என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    ராணாவின் பிறந்தநாளான இன்று அவருக்கு பாகுபலி படக்குழுவினர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
    பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதிக்கு இன்று பிறந்தநாள். இவர் தற்போது ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் ‘பாகுபலி’ இரண்டாம் பாகத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் பாகத்தில் ஹீரோவுக்கு இணையான வேடத்தில் நடித்திருந்தால் இவருடைய கதாபாத்திரம் பலராலும் வரவேற்கப்பட்டது.

    இந்நிலையில், இரண்டாம் பாகத்தில் இவருடைய கதாபாத்திரம் மிகவும் வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ராணாவின் பிறந்தநாளையொட்டி ‘பாகுபலி’ படக்குழுவினர் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க முன்வந்தனர். அதன்படி, அவர் நடித்து வரும் ‘பாகுபலி’ இரண்டாம் பாகத்தில் அவருடைய கதாபாத்திரத்தை சித்தரித்து அப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

    ஏற்கெனவே, ‘பிரபாஸ்’ பிறந்தநாளின்போதும் அவருடைய புதிய போஸ்டரை வெளியிட்டு அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். தற்போது ராணாவுக்கும் அதையே படக்குழுவினர் பின்பற்றியுள்ளனர். பிறந்தநாளில் தன்னுடைய பிரத்யேக போஸ்டரை ‘பாகுபலி’ படக்குழுவினர் வெளியிட்டுள்ளது ராணாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை ஆகவேண்டும் என்று புதுமுக நடிகை ஒருவர் தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.

    பெங்களூரில் இருந்து தமிழுக்கு வந்துள்ள ஷைனி 2 படங்களில் நடித்து வருகிறார். இதுபற்றி கூறிய அவர்....“ விஜய் ஆண்டனி நடித்த ‘இந்தியா- பாகிஸ்தான்’ படத்தில் 2-வது முன்னணி பாத்திரத்தில் நடித்தேன். இப்போது ‘மியாவ்’ ‘வீரய்யன்’ படங்களில் நடித்து வருகிறேன்.

    ‘மியாவ்’ படம் நகரத்து கதை. இதில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்கிறேன். ஓரளவு கவர்ச்சியாக நடித்திருக்கிறேன். ‘வீரய்யன்’ படம் கிராமத்து கதை. இதில் தனி கதாநாயகியாக நடித்திருக்கிறேன். நான் தொடர்ந்து கதைக்கு தேவையான அளவு கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன்.

    கர்நாட மாநிலத்தை சேர்ந்த பெண் என்றாலும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ஆக வேண்டும். என்பது தான் எனது ஆசை” என்றார்.

    நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று கதையில் அவரது கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
    பழம்பெரும் நடிகை சாவித்திரி. இவர் 1950 மற்றும் 60-களில் தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், ஜெமினிகணேசன், என்.டி.ராமராவ் உள்பட பலருடன் இணைந்து நடித்து இருக்கிறார். கார், பங்களா மற்றும் வீட்டிலேயே நீச்சல் குளம் என்று ஆடம்பரமாக வாழ்ந்த அவர் சொந்தமாக படம் தயாரித்து சம்பாதித்த பணத்தை எல்லாம் இழந்து கடைசி காலத்தில் கஷ்டப்பட்டு இறந்தார்.

    சாவித்திரியின் வாழ்க்கை தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் சினிமா படமாக தயாராகிறது. தெலுங்கு டைரக்டர் நாக் அஷ்வின் இந்த படத்துக்கான திரைக்கதையை எழுதி படப்பிடிப்பு வேலைகளில் தீவிரமாக இறங்கி இருக்கிறார். இவர் சமந்தாவை சந்தித்து இந்த படத்தின் கதையை சொல்லி சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிக்கும்படி அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    சமந்தாவும் நடிக்க சம்மதம் சொல்லி இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில், “நல்ல கதையம்சம் உள்ள படமொன்றில் நடிக்க இருக்கிறேன். விரைவில் அறிவிப்பு வரும்” என்று சமந்தா குறிப்பிட்டு உள்ளார். சாவித்திரி வாழ்க்கை கதையில் நடிப்பதை நடிகைகள் பலர் பெருமையாக கருதுகிறார்கள். முன்னணி நடிகைகள் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு டைரக்டரை அணுகி உள்ளனர்.

    ஏற்கனவே நடிகை நித்யாமேனனைத்தான் சாவித்திரியாக நடிக்க வைக்க டைரக்டர் நாக் அஷ்வின் முடிவு செய்து இருந்தார். ஆனால் தற்போது அவருக்கு பதில் சமந்தாவை தேர்வு செய்து இருக்கிறார். சாவித்திரி வாழ்க்கை சம்பவங்களை சமந்தா படிக்க ஆரம்பித்து இருக்கிறார். அவர் நடித்த பழைய படங்களை பார்த்தும் நடை உடை பாவனைகளை கூர்ந்து கவனித்து வருகிறார்.

    ஜெமினி கணேசன் உள்ளிட்ட இதர கதாபாத்திரங்களில் நடிக்கவும் நடிகர்கள் தேர்வு நடக்கிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    மீராஜாஸ்மின் மீண்டும் நடிப்பது கணவருக்கு பிடிக்காததால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாகவும், கணவரை விவாகரத்து செய்ய மீராஜாஸ்மின் முடிவு செய்து இருப்பதாகவும் பட உலகில் தகவல் பரவி உள்ளது.
    மலையாள நடிகைகள் பலருக்கு குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக அமையவில்லை. காவ்யா மாதவன், ஜோதிர்மயி, மஞ்சு வாரியர், ஊர்வசி, சரிதா, மம்தா உள்பட பலர் கணவரை பிரிந்துள்ளனர். தற்போது நடிகை மீரா ஜாஸ்மினும் இந்த பட்டியலில் சேர்கிறார். இவர் தமிழில் ரன், சண்டக்கோழி, ஆய்த எழுத்து, திருமகன், மம்பட்டியான் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். மலையாளத்திலும் முன்னணி கதாநாயகியாக இருந்தார்.

    மீராஜாஸ்மினுக்கும் துபாயில் என்ஜினீயராக பணியாற்றிய அனில்ஜான் டைட்டஸ் என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு எதிர்ப்புகளுக்கு இடையில் திருமணம் நடந்தது. அனில்ஜான் டைட்டசின் முதல் மனைவி தன்னை விவாகரத்து செய்யாமல் கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதாக எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் போலீஸ் பாதுகாப்போடு இந்த திருமணம் முடிந்தது. ஆனாலும் திருமணத்தை பதிவு செய்ய அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

    திருமணத்துக்கு பிறகு மீராஜாஸ்மின் சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு கணவருடன் துபாயில் குடியேறினார். மகிழ்ச்சியாக நகர்ந்த இவர்கள் குடும்ப வாழ்க்கையில் புயல் வீசத்தொடங்கி உள்ளது. மீராஜாஸ்மின் கணவரை பிரிந்து திருவனந்தபுரம் வந்து விட்டார். ஒரு வருடமாக இருவரும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.

    தற்போது மலையாள படங்களில் மீராஜாஸ்மின் நடிக்க ஆரம்பித்துள்ளார். ‘10 கல்பனகள்’ என்ற படத்தில் அவர் நடித்துள்ளார். தொடர்ந்து பூமரம் என்ற படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். மீராஜாஸ்மின் மீண்டும் நடிக்க வேண்டும் என்று கணவரை வற்புறுத்தியதாகவும் அதற்கு அவர் சம்மதிக்காததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாகவும் மலையாள பட உலகில் பேசப்படுகிறது.

    கணவரை விவாகரத்து செய்ய வக்கீல்களுடன் அவர் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. விவாகரத்து குறித்து இருவரும் இன்னும் வெளிப்படையாக கருத்து தெரிவிக்கவில்லை. மீராஜாஸ்மின் திருமண முறிவு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சிவாஜிகணேசன் - கே.ஆர்.விஜயா நடித்த `ரிஷிமூலம்' படத்துக்கு, இளையராஜா இசை அமைத்தார். இந்தப் படத்தின் பாடல் பதிவின்போது ருசிகரமான நிகழ்ச்சிகள் நடந்தன.
    சிவாஜிகணேசன் - கே.ஆர்.விஜயா நடித்த `ரிஷிமூலம்' படத்துக்கு, இளையராஜா இசை அமைத்தார். இந்தப் படத்தின் பாடல் பதிவின்போது ருசிகரமான நிகழ்ச்சிகள் நடந்தன.

    தனது இசை வாழ்வு அனுபவங்கள் குறித்து, இளையராஜா கூறியதாவது:-

    "சென்னை கமலா தியேட்டரில் `கிழக்கே போகும் ரெயில்' படத்தின் வெற்றி விழா. விழாவில் நடிகர் திலகம் சிவாஜி கலந்துகொண்டு எங்கள் எல்லாருக்கும் பரிசு வழங்கினார்.

    அவர் பேசும்போது, படத்தில் இடம் பெற்ற ``மாஞ்சோலைக் கிளிதானோ'' என்ற பாடலை வாய்விட்டுப் பாடி, ``அடடா! என்ன பாடல்! என்ன பாடல்!'' என்று புகழ்ந்து பேசினார். நடிகர் திலகத்திடம் இருந்து கிடைத்த இந்தப் பாராட்டு, எங்களை நெகிழ்ச்சி அடையச் செய்தது.

    சிவாஜி பேசும்போது, பாரதிராஜாவை வானளாவ உயர்த்திப்பேசினார். அப்போது, விழாவுக்கு வந்திருந்தவர்களில் ஒருவராக, பாரதிராஜாவின் அம்மாவும் அமர்ந்து, அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

    விழா முடிந்ததும், தனது தாயாரை சந்தித்த பாரதிராஜா, ``எப்படி இருந்தது?'' என்று கேட்க, அந்தத் தாயாரோ சர்வ சாதாரணமாக, ``அது என்னமோப்பா! அவங்க என்னென்னமோ பேசுறாங்க! ஆனா என் காதுல பாரதிராசா, பாரதிராசாங்கற உன் பேர் மட்டும்தான் கேட்டுதுப்பா'' என்று சொன்னார்.

    உயர்ந்த தாயுள்ளத்தின் உணர்வுக்கு எடுத்துக்காட்டாகத்தான் என்னால் இதை உணர முடிந்தது.

    இதற்கிடையில் தயாரிப்பாளர் ராஜ்கண்ணுவின் ஆபீசிற்கு ஒருநாள் போய் வரலாம் என்று போனேன். அப்போது ராஜ்கண்ணுவுடன் சிலர் இருந்தனர். என்னைப் பார்த்ததும், ``படத்தின் பாடல்கள் சரியில்லை. பதினாறு வயதினிலே படப்பாடல்கள் மாதிரி அமைந்திருந்தால் படம் இன்னும் நன்றாகப் போகும்'' என்றார்கள்.

    என் முகத்திற்கு எதிரேயே அவர்கள் இப்படிச் சொன்னதில், எனக்கு வருத்தமாகி விட்டது. எல்லா படப் பாட்டுக்களும் ஒரே மாதிரிதான் இருக்க வேண்டுமா? என்ன இவர்களின் பேச்சு? ஒரு அடிப்படை கலை உணர்வு கூடவா இல்லாமல் இருப்பார்கள்? மனம் வருந்தினேன். அந்த மாதிரியான வருத்தங்கள், மனதில் வடுவாகத் தங்கி விட்டன.

    நடிகர் திலகம் சிவாஜி நடிக்க ``ரிஷிமூலம்'' என்ற படத்தை எஸ்.எஸ்.கருப்பசாமி தயாரித்தார். நான் இசை. மகேந்திரன் வசனம், எஸ்.பி.முத்துராமன் டைரக்ஷன்.

    எஸ்.எஸ்.கருப்பசாமி அப்போது அருப்புக்கோட்டை தொகுதியில் எம்.எல்.ஏ. வாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். மிகவும் கண்டிப்பானவர். கண்ணியமானவரும் கூட.

    பாடல்கள் கம்போசிங்கிற்கு டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், மகேந்திரன், தயாரிப்பாளர் எஸ்.எஸ்.கருப்பசாமி ஆகியோருடன் மகாபலிபுரம் போனேன். அங்குள்ள தமிழ்நாடு தங்கும் விடுதியில் தங்கினோம்.

    மூன்று நாட்கள் தொடர்ந்து கம்போசிங் நடந்தது. ``நேரமிது'' என்ற பாடலுக்கான சூழ்நிலை புதிது. சிவாஜி - கே.ஆர்.விஜயா பாடுவதாக வரும் இந்த டூயட் எங்கே ஆரம்பிக்கிறது தெரியுமா? அவர்கள் பெட்ரூமில்! அதுவும் குழந்தை அருகில் படுத்திருக்கும்போது!

    அதாவது தூங்கும் குழந்தை விழித்து விடாதபடி, மிக மெல்லியதாக அவர்களின் டூயட் அமைய வேண்டும். டிïன் அமைத்து, பாடிக்காட்டினேன். எல்லாருக்கும் பிடித்திருந்தது.

    இந்த டிïனை நான் கம்போஸ் செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது.

    அந்த மாலை நேரத்தில் பிரான்சில் இருந்து சுற்றுலா வந்திருந்த தம்பதியரில் பெண் மட்டும் எங்கள் அறையை கடந்து போயிருக்கிறார். பாடலைக் கேட்டவர் அப்படியே நின்று விட்டார். பிறகு ``நான் உள்ளே வரலாமா?'' என்று வெளியில் இருந்தவாறே சைகை மூலம் கேட்டார். ``ப்ளீஸ் கம் இன்'' என்று டைரக்டர் சொல்ல, உள்ளே வந்தார்.

    நாங்களெல்லாம் கீழே தரையில் விரிப்பை விரித்து அமர்ந்திருந்தோம். எங்களோடு அவரும் கீழே உட்கார்ந்தார். என் முகம் பார்த்தவர், ``நீங்கள் பாடிய பாடலை மறுபடியும் ஒருமுறை பாட முடியுமா?'' என்று கேட்டார்.

    ``ஓ'' என்றேன். மெதுவாக பாடவும் செய்தேன்.

    அந்தப் பெண்ணின் கண்களில் இருந்து `பொலபொல' வென்று கண்ணீர் கொட்டியது.

    பாடல் முடிந்ததும் எல்லாரும் அமைதியானோம்.

    இப்போது அந்தப் பெண்மணி பேசினார். "இந்த இசைக்கும் எனக்கும் பல ஜென்மங்களாக தொடர்பு இருப்பது போல் உணர்கிறேன்'' என்றார். அதோடு, ``இந்த இசையை எனக்காக எழுதித்தர முடியுமா?'' என்று கேட்டவர், தனக்கு பியானோ வாசிக்கத் தெரியும் என்றும்

    சொன்னார்.என்னிடம் மிïசிக் எழுதும் பேப்பர் இல்லை. எனவே என் லெட்டர்பேடில் இருந்து ஒரு பேப்பரை எடுத்து அதில், கோடுகள் போட்டு அந்த இசையை பியோனோவில் வாசிப்பதற்கு தகுந்தாற்போல் எழுதிக் கொடுத்தேன்.

    வாங்கிக் கொண்ட அந்தப் பெண் நன்றி ததும்ப, ``இந்த இசையை வாங்குவதற்குத்தான் இந்த சுற்றுலா நடந்ததோ என்னவோ?'' என்று சொல்லியபடி விடை பெற்றுச் சென்றார்.

    இந்தப் பாடல் பதிவு செய்யப்பட்டபோது, இன்னொரு சம்பவம்.

    டி.எம்.சவுந்தர்ராஜனும், பி.சுசிலாவும் பாடிக் கொண்டிருந்தார்கள். ``மேகத்திலே வெள்ளி நிலா, காதலிலே பிள்ளை நிலா'' என்ற சரணம் போய்க் கொண்டிருந்தது.

    அப்போது எஸ்.பி.முத்துராமன் என்னை அழைத்தார். ``ராஜா சார்! நீங்கள் கம்போசிங்கில் வெறும் ஆர்மோனியத்துடன் பாடும்போது காதருகில் மிகவும் மெல்லிய குரலில் பாடுவது போல இருந்ததே! இப்போது இவர்கள் பாடும்போது பலமான குரலில் வருவது போலல்லவா இருக்கிறது'' என்றார்.

    மகேந்திரனோ அவர் பங்குக்கு, ``ராஜா! இவ்வளவு சத்தமாக பாட்டைக் கேட்டால், கட்டிலில் தூங்கும் பையன் எழுந்து விடமாட்டானா?'' என்றார்.

    நான் டி.எம்.எஸ். - சுசிலா பாடிக் கொண்டிருந்த அறைக்குப் போனேன்.

    டி.எம்.எஸ்.சிடம், ``அண்ணா! குழந்தை தூங்கிக் கொண்டிருக்கும்போது கணவனும், மனைவியும் பாடும் ரொமாண்டிக் பாடல் இது. மெதுவாகக் கேட்க வேண்டும். இதுவோ பெரிய மலைச்சாரலில் நின்று கொண்டு ``மேகத்திலே வெள்ளி நிலா'' என்று பாடுவது போல் வருகிறது. உங்களுக்கு தெரியாததல்ல. மெதுவாகப் பாடினால் நன்றாக இருக்கும்'' என்றேன்.

    அவர், ``ராஜா! நான் மெதுவாகத்தான் பாடுகிறேன். இப்போ கேளு''என்றவர் பாடினார். மிகவும் சன்னமாக குரல் ஒலிக்க, மெதுவாகத்தான் கேட்டது.

    ``பிறகு எப்படி ரிக்கார்டிங்கில் அவ்வளவு பெரிய சத்தமாக கேட்கிறது?'' என்று கேட்டேன்.

    ``நான் என்னப்பா பண்றது? என் குரல் அமைப்பு அப்படி! நேரில் கேட்டால் மென்மையாகவும் மைக்கில் கேட்டால் கம்பீரமாகவும் ஒலிக்கிற குரலாக ஆண்டவன் கொடுத்து விட்டான்'' என்றார், டி.எம்.எஸ்.

    உள்ளே போய் இருவருடைய குரலையும் குறைத்து பாடலைப் பதிவு செய்தோம்.

    ஆனாலும், அது ஒருவருக்கொருவர் காதில் ரகசியமாக பாடுகிற மாதிரி வரவில்லை.

    மகேந்திரன் கதை வசனம் எழுதிய படங்கள் எல்லாம் நன்றாக ஓடியதால் அவருக்கு டைரக்டு செய்யும் வாய்ப்பு வந்தது. ஆனந்தி பிலிம்ஸ் வேணு செட்டியார் அப்படியொரு வாய்ப்பை வழங்கினார்.

    இதைத் தொடர்ந்து வார இதழ் ஒன்றில் தொடர் கதையாக வந்திருந்த ``முள்ளும் மலரும்'' கதையை படமாக்க மகேந்திரன் முடிவு செய்தார். திரைக்கதை அமைத்து டைரக்ட் செய்யும் ஏற்பாடுகளை தொடர்ந்தார்.

    ரஜினி, ஷோபா, படாபட் ஜெயலட்சுமி, சரத்பாபு என நட்சத்திரங்கள் முடிவானார்கள்.

    கம்போசிங் நடந்தது. அப்போது ``16 வயதினிலே'' படத்தைப் பற்றியும், பாரதிராஜாவின் திறமையைப் பற்றியும் மட்டுமே மகேந்திரன் திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருந்தார். அதே நேரம், ``தரத்தில் உயர்ந்த நல்ல படமாக இதைக் கொண்டு வந்து விட வேண்டும்'' என்றும் சொன்னார்.

    ``செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்'', ``அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை'', ``ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்...'' ``நித்தம் நித்தம் நெல்லுச் சோறு'' போன்ற பாடல்கள் உருவாயின. பாலு மகேந்திராதான் கேமரா. மகேந்திரனும், பாலு மகேந்திராவும் நல்ல நண்பர்கள்.

    ரஜினியின் நல்ல நடிப்பு, படத்தின் இயக்கம், கேமரா, கதை, திரைக்கதை எல்லாம் கச்சிதமாக அமைந்து படத்துக்கு வெற்றியை தேடித்தந்தன.

    ஒரு படத்தின் வெற்றிக்காகவே ஒட்டுமொத்த ïனிட்டும் உழைத்தாலும், வெற்றியைத் தருவது நமக்கும் மேலே உள்ள ஒருசக்தி.

    இதை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு சம்பவம் நடந்தது. நானும் மகேந்திரனும், சேலத்தில் ``முள்ளும் மலரும்'' ஓடிய ஒரு தியேட்டருக்கு போன போது அது நடந்தது.

    தியேட்டர் முதலாளி எங்களை வரவேற்று அழைத்துச் சென்று படம் பார்க்க வைத்தார்.

    படத்தின் ஆறாவது ரீலில், ரஜினி மீது லாரி ஏறியது போல் ஒரு சீன் வரும். அங்கே இடைவேளை என்று போட்டு விட்டார்கள். எனக்கு அதிர்ச்சி. நான் பார்த்தவரை படத்தின் இடைவேளை அது இல்லை.என்னைவிட மகேந்திரன் இன்னும் அதிர்ச்சியாகி இருந்தார்.

    பவர் பாண்டி படத்தில் அனுபவம் வாய்ந்த இயக்குனர்போல் தனுஷ் செயல்படுகிறார் என்று சாயாசிங் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.

    ‘திருடா திருடி’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தவர் சாயாசிங். அந்த படத்தில் வரும் ‘மன்மதராசா...’ பாடலில் இருவரும் ஆடிய நடனம் எளிதில் மறக்கக்கூடியது அல்ல. இந்த படத்தை இயக்கியவர் சுப்பிரமணியன் சிவா.

    தனுஷ் இப்போது டைரக்டராகவும் அவதாரம் எடுத்து இருக்கிறார். ‘பவர் பாண்டி’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சாயாசிங்குக்கும் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார்.

    இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து சாயாசிங் கூறுமபோது, ‘திருடா திருடி’ படத்தின் இயக்குனர் சுப்பிரமணியன் சிவா தான் என்னை ‘பவர் பாண்டி’ படத்துக்கு பரிந்துரை செய்தார். ஒரு கதாபாத்திரத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று கருதிய தனுஷ் என்னை ஒப்பந்தம் செய்தார்.

    ஒரு நடிகர் இயக்குனர் ஆனால் அவருக்கு நடிகர்-நடிகைகளிடம் இருப்பது எப்படி நடிப்பை வெளிப்படுத்த வைப்பது என்று தெரியும். தனுசுக்கு இது மிகவும் பொருந்தும். அவர் முதல் படம் இயக்குவது போலவே இல்லை. அனுபவம் வாய்ந்த இயக்குனர் போன்று செயல்படுகிறார். குழந்தை மாதிரி உற்சாகமாக இருக்கிறார்” என்றார்.

    தனுஷ், ராஜ்கிரண், பிரசன்னா, சாயாசிங் உள்பட பலர் நடித்துள்ள ‘பவர்பாண்டி’ படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இயக்குனர் கவுதம்மேனன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘பவர் பாண்டி’ படத்தை ஏப்ரல் 14-ந் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

    நடிகர் பரத் தற்போது மகேஷ் பாபுவுக்கு வில்லனாக மாறியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    நடிகர் பரத்துக்கு தற்போது கோலிவுட்டில் மார்க்கெட் அவ்வளவாக இல்லை. இருந்தபோதிலும், ‘பொட்டு’, ‘கடுகு’ என ஒரு சில படங்களிலே நடித்து வரும் பரத்துக்கு தற்போது ஜாக்பாட்டாக ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்படத்தில் அவர் ஹீரோவாக இல்லை, வில்லனாக நடிக்கிறார்.

    ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது தெலுங்கில் மகேஷ் பாபுவை வைத்து அதிரடி ஆக்ஷன் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தில் வில்லனாக நடிக்க ஏற்கெனவே எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார். இருப்பினும், இன்னொரு வில்லனாக நடிக்க ஏ.ஆர்.முருகதாசிடமிருந்து பரத்துக்கு அழைப்பு வர, எந்தவித மறுப்பும் சொல்லாமல் உடனே சென்று நடித்துக் கொடுத்து முடித்துள்ளார்.

    வில்லன் வேடமாக இருந்தாலும் பரத்துக்கு இவருடைய கதாபாத்திரம் மிகவும் வலுவுள்ளதாக உள்ளதாம். இதனால்தான் உடனே நடிக்க சம்மதித்தாராம். ஏற்கெனவே ‘555’ படத்திற்காக தனது உடலை கட்டுமஸ்தாக மாற்றிய பரத், ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்காக மேலும் தனது உடலை மெருகேற்றியிருக்கிறாராம். 
    பாகிஸ்தானில் நடிகர் திலீப்குமாரின் வீடு இடியும் நிலையில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்..
    பிரபல இந்தி நடிகர் திலீப்குமார் (90). இவர் கடந்த 1922-ம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் பிறந்தார். அப்போது அவரது பெயர் யூசுப்கான்.

    பிரிவினைக்கு பிறகு அவரது குடும்பம் அங்கிருந்து வெளியேறி இந்தியாவுக்கு குடிபெயர்ந்தது. இங்கு திலீப்குமார் என்ற பெயரில் பிரபல நடிகரானார்.

    அதைத்தொடர்ந்து பெஷாவரில் உள்ள அவரது பூர்வீக வீட்டை தேசிய நினைவு சின்னமாக மாற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் அரசிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கான நடவடிக்கையை சைபர்-பக்துன் கவா மாகாண அரசு மேற்கொண்டது.

    ஆனால் அதில் சில சிக்கல்கள் எழுந்துள்ளன. பெஷாவரில் குய்ஷா கவானி பஜாரில் திலீப்குமாரின் வீடு உள்ளது. தற்போது அந்த வீடு வேறு ஒரு நபரிடம் உள்ளது. அவரிடம் இருந்து விலைக்கு வாங்குவதில் சில பிரச்சினைகள் உள்ளன.

    மேலும் வீடு இருக்கும் தெரு மிகவும் குறுகலானது. மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதி. எனவே அந்த வீட்டுக்கு பார்வையாளர்கள் வருவதில் மிகுந்த சிரமம் உள்ளது.

    அந்த வீட்டை விலைக்கு வாங்க தற்போதைய சைபர்-பக்துன்கவா அரசு தயாராக இல்லை. இதனால் பணம் ஒதுக்குவதில் கால தாமதம் செய்கிறது.

    இது ஒருபுறம் இருக்க நடிகர் திலீப்குமாரின் பூர்வீக வீடு இடிந்து விழும் நிலையில் உள்ளது. அது முற்றிலும் இடிந்து அழிவதற்குள் வீட்டை விலைக்கு வாங்கி அரசு நினைவு சின்னமாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஐக்கிய நாடுகள் சபையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (யூனிசெப்) நல்லெண்ணத் தூதராக நடிகை பிரியங்கா சோப்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
    இரண்டாம் உலகப்போரின்போது அழிந்த நாடுகளில் உள்ள சிறார்களுக்கு உணவு மற்றும் சுகாதார வசதிகளை வழங்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் ஆரம்பிக்கப்பட்டது.

    குறிப்பாக, உலகம் முழுவதும் உள்ள பெண் பிள்ளைகளின் கல்வி, நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளித்தல், எய்ட்ஸ் உள்ளிட்ட பால்வினை நோய்க்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சிறுவர், சிறுமியரின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்காக உலக நாடுகளின் பங்களிப்புடன் இந்த நிதியம் தொண்டாற்றி வருகிறது.

    அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் இந்த நிதியத்தின் உலகளாவிய நல்லெண்ணத் தூதராக (Global Goodwill Ambassador) பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

    தமிழில் விஜய் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டில் வெளியான ‘தமிழன்’ படத்தில் திரையுலகில் அறிமுகமான நடிகை பிரியங்கா சோப்ரா, பாலிவுட்டின் மிகப்பிரபலமான கதாநாயகிகள் பட்டியலில் சுமார் பத்தாண்டுகளாக நீடித்து வருகிறார்.



    அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகவுள்ள ‘பே வாட்ச்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருவதுடன் அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘குவான்டிக்கோ’ நிகழ்ச்சியை தற்போது தொகுத்து வழங்குகிறார்.

    கலையுலகில் மட்டுமில்லாமல் சமூகச் சேவையிலும் ஆர்வம்காட்டி வரும் பிரியங்கா சோப்ரா கடந்த பத்தாண்டுகளாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்துடன் இணைந்து சேவையாற்றி வந்துள்ளார்.

    இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (யூனிசெப்) நல்லெண்ணத் தூதராக நடிகை பிரியங்கா சோப்ரா நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.  

    ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் உருவாக்கப்பட்ட 70-வது ஆண்டுவிழா நேற்று நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா.சபை வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவின்போது, பிரியங்கா சோப்ராவுக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்ட தகவலை பிரபல கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்காம் மற்றும் 12 வயது பிரிட்டன் நடிகை மில்லி பாபி பிரவுன் ஆகியோர் வெளியிட்டனர்.

    இவர்களுடன் நடிகர்கள் ஆர்லந்தோ புளூம், ஜாக்கிசான் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    ‘இந்த நியமனத்துக்கு நன்றி தெரிவித்து பேசிய பிரியங்கா சோப்ரா, ‘யூனிசெப் அமைப்புடன் இணைந்து கடந்த பத்தாண்டுகளாக இந்தியா முழுவதும் உள்ள பல கிராமங்களுக்கு நான் சென்றுள்ளேன். அந்த பயணங்களின்போது, ஏராளமான இளம்பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாரை சந்தித்து கலந்துறவாடி இருக்கிறேன்.

    சிறந்த வாய்ப்புகளை உருவாக்கி தருவதன்மூலம் இளம்பெண்களுக்கு உரிமையான அதிகாரமளிக்கப்பட வேண்டும் என்பதை நான் நேரடியாக கண்டறிந்தேன். ஏற்கனவே இந்த அமைப்பின் நல்லெண்ண தூதர்களாக இருந்துவரும் நண்பர்களுடன் நானும் இணைந்துள்ளதை எண்ணிப் பெருமை கொள்கிறேன்’ என பிரியங்கா சோப்ரா குறிப்பிட்டார்.

    அஸ்வின் விரைவில் தனது காதலியை மணக்கவுள்ளதாக செய்தியை வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்..
    கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த ‘நடுநிசி நாய்கள்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் அஸ்வின் கக்குமனு. அதன்பிறகு, ‘மங்காத்தா’, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘பிரியாணி’, ‘மேகா’, ‘வேதாளம்’, ‘ஜீரோ’ ஆகிய படங்களில் நடித்தார்.

    இந்நிலையில், அஸ்வினுக்கும், சோனாலி என்ற பெண்ணுக்கும் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. சோனாலியும், அஸ்வினும் பல வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். டெக்ஸ்டைல் டெக்னாலஜி பட்டதாரியான சோனாலி, தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

    சில வருடங்களுக்கு முன்பு குறும்படம் ஒன்றை இயக்கிய அஸ்வின், அதில் நடிக்க சோனாலியை தேர்வு செய்திருந்தார். அப்போது ஏற்பட்ட நட்பு, இருவருக்குள்ளும் காதலாகி தற்போது திருமணம் வரை சென்றிருக்கிறது.

    இவர்களது காதலக்கு இரண்டு பேர் குடும்பத்திலும் பச்சைக் கொடி காட்டியுள்ளனர். இந்த மாத இறுதிக்குள் இவர்களது திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களது திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்ள விருக்கிறார்கள். திருமண வரவேற்புக்கு திரையுலக பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்க முடிவு செய்துள்ளனர். 
    சினேகாவும், பிரசன்னாவும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கிரிக்கெட் விளையாடி உற்சாகப்படுத்தியுள்ளனர். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காகவும், அவர்களின் மேம்பாட்டுக்காகவும் நிதி திரட்டும் வகையில் சென்னையில் ஜஸ்ட் கிரிக்கெட் எனும் கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த போட்டியில் சென்னையை சேர்ந்த 32 அணிகள் கலந்து கொண்டன. இந்த கிரிக்கெட் மூலம் வரும் நிதியை எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் நலனுக்காகவும், அவர்களின் மருத்துவ செலவுக்காகவும் செலவிடவிருக்கின்றர்.

    கடந்த நவம்பர் 27-ந் தேதி தொடங்கிய இந்த போட்டியின் இறுதிப்போட்டி கடந்த டிசம்பர் 11-ந் தேதியோடு முடிவடைந்தது. சென்னை ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியை காண திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், இயக்குனர்கள் வி.இசட்.துரை, மீரா கதிரவன் மற்றும் நடிகர்கள் ஷாம், பரத், ஸ்ரீகாந்த், பிரசன்னா, நரேன், போஸ் வெங்கட், ரமணா, அசோக், சந்தோஷ், பிரஜின், கோலி சோடா கிஷோர், மாஸ்டர் மகேந்திரன், தீனா மற்றும் நடிகைகள் சினேகா, சங்கீதா கிரிஷ், தொலைக்காட்சி தொகுப்பாளர் தியா உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

    மேலும், வெங்கட் பிரபுவின் ‘சென்னை 600 028’ படக்குழுவும், ‘பழைய வண்ணாரப்பேட்டை’ படக்குழுவும், ‘விழித்திரு’ படக்குழுவும் வருகை தந்து வீரர்களை உற்சாகப்படுத்தினர். இந்நிகழ்வில், சினேகா பால் போட பிரசன்னா பேட்டிங் செய்து வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை உற்சாகப்படுத்தினார். ஷாம் குழந்தைகள் பாடிய பாடலுக்கு கண்கலங்கி அவர்களுக்கு ஆறுதல் கூறினார். இயக்குனர் வெங்கட் பிரபுவும் அவரது சென்னை 600 028 படக்குழுவும் வெற்றிபெற்ற அணியோடு இணைந்து கிரிக்கெட் விளையாடினர்.

    பின்னர், அனைத்து பிரபலங்களும் இணைந்து ரூ.25,000-க்கான முதல் பரிசை வெற்றிபெற்ற அணிக்கு வழங்கினர், இரண்டாம் பரிசுக்கு தகுதி பெற்ற சீ ஹார்ஸ் அணிக்கு ரூ.15,000 பரிசு வழங்கப்பட்டது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை அ.நாசர் அலி மற்றுமு டாக்டர். ரொஃபினா சுபாஷ் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.
    கேரள மாநிலத்தில் நடைபெற்றுவரும் உலகப்பட விழாவில் திரைப்படம் போடுவதற்கு முன்னர் தேசியகீதம் இசைக்கப்பட்டபோது எழுந்துநின்று மரியாதை செலுத்த மறுத்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    திருவனந்தபுரம்:

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி நாடு முழுவதும் உள்ள சினிமா தியேட்டர்களில் திரைப்படம் போடுவதற்கு முன்னால் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற நடைமுறை தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் தற்போது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. கன்னாகக்குன்னு நிஷாகாந்தி திறந்தவெளி திரையரங்கத்தில் நேற்று தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, அங்கிருந்த பலரும் தங்களது இருக்கையை விட்டு எழுந்து நின்று தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்.

    ஆனால், படம்பார்க்க வந்திருந்த ஆறுபேர் மட்டும் எழுந்திருக்காமல் தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் தங்களது இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். இதைக் கண்டதும் அங்கு பணியில் இருந்த போலீசார் அவர்களை எழுந்து நின்று மரியாதை செலுத்துமாறு அறியுறுத்தினர். இருப்பினும், அவர்கள் மறுத்து விட்டனர்.

    படவிழா ஒருங்கிணைப்பாளர்கள் வலியுறுத்தியும் அவர்கள் எழுந்திருக்க மறுத்து விட்டதால், அவர்கள் ஆறுபேரையும் கைதுசெய்த போலீசார், அருகாமையில் உள்ள மியூசியம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    இதற்கிடையில், தொடர்ந்து நடைபெற்றுவரும் திரைப்பட விழாவின்போது தேசிய கீதத்தை அவமதிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்யும்படி கேரள மாநில போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெஹ்ரா உத்தரவிட்டுள்ளார்.

    ×