போகுது. உங்களுக்கு எங்க தயாரிப்பு நிர்வாகி ஏதாவது பாக்கி வைத்திருக்கிறாரா?'' என்று

    கேட்டார்.எனக்கு 3 ஆயிரம் மட்டும் வரவேண்டியிருந்தது. அதைச் சொன்னேன். "இருக்கட்டும் சார்! அப்புறமா வாங்கிக்கறேன்''

    என்றேன்.ஆனால் சேதுமாதவன் விடவில்லை. "உங்கள் விஷயம் என் காதுக்கு வரவில்லை. அதனால்தான் கேட்டு தெரிந்து கொண்டேன். பாக்கி தொகை 3 ஆயிரத்தையும் நீங்கள் பெற்றுக்கொண்டால்தான் படத்தின் தயாரிப்பாளரான எனக்கு சந்தோஷம்'' என்றார். அவரது பெருந்தன்மைக்கு தலைவணங்கி பணத்தை பெற்றுக்கொண்டேன்.

    டைரக்டர் ராம.நாராயணன் இயக்க வந்த புதிதில் `சிவப்பு மல்லி' என்ற படத்துக்கு என்னை அழைத்திருந்தார்கள். சின்ன பட்ஜெட் படம் என கேள்விப் பட்டிருந்ததால் சம்பளத்தை கம்மியாக கேட்டேன். படம் முடிந்த பிறகு ராம.நாராயணன் என்னை அழைத்துப் பேசினார். "ஒரு தயாரிப்பு நிறுவனம் நன்றாக இருக்கணும் என்கிற மனசு உங்களுக்கு இருக்கு. அடுத்து நான் டைரக்ட் பண்ற படங்களில் உங்களுக்கு நிச்சயம் வாய்ப்பு உண்டு. படத்துக்கு படம் உங்கள் சம்பளமும் அதிகமாகும் என்றார். ராம.நாராயணன் இயக்கிய படங்களில் நான் அதிகமாக நடித்த பின்னணியும் இதுதான்.''

    இவ்வாறு மூர்த்தி கூறினார்.

    ×