என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    மறைந்த பால முரளி கிருஷ்ணா உடலுக்கு கமல்ஹாசன் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். அதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா நேற்று சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது- 86. மரணம் அடைந்த பால முரளி கிருஷ்ணாவுக்கு அன்னபூரணி என்ற மனைவியும், அபிராம், சுதாகர், வம்சி மோகன் ஆகிய மகன்களும், சூர்யகாந்தி, லட்சுமி, மஹதி ஆகிய மகள்களும் உள்ளனர்.

    சென்னை கோபாலபுரம் கதீட்ரல் சாலையில் உள்ள கனகஸ்ரீ நகரில் இருக்கும் அவரது வீட்டில் பால முரளி கிருஷ்ணா உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    தகவல் அறிந்ததும், த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன், ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ, மார்க்சிஸ்டு கம்யூ. மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இசை அமைப்பாளர் இளையராஜா,நடிகர் சிவக்குமார், கார்த்திக் ராஜா, பாடகர் டி.எம்.கிருஷ்ணா, பாடகிகள் சுதா ரகுநாதன், நடிகை வைஜெயந்தி மாலா, வீணை ராஜேஷ் வைத்தியா உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

    நடிகர் கமல்ஹாசன் இன்று பால முரளி கிருஷ்ணா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பாலமுரளி கிருஷ்ணா மிகப்பெரிய சாதனையாளர். அவருடைய மறைவு பெரிய இழப்பு. அவரை சந்திக்க, பாடல்களை வாங்கிச்செல்ல பலமுறை இங்கு வந்திருக்கிறேன். அவரது இசை என்றும் வாழும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணு, மாநில செயலாளர் முத்தரசன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் நடராஜ், கர்நாடக இசை பாடகி நித்ய ஸ்ரீ மகாதேவன், பாடகிகள் ரஞ்சனி, காயத்ரி, வாணி ஜெயராம், பாடகர் மனோ, இயக்குனர் வசந்த் உள்பட ஏராளமானோர் இன்று அஞ்சலி செலுத்தினார்கள்.

    பாலமுரளி கிருஷ்ணா மறைவுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மத்திய மந்திரி வெங்கையா நாயுடு, மற்றும் அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் விஷால், தனுஷ் உள்பட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
    மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பட அதிபர் மதனுக்கு 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்..
    எஸ்.ஆர்.எம். பல்கலை கழகத்தில் மருத்துவ படிப்புக்கு சீட் வாங்கி தருவதாக கூறி 123 பேரிடம் ரூ.85 கோடியை சுருட்டிய சினிமா பட அதிபர் மதன் கடந்த மே மாத இறுதியில் தலைமறைவானார். கடந்த 5½ மாதங்களாக மதனை போலீசாரால் தேடப்பட்டு வந்த மதன் திருப்பூரில் சிக்கினார். தனது தோழி வர்ஷா வீட்டில் பதுங்கி இருந்த போது பிடிபட்ட மதனை போலீசார் சென்னைக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    மோசடி பணத்தை மதன் எங்காவது பதுக்கி வைத்துள்ளாரா? இல்லை ரூ.85 கோடியையும் யாருக்காவது பிரித்து கொடுத்தாரா? என்பது பற்றி மதனிடம் விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது. மதனுக்கு 2 மனைவிகள் உள்ளனர். சென்னையை சேர்ந்த கீதாஞ்சலி, திருப்பூர் வர்ஷா ஆகியோரும் மதனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தனர். இதனால் இவர்களது பெயரில் மதன் எங்காவது சொத்துக்களை வாங்கி குவித்துள்ளாரா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட் டுள்ளனர்.

    அதே நேரத்தில் மதன் பெயரில் உள்ள சொத்துக்கள் பற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். வெளி மாநிலங்களில் தங்கி இருந்த போது உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கேயில் வீடு ஒன்றையும் மதன் வாங்கி இருக்கிறார். இப்படி வெளி மாநிலங்கள் பலவற்றிலும் மதன் சொத்துக்களை வாங்கி இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள்.

    இதுதொடர்பாக விசாரிக்கவும், மோசடி பற்றிய பல்வேறு தகவல்களை திரட்டவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக மதனை 10 நாள் காவலில் எடுக்க சைதாப்பேட்டை கோர்ட்டில் போலீசார் மனு செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.

    இதற்காக சைதாப்பேட்டை கோர்ட்டில் மதன் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். புழல் சிறையில் இருந்து பாதுகாப்புடன் மதனை அழைத்து வந்த போலீசார் காலை 11 மணி அளவில் கோர்ட்டு வளாகத்துக்குள் அழைத்துச் சென்றனர். மதனை 10 நாள் காவலில் எடுப்பது தொடர்பான மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    மோசடி தொடர்பாக மதனிடம் முழுமையாக விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் 10 நாட்கள் காவலுக்கு அனுமதிக்க வேண்டும் என்று போலீசார் கோர்ட்டில் தெரிவித்தனர். இதற்கு மதன் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், மதனை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. நவம் 29-ந் தேதி வரை அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கவுள்ளனர்.

    போலீஸ் காவலின் போது, மதனிடம் மோசடி தொடர்பாகவும், சொத்துக்கள் தொடர்பாகவும் பல்வேறு கேள்விகளை கேட்க போலீசார் முடிவு செய்திருக்கிறார்கள். அப்போது மதனின் மோசடி வித்தைகள் பற்றி பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    பாகுபலி-2 படத்தின் காட்சிகள் திருட்டுத்தனமாக வெளியானதையடுத்து இணையதளத்தில் அதை நீக்கியுள்ளனர். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    ராஜமவுலி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘பாகுபலி-2’. இது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இதில் பிரபாஸ்-அனுஷ்கா நடித்துள்ள முக்கிய காட்சிகள் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியானது.

    அதில், பிரபாஸ், அனுஷ்கா இருவரும் படை வீரர்களுடனும் எதிரிகளுடனும் வாக்குவாதம் செய்கிறார்கள். பின்னர் அவர்களை தாக்க தயாராகிறார்கள். முதல் பாகத்தில் அனுஷ்கா அழுக்கான புடவையுடன் விலங்கிட்டபடி இருந்தார். இதில் இளவரசி தோற்றத்தில் உள்ள அனுஷ்கா அழகாக இருக்கிறார்.


    பேசிக்கொண்டிருக்கும் பிரபாஸ் தனது வில்லை எடுத்து எதிரியை வீழ்த்துவது போன்ற காட்சியுடன் இது முடிவடைகிறது. இதுதவிர அடுத்து எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் அனிமே‌ஷன் வடிவத்தில் இடம் பெற்றிருக்கிறது. மொத்தம் 60 ஷாட்டுகள் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. இது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.


    இதையடுத்து, இந்த காட்சிகளை யூடியூப்பில் வெளியிட்டது கிராபிக்ஸ் வடிவமைப்பாளர் கிருஷ்ணா தயானந்த் சவுத்ரி என்பது தெரியவந்தது. படத் தயாரிப்பாளர் கண்டலசோபு புகாரின் பேரில் தயானந்த் சவுத்ரி கைது செய்யப்பட்டார். ‘பாகுபலி-2’ படத்தின் 9 நிமிட காட்சிகளை திருடினார். அதில் 2.5 நிமிட காட்சிகளை யூடியூப்பில் வெளியிட்டார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

    சைபர் கிரைம் போலீசார் எடுத்த நடவடிக்கையை அடுத்து யூடியூப்பில் வெளியான ‘பாகுபலி-2’ காட்சிகள் நீக்கப்பட்டன.
    பாலமுரளி கிருஷ்ணா மறைவுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    பழம்பெரும் கர்நாடக இசைமேதை, பாலமுரளி கிருஷ்ணா சில நாட்கள் உடல் நலக் குறைவாக இருந்து, நேற்று மறைந்து விட்டார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறேன். தன்னுடைய மிக இளம் வயதிலேயே சிறந்த இசை வாணராகப் பெயர் பெற்று, தமிழகத்திலும், ஆந்திர மாநிலத்திலும் மற்றும் உலகின் பல பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான கச்சேரிகளில் பங்கு பெற்று தனக்கெனத் தனிப் புகழ் நாட்டியவர்.

    திரை உலகத்திலும் இசைத் துறையில் பங்கேற்று வெற்றிக் கொடி ஏற்றியிருக்கிறார். கழக ஆட்சியில் கோவையில் நடத்தப்பட்ட உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக நான் இயற்றிய இசைப் பாடலின் சில வரிகளை அவர் பாடியது இன்னும் எனது செவிகளில் தவழ்ந்து கொண்டுள்ளது.

    மத்திய அரசின் “பத்ம விபூ‌ஷன்” விருது, சென்னை மியூசிக் அகாடமியின் “சங்கீத கலாநிதி” விருது உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளை பாலமுரளி கிருஷ்ணா பெற்றுள்ளார். அவருடைய மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், குறிப்பாக இசை உலகத்தினருக்கும் என் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தான் தவறான வயதில் திருமணம் செய்துவிட்டதாக அமலாபால் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்..
    நடிகை அமலா பாலும், இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமணம் திரையுலகத்தினர் அனைவரும் வியந்து பார்க்கும் அளவிற்கு நடைபெற்றது. திருமணம் செய்த வேகத்திலேயே இருவரும் பிரிந்துவிட்டனர். விவாகரத்து கோரி இருவரும் சென்னையில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    இந்நிலையில் விஜய் மற்றும் திரையுலகம் பற்றி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அமலா பால் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘புது வாழ்க்கையை துவங்கியது போன்று உணர்கிறேன். 18 வயதில் நடிக்க வந்த எனக்கு 23 வயதில் திருமணமாகி 24 வயதில் இருவரும் பிரிந்துவிட்டோம். எனக்கு அறிவுரை கூற யாரும் இல்லாததால் தவறுகள் மூலம் பாடம் கற்றுக் கொண்டேன்.

    விஜய்யை பிரிந்த பிறகு அழுதேன். ஆனால் அதில் இருந்தும் பாடம் கற்றுக் கொண்டேன். நான் இன்னும் விஜய்யை காதலிக்கிறேன், இனியும் காதலிப்பேன். அவர் எப்பொழுதுமே என் வாழ்வின் மிகவும் ஸ்பெஷலான நபராக இருப்பார்.

    விஜய்யை பிரியும் முடிவு தான் என் வாழ்வின் மிகவும் கடினமான முடிவு. யாருமே பிரிவதற்காக திருமணம் செய்வது இல்லை. வாழ்க்கையை புரிந்து கொள்ள முடியவில்லை. விஜய்யை திருமணம் செய்ய நான் எடுத்த முடிவில் தவறு இல்லை. நான் தவறான வயதில் திருமணம் செய்து கொண்டேன். 20-களின் துவக்கத்தில் திருமணம் செய்வது நல்லது அல்ல. அதற்காக அது பற்றி நான் குறை கூறவில்லை.

    பிரிவிற்கு பிறகு பல இடங்களுக்கு சென்று வந்தேன். ஒவ்வொரு அனுபவமும் புதியதாக இருந்தது. அது தான் என்னை வாழ்க்கை பற்றி புரிய வைத்தது’ என்றார்.

    இறந்துவிட்டதாக வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் கவுண்டமணி சார்பில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு கொடுக்கப்பட்டது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்..
    பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணி சார்பில் வக்கீல் சசிகுமார் என்பவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நடிகர் கவுண்டமணி நல்ல உடல் ஆரோக்கியத்தோடு நலமாக உள்ளார். இந்த நிலையில், அவர் இறந்துவிட்டதாக அடிக்கடி சமூக வலைதளங்களில் (பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர்) சிலர் வதந்தியை பரப்புகிறார்கள். அடையாளம் தெரியாத நபர்கள் இதுபோன்ற வதந்தியை பரப்புகின்றனர்.

    இதனால் கவுண்டமணியும், அவரது குடும்பத்தினரும், உற்றார், உறவினர்களும், நண்பர்களும் மன வருத்தப்படும் சூழ்நிலை உள்ளது. இதுபோன்ற தவறான தகவல்கள் வெளியாகும்போது கவுண்டமணிக்கு செல்போனில் பேசி, அவரது ரசிகர்களும் நலம் விசாரிக்கிறார்கள்.

    இன்று (நேற்று) காலையில் கவுண்டமணி என்னிடம் செல்போனில் பேசினார். இறந்துவிட்டதாக வதந்தி பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுக்கும்படி கவுண்டமணி என்னிடம் கேட்டுக்கொண்டார். கவுண்டமணி கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளேன்.

    போலீஸ் கமிஷனரையும் நேரடியாக சந்தித்து பேச இருக்கிறேன். சைபர் கிரைம் போலீசார் நான் கொடுத்த புகார் மனுவின் அடிப்படையில் விசாரிக்க உள்ளனர். வதந்தி பரப்புபவர்கள் யார்? என்று தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    அஜித் பட இயக்குனர் கே.சுபாஷ் திடீர் மரணமடைந்துள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்...
    தமிழில் ‘சத்ரியன்’, ‘பிரம்மா’, ‘நினைவிருக்கும் வரை’, ‘ஏழையின் சிரிப்பில்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியவர் கே.சுபாஷ். இவர் இன்று சென்னை எஸ்.ஆர்.மருத்துவமனையில் உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 57.

    ‘கலியுகம்’ படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான கே.சுபாஷ், ஆரம்ப காலத்தில் அஜித்தை வைத்து ‘பவித்ரா’, ‘நேசம்’ என இரு படங்களை இயக்கியுள்ளார். தமிழில் கின்னஸ் சாதனைக்காக எடுக்கப்பட்ட ‘சுயம்வரம்’ படத்திலும் ஒரு இயக்குனராக பணியாற்றியுள்ளார்.


    123 படப்பிடிப்பின்போது படக்குழுவினருடன் இயக்குனர் கே.சுபாஷ்

    இதுமட்டுமில்லாமல், இந்தியில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’, ‘தில்வாலே’, ‘ஹவுஸ்புல்’ உள்ளிட்ட படங்களுக்கு எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார்.

    இவர் தமிழில் கடைசியாக இயக்கிய படம் ‘123’. இப்படத்தில் நடன இயக்குனர்களான பிரபுதேவா, ராஜு சுந்தரம், நாகேந்திர பிரசாத் மூவரும் இணைந்து நடித்திருந்தனர். ஜோதிகா கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


    இயக்குனர் கே.சுபாஷ் தனது மனைவி, மகளுடன்

    சுபாஷின் மரணம் தமிழ் திரையுலகில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 
    பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கு தீர்வாக ‘சைவ கோமாளி’ என்ற படத்தை உருவாக்கி வருகிறார்கள். அந்த படம் குறித்த மேலும் விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    ‘கில்லி’, ‘குருவி’, ‘தூள்’ படங்களை இயக்கிய இயக்குனர் தரணி, ‘புதிய கீதம்’ படத்தை இயக்கிய இயக்குனர் ஜெகன், ‘வேட்டைக்காரன்’ படத்தை இயக்கிய பாபு சிவன், ‘மௌனகுரு’ படத்தை இயக்கிய சாந்தகுமார் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றிய சுரேஷ் சீதாராம் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

    இப்படத்திற்கு ‘சைவ கோமாளி’ என்று வித்தியாசமான தலைப்பு வைத்துள்ளனர். காமெடி திரில்லருடன் உருவாகி வரும இப்படத்தில் புதுமுக நடிகர் ரஞ்சித், நான் கடவுள் ராஜேந்திரன், ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ ராஜ்குமார், பவர் ஸ்டார் சீனிவாசன், ஜி.எம்.குமார், டி.பி.கஜேந்திரன், கிரேன் மனோகர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    படம் குறித்து இயக்குனர் கூறும்போது, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு சைகோவும், ஒரு கோமாளியும் இருக்கிறான். அவன் எப்படி தன்னை வெளிப்படுத்துவான் என்பது இந்த சமூகம் அவனை எதிர்கொள்கின்ற முறையில்தான் இருக்கிறது என்ற கருத்தையும், இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளையும், அதை தடுத்து நிறுத்துவதற்கான தீர்வையும் இந்த படத்திற்கான திரைக்கதையாக அமைத்திருக்கிறேன் என்றார்.

    சமீபத்தில் இப்படத்தில் 108 ஆம்புலன்சின் முக்கியத்துவத்தை பற்றி விளக்கும் ‘ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டா ஒதுங்கு, யம்மா ஹாஸ்பிட்டல் வந்துடுச்சு இறங்கு’ என்ற பாடல் காட்சியை ஈசிஆர் சாலை, பல்லாவரம், பம்மல், கீழுர், மணப்பாக்கம் போன்ற பகுதிகளில் குத்துப்பாட்டாக படமாக்கியிருக்கிறார்கள்.

    இந்த குத்துப்பாட்டில் 108 ஆம்புலன்சின் கம்பவுண்டராக நான் கடவுள் ராஜேந்திரன் நடித்துள்ளார். டிரைவராக ராஜ்குமாரும், முதலுதவி மருத்துவராக நடிகை ரெஹானாவும் ஆடிப்பாடி நடித்திருக்கிறார்கள். இந்த பாடலை கானா பாலா எழுதி, பாடியுள்ளார். கணேஷ் ராகவேந்திரா இசையமைத்துள்ளார்.

    மேலும், இப்படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் அசிஸ்டெண்ட் போலீஸ் கமிஷனராக நடிக்கிறாராம். கிரிமினல் மினிஸ்டராக ஜி.எம்.குமார் நடித்துள்ளார். சைக்கோ வேடத்தில் நாயகன் ரஞ்சித் நடித்துள்ளார். படத்திற்கு கே.பாலா ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.எம்.எஸ். மூவிஸ் நிறுவனம் சார்பில் ஏ.சி.சுரேஷ், மகேந்திரன், சாய் மகேந்திரன் இணைந்து தயாரித்துள்ளனர். 
    பாலமுரளி கிருஷ்ணாவின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் என்ன குறிப்பிட்டிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்...

    முதல் - அமைச்சர் ஜெயலலிதா வெளியிட் டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    பிரபல கர்நாடக இசை விற்பன்னரும், திரைப்பட பின்னணி பாடகருமான டாக்டர் எம். பாலமுரளி கிருஷ்ணா நேற்று உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து நான் மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.

    டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவின் 75-வது பிறந்த நாள் விழா மற்றும் செவாலியே விருது பெற்றதற்கான பாராட்டு விழா 2005-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்றபோது அந்த விழாவில் நான் கலந்து கொண்டு அவரை வாழ்த்திப்பேசியதும், அப்போது எனக்காக ‘‘ஜெய ஜெய லலிதே’’ என்ற ராகத்தை அவர் அர்ப்பணித்ததும், அதே விழாவில் தமிழ்நாடு அரசின் சார்பில் ‘கந்தர்வ கான சாம்ராட்’ என்ற பட்டத்தை நான் வழங்கியதும் இன்றும் என் மனதில் பசுமையாக உள்ளது.

    இசைத்துறையில் அளப்பரிய பணி ஆற்றிய டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா மண்ணுலகை விட்டு விண்ணுலகிற்கு சென்று விட்டார் என்பது கர்நாடக இசைக் கலைஞர்களுக்கும், இசைத்துறையினருக்கும், திரைப்படத்துறையினருக்கும், ரசிகப் பெருமக்களுக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக எனக்கும் மிகப்பெரிய இழப்பு. இந்த இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது. அவருடைய இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது.

    டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், இசை கலைஞர்களுக்கும், ரசிகப் பெருமக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துகொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பாலமுரளி கிருஷ்ணா மறைவு குறித்து, ‘இசை உலகம் தனது கிரீடத்தை இழந்து விட்டது’, என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்து உள்ளார்.
    கர்நாடக இசைக்கலைஞர் பாலமுரளி கிருஷ்ணாவின் மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    இசைமேதை பாலமுரளி கிருஷ்ணாவின் மறைவால் இசை உலகம் தனது கிரீடத்தை இழந்துவிட்டது. இசையே வாழ்வு, வாழ்வே இசை என்று வாழ்ந்த கலைஞன் இசைப்பதை நிறுத்திக்கொண்டுவிட்டார்.

    இசை அவரின் மரபணுக்களோடு கலந்திருந்தது. அவரது தந்தை ஒரு புல்லாங்குழல் மேதை. அவரது அன்னை ஒரு வீணைக் கலைஞர். புல்லாங்குழலும் வீணையும் கூடிப்பெற்ற குழந்தை அவர். எட்டு வயதில் அரங்கேறியவர். பதினைந்து வயதுக்குள் 72 மேளகர்த்தா ராகங்களுக்கும் கீர்த்தனை வடிவம் தந்தவர். சங்கீதம், சாகித்தியம், கானம் என்று முக்கூறாய் இயங்கும் இசை என்ற தத்துவம் அவருக்குள் ஒரே புள்ளியில் இயங்கியது.

    அவரது குரல் காற்றை நெசவு செய்யும் குரல். காதுகளில் தேன்தடவும் குரல். கர்நாடக இசையின் மூலம் பண்டிதர்களுக்கு நல்லிசை என்ற அமிர்தம் அளிக்கத் தெரிந்த பாலமுரளிகிருஷ்ணா, திரை இசையின் மூலம் பாமரர்களுக்கு மெல்லிசையைப் பந்தி வைத்தார்.

    அவர் பெருமை பேச ‘ஒருநாள் போதுமா...’ என்று அவர் பாடிய பாடலையே துணைக்கழைக்கிறேன். ‘தங்கரதம் வந்தது வீதியிலே...’ என்ற பாடல் அவரது குரலில் விளைந்த அமுதமாகும். ‘மவுனத்தின் விளையாடும் மனச்சாட்சியே’ என்ற பாடல் அவர் உன்னதக் குரலின் உச்சமாகும்.

    சக கலைஞர்களைக் குறைப்பதில்லை, எவரையும் பழிப்பதில்லை, நாம் வாழ்த்தப் பிறந்தவர்கள் என்ற பெருங்குணத்தால் அவர் மனித மாணிக்கமாகவும் திகழ்ந்திருக்கிறார். அந்த அருங்குணந்தான் நிகழ் சமூகத்திற்கு அவர் விட்டுச் செல்லும் செய்தியாகும்.

    ‘சங்கீத கலாநிதி’, ‘இசைப்பேரறிஞர்’, ‘பத்ம விபூஷண்’ என்ற விருதுகளைப் பெற்ற பாலமுரளி கிருஷ்ணாவுக்கு மிச்சமிருந்த ஒரே விருது ‘பாரத ரத்னா’ மட்டும்தான்.

    அவர் காலமாகவில்லை. கலையோடு கலந்துவிட்டார். கலைக்கு மரணமில்லை. கலையோடு கலந்தவர்களும் மரிப்பதில்லை. காற்றில் நாதம் உள்ள காலம்வரை பாலமுரளி கிருஷ்ணாவின் கானம் மிதந்துகொண்டே இருக்கும்.

    அவரைப்போல் ஓர் இசைவாணர் பிறக்க வேண்டுமே என்ற ஏக்கத்தோடும், பிறக்கமுடியுமா? என்ற துக்கத்தோடும் என் இரங்கல் செய்தியை நிறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
    "அன்னக்கிளி''க்கு பிரமாதமாக இசை அமைத்த இளையராஜாவை, கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் பாராட்டினார்.
    "அன்னக்கிளி''க்கு பிரமாதமாக இசை அமைத்த இளையராஜாவை, கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் பாராட்டினார்.

    "அன்னக்கிளி'' வெளியானபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி, இளையராஜா கூறியதாவது:-

    "அன்னக்கிளி'' ரிலீஸ் ஆனபோது, மூகாம்பிகை கோவிலுக்குப் போகத் திட்டமிட்டேன். முடியவில்லை. 100-வது நாளுக்கும் போகமுடியவில்லை. 150-வது நாள், 175-வது நாள் (வெள்ளி விழா) எதற்கும் போக இயலவில்லை. `இனி அம்மா கூப்பிட்டால்தான் போகமுடியும்' என்று தீர்மானித்து, முயற்சி செய்வதை விட்டுவிட்டேன்.

    ராஜ்குமார் ஷெனாய் வித்வானாக நடித்த "ஷெனாதி அப்பண்ணா'' என்ற படத்துக்கு ஜி.கே.வெங்கடேஷ் இசை அமைத்தார்.

    இந்தப் படத்தில், ஷெனாய் வாசிக்க பிரபல ஷெனாய் இசை மேதை பிஸ்மில்லாகான் வந்திருந்தார். அவர் இதுவரை எந்த சினிமா படத்துக்கும் ஷெனாய் வாசித்ததில்லை. ஷெனாய் வித்வானைப்பற்றிய கதை என்பதால், அவர் ஒப்புக்கொண்டிருக்கலாம்.

    அந்தப் படத்திற்கு நான் ஜி.கே.வி.யுடன் பணியாற்றியபோது, என்னை பிஸ்மில்லாகானுக்கு ஜி.கே.வி. அறிமுகப்படுத்தி வைத்தார். "என் சிஷ்யன்; இப்போது இசை அமைப்பாளராக ஆகி இருக்கிறார்'' என்றார்.

    நான், பிஸ்மில்லாகானின் காலில் விழுந்து வணங்கினேன். அவர் ஆசி கூறினார்.

    அந்தக் காலக்கட்டத்தில், எல்லா நேரமும் ஜெமினி ஸ்டூடியோவிலேயே கிடந்தேன். இசை ஆறாக - நதியாக ஓடி, சங்கீத சாகரத்தில் கலக்கும் அழகை ரசித்தேன்.

    பிஸ்மில்லாகான் மெய்மறந்து வாசித்துக் கொண்டிருப்பார். திடீரென்று நிறுத்திவிடுவார். ஒரு துண்டை விரித்து நமாஸ் (தொழுகை) செய்வார். ஒரு நாளில் 6 முறை தொழுகை நடத்தும் ஒழுக்கத்தை அவர் கடைப்பிடித்து வந்தார். ஒருநாள்கூட, இந்த வழக்கத்தை அவர் மாற்றிக்கொண்டது இல்லை.

    ஒருநாள், ராஜ்குமாரின் பாடலை பதிவு செய்ய பிரசாத் ஸ்டூடியோவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    சற்று நேரத்தில் ராஜ்குமார் அண்ணா வந்துவிட்டார். பாடலை கையில் வாங்கிக்கொண்டார்.

    ஜி.கே.வி. ஆர்மோனியத்துடன் உட்கார்ந்திருக்க, அவருக்கு நேரே எதிர்த்தாற்போல் ராஜ்குமார் அமர்ந்திருந்தார். ஜி.கே.வி.யின் வலது புறம் நான். மறுபுறம் தபேலா கன்னையா, `டோலக்' பாலா.

    ஜி.கே.வி. பாட ஆரம்பித்தார். ராஜ்குமார் அண்ணா, பாடலை கவனிக்கவே இல்லை. என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.

    எனக்கு கூச்சமாக இருந்தது. ஜி.கே.வி.யின் பாடலுக்கு தக்கபடி நான் வாத்தியம் வாசிக்க அது இடைïறாகவும் இருந்தது.

    ராஜ்குமார் "எல்லாம் கடவுள் செயல்'' என்பது போல மேலே கையைக்காட்டி, கன்னத்தில் போட்டுக்கொண்டார். பிறகு, "எல்லிநோடிதரு நின் ஹெசுரே கனோ'' (எங்கு பார்த்தாலும் உன் பெயர்தானப்பா) என்றார்.

    எனக்குக் கூச்சம் அதிகமாயிற்று. "அண்ணா! பாட்டைப் பார்க்கலாம் அண்ணா!'' என்றேன்.

    அப்போது ராஜ்குமாரைப் பார்த்து ஜி.கே.வி, "ஆமா, ஆமா முத்துராஜ்! பேரு பெரிய பேருதான்'' என்றார்.

    பிறகு ஒரு வழியாக, ராஜ்குமார் பாடுவதற்குத் தயாரானார்.

    அவர் பாடலை பதிவு செய்தோம்.

    "அன்னக்கிளி'' மிகப்பிரபலமான போதிலும், நான் இசை அமைப்பாளர்கள் இடையே பத்தோடு பதினொன்றாக இருப்பேன் என்றுதான் நினைத்தேன். அதற்கு மேல் நினைக்கவில்லை.

    "இரண்டாவது படம் வந்தால் மூகாம்பிகை போகலாம்'' என்று நினைத்தேன்.

    இந்த சமயத்தில், மனைவி ஜீவா, இரண்டாவது பிரசவத்துக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள். இந்த முறை அடிக்கடி போய் பார்த்துக்கொண்டேன். பெண் குழந்தை பிறந்தது.

    இந்த நேரம், "பாலூட்டி வளர்த்த கிளி'' என்ற படத்துக்கு இசை அமைக்க, எனக்கு டைரக்டர் மாதவனிடம் இருந்து அழைப்பு வந்தது. "பெண் குழந்தை பிறந்த ராசி'' என்று அம்மா கூறினார்கள்.

    அருண்பிரசாத் மூவிஸ் பேனரில் இப்படம் தயாராகியது. பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதினார். கதாநாயகி ஸ்ரீபிரியா பாடுவதுபோல் "கொலை கொலையா முந்திரிக்கா'' என்ற பாடலை எழுதிக் கொடுத்தார்.

    "அண்ணே! எனக்காக நீங்கள் எழுதும் முதல் பாட்டு இது!'' என்று நினைவூட்டினேன்.

    "அதனால்தான், இந்தப் பாடலின் நடுவே, `வா, ராஜா வா' என்று வருமாறு எழுதியிருக்கிறேன்'' என்றார், கவிஞர்.

    "உங்கள் ஆசி அண்ணே'' என்று மகிழ்ச்சியோடு கூறினேன்.

    பி.மாதவன் தயாரித்த இந்தப் படத்தை, தேவராஜ் - மோகன் இயக்கினர். விஜயகுமார் - ஸ்ரீபிரியா நடித்தனர். வசனம்: கோமல் சாமிநாதன்.

    20-8-76 அன்று வெளிவந்த "பாலூட்டி வளர்த்த கிளி'' சரியாக ஓடவில்லை. "கிளியின் அருமையான இசை'' என்றெல்லாம் மாதவன் சார் விளம்பரம் செய்து பார்த்தார், பலன் இல்லை.

    ஹாலிவுட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘பேண்டஸ்டிக் பீஸ்ட்ஸ்’ படம் தமிழிலும் வெளியாகியிருக்கிறது. அந்த படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்..
    அமெரிக்காவில் திடீரென ஒரு தாக்குதல் நடக்கிறது. இந்த தாக்குதலுக்கு தீய சக்திகளின் தலைவனான ஹிரிண்டல் வால்ட் காரணமாக இருக்குமோ என்ற அச்சம் அமெரிக்காவில் நிலவுகிறது. இதனால், மாயாஜால உலகிற்கும் சாதாரண மக்களுக்கும் இடையே போர் நிலவுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

    இதனை தடுப்பதற்காக மாயாஜால சமூகம் ஏற்கெனவே மாய விலங்குகளை வளர்க்க விதிக்கப்பட்ட தடையை மேலும் அதிகமாக்குகிறது. இந்நிலையில், நாயகன் எடி ரெட்மயானே மாய விலங்குள் அடங்கிய உலகத்தை ஒரு சூட்கேசில் வைத்துக் கொண்டு நியூயார்க் நகரத்துக்கு வருகிறான்.

    அந்த சூட்கேசுக்குள் இருக்கும் மிகப்பெரிய ராட்சத பறவையை அமெரிக்காவின் அரிசோனா காடுகளில் விட்டுச் செல்வதற்காக வருகிறான். ஆனால், அதற்குள் அவனுடைய சூட்கேஸ் பறிபோய்விடுகிறது. இந்நிலையில், அந்த சூட்கேசுக்குள் இருக்கும் மாய விலங்குகள் எல்லாம் வெளியே வந்துவிடுகிறது.

    இந்நிலையில், அமெரிக்காவில் அடுத்தடுத்து தாக்குதல் நடத்துகிறது. இதையெல்லாம் அறியும் மாயாஜால சமூகம் சூட்கேசுக்குள் இருந்து வெளியே வந்த விலங்குகள்தான் இந்த தாக்குதலுக்கு காரணம் என்று எண்ணுகின்றனர். எனவே, அந்த விலங்குகளை கொண்டு வந்த நாயகனை தேடிக் கண்டுபிடித்து அவனுக்கு மரண தண்டனை நிறைவேற்ற முடிவெடுக்கிறார்கள்.

    இதிலிருந்து நாயகன் எப்படி மீண்டு வந்தார்? அந்த விலங்குகளை எப்படி அவர் மீட்டுக் கொண்டு வந்தார்? என்பதே மீதிக்கதை.

    இந்த படம் ஹாரிபார்ட்டருக்கு 70 வருடத்துக்கு முந்தைய காலக்கட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகியிருக்கிறது. அந்த காலக்கட்டத்தில் உள்ள கட்டிடங்களை அழகாக உருவாக்கியிருக்கிறார்கள். அவை கிராபிக்ஸ் என்பதையும் மீறி தத்ரூபமாக இருப்பதாக சிறப்பு.

    அதேபோல், கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்கியுள்ள ஒவ்வொரு மிருகங்களும் பார்ப்பதற்கு ரொம்பவுமே ரசிக்க வைக்கின்றன. அதிலும், குறிப்பாக, திருடுவதையே வேலையாக கொண்டு வரும் மிருகம் செய்யும் சேஷ்டைகள் எல்லாம் சிரிக்க வைக்கின்றன. ராட்சத பறவை பார்க்கவே மிரள வைக்கிறது. இதேபோல், சூட்கேசுக்குள் இருக்கும் உலகத்தை மிகவும் அழகாக காட்டியிருக்கிறார்கள்.

    அந்த உலகத்திற்குள் வாழும் ஒவ்வொரு மிருகமும் எந்த சூழ்நிலையில் வாழவேண்டுமோ அந்த சூழ்நிலைக்கேற்றவாறு அந்த உலகத்தை படைத்திருப்பது ரொம்பவும் ரசிக்கக்கூடியதாக இருக்கிறது. படத்திற்கு பெரிய பலமே கிராபிக்ஸ் காட்சிகள்தான். படம் முழுக்க கிராபிக்ஸ் நிறைந்திருந்தாலும், அவை எல்லாமே தத்ரூபமாக இருக்கும்படி அமைத்திருக்கிறார்கள்.

    மொத்தத்தில் ‘பேண்டஸ்டிக் பீஸ்ட்ஸ்’ பிரமிப்பு.
    ×