search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கை நழுவிப்போன இசை அமைப்பு வாய்ப்புகள்
    X

    கை நழுவிப்போன இசை அமைப்பு வாய்ப்புகள்

    ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராகப் பணியாற்றிய காலக் கட்டத்தில், இசை அமைப்பாளர் ஆவதற்கான வாய்ப்புகள், இளையராஜாவை தேடி வந்தன. கடைசி நேரத்தில் அவை கை நழுவிப்போயின.
    ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராகப் பணியாற்றிய காலக் கட்டத்தில், இசை அமைப்பாளர் ஆவதற்கான வாய்ப்புகள், இளையராஜாவை  தேடி வந்தன. கடைசி நேரத்தில் அவை கை நழுவிப்போயின.

    இதன் காரணமாக "அன்லக்கி'' (ராசி இல்லாதவர்) என்று பெயர் பெற்றார்!

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    "ஜி.கே.வி.க்கு நிறைய படங்கள் வந்தன. இரவு இரண்டு மணி வரை கம்போசிங் நடக்கும். காலை 7 மணிக்கு பாடல் பதிவு! இப்படி எத்தனையோ மாதங்கள் நடந்துள்ளன.

    சென்னையில், இசைக் கருவிகள் விற்பனை செய்யும் கடைக்கு, வெளிநாட்டுக் கிட்டார் வந்திருந்தது. விலை 150 ரூபாய். கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து அதை வாங்கி விட்டேன்.

    பாடல்களுக்கு நானும், பிலிப்சும் கிட்டார் வாசிப்போம். பாட்டின் இடையே சில சமயம் பிலிப்ஸ் வாசிப்பார்.

    அவர் கைக்கு நல்ல நாதம் அமைந்திருந்தது. அதே கிட்டாரை வேறு யாராவது வாசித்தால் அந்த நாதம் வராது. சில பேருடைய கைவாகு அப்படி. அதேபோல் வாத்தியமும் அவர்களுக்கு படிய வேண்டும். குதிரைகளில் எல்லோரும் சவாரி செய்து விட முடியாது. அது சிலருக்குத்தான் கட்டுப்படும்.

    அதே போலத்தான் வாத்தியங்களும், இசையும், பாட்டும், கலைகளும், பண்பும், ஒழுக்கமும், தவமும்!

    நாம் தவமிருப்பதல்ல; தவம் நமக்கு அமைய வேண்டும்.

    ஜி.கே.வெங்கடேஷ் இசை அமைக்கும் படங்களின் டைரக்டர்கள் வந்து, கதையைச் சொல்லி, பாடல்கள் இடம் பெற வேண்டிய இடங்களையும் சொல்லி விட்டுச் செல்வார்கள். அந்த வேலை முடியும் வரை என் பணியைச் செய்து விட்டு, வீட்டுக்கு வருவேன். பாடலின் அந்த கட்டத்திற்கு நான் இசை அமைக்க வேண்டியிருந்தால் என்ன செய்வேன் என்று யோசிப்பேன். இசை அமைத்துப் பார்ப்பேன். பாடலை கம்போஸ் செய்து பார்ப்பேன். இப்படியே, நிறைய டிïன்கள் சேர்ந்து விட்டன!

    பாஸ்கர், பகல் நேரத்தில் சும்மா இருக்க முடியாது. வழக்கமாக சினிமா கம்பெனிகளுக்குப் போய் வருவார். அதில், டைரக்டர் டி.என்.பாலுவுக்கு உதவியாளராக இருந்த முருகானந்தம், பாஸ்கருக்கு பழக்கமாகி நண்பர் ஆனார். அவர் சொந்தமாகப் படம் தயாரிக்க போவதாகவும், அதற்கு நாம்தான் இசை அமைக்க வேண்டும் என்றும் பாஸ்கர் சொன்னார்.

    படக்கம்பெனிக்கு "வலம்புரி மூவீஸ்'' என்று பெயர் சூட்டப்பட்டது. ராயப்பேட்டையில் ஆபீசும் திறக்கப்பட்டது.

    இசை அமைப்புக்கு அட்வான்சாக ஐந்தாயிரம் ரூபாய் செக்கை, முருகானந்தம் கொடுத்தார். என்னால் நம்பவே முடியவில்லை. அந்தக் காலத்தில் பெரிய இசை அமைப்பாளர்களுக்கு முழு இசை அமைப்புக்கும் ஐந்தாயிரம் ரூபாய்தான் சம்பளம் கொடுத்தார்கள். இவர், அட்வான்சாகவே ஐந்தாயிரம் கொடுக்கிறாரே, பெரிய புரொடிïசர்தான் போலிருக்கு என்று நினைத்துக் கொண்டேன்.

    இந்த செக்கை பாங்கியில் போடாமல் நானே வைத்திருந்தேன். ரெக்கார்டிங்கில் வாசிக்கும்போது, வலம்புரி மூவிஸ் கொடுத்த செக்கை நண்பர்களிடம் அவ்வப்போது பெருமையுடன் காட்டுவேன். அவர்களும் ஆச்சரியப்படுவார்கள்.

    ஆனால், வலம்புரி மூவிஸ் படம் எடுக்கவில்லை; எடுக்கவும் முடியவில்லை.

    இதன் பிறகு, இன்னொரு பட அதிபரிடம் பழகி விட்டு பாஸ்கர் வந்தார். அந்தப் படத்திற்கு அடுத்த நாள் ஆழ்வார்பேட்டை ஆனந்த் ஓட்டலில் கம்போசிங் என்று சொன்னார்.

    எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அடுத்த நாள் ஆனந்த் ஓட்டலுக்குப் போனோம். தயாரிப்பாளர், டைரக்டர், பாடலாசிரியர் சேதுராமன் ஆகியோர் ஓர் அறையில் இருந்தார்கள். டைரக்டர் படத்தின் கதையைச் சொல்லி, "பூஜைக்கு ஒரு காதல் பாட்டை பதிவு செய்யலாம்'' என்றார்.

    டிïன் கம்போஸ் செய்தேன். டைரக்டருக்கும் பிடித்திருந்தது.

    பூஜைக்கு நாள் குறிப்பிடப்பட்டது. பி.சுசீலாவும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் பாடுவதாக முடிவு செய்யப்பட்டது. "பாடல் பதிவுக்கு ஸ்டூடியோ வாடகை, பாடகர்கள் இசைக் குழுவினர் சம்பளம் ஆகியவற்றுக்கு எவ்வளவு பணம் வேண்டும்?'' என்று பட அதிபர் கேட்க, அவருக்கு பட்ஜெட் கொடுக்கப்பட்டது.

    பாடல் பதிவு நாள். இசைக் குழுவினருடன் ஒத்திகை பார்த்தோம்.

    இடையிடையே இசைக் குழுவினர், "பணம் வந்து விட்டதா?'' என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால், காலையில் இருந்தே புரொடக்ஷன் மானேஜர், புரொடிïசர் எவரையுமே காணோம்!

    நேரம் ஆகிக் கொண்டிருந்தது. பணம் வந்த பாடில்லை. பட அதிபர் எங்கே போனார் என்று தெரியவில்லை. ஆனந்த் ஓட்டலில் அவர் தங்கியிருந்த ரூம் காலி செய்யப்பட்டிருந்தது!

    இதற்கிடையே பாடுவதற்கு பி.சுசீலாவும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் வந்து விட்டார்கள். அவர் களுக்கு பாடல் சொல்லிக் கொடுக்கப்பட்டு ஒத்திகை நடந்தது.

    பணம் வந்து சேர வில்லை. என்ன செய்வ தென்று ஆலோசித்தோம்.

    "இவ்வளவு நேரம் சிரமப்பட்டு, பாடலை உருவாக்கியிருக்கிறோம். பாடலை பதிவு செய்வோம். பணம் கொடுத்த பிறகு அவரிடம் பாடலை கொடுப்போம்'' என்று முடிவு செய்து, அதை ஸ்டூடியோவுக்கு தெரிவித்தோம். ஒலிப்பதிவு என்ஜீனியரும் ஒப்புக் கொள்ளவே, பாடல்

    பதிவாகியது.ஆனால் இன்று வரை பணமும் வரவில்லை; பட அதிபரும் வரவில்லை.

    அதிலிருந்து, இசைக் கலைஞர்கள் மத்தியில் என்னை "அன்லக்கி மிïசிக் டைரக்டர்'' (ராசியில்லாத இசை அமைப்பாளர்) என்று குறிப்பிட ஆரம்பித்தார்கள்!''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    Next Story
    ×