என் மலர்tooltip icon

    சினி வரலாறு

    பிரபல எழுத்தாளர் சிவசங்கரியின் "47 நாட்கள்'' என்ற நாவல், கே.பாலசந்தர் டைரக்ஷனில் படமாகியது. இதில், சிரஞ்சீவி (இன்றைய தெலுங்குப் பட உலகின் சூப்பர் ஸ்டார்) கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.
    பிரபல எழுத்தாளர் சிவசங்கரியின் "47 நாட்கள்'' என்ற நாவல், கே.பாலசந்தர் டைரக்ஷனில் படமாகியது. இதில், சிரஞ்சீவி (இன்றைய தெலுங்குப் பட உலகின் சூப்பர் ஸ்டார்) கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.

    வெளிநாட்டில் வசிப்பவர்கள், தமிழ்நாட்டுக்கு வந்து நல்லவர்கள் போல் நடித்து அழகிய பெண்களை திருமணம் செய்து அழைத்து செல்வது, பிறகு சித்ரவதை செய்து விரட்டி விடுவது பற்றிய செய்திகள் அவ்வப்போது பத்திரிகைகளில் வெளியாகின்றன அல்லவா?

    இதை மையமாக வைத்து, ஏற்கனவே எழுத்தாளர் சிவசங்கரி "47 நாட்கள்'' என்ற நாவலை எழுதினார். இது, பாலசந்தர் டைரக்ஷனில் 1981-ல் படமாக வெளிவந்தது.

    இதுபற்றி சிவசங்கரி எழுதியிருப்பதாவது:-

    "முதன் முதலாக பாலசந்தரை சந்தித்த நிமிஷத்தில் கொஞ்சம் சந்தோஷம், கொஞ்சம் பயம், கொஞ்சம் படபடப்பு என்று நான் அவஸ்தை பட்டுக் கொண்டிருந்தது நிஜம்.

    நான் எழுதிய "47 நாட்கள்'' கதையை பாலசந்தர் திரைப்படமாக்கப்போகிறார் என்ற சந்தோஷம், இத்தனை பெரிய டைரக்டருக்கு சமமாய் உட்கார்ந்து விவாதிக்கப் போகிற அளவிற்கு சினிமாவைப் பற்றி எனக்கு என்ன தெரியும் என்ற பயம், படபடப்பு. ஆனால் அந்த பயமும், படபடப்பும் சரியாய் இரண்டு நிமிடங்களில் மாயமாய் மறைந்து போனதுதான் ஆச்சரியம்.

    தன்னோடு பேசுபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களைப் பரவசத்தில் ஆழ்த்துவது என்பது சிலருக்கு மட்டுமே சாத்தியமான காரியம். என்னைப் பொறுத்தவரையில், அந்த சிலரில் பாலசந்தரையும் நான் சேர்க்க விரும்புகிறேன்.

    பாலசந்தர் என்னிடம், "47 நாட்கள் ரொம்பவும் பிரபலமான கதை. நான் அதைப்படம் எடுக்கும்போது ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டும். படம் நன்றாக அமையாவிட்டால், சிவசங்கரியின் கதையை பாலசந்தர் கெடுத்துவிட்டார் என்றுதான் சொல்வார்கள். அதனாலே, அந்த பயம் எனக்கு இருக்கிறது'' என்றார்.

    திரைப்பட உலகிற்கு முன்னோடியாக, ஒரு வழிகாட்டியாக திகழ்பவருக்கு பயமா!

    என் வியப்பை நான் வெளியிட்டதும், பாலசந்தர் "ஆமாம்'' என்று தலையசைத்தார்.

    "ஆம். அந்த பயம் அடிமனதில் உறுத்திக்கொண்டே இருந்தால்தான் கவனத்துடனும், சிரத்தையுடனும் என்னால் வேலை பார்க்க முடியும். படம் சிறப்பாக அமைய இந்த பயமும், தவிப்பும் முக்கியம்'' என்றார், பாலசந்தர்.

    "47 நாட்கள்'' படத்தில் கதாநாயகனாக நடித்தவர், சிரஞ்சீவி. அவர் கதாநாயகனாக நடித்த முதல் படம் இதுதான். அவர் இப்போது ஆந்திராவில் சூப்பர் ஸ்டாராக விளங்குகிறார்.

    கதாநாயகியாக நடித்தவர் ஜெயப்பிரதா.

    இந்தப் படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் எல்லாம் நடந்தது. படம் நன்றாக அமைந்தும், எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.

    டைரக்டர் ஆவதற்கு நடிகை லட்சுமிக்கு ஊக்கம் அளித்தவர், பாலசந்தர்.

    இதுபற்றி லட்சுமி கூறியிருப்பதாவது:-

    "ஒரு கலைஞனிடம் மறைந்திருக்கும் கலைத் திறமையைக் கண்டு பிடித்து, வெளி உலகுக்கு கொண்டு வருபவர் என்னுடைய குரு கே.பாலசந்தர். படங்களில் காபரே நடனங்கள் மட்டும் ஆடிக்கொண்டிருந்த ஆலத்தை "மன்மதலீலை''யின் கதாநாயகி ஆக்கியவர். சூப்பர் ஸ்டார்களான ரஜினி, கமல் ஆகியவர்களை படங்களில் வில்லன்களாக நடிக்க வைத்தவர்.

    நான் டைரக்ட் செய்ய வேண்டும் என்ற விருப்பத்தை அவரிடம் சொன்னபோது, "உனக்கு அதற்கான திறமை இருக்கிறது. தைரியமாகச் செய்!'' என்று ஊக்கப்படுத்தியதோடு, அவர் டைரக்ட் செய்யும் நிறுவனத்திலேயே எனக்கு டைரக்ட் செய்ய வாய்ப்பு கொடுத்தார்.

    "லட்சுமி ஒரு படத்தை டைரக்ட் செய்யப் போகிறாராம். அதற்கு பாலசந்தர் உதவி செய்கிறாராம். படத்தின் முடிவு எப்படி இருக்கும்?'' என்று வாசகர் ஒருவர், ஒரு பத்திரிகையில் கேள்வி கேட்டிருந்தார். "படம் ஓடினால் லட்சுமிக்கு பெயர். தோல்வி அடைந்தால் பாலசந்தரை திட்டுவார்கள்'' என்று பதில் எழுதியிருந்தது அந்தப் பத்திரிகை. இது முற்றிலும் உண்மை.

    நான் டைரக்ட் செய்வதற்கு பாலசந்தர் தைரியம் கொடுத்தார். பாலசந்தரின் மேற்பார்வையில் விசுவும், நானும் ஒரே சமயத்தில் டைரக்ட் செய்யக் கற்றுக்கொண்டோம் என்று சொல்லலாம்.

    "மழலைப்பட்டாளம்'' ஓடியவுடன், அது பாலசந்தரின் மேற்பார்வையில் டைரக்ட் செய்யப்பட்டது என்பதை மறந்து விட்டு, "அடுத்த படத்தை எப்போது டைரக்ட் செய்யப்போகிறீர்கள்?'' என்று என்னைக் கேட்க ஆரம்பித்து விட்டனர். படம் ஓடாமல் இருந்தால், அவரைத்தானே திட்டி இருப்பார்கள்!

    "சில நேரங்களில் சில மனிதர்கள்'' படத்தில் என் சிறந்த நடிப்புக்காக எனக்கு தேசிய விருது கிடைத்தது. அதற்காக சென்னையில் ஒரு பாராட்டு விழா நடந்தது.

    நான் மேடையில் இருந்து கீழே இறங்கியபோது, பாலசந்தர் "ஒரு நிமிடம்'' என்றார். நான் அவர் பக்கம் திரும்பினேன். "நவக்கிரகம் செட்டில் நான் ஒரு வார்த்தை சொன்னேன். ஞாபகம் இருக்கிறதா?'' என்று கேட்டார்.

    அவர் முன்பு சொன்னது என் நினைவுத் திரையில் நிழலாட ஆரம்பித்தது. "நவக்கிரகம்'' படப்பிடிப்பு நடந்து வந்தபோது, "நான் திருமணம் செய்து கொண்டு, திரை உலகில் இருந்து விலகிவிடப்போகிறேன்'' என்று அவரிடம் கூறினேன்.

    "சாவித்திரி, பானுமதி, சவுகார்ஜானகி இவர்கள் மூன்று பேருக்குப் பிறகு, அந்த லிஸ்டில் யாருமில்லை. நீ இந்தப் பட உலகை விட்டு போகக்கூடாது. இதை அதிகாரமாகச் சொல்லவில்லை. இது என் வேண்டுகோள்'' என்று பாலசந்தர் கூறினார்.

    இதைத்தான் பாலசந்தர் நினைவு படுத்தினார்.

    "அன்றைக்கு நான் சொன்னேனே லட்சுமி! சினிமா உலகில் நீ தொடர்ந்து இருப்பதால்தானே இன்றைக்கு உன்னாலே தேசிய விருது வாங்க முடிந்தது!'' என்றார்.

    "ஆமாம் சார். ரொம்ப சந்தோஷம். தேசிய விருது வாங்குகிற அளவுக்கு நடிப்பிலே என்னை வளர்த்து இருக்கிறீர்கள். அதற்கு எப்படி நன்றி சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை'' என்று சொன்னேன்.''

    இவ்வாறு லட்சுமி குறிப்பிட்டுள்ளார்.

    தண்ணீர் பஞ்சத்தை மையமாக வைத்து பாலசந்தர் உருவாக்கிய "தண்ணீர் தண்ணீர்'' படத்துக்கு மத்திய அரசின் பரிசு கிடைத்தது. ஆனால் மாநில அரசின் பரிசு கிடைக்கவில்லை.
    தண்ணீர் பஞ்சத்தை மையமாக வைத்து பாலசந்தர் உருவாக்கிய "தண்ணீர் தண்ணீர்'' படத்துக்கு மத்திய அரசின் பரிசு கிடைத்தது. ஆனால் மாநில அரசின் பரிசு கிடைக்கவில்லை.

    கமலஹாசனையும், ஸ்ரீதேவியையும் வைத்து "வறுமையின் நிறம் சிவப்பு'' என்ற படத்தை 1980-ல் பாலசந்தர் உருவாக்கினார். கருத்தாழம் மிக்க படம்.

    பொதுவாக, பாடல் காட்சிகளை சிறப்பாகவும், புதுமையாகவும் படமாக்க வேண்டும் என்பதில், பாலசந்தர் அதிகம் சிரமம் எடுத்துக்கொள்வார். உதாரணமாக, அவள் ஒரு தொடர் கதையில் "கடவுள் அமைத்து வைத்த மேடை...'' என்ற பாடல் காட்சி புதுமையானது. பாடலில் சிங்கம் கர்ஜிப்பது, யானை பிளிறுவது போன்ற சத்தங்கள் வரும். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாட, கமலஹாசன் பிரமாதமாக நடித்திருப்பார். பாடல், இசை, நடிப்பு, டைரக்ஷன் எல்லாம் சிறப்பாக அமைந்த காட்சி அது.

    "அவர்கள்'' படத்தில் பேசும் பொம்மையுடன் கமலஹாசன் பாடும் பாடலும் இவ்வாறே பெரும் பாராட்டுதலைப் பெற்றது.

    "வறுமையின் நிறம் சிவப்பு'' படத்தில் மறக்க முடியாத ஒரு பாடல் காட்சி:-

    பாடலுக்கான மெட்டை (எஸ்.ஜானகியின் குரலில்) இசை அமைப்பாளர் போல ஒவ்வொரு வரியாக ஸ்ரீதேவி பாடிக்காட்ட, "சிப்பி இருக்குது, முத்து இருக்குது'' என்ற பாடல் வரிகளை சொல்லிக் கொண்டே வருவார், கமலஹாசன்.

    இசை, நடிப்பு, டைரக்ஷன் மூன்றும், திரிவேணி சங்கமம் போல் அமைந்த அற்புதக்காட்சி அது.

    இதையடுத்து பாலசந்தர் எடுத்த படம் "தண்ணீர் தண்ணீர்''

    அப்போது (1981) தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் அதிகமாக இருந்தது. அதை மையமாக வைத்து கோமல்சுவாமி நாதன் கதை- வசனம் எழுதி, நாடகமாக நடத்தியதுதான் "தண்ணீர் தண்ணீர்.'' அதற்கு திரைக்கதை எழுதி, டைரக்ட் செய்தார், பாலசந்தர்.

    படத்தின் கதாநாயகி சரிதா. பெரும்பாலும் புதுமுகங்கள் நடித்தனர்.

    அப்போது தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். இருந்தார்.

    தண்ணீர் பிரச்சினை என்பதால், படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகளும், வசனங்களும் அரசாங்கத்தை தாக்குவது போல் இருப்பதாக அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கருதினார்கள்.

    இதுபற்றி பாலசந்தர் கூறியிருப்பதாவது:-

    "படம் வெற்றிகரமாக ஓடியது. படத்தில் அரசை தாறுமாறாக தாக்கி இருப்பதாக, எம்.ஜி.ஆருக்கு தகவல் போயிற்று.

    "இந்தப் படத்துக்கு சென்சாரில் எப்படி அனுமதி கொடுத்தார்கள்?'' என்று எம்.ஜி.ஆர். கூறியதாக எனக்கு தெரியவந்தது.

    "படத்தின் முடிவில், எல்லோரும் துப்பாக்கி எடுத்துக்கொண்டு வன்முறை பக்கம் திரும்புவதாக காட்டப்பட்டிருக்கிறது'' என்று பலர் குற்றம் சாட்டினார்கள்.

    ஒரு புரட்சிக்காரன் எப்படி உருவாக்கப்படுகிறான் என்பதை காட்டுவதற்காக எடுக்கப்பட்ட காட்சி அது. எல்லோரும் தீவிரவாதியாக மாறவேண்டும் என்று சொன்ன காட்சி அல்ல. அரசு பற்றிய விமர்சனங்களும் நாசூக்காக இருக்கும்.

    படத்தைப்பற்றி வாதப்பிரதி வாதங்கள் நடந்தன. "துப்பாக்கி தூக்கச் சொல்கிறார், பாலசந்தர்'' என்று முணுமுணுக்கப்பட்டதாலும், தணிக்கைக் குழுவுக்கு அரசு சென்றதாலும், அந்தக் கடைசி காட்சியில் சில மாறுதல்கள் செய்தேன்.

    அந்த ஆண்டு விருதுக்காக, மத்திய மாநில அரசுகளுக்கு "தண்ணீர் தண்ணீர்'' அனுப்பப்பட்டது.

    மாநில அரசின் விருது கிடைக்கவில்லை. ஆனால், சிறந்த மாநில மொழிப்படம் என்றும், தேசிய அளவிலான சிறந்த திரைக்கதை என்றும் இரண்டு பரிசுகளை மத்திய அரசு வழங்கியது.

    "தண்ணீர் தண்ணீர்'' படத்துக்கு சிறந்த படத்துக்கான விருதும், சிறந்த நடிகைக்கான விருதும் (சரிதாவுக்கு) வழங்க மாநில தேர்வுக்குழு முடிவு செய்திருப்பதாக, ஆரம்பத்தில் எனக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்தன. ஆனால் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானபோது, எந்த பரிசும் கிடைக்கவில்லை.

    ஆனால், "வறுமையின் நிறம் சிவப்பு'' படத்துக்கு மாநில அரசின் விருது கிடைத்தது.

    பரிசளிப்பு விழா எம்.ஜி.ஆர். தலைமையில் நடந்தது.

    விருது வழங்கும் விழாவில், எம்.ஜி.ஆர். முன்னிலையில் நான் பேசியது, இன்றும் நினைவில் இருக்கிறது. "என் மீது அரசுக்கு கோபம் இருக்கலாம். தண்ணீர் தண்ணீர் படத்தால் ஏற்பட்ட அந்தக் கோபத்தின் காரணமாக, இந்தப் படத்துக்கும் விருது தரப்படமாட்டாது என்று எண்ணினேன். அதற்கு மாறாக, எம்.ஜி.ஆர். கையால் இப்போது விருது வாங்கி இருக்கிறேன். இது எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது'' என்று குறிப்பிட்டேன்.

    எம்.ஜி.ஆர். பேசும்போது, என் பேச்சுக்கு பதிலளித்தார். "அந்தந்த நேரத்தில் எது நல்ல படம் என்று எண்ணுகிறோமோ, அதைத்தான் தேர்வு செய்வோமே தவிர, ஏதோ ஒரு காரணத்துக்காக பழி வாங்கும் எண்ணமோ, திறமையானவர்களை ஒதுக்கி வைத்து விடும் எண்ணமோ கிடையாது'' என்று குறிப்பிட்டார்.

    எம்.ஜி.ஆரின் "தெய்வத்தாய்'' படத்துக்கு வசனம் எழுதியதன் மூலம்தான் திரை உலகுக்கு வந்தேன். "எம்.ஜி.ஆர். படத்துக்கு பாலசந்தர் வசனம் எழுதுகிறார்'' என்ற மதிப்பும், மரியாதையும் திரை உலகில் எனக்கு ஏற்பட காரணமாக இருந்தவர் அவர். தனது அரசாங்கத்தை விமர்சித்து படம் வந்தாலும், அதை பொருட்படுத்தாமல் என்னை வாழ்த்தியது கண்டு நெகிழ்ந்து போனேன்.''

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.
    பாலசந்தர் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி என்பதை, கமலஹாசன் விளக்கினார். "என்னுடைய திரை உலகத் தந்தை அவர்'' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
    பாலசந்தர் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி என்பதை, கமலஹாசன் விளக்கினார். "என்னுடைய திரை உலகத் தந்தை அவர்'' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

    ஏவி.எம். நிறுவனம் தயாரித்த "களத்தூர் கண்ணம்மா'' (1960) படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் கமலஹாசன். அதன்பின் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

    அதன் பின்னர் நாலைந்து வருடம் குழந்தையாகவும் நடிக்க முடியவில்லை; வாலிபனாகவும் நடிக்க முடியவில்லை. எனவே நடனம் கற்றுக்கொண்டார். சில படங்களில் உதவி நடன இயக்குனராகவும், உதவி டைரக்டராகவும் பணியாற்றினார்.

    இந்த சமயத்தில்தான் அவர் பாலசந்தர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

    அதுபற்றி கமலஹாசன் கூறியிருப்பதாவது:-

    "ஜெமினிகணேசன்தான் என்னை முதன் முதலாக பாலசந்தரிடம் அழைத்துச் சென்றார்.

    அப்போது, "அன்னை வேளாங்கண்ணி'' படத்தில் உதவி டைரக்டராக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். என்னைப் பார்த்த ஜெமினி, "என்னடா இது! இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கே! நடிக்க வேண்டாமா?'' என்று கேட்டார்.

    "நீங்க வேற! யார் சார் கூப்பிடறாங்க!'' என்றேன்.

    உடனே அவர் என்னை பாலசந்தரிடம் கூட்டிப்போய் அறிமுகம் செய்து வைத்தார். "ரொம்ப சின்னப் பையனா இருக்கானே!'' என்றார், பாலசந்தர்.

    உடனே ஜெமினிகணேசன், பாலசந்தர் போட்டிருந்த கண்ணாடியைக் கழற்றி, எனக்குப் போட்டு விட்டு, "இப்போது பாருங்க! பெரிய பையனா இல்லே?'' என்று கேட்டார்.

    பாலசந்தர், "எனக்கு கண் தெரியவில்லையே!'' என்றார். ஒரே சிரிப்பு.

    இது நடந்து கொஞ்ச நாளில் பாலசந்தருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். எனக்கு ஒரே வருத்தம்.

    சில நாட்கள் கழித்து அவர் குணம் ஆனதும், என்னைப் பற்றி விசாரித்து இருக்கிறார். "அந்தப் பையனைப் பார்த்தது நினைவு இருக்கிறது. அழைத்து வாருங்கள்'' என்று கூறி ஆள் அனுப்பினார்.

    அவரை போய்ப் பார்த்தேன். அரங்கேற்றத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தார். அதன்பின் நடந்தது, உங்களுக்குத் தெரியும்.

    "கமலஹாசன் ஒரு ஆக்டர்'' என்பதை திருப்பித் திருப்பி ஆணி அடிச்ச மாதிரி சொல்லிக்கொண்டே இருந்தது பாலசந்தர் ஒருவர்தான்.

    நான் அவருக்குத் தோல்விப் படங்களைக் கொடுத்திருக்கிறேன். என்றாலும், விடாமல் என்னை பயன்படுத்தியிருக்கிறார். அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், நான் அவனில்லை, அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள், மன்மதலீலை, மூன்று முடிச்சு, நிழல் நிஜமாகிறது, தப்புத் தாளங்கள், நினைத்தாலே இனிக்கும், மரோசரித்ரா, வறுமையின் நிறம் சிவப்பு... இப்படி தொடர்ந்து அவர் படங்களில் நடித்தேன். அவர் எடுத்த "ஆய்னா''வில் (இந்தி "அரங்கேற்றம்'') கூட ஒரு சின்ன ரோலில் வருவேன். அவர் என்னை பயன்படுத்தினார்.... உருவாக்கினார். பெருமைக்குரிய திரையுலகத் தந்தையாக அவர் எனக்குக் கிடைத்தார்.

    அவர் என்னிடம் ரொம்பப் பிரியமாக இருப்பார். அதே சமயம், அவரிடம் அதிகமாகத் திட்டு வாங்கியவனும் நான்தான்.

    எனக்கு வந்த கடிதங்களில் "பொக்கிஷம்'' என 2 கடிதங்களைப் பாதுகாத்து வருகிறேன். இரண்டையுமே எழுதியவர், மதிப்பிற்குரிய பாலசந்தர்தான்.

    நூறு படங்களில் நான் நடித்து முடித்ததற்கான விழாவுக்கு, உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் அவரால் வர இயலவில்லை. என்னை அவர் வீட்டுக்கு வரச்சொன்னார். வணங்கிய என்னை வாழ்த்தி, முன்பே அவர் எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை என்னிடம் கொடுத்து "இங்கேயே படி'' என்றார். அந்தக் கடிதம்:-

    எனது கமலுக்கு ஒரு மாபெரும் விழா எடுக்கும்பொழுது, அதில் நான் பங்கு கொள்ள முடியாமல் போனது துர்பாக்கியம். நூறு உனக்கு பெரிதல்ல. இன்னும் ஆயிரம் நூறுகள் போடப்போகிறாய். இன்னும் எத்தனையோ சாதனைகள் செய்யப் போகிறாய். உனது சாதனைகள் அனைத்தும், எனக்கும் பெருமை தேடித்தரும் என்று எண்ணுகிறவன் நான்.

    கமல் ஒரு தனி நபரல்ல. ஒரு பெரிய நிறுவனம்.

    வாழ்க உனது நாமம்! வாழ்க உனது பெருமை!

    வாழ்த்துக்களுடன்

    அன்பன்,

    கே.பாலசந்தர்.''

    இக்கடிதத்தை, கண்களில் நீர் துளிக்கப் படித்தேன்.

    மற்றொரு கடிதம்: "பதினாறு வயதினிலே'' படத்தைப் பார்த்துவிட்டு பாச மிகுதியால் "மை டியர் ராஸ்கல்'' என்று ஆரம்பித்து, பாலசந்தர் எழுதியது என் நடிப்புத் திறமைக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு இதுதான் எனக் கருதுகிறேன்.

    அவருடைய திரைப்படங்களில், டைட்டில் கார்டில் "திரைக்கதை, வசனம், டைரக்ஷன் - கே.பாலசந்தர்'' என்று போட்டிருக்கும். மூன்றிலும் அவர் சிறந்தவர்.

    "என்னுடைய கலை உலகத் தந்தை மூன்றிலுமே சிறந்தவர்'' என்று சொல்லக்கூடிய பெருமிதத்தை எனக்குத் தந்திருக்கிறார்.''

    இவ்வாறு கமலஹாசன் கூறியுள்ளார்.

    சிவாஜிகணேசன் நடித்த "எதிரொலி'' என்ற ஒரே படத்தைத்தான் கே.பாலசந்தர் இயக்கினார், என்றாலும், அதற்கு முன்பே சிவாஜியுடன் பழக்கம் உண்டு.
    சிவாஜிகணேசன் நடித்த "எதிரொலி'' என்ற ஒரே படத்தைத்தான் கே.பாலசந்தர் இயக்கினார், என்றாலும், அதற்கு முன்பே சிவாஜியுடன் பழக்கம் உண்டு.

    இதுபற்றி பாலசந்தர் கூறியிருப்பதாவது:-

    "சிவாஜியின் அலங்கார நிபுணரான ராமகிருஷ்ணன் என்று ஒருவர் இருந்தார். என் நாடகங்களைப் பார்த்தவர். என் கதையில் சிவாஜி நடிக்க வேண்டும், அதை மாதவன் இயக்க வேண்டும் என்று விரும்பினார்.

    நானும் சரி என்று சொல்லிவிட்டேன். மாதவனுடன் உட்கார்ந்து ஒரு கதை தயார் செய்தோம்.

    சிவாஜியிடம் கதை சொல்ல ஏற்பாடு நடந்தது.

    "நான் நாலைந்து நாட்கள் சூரக்கோட்டைக்குப் போகிறேன். அங்கு ஓய்வு எடுக்கும் வேளையில், கதையும் கேட்கலாமே. அவர்கள் இரண்டு பேரையும் சூரக்கோட்டைக்கு அழைத்துக்கொண்டு வந்துடுங்க'' என்றார், சிவாஜி.

    இதை, ராமகிருஷ்ணன் என்னிடம் தெரிவித்தார். அவருக்கு சிவாஜி ஏற்கனவே ஒரு படம் நடித்துக் கொடுத்திருக்கிறார். இது இரண்டாவது படம்.

    கதை சொல்வதற்காக அதுவரை நான் எந்த வெளிïருக்கும் போனதில்லை. முதல் தடவையாக சூரக்கோட்டைக்கு சென்றேன்.

    அங்கு, சிவாஜியின் வீடு பெரிதாக இருந்தது. நிறைய அறைகள் இருந்தன. மாதவன் அப்போது சிவாஜியை வைத்து படங்கள் இயக்கிக் கொண்டிருந்தார். நான் சூரக்கோட்டையில் மாதவனுடன் நான்கைந்து நாள் தங்கினேன்.

    சிவாஜி அவ்வப்போது என்னை பார்ப்பார். "சாப்பிட்டீங்களா?'' என்று கேட்பார்.

    நண்பர்களுடன் ஜாலியாக அரட்டை அடிப்பார். அவ்வப்போது வேட்டைக்குப் போவார். ஆனால், கதை கேட்க என்னை அழைக்கவில்லை.

    சும்மா உட்கார்ந்து இருப்பது, எனக்கு போரடித்தது. இதுபற்றி ராமகிருஷ்ணனிடம் கூறினேன். `ஓய்வு எடுப்பதற்காக இங்கே வந்திருக்கிறார். அவரே உங்களைக் கூப்பிடுவார்' என்றார்.

    அதேபோல, மூன்றாவது நாள் சிவாஜி என்னை அழைத்து கதை கேட்டார். நான் சொன்னேன். அவருக்குப் பிடித்து இருந்தது. "கதை நன்றாக இருக்கிறது. பண்ணலாம்'' என்று சொல்லிவிட்டார்.

    ஆனால், பிறகு என்னுடன் பேசவில்லை. ஒருவேளை மாதவனிடம் பேசியிருக்கலாம். சிவாஜி பிசியாக இருந்ததால், படம் தள்ளிக்கொண்டே போயிற்று. இதற்கிடையே, ராமகிருஷ்ணன் இறந்து போனார். அதனால், அப்படம் தயாரிக்கப்படவில்லை.

    இதன் பிறகு, சிவாஜியை வைத்து ஜி.என்.வேலுமணி தயாரித்த "எதிரொலி'' படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

    முதல் நாள் படப்பிடிப்பு. சிவாஜியை முதன் முதலாக நான் இயக்கிடும் நேரம். எனது கை -கால் நடுங்கின. "பராசக்தி'', "மனோகரா'' படங்களைப் பார்த்து பிரமித்துப்போன எனக்கு, அவரை எப்படி இயக்குவது என்ற தடுமாற்றம்.

    அவர் நடிப்பைப் பார்த்து ராத்தூக்கம், பகல் தூக்கம் இல்லாமல் கஷ்டப்பட்டவன் நான். அவரை இயக்கும் நேரம் வந்ததும், கை-கால் வெடவெடத்தன.

    நிலைமையை சரி செய்து கொண்டு, முதல் காட்சியை அவருக்குச் சொன்னேன். பொதுவாக முதல் நாள் என்றால், ஒரு `சக்சஸ்' அல்லது `வெற்றி' என்று கூறும் வழக்கமான காட்சியாக இல்லாமல், ஒரு நீள வசனத்தை அவரைப் பேசச் சொன்னேன். அப்போது, கே.ஆர்.விஜயாவும் உடன் இருந்தார்.

    "நான் உங்களுக்கு இப்படி ஒரு காட்சி வைத்துள்ளேன். சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். மாற்றம் எதுவும் செய்ய வேண்டுமானால் சொல்லுங்கள். மாற்றி அமைத்துக் கொள்ளலாம்'' என்று சிவாஜியிடம் சொன்னேன்.

    அவர் உடனே, "அய்யய்யோ... நீங்கதான் டைரக்டர். நான் எதுவுமே சொல்லமாட்டேன். நினைக்கவும் மாட்டேன். எப்படி நடிக்க வேண்டும் என்று கூறுகிறீர்களோ அப்படியே நடிக்கிறேன்'' என்றவர், வசனத்தைப் படித்துக் காட்டும்படி கூறினர்.

    நான் படித்துக்காட்டினேன். "நான் எப்படி பேசவேண்டும் என்பதையும், எப்படி நடிக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுங்க!'' என்றார், சிவாஜி.

    "என்ன சார் இது... நீங்க போய் என்னிடம் கேட்கறீங்க... உங்களுக்கு நான் சொல்லிக் கொடுப்பது சரியா வராது!'' என்றேன்.

    "இல்லை பாலு! நீங்க எத்தனையோ வெற்றி நாடகங்களை டைரக்ட் செய்திருக்கீங்க. எனக்கும் சொல்ல வேண்டியதுதானே... இந்த படம் என்கிற கப்பலுக்கு நீங்கதான் கேப்டன்'' என்று விடாப்பிடியாகச் சொன்னார், சிவாஜி.

    இவ்வாறு சிவாஜி சொன்ன பிறகு எனக்கு தைரியம் வந்தது. படப்பிடிப்பு படுவேகமாக நடந்தது.

    இப்படி நடந்து வந்த படப்பிடிப்பின் நடுவே, ஒரு நாள் சிவாஜி என்னைத் தனியாக அழைத்தார். பட்டென்று ஒரு கேள்வி கேட்டார்.

    தனது மனசை நீண்ட நாள் உறுத்திக் கொண்டிருந்த அந்தக் கேள்வியை அவர் கேட்டதும், நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். அவர் கேட்ட கேள்வி:-

    "ஏன் பாலு... எனது நடிப்புக்கு ஏற்றபடி ஒரு காட்சியை எனக்காக வைக்கக்கூடாதா....?''

    - இதுதான் சிவாஜி கேட்ட கேள்வி.

    நான் திடுக்கிட்டேன். "என்ன சார்... என்ன சொல்றீங்க?'' என்று கேட்டேன்.

    "இல்லை. நான் நடிக்கும்படியான ஒரு காட்சி இருந்தால் நன்றாக இருக்குமே'' என்று மíண்டும் சொன்னார்.

    எனக்குப் பெரும் அதிர்ச்சி. "அப்படியானால், நீங்கள் இதுவரை நடித்ததெல்லாம் நடிப்பு இல்லையா?'' என்று நான் கேட்க, "இல்லை... அப்படி சொல்லவில்லை. உங்களுக்கே தெரியும்... நான் நன்றாக நடிப்பதாகச் சொல்கிறார்கள். நவரச நடிப்பும் கலந்து தரும்படி ஒரு காட்சி வைக்கக்கூடாதா?'' என்று சிவாஜி கேட்டார்.

    "இது அப்படி ஒரு கதை அல்ல. ஒரு வழக்கறிஞரின் வாழ்க்கை பற்றிய இயல்பான கதை. மிதமிஞ்சிய நடிப்பு இந்தக் கதையில் தேவைப்படாதே'' என்று நான் சொல்ல, "அப்படியென்றால் சரி. கதையும், காட்சியும் மிகச்சிறப்பாக அமைந்துவிட்டன. எனது ரசிகர்கள் இந்தப் படத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் ஏற்றுக் கொண்டுவிட்டால், படம் வெற்றிப்படம் என்பதில் சந்தேகம் இல்லை'' என்று சொல்லி முடித்துவிட்டார், சிவாஜி.

    அவர் சந்தேகப்பட்டபடி சிவாஜி ரசிகர்கள் இந்தப்படத்தை ஏற்கவில்லை. அதனால் படம் வெற்றி அடையவில்லை.''

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

    பாலசந்தர் இயக்கிய "மரோசரித்ரா'' (தெலுங்குப்படம்) சென்னையில் 596 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
    பாலசந்தர் இயக்கிய "மரோசரித்ரா'' (தெலுங்குப்படம்) சென்னையில் 596 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

    கமலஹாசனும், சரிதாவும் ஜோடியாக நடித்த படம் இது.

    "மூன்று முடிச்சு'' படத்துக்குப்பிறகு, பாலசந்தரின் "அவர்கள்'', "நினைத்தாலே இனிக்கும்'' ஆகிய படங்களில் கமலஹாசனும், ரஜினிகாந்தும் சேர்ந்து நடித்தார்கள்.

    "அவர்கள்'' படத்தில் கமல், ரஜினியுடன் சுஜாதா நடித்தார். "பேசும் பொம்மை'' ஒரு முக்கிய கதாபாத்திரமாக நடித்தது!

    படம் நன்றாக இருந்தும், சரியாக ஓடவிëëலை. தன்னுடைய சிறந்த படம் ஓடவில்லையே என்பதில் பாலசந்தருக்கு வருத்தம் உண்டு.

    ஸ்ரீதரின் "இளமை ஊஞ்சலாடுகிறது'', பாரதிராஜாவின் "16 வயதினிலே'' ஆகிய படங்களிலும் கமலும், ரஜினியும் சேர்ந்து நடித்தனர்.

    இருவரும் நெருங்கிய நண்பர்களாகப் பழகி வந்தார்கள். எனினும் இப்படி சேர்ந்து நடித்துக் கொண்டிருப்பதை விட, தனித்தனியாக நடித்தால்தான் இருவரும் முழுத் திறமையையும் வெளிப்படுத்த முடியும் என்று நினைத்தார்கள். "இனி இருவரும் தனித்தனியாகவே நடிப்போம்'' என்று அறிவித்தார்கள்.

    அவர்கள் எண்ணியதுபோலவே, இருவரும் நடிப்பில் புதிய பரிமானங்களை வெளிப்படுத்தி, புதிய சிகரங்களைத் தொட்டார்கள்.

    பின்னர் பாலசந்தர் தயாரித்த பல படங்களில் தனித்தனியே நடித்தார்கள்.

    பாலசந்தர் டைரக்ட் செய்த படங்களிலேயே, மிக பிரமாண்டமான வெற்றிப்படம் "மரோசரித்ரா.''

    பாலசந்தரின் நெருங்கிய நண்பரான அரங்கண்ணல், 1978-ல் இதை தெலுங்கில் தயாரித்தார். கமலஹாசனும், சரிதாவும் ஜோடியாக நடித்தனர்.

    படத்தில் சரிதா தெலுங்குப்பெண். கமலஹாசன் தமிழ் இளைஞன். அவர்களுக்கிடையே ஏற்படும் காதலை அற்புதமாக சித்தரித்த படம் "மரோசரித்ரா.''

    கறுப்பு -வெள்ளையில் தயாரிக்கப்பட்ட இந்தப்படம், ஆந்திராவில் திரையிடப்பட்டு மகத்தான வெற்றி பெற்றது. இக்கதையை தமிழில் தயாரிக்க அரங்கண்ணல் யோசித்தபோது "தெலுங்குப்படத்தை அப்படியே தமிழ்நாட்டிலும் திரையிட்டுப் பார்ப்போமே'' என்று பாலசந்தர் கூறினார்.

    அதன்படி, சென்னை `சபையர்' தியேட்டரில் இப்படம் பகல் காட்சியாக திரையிடப்பட்டது. தமிழ் ரசிகர்களையும் இப்படம் வெகுவாகக் கவர்ந்தது. குறிப்பாக, இளைஞர்களும், இளம் பெண்களும் கூட்டம் கூட்டமாக `சபையர்' தியேட்டரை நோக்கிப் படையெடுத்தனர். தினமும் "ஹவுஸ்புல்'' காட்சியாகப் படம் ஓடியது.

    இப்போது 25 வாரம் ஓடினால், "வெள்ளி விழா'' என்று பெரிதாக விழா எடுக்கப்படுகிறது. "மரோசரித்ரா'' மொத்தம் 596 நாட்கள் ஓடியது. அதாவது ஒரு வருடமும் 231 நாட்களும்!

    பெங்களூரிலும் "மரோசரித்ரா'' 2 1/2 வருடம் ஓடி, சாதனை புரிந்தது.

    "ஏக் துஜே கேலியே''

    "மரோசரித்ரா''வை, "ஏக் து ஜே கேலியே'' என்ற பெயரில் எல்.வி.பிரசாத் இந்தியில் தயாரித்தார். அவரே பெரிய டைரக்டர். அப்படியிருந்தும், டைரக்ஷன் பொறுப்பை பாலசந்தரிடம் ஒப்படைத்தார்.

    இந்திப்பதிப்பில் கமலஹாசனும், ரதியும் ஜோடியாக நடித்தனர். படம் கலரில் தயாராகியது.

    "மரோசரித்ரா'' போலவே, "ஏக்துஜே கேலியே''வும், மாபெரும் வெற்றி பெற்றது. வடநாட்டில் இந்தப்படம் 80 வாரங்கள் ஓடியது.

    "மரோசரித்ரா'' பற்றி பாலசந்தர் கூறியதாவது:-

    "மரோசரித்ராவின் கிளைமாக்ஸ் காட்சி (உச்சகட்டம்) ஒரு அற்புதமான விஷயம்.

    வில்லனிடம் சிக்கி, கதாநாயகி துடிதுடிப்பதாக வரும் காட்சி. அலையில் சிக்கிய புடவை, அங்கும் இங்கும் நீரில் வருவதை படமாக்கும்போது, குறிப்பிட்ட ஒரே பிரேமில் அந்தப்புடவை கேள்விக்குறி மாதிரி வந்தது. உடனே அதை கேமிராவில் படம் பிடித்தேன்.

    வில்லனிடம் சிக்கி கதாநாயகி புழுவாய்த் துடிக்கிறாள் என்பதை உணர்த்தும் விதத்தில், அக்காட்சி அமைந்ததுதான் அற்புதமான விஷயம்.

    "ஏக் துஜே கேலியே'' படப்பிடிப்பின்போதும் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. வழக்கமாக படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில், கடைசி நாள் படப்பிடிப்பு நடந்தது. கதாநாயகனும், கதாநாயகியும் உல்லாசமாக சுற்றித்திரிந்த அந்தப் பகுதியில், ஒரு பாறையில் இரண்டு பேர் பெயரும் எழுதப்பட்டிருக்கும்.

    அந்தப் பாறையின் உச்சியில், எழுத்துக்களுக்கு கொஞ்சம் மேலே கடைசி நாளன்று இரண்டு காக்கைகள் சோகமாக வந்து உட்கார்ந்ததை பார்த்தேன். எனக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. அதை எப்படியும் படம் பிடித்து காட்டிவிட வேண்டும் என்று துடித்தேன்.

    கேமராமேன் லோகு, அப்போது அங்கு இல்லை. உடனே அவருடைய உதவியாளரை கூப்பிட்டு, நானே அந்தக் காட்சியை படம் பிடித்தேன். படத்திலும் சேர்த்தேன்.

    சில நேரங்களில், நம்மையும் அறியாமல் சில சம்பவங்கள் நமக்காகவே நடக்கிற மாதிரி அமையும்போது, ரொம்ப எச்சரிக்கையாக இருந்து அதை படத்திலே சேர்த்து விடுவேன்.''

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

    பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த "இருகோடுகள்'' சிறந்த குடும்பப்படம் என்று பெயர் பெற்றதுடன், வசூலிலும் சாதனை படைத்தது.
    பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த "இருகோடுகள்'' சிறந்த குடும்பப்படம் என்று பெயர் பெற்றதுடன், வசூலிலும் சாதனை படைத்தது.

    இதற்கிடையே, தமிழில் வெற்றி பெற்ற பாலசந்தரின் படங்கள் தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலான மொழிகளில் எடுக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவற்றை பாலசந்தரே இயக்கினார். இதனால் தென்னாடெங்கும் பாலசந்தரின் புகழ் பரவியது.

    ஜோசப் ஆனந்தன் எழுதிய "இருகோடுகள்'' (1969) ஏற்கனவே நாடகமாக மேடை ஏறி வெற்றி பெற்றிருந்தது. அதை திரைப்படமாக்க "கலாகேந்திரா'' முடிவு செய்தது. திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகிய பொறுப்புகளை பாலசந்தர் ஏற்றார்.

    இதன் கதைக்கரு வித்தியாசமானது. விவாகரத்து செய்து கொள்ளும் கணவனும், மனைவியும் எதிர்பாராமல் மீண்டும் சந்திக்கிறார்கள். அப்போது மனைவி கலெக்டர். கணவன், அவளிடம் வேலை பார்க்கும் குமாஸ்தா!

    கலெக்டராக சவுகார் ஜானகியும், கணவனாக ஜெமினிகணேசனும், அவருடைய இரண்டாவது மனைவியாக ஜெயந்தியும் நடித்தனர். சுவையான முக்கோண காதல் கதையை அருமையாக எடுத்திருந்தார், பாலசந்தர். வி.குமார் இசை அமைப்பில் "புன்னகை மன்னன் பூழிவிக்கண்ணன்'', "நான் ஒரு குமாஸ்தா'' பாடல்கள் ஹிட்டாயின.

    பாலசந்தரின் மிகச்சிறந்த 10 படங்களை தேர்வு செய்தால், அதில் "இருகோடுகள்'' நிச்சயம் இடம் பெறும்.

    இதுபற்றி பாலசந்தர் கூறுவது என்ன?  

    "உழைத்து பாஸ் செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் எடுத்த படம்தான் "இருகோடுகள்.'' மக்களின் ஆதரவை மிகப்பெரிய அளவில் பெற்றதுகூட உண்மைதான். மாநில மொழிப்படங்களில் சிறந்த படம் என்று, ஜனாதிபதியின் பரிசை பெற்றதும் என்னவோ உண்மைதான்.

    ஆனாலும் ஒரு இயக்குனருக்கு இதுவெறும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுதானே! பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவனுக்கு, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் கிடைக்கும் வெற்றி மிகப்பெரிதாகத் தோன்றலாம். ஆனால் ஆற அமர ஆராய்ந்து பார்த்தால், படிப்பே இத்துடன் முடிந்து விடுவதில்லையே. குறுக்கு வழிகளைத் தேடிப்போகாமல் நேர்கோட்டில் நடைபோட்ட எனக்கு, "இருகோடுகள்'' தந்தது இணையற்ற வெற்றிதான். இருப்பினும், இன்னும் எத்தனையோ இருக்கிறது. கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு ஆயிற்றே! எனவே சினிமாவில் என் படிப்பு தொடர்ந்தது.''

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

    1970-ல் வெளிவந்த "பத்தாம்பசலி'' ஒரு தோல்விப்படமாக அமைந்தது.

    அதுபற்றி பாலசந்தர் கூறியதாவது:-

    "இருகோடுகளை அடுத்து வெளிவந்த பத்தாம் பசலி பெரிய சறுக்கல்.

    ஆனாலும், இப்படம் கற்றுத்தந்த சிறந்த பாடம் ஒன்றும் இருக்கிறது. இதே பத்தாம் பசலி கதையை, இதே திரைக்கதை அமைப்புகளுடன் நான் ஏற்கனவே தெலுங்கில் இயக்கி வெளிவந்தபோது, அந்தப்படம் பெரிய வெற்றி பெற்றது. அதே திரைக்கதை தமிழில் மட்டும் தோல்வியைத் தழுவுவானேன். காரணம் இருக்கத்தான் செய்தது.

    தெலுங்குப்படத்தில் கதாநாயகன் சலம். தமிழ்ப்படத்தில் நாகேஷ். சலம் இத்தகைய வேடத்தில் நடிப்பது இதுவே முதல் தடவை. எனவே புதுமையாக இருந்தது. நாகேஷ் ஏற்கனவே பல படங்களில் பிரமிக்கத்தக்க நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். கதாநாயகனாக நடிப்பதும் இது முதல் தடவை அல்ல.

    கதை அமைப்பின்படி, தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த நாகேசுக்கு இதில் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. அத்துடன் ஒரு முட்டாள் கதாபாத்திரத்தில் நாகேசை மக்கள் ஏற்கவில்லை.

    பாத்திரத்திற்கு ஏற்ப நடிகர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதை, இப்படத்தின் மூலம் நான் கற்றுக்கொண்டேன்.''

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

    இதே ஆண்டு வெளிவந்த "நவக்கிரகம்'' மிகச்சாதாரணமாக அமைந்தது.

    ஒரு இந்திப்படத்தை தழுவி இரு வேடங்களில் சவுகார் ஜானகி நடித்த "காவியத் தலைவி'', சவுகார் ஜானகியின் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தியதே தவிர, பாலசந்தரின் திறமையை எடுத்துக் காட்டும் படமாக அமையவில்லை.

    சிவாஜிகணேசன் பெரும் புகழ் பெற்ற நடிகராக வலம் வந்து கொண்டிருந்த காலக்கட்டம் அது.

    `சிவாஜியும், பாலசந்தரும் இணைந்து பணியாற்றினால், அப்படம் எவ்வளவு பிரமாதமாக இருக்கும்'' என்று ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருந்தனர்.

    இவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதத்தில், "எதிரொலி'' என்ற படத்தை ஜி.என்.வேலுமணி தயாரித்தார். இதில், சிவாஜிகணேசனும், கே.ஆர்.விஜயாவும் நடித்தனர்.

    கதை, வசனம் எழுதி, டைரக்ட் செய்தார், பாலசந்தர்.

    1970 ஜுன் 27-ந்தேதி வெளிவந்த "எதிரொலி'' தோல்வியை சந்தித்தது. அதற்குக் காரணம் அது சிவாஜி படமாகவும் இல்லை; பாலசந்தர் படமாகவும் இல்லை.

    இதுபற்றி பாலசந்தர் கூறியதாவது:-

    "நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் முழுத்திறமையையும் பயன்படுத்திக் கொள்ள முடியாத ஒரு கதையில், அவரை கதாநாயகனாக நடிக்க வைப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை "எதிரொலி'' எனக்கு எடுத்துக் காட்டியது.

    ரசிகர்களிடம் மிகுந்த மதிப்பும், செல்வாக்கும் பெற்ற நடிகர்களை, குற்றம் செய்யும் கதாபாத்திரத்தில் காட்டுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதையும், எதிரொலி எனக்கு சொல்லிக் கொடுத்தது.

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

    இதன்பின், நான்கு சுவர்கள், நூற்றுக்கு நூறு, புன்னகை, வெள்ளி விழா, கண்ணா நலமா முதலான படங்களை பாலசந்தர் எடுத்தார்.

    இவற்றில் "புன்னகை''யை தனது லட்சியப்படமாக பாலசந்தர் கருதினார். அமுதம் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப்படத்தில் ஜெமினிகணேசனும், ஜெயந்தியும் நடித்தனர். கதை, வசனம், டைரக்ஷன் பொறுப்புகளை பாலசந்தர் கவனித்தார்.

    1971 நவம்பரில் வெளிவந்த இப்படம், நன்றாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.

    இது பாலசந்தருக்கு பெரும் வருத்தத்தை அளித்தது. "புன்னகை படம், என் முகத்தில் புன்னகையைப் பறித்ததுடன், என்னை மிகப்பெரிய சோதனையில் ஆழ்த்தியது. "முதலில் ரசிகப் பெருமக்களைப் புரிந்து கொள்'' என்பதே, புன்னகை மூலம் நான் கற்றுக்கொண்ட பாடம்'' என்றார், பாலசந்தர்.



    பிறர் படமாக்கத் துணியாத புரட்சிகரமான கதைகளைப் படமாக்கி வரலாறு படைத்தவர், கே.பாலசந்தர். ரஜினிகாந்தையும், மற்றும் ஏராளமான புதுமுகங்களையும் தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்திய சாதனையாளர்.
    பிறர் படமாக்கத் துணியாத புரட்சிகரமான கதைகளைப் படமாக்கி வரலாறு படைத்தவர், கே.பாலசந்தர். ரஜினிகாந்தையும், மற்றும் ஏராளமான புதுமுகங்களையும் தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்திய சாதனையாளர்.

    சினிமாவுக்கு தொடர்பில்லாத குடும்பத்தில் தோன்றி, நாடக உலகில் புகுந்து, பிறகு சினிமா உலகிற்கு வந்தார்.

    தஞ்சை மாவட்டம் நன்னிலத்திற்கு அருகில் உள்ள நல்லமாங்குடி என்ற கிராமம்தான் பாலசந்தரின் சொந்த ஊர்.

    அந்த கிராமத்தின் முன்சீப்பான கைலாசம் அய்யர் -காமாட்சியம்மாள் தம்பதிகளின் மகனாக 1930 ஜுலை 9-ந்தேதி பிறந்தார்.

    படிப்பில் முதல் மாணவராகத் திகழ்ந்ததுடன் நாடகத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். நண்பர்களை வைத்துக் கொண்டு வீட்டுத் திண்ணையிலேயே நாடகங்கள் நடத்துவார்.

    ஆரம்பக் கல்வி முடித்ததும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு படிக்கும் போதும் நாடக ஆசை தொடர்ந்தது. அவரே கதை -வசனம் எழுதி, முக்கிய வேடங்களில் நடிப்பது வழக்கம்.

    கல்லூரியில் ஹாஸ்டல் தினம், பட்டமளிப்பு விழா என்றெல்லாம் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும்போது, பாலசந்தரின் நாடகம் நிச்சயம் இடம் பெறும்.

    "பி.எஸ்.சி'' பட்டம் பெற்ற பின், முத்துப்பேட்டையில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் வேலை பார்த்தார். ஒரு வருட காலம் ஆசிரியர் பணியில் நீடித்தார். அங்கும், மாணவர்களை வைத்து நாடகம் நடத்துவார்.

    அதுமட்டுமல்ல; சட்டசபை எப்படி நடக்கிறது, பாராளுமன்றம் எப்படி நடக்கிறது என்பதை விளக்கும் வகையில், "மாதிரி சட்டசபை'', "மாதிரி பாராளுமன்றம்'' ஆகிய நிகழ்ச்சிகளை தயாரித்து நடத்தி, பாராட்டு பெற்றார்.

    சென்னையில் அக்கவுண்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில், 1950-ல் பாலசந்தருக்கு வேலை கிடைத்தது. ரத்தத்தில் ஊறிய நாடக ஆசை அப்போதும் தொடர்ந்தது.

    மாலை ஐந்து மணி ஆனதும், அதிகாரிகளும், ஊழியர்களும் அவரவர் வீட்டுக்கு கிளம்புவார்கள். பாலசந்தரோ, ராஜா அண்ணாமலை மன்றம் அல்லது ஆர்.ஆர்.சபாவுக்குப் போவார். "இன்று என்ன நாடகம்? நாளை என்ன நாடகம்? யார் -யார் நடிக்கிறார்கள்?'' என்று அறிவிப்பு பலகைகளைப் பார்ப்பார். முக்கிய நாடகங்களையெல்லாம் தவறாமல் பார்த்து விடுவார்.

    அந்தக் காலக்கட்டத்தில், பாலசந்தருக்கு நாடகம் மீதுதான் ஆசை இருந்ததே தவிர, சினிமாவை லட்சியமாகக் கொள்ளவில்லை.

    ஏ.ஜி.அலுவலகத்தில் ஒரு விழா. மேல் அதிகாரியை பாலசந்தர் சந்தித்து, "இந்த விழாவில் நாடகம் நடத்தலாம். நாடகம் நடத்துவதில் எனக்கு அனுபவம் உண்டு'' என்று கூறினார்.

    அதற்கு அதிகாரி அனுமதியளித்தார்.

    உடனே நாடகத்தைத் தயாரிக்கத் தொடங்கினார், பாலசந்தர்.

    சென்னையில் அவர் முதன் முதலாக நடத்திய இந்த நாடகத்தின் பெயர் "சினிமா விசிறி.'' எப்போதும் சினிமா பற்றி பேசிக்கொண்டிருக்கும் கேரக்டர்தான் இந்த நாடகத்தின் கதாநாயகன்.

    இந்த நாடகத்தின் கதை, வசனம், நடிப்பு அனைத்தும் பாலசந்தர்தான்.

    நாடகத்தைப் பார்த்தவர்கள், பாலசந்தரின் திறமையை வானளாவப் புகழ்ந்தார்கள்.

    (இந்த நாடகம்தான் பிற்காலத்தில் "எதிர்நீச்சல்'' என்ற பெயரில் படமாகியது. சினிமா பித்து கொண்ட கதாநாயகனை, பட்டுமாமி என்ற பெயரில் கதாநாயகியாக மாற்றினார், பாலசந்தர்.)

    "சினிமா விசிறி'' நாடகத்தைப் பார்த்த சினிமா நடிகர் வி.கோபாலகிருஷ்ணன், பாலசந்தரை பார்க்க வந்தார். அவர் தனியாக நாடகக் குழு ஒன்றை நடத்தி வந்தார்.

    "சினிமா விசிறி நாடகத்தைப் பார்த்தேன். ரொம்பப் பிரமாதம். என்னுடைய நாடகம் ஒன்றில் நீங்கள் நடிக்கவேண்டும்'' என்று பாலசந்தரிடம் கோபாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

    அதற்கு பாலசந்தர் சம்மதித்தார். கோபாலகிருஷ்ணனின் "உயிருள்ளளவும்'' என்ற நாடகத்தில் நடித்தார். அப்போது பாலசந்தருக்கு வயது 21. நடித்தது அப்பா வேடத்தில்!

    வயதான தோற்றத்தில் அற்புதமாக நடித்து எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

    இதைத்தொடர்ந்து, வி.எஸ்.ராகவன் நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு பாலசந்தரை தேடி வந்தது.

    வெளி நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த பாலசந்தர் சொந்தமாக "ராகினி ரிக்ரியேஷன்ஸ்'' என்ற பெயரில் நாடகக்குழு அமைத்தார். நாடகம் நடத்த சபாக்களை மட்டும் நம்பியிராமல், திருமண வீடுகளிலும், மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளிலும் நடத்தி வந்தார்.

    அப்படி ஒரு திருமண வீட்டில் அவர் நடத்திய நாடகத்தின் பெயர் புஷ்பலதா. "புஷ்பா'', "லதா'' என்ற இரண்டு பெண்களைப் பற்றி மூன்று கல்லூரி மாணவர்கள் அடிக்கும் அரட்டைதான் நாடகம். கடைசிவரை புஷ்பாவோ, லதாவோ வரமாட்டார்கள்!

    பாலசந்தரின் இந்த புதுமை நாடகம் பெரும் வரவேற்பை பெற்றது.

    ஏ.ஜி.ஆபீஸ் உயர் அதிகாரி மாற்றலாகிச் செல்லும்போது, பிரிவு உபசார விழாவில் பாலசந்தர் நடத்திய நாடகம் "மேஜர் சந்திரகாந்த்.''

    இந்த நாடகத்தை நடத்தும்போது, ஒரு புதுமையைப் புகுத்தினார். மேடைக்கு திரை கிடையாது. மூன்று பக்கமும் திறந்தவெளி! நடிகர்கள் பார்வையாளர்களுடன் அமர்ந்து இருப்பார்கள். நடிக்க வேண்டிய கட்டம் வரும்போது, கூட்டத்தில் இருந்து எழுந்து வந்து நடித்து விட்டுப் போவார்கள்!

    நாடகத்தில் மேஜர் சந்திரகாந்த் வேடத்தில் பாலசந்தர் நடித்தார்.

    இந்த நாடகம், அவருக்கு மேலும் புகழ் தேடித்தந்தது.

    ஏ.ஜி.ஆபீசில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோதே 1956 மே 13-ந்தேதி பாலசந்தருக்கு திருமணம் நடந்தது. மனைவி பெயர் ராஜம்.

    நகைச்சுவை நடிகையாக அறிமுகமாகி, கதாநாயகி, வில்லி வேடங்களையும் ஏற்று 300 படங்களுக்கு மேல் நடித்தவர், சுந்தரிபாய்.
    நகைச்சுவை நடிகையாக அறிமுகமாகி, கதாநாயகி, வில்லி வேடங்களையும் ஏற்று 300 படங்களுக்கு மேல் நடித்தவர், சுந்தரிபாய்.

    சுந்தரிபாயின் சொந்த ஊர் மதுரை. 1927-ல் பிறந்தார். சின்ன வயதிலேயே இசை மீது ஆர்வம் கொண்டவர். அப்போது, எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த "சிந்தாமணி'' படம் வெளிவந்து ஒரு வருடத்துக்கு மேலாக ஓடிக்கொண்டிருந்தது. அதில் இடம் பெற்ற பாடல்கள் எல்லாம் சுந்தரிபாய்க்கு மனப்பாடம். அந்தப் பாடல்களைப் பாடிக்கொண்டிருப்பதுதான் அவரது பொழுதுபோக்கு.

    இசை மீது சுந்தரிபாய்க்கு இருந்த ஆர்வத்தை கவனித்த அவர் பெற்றோர்கள், முறைப்படி சங்கீதம் கற்றுத்தந்தனர்.

    உறவினர் ஒருவர் எடுத்துக்கொண்ட முயற்சி காரணமாக, 1937-ல் "சுகுணசரசா'' என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு சுந்தரிபாய்க்கு கிடைத்தது. நாள் ஒன்றுக்கு இருபது ரூபாய் சம்பளத்தில், மூன்று நாட்கள் நடித்தார்.

    இதன் பின், ஜெமினி நிறுவனத்தில் மாத சம்பளத்திற்கு சேர்ந்தார். இதே சமயத்தில்தான், கொத்தமங்கலம் சுப்புவும் ஜெமினி கதை இலாகாவில் சேர்ந்தார்.

    ஜெமினியின் முதல் படமான "மதனகாமராஜன்'' படத்தில், கொத்தமங்கலம் சுப்புவும், சுந்தரிபாயும் நடித்தனர். அதைத்தொடர்ந்து, காதல் ஏற்பட்டு இருவரும் மணந்து கொண்டனர்.

    இதுபற்றி சுந்தரிபாய் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதாவது:-

    "இது காதல் திருமணம் மட்டுமல்ல. கலப்பு திருமணமும்கூட. என் தாய் மொழி மராத்தி. அவர் தமிழர்.

    இதன்பின், ஜெமினி எடுத்த படங்களில் எல்லாம் எனக்கொரு வேடம் தவறாமல் கிடைத்து வந்தது.

    1945-ல் ஜெமினி தயாரித்த "கண்ணம்மா என் காதலி'' என்ற படத்தில் நான் கதாநாயகியாக நடித்தேன். வசனமும், பாடலும் எழுதியதுடன் டைரக்ஷனையும் சுப்புதான் கவனித்தார். இந்தப் படத்தின் கதாநாயகனாக எம்.கே.ராதா நடித்தார்.''

    இவ்வாறு சுந்தரிபாய் குறிப்பிட்டுள்ளார்.

    1948-ல் ஜெமினியின் பிரமாண்டமான படமான "சந்திரலேகா'' வெளிவந்தது. அதில் முக்கிய வேடத்தில் சுந்தரிபாய் நடித்தார்.

    கதாநாயகி டி.ஆர்.ராஜகுமாரியைக் காப்பாற்றுவதற்காக, "இச்சைகளைத் தீர்க்கும் பச்சை மலைப்பாவை''யாக மாறுவேடத்தில் சென்று, ரஞ்சனை ஏமாற்றும் கட்டத்தில் ரசிகர்களிடம் சபாஷ் பெற்றார்.

    சுந்தரிபாய், ஜெமினியில் சேர்ந்தபோது அவரது மாத சம்பளம் 150 ரூபாய். சந்திரலேகாவில் நடித்தபோது, அது 1,500 ரூபாயாக உயர்ந்தது.

    ஜெமினியின் வெற்றிப்படமான "சம்சார''த்தில், வில்லி வேடத்தில் சுந்தரிபாய் நடித்தார்.

    "வள்ளியின் செல்வன்'' படத்தில், குணச்சித்திர வேடத்தில் நடித்தார். ஏறத்தாழ 17 ஆண்டுகள் ஜெமினியில் பணியாற்றினார். ஒப்பந்தம் முடிவடைந்தபின், வெளிப்படங்களிலும் நடித்தார். அவற்றில் பெரும்பாலானவை வில்லி வேடங்கள்.

    கே.பாலசந்தர் தயாரித்த "அரங்கேற்றம்'' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

    சுந்தரிபாய் நடித்த படங்கள் ஏறத்தாழ 300. 
    சினிமாவில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்தபோதே, நடிகை லதாவை அரசியலுக்கு அழைத்தார், எம்.ஜி.ஆர். ஆனால், அப்போது அரசியலைத் தவிர்த்த லதா, அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கியபோது அதில் சேர்ந்தார்.
    சினிமாவில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்தபோதே, நடிகை லதாவை அரசியலுக்கு அழைத்தார், எம்.ஜி.ஆர். ஆனால், அப்போது அரசியலைத் தவிர்த்த லதா, அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கியபோது அதில் சேர்ந்தார்.

    எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க. சந்தித்த முதல் பொதுத்தேர்தலில், நடன நிகழ்ச்சி மூலம் கட்சிக்கு நிதி திரட்டிக் கொடுத்தார் லதா.

    எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இருந்த திருநாவுக்கரசின் அழைப்பின் பேரில், அப்போது அவர் தொடங்கிய "எம்.ஜி.ஆர். அ.தி.மு.க''வில் இணைந்தார்.

    எம்.ஜி.ஆருடனான அரசியல் அனுபவம் குறித்து லதா கூறியதாவது:-

    "எம்.ஜி.ஆர். படங்களில் நான் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒருநாள் அவர் என்னிடம், "லதா! உனக்கு அரசியலில் ஆர்வம் உண்டா?'' என்று கேட்டார். "ஆர்வம் இல்லை. அரசியல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது'' என்றேன்.

    ''அரசியல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதானே தேர்தலின்போது சரியானவர்களை தேர்ந்தெடுக்க முடியும்'' என்றார்.

    ஆனால் காலச்சூழலில் அவரே அ.தி.மு.க.வை தொடங்க வேண்டியதாயிற்று. கட்சியில் நானும் சேர்ந்தேன். கட்சியில் சேரும்படி என்னை அவர் கேட்கவில்லை. என்றாலும், சினிமாவில் என்னை இந்த அளவுக்கு உருவாக்கியவருக்கு காட்டும் நன்றிக்கடனாக, அவர் கேட்காமலே கட்சியில் சேர்ந்து விட்டேன்.

    எம்.ஜி.ஆர். கட்சி, முதல் பொதுத்தேர்தலை சந்தித்த நேரத்தில், "தேர்தலுக்கு நான் என்ன செய்தால் சரியாக இருக்கும்?'' என்று கேட்டேன். "உனக்கு எது சரியாக இருக்குமோ, அதைச் செய்தால்தான் சிறப்பாக வரும்'' என்றார், எம்.ஜி.ஆர். பிறகு அவரே "லதா! நீ முக்கிய நகரங்களில் நடன நிகழ்ச்சியில் கலந்து கொள். கட்சிக்கு நிதி திரட்டிய மாதிரியும் இருக்கும்'' என்றார்.

    உடனே தாமதமின்றி நான் உருவாக்கிய நாட்டிய நாடகம்தான் "சாகுந்தலம்.'' முப்பதுக்கும் மேற்பட்ட நடனக்குழுவினருடன் நான் கட்சிக்கூட்டம் நடக்கும் இடங்களில் இந்த நாட்டிய நாடகத்தை நடத்துவேன். மக்கள் திரண்டு வந்து, இந்த நிகழ்ச்சியை ரசித்தார்கள். திருச்சியில் நடந்த பொதுக்கூட்ட மேடையில் அதுவரை நடன நிகழ்ச்சிக்கு வசூலான தொகையை எம்.ஜி.ஆரிடம் அளித்தேன்.

    இந்த தேர்தலில் எம்.ஜி.ஆர். வெற்றி பெற்று முதல்-அமைச்சரானார். தேர்தலில் நேரம் காலம் பார்க்காமல் விடிய விடிய நாட்டிய நாடகம் நடத்தியதை அவர் மறக்காமல் மனதில் வைத்திருந்தார். ஒருநாள் என்னை அழைத்துப் பேசியவர், "லதா! மக்களின் அன்பு எத்தகையது என்பதை நேரில் காண, இந்த தேர்தல் உனக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. நீ முழுநேர அரசியலுக்கு வரலாம் என்று எண்ணுகிறேன். உன் விருப்பம் என்ன?'' என்று கேட்டார்.

    நான் அவரிடம், "அரசியலிலும் நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அதற்காகவே நடன நிகழ்ச்சியையும் உற்சாகமாக செய்தேன். மற்றபடி அரசியலில் ஈடுபடும் அளவுக்கு இன்னமும் எனக்கு பக்குவம் இல்லை'' என்று கூறினேன்.

    எம்.ஜி.ஆர். என்னைப் புரிந்து கொண்டார். அதன்பிறகு என்னை அரசியலுக்கு அழைக்கவில்லை.''

    இவ்வாறு லதா கூறினார்.

    தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரின் அழைப்பு தவிர, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவும் லதாவை அரசியலுக்கு அழைத்தார்.

    அதுபற்றி லதா கூறியதாவது:-

    ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்னூல்தான் எங்கள் பூர்வீகம். அங்குள்ள அம்மன் கோவில் பிரபலம். ஊர் எல்லையில் இருக்கிற இந்த கோவிலை என் அம்மா விருப்பப்படி 1977-ல் நான் புதுப்பித்தேன். இப்போதும் தம்பி ராஜ்குமார் இந்த கோவிலை பராமரிக்கும் பொறுப்பில்

    இருக்கிறான்.தெலுங்கில் 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தது மூலமாக தெலுங்கு ரசிகர்களிடமும் நான் பிரபலமாகியிருந்தேன். இப்போது கோவிலை புதுப்பித்ததன் மூலம் அந்தப் பகுதி மக்களிடமும் நல்லவிதமாக அறியப்பட்டிருந்தேன்.

    இதனால் சந்திரபாபு நாயுடு என்னை தனது கட்சி சார்பில் இந்த தொகுதியில் நிற்கச்சொன்னார். அப்போது அவர் போட்ட ஒரே கண்டிஷன், "தேர்தலுக்குப்பிறகு, ஆந்திராவிலேயே செட்டிலாகி விடவேண்டும்'' என்பதுதான்.

    நான் அவரிடம், "நான் பிறந்து வளர்ந்தது, படித்தது எல்லாமே தமிழ்நாட்டில்தான். அங்கேதான் நடிகையாக அறிமுகமானேன். எம்.ஜி.ஆர். மட்டும் அவரது ஜோடியாக படங்களில் என்னை அறிமுகப்படுத்தாமல் இருந்திருந்தால், `லதா' என்ற பெண்ணை யாருக்குமே தெரியாமல் போயிருக்கும். எனவே எனக்கு புகழ் தேடித்தந்த தமிழ்நாட்டில், தமிழ் மக்களிடையே இருக்கவே விரும்புகிறேன்'' என்று சொல்லி, நாயுடு தந்த அரசியல் வாய்ப்பை தவிர்த்து விட்டேன்.

    இவ்வாறு கூறினார், லதா.

    எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் அமைச்சராக இருந்த திருநாவுக்கரசு, எம்.ஜி.ஆர். காலமான பிறகு "எம்.ஜி.ஆர். அ.தி.மு.க'' என்றொரு கட்சியை தொடங்கினார். இதில் சேரும்படி நடிகை லதாவை கேட்டுக்கொண்டார். லதாவும் இந்தக் கட்சியில் சேர்ந்து அரசியலில்

    ஈடுபட்டார்.1998-ல் நடந்த "எம்.பி'' தேர்தலில், திண்டுக்கல்லில் தனது கட்சி சார்பில் போட்டியிட்டார். இதில் அவர் வெற்றி பெறாவிட்டாலும் 60 ஆயிரத்துக்கு மேல் ஓட்டு வாங்கி, அரசியல் வட்டத்தை ஆச்சரியப்படுத்தினார்.

    திருநாவுக்கரசு, தனது கட்சியை பாரதீய ஜனதாவுடன் இணைத்த நேரத்தில் லதாவும் பாரதீய ஜனதாவில் ஐக்கியமானார். கட்சியில் அவருக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.

    லதா இப்போது சினிமா, சின்னத்திரை என இரண்டிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த பிஸி நிலை, அவருக்கும் அரசியலுக்கும் ஒரு இடைவெளி இருப்பதுபோல் காட்டுகிறது. தொடர்ந்து அரசியலில் நீடிக்கும் எண்ணம் லதாவுக்கு உண்டா? அவரே கூறுகிறார்:-

    "திருநாவுக்கரசரின் `எம்.ஜி.ஆர். அ.தி.மு.க' சார்பில் நான் திண்டுக்கல் எம்.பி. தொகுதியில் போட்டியிட்டபோது, கட்சிக்கென்று அங்கீகார சின்னம் எதுவும் தரவில்லை. அப்போது சுயேச்சை சின்னங்களில் ஒன்றாக இருந்த மாம்பழம் சின்னம் ஒதுக்கினார்கள். பிரசாரத்தின்போது மக்களை சந்தித்தேனே அந்த

    30 நாட்கள்தான் என் வாழ்க்கையில் திருப்பம். "தலைவர்

    (எம்.ஜி.ஆர்) கூட நடிச்ச பொண்ணு'' என்று சொல்லி என்னைக் கொண்டாடினார்கள். "உங்க முகத்துல தலைவரைப் பார்க்கிறோம்மா'' என்றார்கள்.

    வயதானவர்கள்கூட என் காலில் விழ வந்தார்கள். அவர்களை தடுத்து அனுப்புவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இதெல்லாம் எம்.ஜி.ஆர். மீது அவர்கள் வைத்திருந்த அன்பைத்தான் எடுத்துக்காட்டின.

    சிலர் என்னிடம், தங்கள் ஊரில் உள்ள "குழாயில் தணணீர் வரவில்லை'' உள்ளிட்ட பல குறைகளை உரிமையுடன் சொல்லத் தொடங்கி விட்டார்கள். எம்.ஜி.ஆருடன் நடித்தவள் என்ற உரிமையில், அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கையாகவே அது எனக்குப் பட்டது. சிலர், "மதியம் சாப்பாட்டுக்கு எங்க வீட்டுக்கு வாங்க'', "இரவு சாப்பாட்டுக்கு எங்க வீட்டுக்குத்தான் வரணும்'' என்றெல்லாம் அன்போடு கேட்டு, அழைத்துப்போய் சாப்பாடும் கொடுத்தார்கள். சூதுவாது தெரியாத அன்பை மட்டுமே பொழியத் தெரிந்த இந்த மக்களுக்காக அவர்களுக்கு நல்லது செய்யும் அரசியலில் நான் நீடிப்பதுதான் சரியாக இருக்கும்.

    இந்த பிரசாரத்தில் ஒரு வேடிக்கையும் நடந்தது. நான் எங்கள் "எம்.ஜி.ஆர். அ.தி.மு.க'' கட்சி வேட்பாளராக போட்டியிட்ட அதே தொகுதியில், தி.மு.க.வுக்கு ஓட்டு கேட்டு என் தோழி ராதிகா பிரசாரம் செய்தார். அரசியலுக்கு அப்பாற்பட்ட தோழிகள் என்பதால், பிரசாரத்தில் எதிரும் புதிருமாக சந்தித்துக்கொண்டபோதுகூட மறக்காமல் "ஹாய்! ஹலோ'' சொல்லிக்கொண்டோம். நட்பு என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது அல்லவா?

    இப்போது படங்களிலும், தொடர்களிலும் நடிப்பதை தொடர்ந்தாலும், அரசியல் ஈடுபாடும் இருக்கவே செய்கிறது. அரசியலில் முழு மூச்சாக இறங்கும் காலம் வரும்போது நிச்சயம் அதில் என்னை முழுவீச்சில் வெளிப்படுத்தவே செய்வேன். தேசியக்கட்சியில் (பா.ஜ.க) இருந்தாலும் எனது அரசியல் தமிழ்நாட்டில் இருக்கும்.

    மக்கள் தந்த ஆதரவில் வளர்ந்த நான், மக்கள் பிரச்சினைக்காக என்னை அர்ப்பணிப்பேன்.''

    உறுதியான குரலில் கூறினார் லதா.
    சினிமாவில் மறுபிரவேசம் செய்த லதாவுக்கு, சின்னத்திரை வாய்ப்பும் தேடி வந்தது. டைரக்டர் கே.சங்கர் இயக்கிய "ராமாயணம்'' தொடரில் நடித்து, சின்னத்திரையிலும் தனது நடிப்பைத் தொடங்கினார்.
    சினிமாவில் மறுபிரவேசம் செய்த லதாவுக்கு, சின்னத்திரை வாய்ப்பும் தேடி வந்தது. டைரக்டர் கே.சங்கர் இயக்கிய "ராமாயணம்'' தொடரில் நடித்து, சின்னத்திரையிலும் தனது நடிப்பைத் தொடங்கினார்.

    சின்னத்திரை அனுபவங்கள் குறித்து லதா கூறியதாவது:-

    "சினிமாவில் இரண்டாவது இன்னிங்சிலும் பிசியாகவே இருந்தேன். டைரக்டர்கள் பி.வாசு, மணிவண்ணன், கஸ்தூரிராஜா, ராம.நாராயணன் போன்றோர் படங்களில் அடுத்தடுத்து நடித்துக் கொண்டிருந்தேன்.

    இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர் -சிவாஜியை பல படங்களில் இயக்கிய டைரக்டர் கே.சங்கரிடம் இருந்து எனக்கு போன் வந்தது. "ராமாயணம்'' என்ற பெயரில் ஒரு புராணத் தொடர் எடுக்க இருப்பதாகவும், அதில் ராதாரவி ராவணனாக நடிப்பதாகவும் சொன்னவர், நான் ராவணனின் மனைவி மண்டோதரியாக நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    `பிரபல டைரக்டர் என் மீது நம்பிக்கை வைத்து கேட்கிறார். எனவே மறுக்கக்கூடாது' என்று, அந்தத் தொடரில் நடித்தேன். 1997-ல் இந்த தொடர் சன் டிவியில் ஒளிபரப்பானது.

    தொடர்ந்து பாலாஜி டெலிபிலிம்சுக்காக "பவித்ர பந்தம்'' என்ற தெலுங்கு சீரியலிலும் நடிக்கலானேன்.

    "கிழக்கே போகும் ரெயில்'' படத்தில் நடிகை ராதிகா அறிமுகமாகியிருந்தார். அடுத்து "அன்னப்பறவை'' என்ற படத்தில் நானும் ராதிகாவும் நடித்தோம். அந்தப் படத்தில் ராதிகாவின் இளம் வயது அம்மா நான். இந்தப் படத்தில் நடிக்கும்போதே, ராதிகா எனக்கு நல்ல தோழியானார். அதோடு நடிகை ஸ்ரீபிரியா இவருக்கு நெருக்கமான தோழி. என் தம்பி ராஜ்குமார் ஸ்ரீபிரியாவை திருமணம் செய்து கொண்டபிறகு, ராதிகா இன்னும் எனக்கு நெருக்கமானார்.

    இந்த நட்பின் அடிப்படையில், ராதிகா சின்னத்திரைக்கு வந்த நேரத்தில் "இதி கத காது'' என்ற மெகா தொடரில் என்னை நடிக்கும்படி கேட்டார். உயிர்த் தோழிகளாக இருக்கும் இருவர் காலச் சூழலில் ஜென்ம எதிரிகள் போல் மோதிக்கொள்ளும் கதை. தெலுங்கில் இந்த "மெகா'' சீரியலுக்கு மகா வரவேற்பு.

    ராதிகாவுக்கு தமிழில் திருப்புமுனையாக அமைந்தது `சித்தி' தொடர். இந்த தொடரில் 250 எபிசோடு வரை நான் கிடையாது. கதைப்படி ஒரு பெற்றோர் 250 எபிசோடு தாண்டி அறிமுகமாகிறார்கள். அதில் `அம்மா' கேரக்டரில் ஏற்கனவே ரசிகர்களிடம் பிரபலமான ஒருவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று டைரக்டர் சி.ஜே.பாஸ்கர் அபிப்ராயப்பட்டிருக்கிறார். இதை என்னிடம் சொன்ன ராதிகா, "நீங்களே நடித்தால் சிறப்பாக இருக்கும்'' என்றார். ஒப்புக்கொண்டு நடித்தேன்.

    என் போர்ஷன் அதிகபட்சம் 30 எபிசோடு வரை வந்திருக்கும். எனக்கு ரொம்ப நல்ல பெயரை வாங்கிக்கொடுத்த கேரக்டராக அது அமைந்தது.

    தொடர்ந்து பாலாஜி பிலிம்சுக்கு நாலைந்து தொடர்கள் நடித்தேன். இந்த நேரத்தில் ஏவி.எம்.மில் இருந்து "ஈ நாட்டு ராமாயணம் இல்லாலு'' என்ற தெலுங்கு தொடரில் நடிக்க கேட்டார்கள். அது ஒளிபரப்பாகி மிகப் பெரிய "ஹிட்.''

    தொடர்ந்து ஹரிராஜனின் தொடர், பாலாஜி டெலிபிலிம்சின் "கேளுங்க கேளுங்க மாமியாரே'' என்று தொடர்ந்தேன். இதில் `கேளுங்க கேளுங்க மாமியாரே' தொடர், முற்றுப்பெறாமல் பாதியிலேயே நின்று போனது வருத்தம் தந்தது.

    ராதிகாவின் "செல்வி'' தொடரில்தான் எனக்கு மிகப்பெரிய திருப்புமுனை. நான் தெலுங்கில் பிசியாக இருந்த நேரத்தில் ஒருநாள் ராதிகாவின் அம்மா எங்கள் வீட்டுக்கு வந்தார். `செல்வி' என்ற பெயரில் புதிய தொடர் தயாரிப்பதாக சொன்னவர், "இலங்கையில்தான் படப்பிடிப்பு தொடங்குகிறது.

    இலங்கையில் `ஓஹோ'வென வாழ்ந்த ஒரு குடும்பம், அங்கே சொத்துக்களை இழந்து தமிழ்நாட்டில் தஞ்சமாகிற கதை. கோடீசுவரப் பெண், நடுத்தர வாழ்க்கைக்கு பழகி, அனுதினமும் பொருளாதாரம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய கேரக்டர் இருக்கிறது. நீ செய்தால் சரியாக இருக்கும் என்பது ராதிகாவின் எதிர்பார்ப்பு'' என்றார்.

    இந்த கேரக்டரில் நடிக்க நடிகை ராதிகாவும், டைரக்டர் சுந்தர் கே.விஜயனும் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்கள். இந்தத் தொடரில் நான் பேசிய வசனங்கள், "என்ன புள்ள!'' "உன்னைப் பார்த்தா எனக்கு படபடங்குது'', "ரொம்ப டூ மச்'' போன்றவை ரசிகர்களிடையே இப்போதும் பிரபலம்.

    இலங்கையில் பங்களாவில் வாழ்ந்து பழக்கப்பட்ட பெண், சென்னையில் புறாக்கூண்டு போன்ற வீட்டில் வாழும்போது என் கேரக்டர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், ரசிகர்களை பாதித்திருக்கிறது. இதற்கு உதாரணமான விஷயமும் நடந்தது.

    தி.நகரில் உள்ள விநாயகர் கோவிலுக்கு போயிருந்தேன். என்னைப் பார்த்ததும் ஒரு பூக்காரப் பெண்மணி ஓடி வந்தாள். "அம்மா அம்மா! பூ வாங்கிக்கம்மா'' என்று நாலைந்து முழம் பூவை என் கையில் திணித்தாள். "காசு எவ்வளவு அம்மா?'' என்று நான் கேட்டு பணம் கொடுக்க முயன்றபோது, அந்தப் பெண் பணத்தை வாங்க மறுத்து விட்டாள். அதோடு, "போம்மா! உன் கிட்ட காசு வாங்கினா தப்பும்மா! தலைவரோட (எம்.ஜி.ஆர்) ஜோடியாக எல்லாம் நடிச்ச நீ, இப்ப எவ்வளவு கஷ்டப்படறேன்னுதான் `செல்வி' தொடரில் பார்த்தேனே!'' என்று கூறினாள்! அப்போதுதான் செல்வியில் என் கேரக்டர் எந்த அளவுக்கு மக்களிடம் ஊடுருவியிருக்கிறது என்பதை உணர்ந்தேன்.

    இப்போது கலைஞர் `டிவி'யில் ஒளிபரப்பாகி வரும் "மஞ்சள் மகிமை'' தொடரிலும் எனக்கு வித்தியாசமான கேரக்டர்.''

    இவ்வாறு லதா கூறினார். 
    திருமணத்துக்குப்பின் படங்களில் நடிக்காமல் இருந்த லதா, 10 ஆண்டு இடைவெளிக்குப்பின் மீண்டும் நடித்தார்.
    திருமணத்துக்குப்பின் படங்களில் நடிக்காமல் இருந்த லதா, 10 ஆண்டு இடைவெளிக்குப்பின் மீண்டும் நடித்தார்.

    லண்டனில் இருந்து லதா திரும்பியபின், பல பட அதிபர்கள் அவரை மீண்டும் நடிக்க அழைத்தனர். ஆனால், "இனி நடிப்பதாக இல்லை'' என்பதையே பதிலாக சொல்லி வந்தார்.

    ஆனால், நடிகரும் டைரக்டருமான ராஜ்கிரண் கேட்டபோது லதாவால் மறுக்க முடியவில்லை. அவர் இயக்கிய "பொன்னு விளையும் பூமி'' படத்தில் நடித்தார் லதா. இதன் மூலம் சினிமாவில் மறுபிரவேசம் செய்தார்.

    சினிமாவில் தனது மறுபிரவேசம் குறித்து லதா கூறியதாவது:-

    "குடும்ப வாழ்க்கைக்குள் வந்த பிறகு நடிப்பு பற்றி நான் நினைத்துப் பார்க்கவில்லை.

    2 மகன்களுக்கு அம்மா என்ற முறையில் அவர்களின் மகிழ்ச்சி, அவர்களின் கல்வி, கணவரின் தேவையறிந்து செயல்படுவது என்றே முழு நாட்களும் ஓடின.

    இந்த சமயத்தில்கூட, டைரக்டர் கே.பாக்யராஜ் என் லண்டன் முகவரியைத் தெரிந்து கொண்டு என்னிடம் தொடர்பு கொண்டார். அப்போது அவர், எம்.ஜி.ஆரும் நானும் நடித்து பாதியில் நின்றுபோன "அண்ணா நீ என் தெய்வம்'' படத்தை கொஞ்சம் மாற்றி "அவசர போலீஸ்'' என்ற பெயரில் எடுக்கவிருப்பதாகவும், அதன் சில காட்சிகளில் நான் நடித்துத்தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    நான் அவரிடம், "நடிப்பை அடியோடு மறந்து விட்டேன். அதனால் தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள்'' என்று தெளிவாக கூறி, நடிப்புக்கு வைத்த முற்றுப்புள்ளியை உறுதி செய்தேன்.

    லண்டனில் இருந்து எப்போதாவது ஊருக்கு வரும்போது, எங்கள் வீட்டின் அருகில் இருக்கும் `வீனஸ் ஸ்டூடியோ'வில் நடக்கும் படப்பிடிப்பு கண்ணில் படும். "நாமும் இந்த சினிமாவில்தானே இருந்தோம். இப்போது நடிப்பு பற்றிய சிந்தனையே எழவில்லையே'' என்று நினைத்துக் கொள்வேன்.

    இப்படியாக நடிப்பதில்லை என்ற முடிவுடன்தான் வெளிநாட்டில் நான் இருந்த 10 வருடங்களும் ஓடிற்று. அம்மாவுக்காக ஊர் வந்தபோது இங்கேயே நிரந்தரமானேன்.

    தங்கையின் திருமணத்தையும் முடித்த நேரத்தில் ஒருநாள் மஞ்சுளாவின் பிறந்த நாளுக்காக அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன்.

    "உலகம் சுற்றும் வாலிபன்'' படத்தில் நடித்த நாளில் இருந்தே நானும் மஞ்சுளாவும் நல்ல தோழிகளாகி விட்டோம். அந்த நட்பு இன்றைக்கும் அதே நிலையில் தொடர்கிறது.

    நான் மஞ்சுளாவுடன் பேசிக்கொண்டிருந்த நேரத்தில், டைரக்டர் ராஜ்கிரண் அங்கே வந்திருந்தார். என்னைப் பார்த்ததும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர், அப்போது அவர் இயக்கி நடிக்கவிருந்த "பொன்னு விளையும் பூமி'' படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று என்னைக் கேட்டுக்கொண்டார்.

    அப்போதும், "நான் நடிப்பதில்லை. நடிப்பையெல்லாம் விட்டு வருஷக்கணக்காச்சே'' என்றேன்.

    ஆனால் அவர் விடவில்லை. "எம்.ஜி.ஆருடன் நடித்த நட்சத்திரம் நடிப்பை விடுவதாக சொன்னால் எப்படி?'' என்றார்.

    அவர் பேச்சில் எப்படியும் என்னை நடிக்க வைத்துவிடவேண்டும் என்கிற குறிக்கோள் பிரதானமாக இருந்தது.

    அன்றைக்கு `முடியாது' என்று மறுத்துவிட்டாலும், ஒரு மாதம் அவர் என்னை விடவில்லை. "படத்தின் கதையைக் கேளுங்கள். மறுக்காமல் நடிப்பீர்கள்'' என்று வற்புறுத்தி வந்தார். ஒருநாள் என்னை சந்தித்து கதையும் சொன்னார்.

    எம்.ஜி.ஆர். ஹீரோயினை எப்படியாவது நமது படத்தில் நடிக்க வைத்துவிடவேண்டும் என்ற அவரது ஆவல் தெரிந்தது. மஞ்சுளாவும் என்னிடம், "இவ்வளவு தூரம் உனக்காக காத்திருப்பவரை இனியும் `முடியாது' என்று சொல்லி நோகடிக்காதே. நல்ல கேரக்டராகத்தானே இருக்கிறது. நடியேன்'' என்றார்.

    ஒரு வழியாக இப்படி 1997-ல் நான் ஒப்புக்கொண்டு நடித்து வெளியான படம் "பொன்னு விளையும் பூமி.''

    இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்தது. முதன் முதலாக வயதான மேக்கப் போட்டு நடிக்க வைத்தார்கள். காமிரா முன் நிற்கும்வரை கூட, "எப்படி நடிக்கப்போகிறேனோ'' என்ற உதறல் இருந்தது. ஆனால் டைரக்டர் "ரெடி... டேக்'' என்றபோது எப்படித்தான் நடித்தேன் என்பதே தெரியாது. ïனிட் ஆட்கள் கரகோஷம் செய்தபோதுதான் நடிப்பு மறுபடியும் எனக்கும் ஒட்டிக்கொண்டு விட்டதை உணர்ந்தேன்.

    தொடர்ந்து மளமளவென படங்கள் வந்தன. எனக்குப் பிடித்த கேரக்டர்களை மட்டும் ஏற்று நடித்தேன்.''

    இவ்வாறு நடிகை லதா கூறினார்.

    சென்னைக்கு வந்ததும் `ஏரோபிக்ஸ்' வகுப்புக்கு போகத்தொடங்கியிருந்தார், லதா. இப்படி ஒருநாள் காலை வகுப்புக்கு காரில் போனபோது, விபத்தில் சிக்கினார்.

    அதுபற்றி லதா கூறியதாவது:-

    "காலை 6 மணிக்கே எழுந்து `ஏரோபிக்ஸ்' கிளாசுக்கு புறப்பட்டேன். காரை நானே `டிரைவ்' செய்தேன்.

    கார் `டிரைவ் இன் உட்லண்ட்ஸ்' ஓட்டலைத் தாண்டும்போது, நான் கொஞ்சமும் எதிர்பாராதவிதமாக ஓட்டல் சந்தில் இருந்து ஒரு ஆட்டோ மெயின் ரோட்டுக்கு திரும்பியது. ஆட்டோ வந்த வேகத்தில் என் கார் மீது உரசி விடும் என்று புரிந்து கொண்டு, ஸ்டியரிங்கை கொஞ்சம் வேகமாக வலப்பக்கம் ஒடித்தேன். கார் என் கட்டுப்பாட்டை மீறி, பிளாட்பார மேடையில் மோதி கவிழ்ந்து விட்டது.

    அது காலை நேரம் என்பதால், ரோட்டில் வாகனப் போக்குவரத்து இல்லை. தலைகீழாக கிடந்த காருக்குள் முகத்தில் ரத்தம் கொட்டிய நிலையில் அரை மயக்கத்துடன் நான் கிடந்தேன். அப்போது, எங்கிருந்தோ வந்த இன்னொரு ஆட்டோ டிரைவர் ஓடிவந்து காருக்கு வெளியே நான் வர உதவினார்.

    அதே வேகத்தில் அவரது ஆட்டோவிலேயே என்னை, அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கொண்டுபோய் சேர்த்தார். முகமெல்லாம் ரத்தம் கொட்டிய நிலையில் இருந்த என்னை யாரென்றே அவருக்குத் தெரியாது! அப்படியிருந்தும் எனக்கு உதவி செய்த அவருடைய மனித நேயம் என்னால் மறக்கவே முடியாது.

    ஆஸ்பத்திரியில் இருந்து அவர் புறப்படும்போதுகூட, "உங்கள் முகவரியைக் கொடுத்துவிட்டுப் போங்கள்'' என்றேன். அவரோ, "அதெல்லாம் இருக்கட்டும்மா'' என்று சொல்லி விட்டுப்போய்விட்டார்.

    5 மணி நேரம் அப்பல்லோவில் ஆபரேஷன் நடந்தது. கண் பக்கத்தில் ஸ்டியரிங் இடித்ததில் கொஞ்சம் தவறினாலும், கண் போயிருக்கும். தெய்வாதீனமாக தப்பியதாகத்தான் இப்போதும் நினைக்கிறேன்.

    தெய்வம் போல் அந்த நேரத்தில் வந்து உதவிய ஆட்டோ டிரைவர் யாரென்றும் தெரியவில்லை. ஆனால் சமயத்தில் உதவிய அந்த அன்பை என்னால் மறக்கவே முடியாது.''

    இவ்வாறு லதா கூறினார்.

    ஒரு கட்டத்தில் படங்களில் நடித்தது போதும் என்ற எண்ணம் ஏற்பட்டபோது லதா திருமணம் செய்து கொண்டார்.
    ஒரு கட்டத்தில் படங்களில் நடித்தது போதும் என்ற எண்ணம் ஏற்பட்டபோது லதா திருமணம் செய்து கொண்டார். கணவர் சபாபதி, சிங்கப்பூரில் பிஸினசில் இருந்ததால் கணவருடன் அங்கே போனார். கணவரின் பிஸினஸ் லண்டன், பிரான்ஸ், மலேசியா என்று விரிவுபடுத்தப்பட, 10 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாடுகளிலேயே இருந்தார்.

    லதா தம்பதிகளுக்கு 2 மகன்கள். லதா கணவருடன் வெளிநாடுகளில் இருக்க நேர்ந்தாலும் மகன்கள், சென்னையில் பாட்டி வீட்டில் தங்கி படித்தார்கள். சென்னை கோபாலபுரத்தில் உள்ள டி.ஏ.வி. பள்ளியில் பிளஸ்-2 வரை படித்த கார்த்திக், அதன் பிறகு மேல் படிப்புக்காக லண்டன் போனார்.

    அதே பள்ளியில் பத்தாவது வரை படித்து விட்டு சீனிவாஸ் மேற்படிப்புக்காக லண்டன் போனார். மூத்தவர் கார்த்திக் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் கணித நிர்வாகத்தில் பட்டப்படிப்பை முடித்து விட்டு இரண்டாண்டுகள் `பேங்கிங்' படிப்பை தொடருகிறார்.

    இளையவர் `லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் கல்லூரியில்' இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பை தொடர்ந்து வருகிறார்.

    இப்படி 10 ஆண்டுகள் கடந்த நிலையில் லதாவின் அம்மாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் `கேன்சர்' என்பது உறுதியானதும் லதாவுக்கு தகவல் பறக்க, அடுத்த விமானத்தில் பறந்து சென்னை வந்தார் லதா.

    மீண்டும் சென்னை விஜயம் பற்றி லதா கூறியதாவது:-

    "கணவரின் தொழில், பிள்ளைகளின் படிப்பு என்று வெளிநாட்டு வாழ்க்கை 10 வருடமாக தொடர்ந்தது. இடையிடையே ஊருக்கு வந்து போவதுண்டு. ஆனால் அம்மாவுக்கு கேன்சர் என்றதும் மனம் தாங்காமல் சென்னை வந்துவிட்டேன்.

    இந்த நேரத்தில் எம்.ஜி.ஆருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். நான் சென்னை வந்த நேரத்தில் எம்.ஜி.ஆரும் சிகிச்சை முடிந்து பூரண சுகம் பெற்று சென்னை திரும்பியிருந்தார். சென்னைக்கு வந்ததும் என் அம்மாவின் உடல்நிலை அவருக்கு சொல்லப்பட, உடனே அம்மாவை பார்க்க ஆஸ்பத்திரிக்கே வந்து விட்டார். அப்போது அவர் மூன்றாவது முறையாக முதல்-அமைச்சர் ஆகியிருந்தார்.

    என்னைப் பார்த்ததும், "அம்மாவுக்கு இப்படி இருப்பதை என்னிடம் ஏன் முன்பே சொல்லவில்லை?'' என்று கேட்டார். நான் லண்டனில் இருந்து சென்னை வந்ததே அம்மாவை கவனித்துக் கொள்ளத்தான் என்பதை சொன்னேன். சிகிச்சை முறைகளை டாக்டர்கள் மூலம் தெரிந்து கொண்டவர், சிறப்பான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யும்படி கூறினார். அமெரிக்க சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு சரியாக பேச்சு வராத நேரம். அப்படியிருந்தும் அக்கறை எடுத்துக்கொண்டு நேரில் வந்து அம்மாவை பார்த்த அவரது அன்பை இப்போது நினைத்தாலும் கண்கள் கலங்குகின்றன.

    கேன்சர் முற்றிவிட்டதால், அம்மா சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இதனால் என் கடைசித் தங்கைக்கு நான் தாயாகும் நிலை ஏற்பட்டது.

    அம்மா இருந்திருந்தால் எவ்வளவு சிறப்பாக என் தங்கை தேவி திருமணத்தை நடத்தி வைப்பார்களோ, அதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் அவள் திருமணத்தை நடத்தி வைக்க விரும்பினேன். தங்கைக்கேற்ற வரன் தேடியபோது ஓட்டல் பார்க் ஷெரட்டன் அதிபரின் மகன் கவுரவ் கோயல் கிடைத்தார். திருமணத்தை சிறப்பாக நடத்தி முடித்தேன். அன்றைய தினம் அவள் தாய்போல நான் மன நிறைவு பெற்ற நாள்.

    என் தம்பிகளில் ராஜ்குமார் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும். நான் படித்த ஹோலிகிராஸ் கான்வென்ட் பெண்களுக்கானது என்றாலும், முதல் ஐந்து வகுப்புகளில் மட்டும் ஆண் -பெண் சேர்ந்து படித்து வந்தனர். இந்த வகையில் தம்பி ராஜ்குமார் ஹோலிகிராஸ் கான்வென்டில் சேர்ந்தான்.

    நான் நடிக்க வந்த நேரத்தில் ராஜ்குமார் முழு எம்.ஜி.ஆர். ரசிகனாகவே மாறிவிட்டான். ஒருமுறை அவன் வீட்டில் இருந்த நேரத்தில் டெலிபோன் ஒலித்திருக்கிறது. எடுத்துப் பேசியபோது, "நான் எம்.ஜி.ஆர். பேசுகிறேன்'' என்று எம்.ஜி.ஆர். சொல்ல, அவரிடம் பேசி முடித்துவிட்டு அன்று முழுக்க அவன் அடைந்த சந்தோஷத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

    அப்போது, "ரிக்ஷாக்காரன்'' படம் ரிலீசாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. ராஜ்குமாரின் வகுப்பாசிரியர் அன்று மாணவர்களிடம், "எதிர்காலத்தில் யார் யார் என்னென்னவாக வரப்போகிறீர்கள்?'' என்று கேட்டிருக்கிறார். மாணவர்களில் பலரும் "டாக்டராவேன்'', "என்ஜினீயராவேன்'', "பைலட்டாவேன்'' என்று சொல்ல, ராஜ்குமார் முறை வந்தபோது அவன் எழுந்து, "நான் ரிக்ஷாக்காரன் ஆவேன் சார்'' என்றிருக்கிறான்.

    மாணவர்கள் குபீரென சிரித்து வகுப்பறையை அலற வைத்திருக்கிறார்கள். ஆசிரியரும் அந்தப் பதிலை எதிர்பார்க்கவில்லை என்பதால், "ஏன் அப்படி?'' என்று கேட்டிருக்கிறார். அப்போது, ரிக்ஷாக்காரன் படத்தில் எம்.ஜி.ஆர். நடித்த ரிக்ஷாக்காரன் கேரக்டர் அந்த அளவுக்கு ஒரு நல்ல கேரக்டராக ராஜ்குமார் மனதில் பதிந்திருப்பதை ஆசிரியர் தெரிந்து கொண்டார்.

    மறுநாள் படப்பிடிப்பில், பள்ளியில் `ரிக்ஷாக்காரன்' ஆக விரும்பிய தம்பியின் எதிர்கால ஆசை பற்றி எம்.ஜி.ஆரிடம் சொன்னேன். ஆச்சரியமாக கேட்ட எம்.ஜி.ஆர், "பார்த்தியா லதா! இதுதான் நம் உழைப்புக்கான மரியாதை. ரிக்ஷா ஓட்டுபவர் தனது நேர்மையான கேரக்டர் மூலம் உன் தம்பி மனதில் பதிந்திருக்கிறார். ஒரு கேரக்டர் மக்கள் மனதில் நல்லவிதமாய் பதிய வேண்டும் என்பதற்காகத்தானே அவ்வளவு கஷ்டப்படுகிறோம். அதற்கு கிடைத்த பலன்தான் உன் தம்பியின் மனதில் பதிந்த `ரிக்ஷாக்காரன்' ஆசை'' என்று விளக்கம் தந்தார்.

    ராஜ்குமார் பின்னாளில் நடிகராகி, நடிகை ஸ்ரீபிரியாவை திருமணம் செய்து கொண்டு 2 பிள்ளைகளுக்கு அப்பா ஆனாலும், இப்போதும் எம்.ஜி.ஆர். ரசிகன்தான்.''

    இவ்வாறு லதா கூறினார். 
    ×