search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பாடல் எழுதியது கண்ணதாசனா? வாலியா?
    X

    பாடல் எழுதியது கண்ணதாசனா? வாலியா?

    கவிஞர் கண்ணதாசனும், வாலியும் சம காலத்தில் சிறந்த பாடல்களை எழுதிக் குவித்தனர். அதனால் பிற்காலத்தில், சில பாடல்கள் `இது கண்ணதாசன் எழுதியதா, அல்லது வாலி எழுதியதா?' என்ற சந்தேகத்தை ஏற்படுத்தின.
    கவிஞர் கண்ணதாசனும், வாலியும் சம காலத்தில் சிறந்த பாடல்களை எழுதிக் குவித்தனர். அதனால் பிற்காலத்தில், சில பாடல்கள் `இது கண்ணதாசன் எழுதியதா, அல்லது வாலி எழுதியதா?' என்ற சந்தேகத்தை ஏற்படுத்தின.

    இதுபற்றி வாலி எழுதியிருப்பதாவது:-

    ஒரு விழாவில், என் அருமை நண்பரும் தஞ்சைப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான அவ்வை நடராஜன் பேசும்போது, "காற்று வாங்கப்போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன்! அதை கேட்டு வாங்கிப் போனாள் -அந்த கன்னி என்னவானாள்?'' என்று கவியரசர் கண்ணதாசன் எழுதினார். இப்படி எழுத இன்று யாரேனும் இருக்கிறார்களா?'' என்று கூறினார்.

    என்னை பக்கத்தில் வைத்துக்கொண்டே அவ்வை நடராஜன் இவ்வாறு சொன்னபோது, அவை ஆரவாரித்து அதை ஆமோதித்தது.

    என் அன்புச் சகோதரி மனோரமா அவர்கள் ஒரு பத்திரிகையில் கீழ்க்கண்டவாறு எழுதினார்:

    "கண் போன போக்கிலே

    கால் போகலாமா?

    கால் போன போக்கிலே

    மனம் போகலாமா?

    மனம் போன போக்கிலே

    மனிதன் போகலாமா?

    மனிதன் போன பாதையை

    மறந்து போகலாமா?''

    என்று கவிஞர் கண்ணதாசன் அற்புதமான பாட்டை எழுதினார். இப்ப வர்ற சினிமாவிலே, இது மாதிரி யாரு கருத்தோட பாட்டு எழுதறாங்க?'' என்று ஒரு வினாவையும் எழுப்பியிருந்தார், மனோரமா.

    பிரபல பட அதிபர் `ஜீவி' அவர்கள் ஒரு பத்திரிகையில், "நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ! நíரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ!'' என்று கண்ணதாசன் பாடல் எழுதினார். இது போல கற்பனை வளத்தோடு எழுத இப்போது யார் இருக்கிறார்கள்?'' என்று எழுதியிருந்தார்.

    இது குறித்து நான் விசனப்படவில்லை; பேசியவர்களின் வார்த்தைகளால் எவ்வித மனத்தாங்கலும் ஏற்படவில்லை.

    ஏனென்றால், நண்பர் நடராஜன் அவர்களும், மனோரமா அவர்களும், ஜீவி அவர்களும் சிறப்பித்துப் பாராட்டிய மூன்று பாடல்களும் கண்ணதாசன் எழுதியவை அல்ல; அடியேன் எழுதியவை.

    நல்ல பாடல் என்றாலே, அதைக் கண்ணதாசன் எழுதியிருக்க வேண்டும் என்று மேற்சொன்ன மூவரும் நினைப்பதில் தப்பில்லை. இருப்பினும், எதை எவர் எழுதினார் என்று தெள்ளத்தெளிய அறிந்து வைத்துக்கொண்டு பேசுதல்தான் நயத்தகு நாகரீகமாகும்.

    `வாலி பாட்டு எது, என் பாட்டு எது என்று எனக்கே சில சமயங்களில் தெரிவதில்லை' என்று கவியரசர் கண்ணதாசன் பலமுறை பாராட்டியிருப்பதை கவிஞர் நா.காமராசனை கேட்டுப்பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    `நான் எழுதுகிற மாதிரியே எழுதக்கூடியவன் வாலி. இப்ப இந்த சிச்சுவேஷனுக்கு நான் எழுதியிருக்கிற மாதிரி அவன் வேறு ஏதாவது படத்திலே எழுதியிருக்கானான்னு சரி பார்த்துக் கொள்ளுங்கள்' என்று இயக்குனர்களிடம் கண்ணதாசன் சொல்வது உண்டு என்பதை, புகழ் வாய்ந்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமனிடம் கேட்டுப் புரிந்து கொள்ளலாம்.

    இலங்கை வானொலிக்கு அளித்த பேட்டியில், என் பாடல் வரிகளை கண்ணதாசன் சிலாகித்துப் பேசியுள்ளார்.

    "கண்ணதாசனும், வாலியும் எனக்கு இரண்டு கண்கள்'' என்று தன் கருத்தைப் பதிவு செய்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்.''

    இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.

    வாலியின் பாடல் குறித்து, இன்னொரு நகைச்சுவை நிகழ்ச்சியும் நடந்தது.

    ஸ்ரீரங்கத்தில், வாலியின் குடும்ப நண்பர் ஒருவர் வீட்டுத் திருமணத்தில் சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமனின் கச்சேரிக்கு ஏற்பாடாகியிருந்தது.

    வாலி, திரைப்படத் துறையில் புகழ் பெறத் தொடங்கிய நேரத்தில், சிதம்பரம் ஜெயராமன் அவ்வளவாக பின்னணி பாடவில்லை. எனவே இருவருக்கும் அறிமுகம் இல்லை.

    இசை அமைப்பாளர் ராமமூர்த்தி மூலமாக கச்சேரிக்கு வாலி ஏற்பாடு செய்தார். சிதம்பரம் ஜெயராமனை அவரே காரில் அழைத்துச் சென்றார்.

    தன்னைப்பற்றி ஜெயராமனிடம் ராமமூர்த்தி கூறியிருப்பார் என்று வாலி நினைத்தார். ஆனால், `நம்ம திருச்சிக்காரர், கச்சேரி விஷயமா உங்களைப் பார்ப்பார்!' என்று மட்டுமே ராமமூர்த்தி கூறியிருந்தார். எனவே, தன்னைக் காரில் அழைத்துச் செல்கிறவர் வாலி என்பது ஜெயராமனுக்குத் தெரியாது.

    காரின் முன் வரிசையில் சி.எஸ்.ஜெயராமன் அமர்ந்திருந்தார். பின் வரிசையில் வாலி உட்கார்ந்திருந்தார்.

    கார், செங்கல்பட்டைத் தாண்டியது. ஜெயராமன் ஒரு கச்சேரிப் பாடலை ஆலாபனம் செய்தார். ஆனந்தமாய் பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்த வாலி, இடையில் "ஆகா! அற்புதம்!'' என்றார்.

    உடனே ஜெயராமன் பாட்டை நிறுத்திவிட்டு, "தம்பி! உங்களுக்கு சங்கீதம் தெரியுமா?'' என்று கேட்டார்.

    "ஓரளவு ரசிக்கத் தெரியும். சட்ட -திட்டம் எல்லாம் அவ்வளவாகத் தெரியாது'' என்றார், வாலி.

    "நான் இப்போது பாடியது என்ன ராகம்?'' என்று ஜெயராமன் கேட்டார்.

    "காமவர்த்தினி'' என்று பதில் சொன்னார், வாலி.

    "பலே!'' என்று மகிழ்ச்சியுடன் கூவினார், ஜெயராமன்.

    பிறகு, அவர் ஒவ்வொரு பாட்டாகப் பாட, "இது ஹரி காம்போதி'', "இது பைரவி'', "இது கல்யாணி'' என்றெல்லாம் ராகங்களின் பெயர்களைக் கூறிக்கொண்டே வந்தார், வாலி.

    மனம் மகிழ்ந்து போன ஜெயராமன், "தம்பி! நீங்க காவேரி தண்ணியாச்சே! சங்கீத ஞானத்துக்கும் கேட்கணுமா?'' என்று வாலியை பாராட்டினார்.

    பிறகு, "தம்பி! நீங்க என்ன தொழில் பண்றீங்க...'' என்று கேட்டார்.

    "பாட்டு எழுதிக்கிட்டு இருக்கிறேன்'' என்று வாலி சொன்னதும், "அப்படியா!'' என்று வியப்புடன் கூறினார், ஜெயராமன்.

    பிறகு, "கிராமபோன் ரிக்கார்டுலே யாராது பாடியிருக்காங்களா?'' என்று கேட்டார்.

    டி.எம்.சவுந்தர்ராஜன், பி.சுசீலா ஆகியோர் பாடியிருப்பதாக வாலி சொன்னார்.

    "சபாஷ்! சபாஷ்! டி.எம்.சவுந்தரராஜன் என்ன பாட்டு பாடியிருக்காரு, கொஞ்சம் பாடிக்காட்டுங்க'' என்றார்,

    சி.எஸ்.ஜெயராமன். டி.எம்.எஸ். பாடிய - "கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும்'', "ஓராறு முகம்'' ஆகிய பாடல்களையும், பி.பி.சீனிவாஸ் பாடிய "இசையால் எதுவும் வசியமாகும்'' என்ற பாடலையும், வேறு சில பாடல்களையும் பாடிக்காண்பித்தார், வாலி.

    பரவசப்பட்டுப்போன ஜெயராமன், "உங்க பாட்டுகள் எல்லாம் பிரமாதமாக இருக்கு. இந்த பாட்டுகளையெல்லாம் நான் ஏற்கனவே கேட்டிருக்கிறேன். ஆனால், நீங்கள் எழுதியது என்று தெரியாது'' என்று கூறிவிட்டு, "தம்பி! உங்களுக்கு பாட்டெழுத நல்லா வருது. அருமையான சொற்கள். கருத்துக்களும் பிரமாதமா இருக்கு. நீங்க சினிமாவில் பாட்டு எழுத முயற்சி பண்ணினால், பிரமாதமாக வருவீங்க'' என்றார்.

    "அண்ணே...!'' என்று குறுக்கிட்டார், வாலி. ஆனால் அவரை பேச விடாமல் ஜெயராமன் தொடர்ந்து கூறினார்:

    "தம்பி! நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்குப் புரியுது. நம்ம பாட்டையெல்லாம் சினிமாவிலே யாரு எடுத்துப்பாங்கன்னு நீங்க சந்தேகப்படுறீங்க. இந்த சந்தேகம் எல்லாம் வேண்டாம். மகா மோசமா பாட்டு எழுதுகிறவன் எல்லாம் இப்ப சினிமாவுக்கு வந்துவிட்டான்'' என்று சொன்ன சிதம்பரம் ஜெயராமன், வெற்றிலையை மடித்து வாயில் திணித்தவாறே, "அத்தைமடி மெத்தையடி, மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், புன்னகை என்ன விலை... இப்படி எல்லாம் மட்டகரமான பாட்டுக்கள் வர ஆரம்பிச்சுடுச்சு.

    எவனோ ஒருத்தன் `வாலி'ன்னு இப்ப புதுசா வந்திருக்கிறான். விஸ்வநாதன் -ராமமூர்த்தி கிட்ட அவன்தான் நிறைய எழுதுறான். பாட்டெல்லாம் ஒரே கட்சிப் பாட்டா இருக்கு. நீங்க எவ்வளவோ தேவலை. விவரமா எழுதறீங்க'' என்று சொல்லி முடிப்பதற்கும், கார் திண்டிவனத்தில் ஒரு டீக்கடை எதிரே நிற்பதற்கும் சரியாக இருந்தது. டிரைவர் டீ குடிக்கப்போனார்.

    வாலியும், சிதம்பரம் ஜெயராமனும் மாறுபட்ட மன நிலையில் நாலாபுறத்தையும் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.

    திடீரென்று, பத்துப்பதினைந்து பள்ளி மாணவர்கள், "டேய்! கார்ல உட்கார்ந்து இருப்பது கவிஞர் வாலிடா... வாங்கடா ஆட்டோகிராப் வாங்கலாம்'' என்றபடி ஓடிவந்தனர்.

    ஆட்டோகிராப் நோட்டை நீட்டிய மாணவர்களுக்கு, "நல்வாழ்த்துக்கள் -வாலி'' என்று கையெழுத்து போட்டுக்கொடுத்தார், வாலி. இதைப்பார்த்த சிதம்பரம் ஜெயராமன் `ஷாக்' அடித்தவர் போல சிலையானார்.

    மாணவர்கள் போனபின், வாலியின் இரு கைகளையும் பற்றிக்கொண்டு, "தம்பி! நீங்கதான் வாலின்னு தெரியாம பேசிட்டேன். ஆமாம். நீங்களாவது உங்க பெயரை சொல்லியிருக்கக் கூடாதா?'' என்று பாசத்தோடு கேட்டார்.

    "என் பெயர் என்னன்னு நீங்க கேட்கவே இல்லையேண்ணே! அதனால்தான் நானும் சொல்லலே'' என்றார் வாலி.

    சிதம்பரம் ஜெயராமன் சிரித்துக்கொண்டே, "காவேரித் தண்ணீக்கே கொஞ்சம் குசும்பு ஜாஸ்தி'' என்று, வாலியின் கன்னத்தை செல்லமாகத் தட்டினார்.

    Next Story
    ×